ஒரு சினிமா விமர்சனம்: பாப்கார்ன்




இது உண்மையில் ஒரு சினிமா விமர்சனமில்லை. அண்மையில் நான் பார்த்த 'பாப் கார்ன்'சினிமா என்னைப் பாதித்ததின் பதிவுகளே இவையும். ஒரு தமிழ்ச்சினிமா வேறுமாதிரி இங்கே உருவாக்கிவிட முடியாதது. தொழில் திறமைகளால் கட்டியமைக்கப்பட்ட இயங்கு தளங்கள் இங்கே . இதற்குள்ளிருந்து தமிழ்ச் சினிமாவின் தலையெழுத்தை மாற்றும் ஒரு திரையுலகப் படைப்பாளி மிகுந்த சிரமங்களைச் சந்திக்க நேர்கிறது. நாசர், மோகன் லால் , சிம்ரன், எஸ். ராமகிருஷ்ணன் கூட்டில் வெளிவந்திருக்கிற இந்த சினிமா , ஆரோக்கியமாய் இருக்கிறதென்பதை விடவும் , தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றும் முயற்சிகளிலொன்றாக வந்திருக்கிறதென்பதுதான் சரியானது. அதனாலேயே இது அக் கூட்டின் வெற்றியாகவும் ஆகிறது.
ஒரு இசைக் கலைஞனின் உருவம் மோகன் லாலுக்கு அற்புதமாய்ப் பொருந்தி வந்திருக்கிறது. உணர்ச்சியை எந்த இடத்திலும் தேவையான அளவுக்கு மீறிக் காட்டிவிடாத அவரது நடிப்பு குறிப்பிட்டாகவேண்டியது. மலையாள சினிமாவின் கொடை இது என்று நினைக்கிறேன். அவரது பேச்சு முறைகூட முதல் சில நிமிடங்களுக்கு தமிழ்ச் சினிமாவுக்கு பழக்கப்பட்ட மனதுக்கு ஒட்டிவர சிரமப்படுகிறது. பின் இசைவாகி , சினிமா முடிகிறவரையில் பிடித்துப் போகிறது; பாத்திரத்துக்கு இயைந்த பேச்சு முறையென்பதை மனம் அங்கீகரிக்கிறது.
சிம்ரனுக்கு இதுவரை ஏற்றிராத தாய் பாத்திரம். பாசத்தைப் பொழியும் பாத்திரமாக அது இல்லை. ஒரு ஆளுமைமிக்க கலைஞரின் தனித்துவம், வெறித்தனம், அன்பு, அது பறிபோய்விடுமோ என்ற பயம், பாசம் .... என்று பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் பாத்திரம். அதனை அநாயாசமாக நடித்துக் காட்டுகிறார் சிம்ரன். அவர் நெற்றியின் அந்தவளவான பொட்டும் , புகழ் பெற்ற ஒரு இந்திய நடன கலைஞரை நினைவூட்டி சில படிமங்களைச் சிறப்பாகவும், சரியாகவும் உருவாகவே வைத்திருக்கிறது எனல் வேண்டும். இவ்வாறான கலைத்துவம் மிக்க இரு பாத்திரங்கள் எப்படிப் பேச முடியுமோ அப்படிப் பேச வைத்து, வசனத்தை உருவாக்கியிருக்கிறார்கள் நாசரும், எஸ்.ராமகிருஷ்ணனும். சில இடங்களில் உணர்வின் வலு, சொல்லாளுமைகளாலும் நேர்ந்ததை சுட்டிக்காட்டவே வேண்டும். 'ஸ்பரிசம்' சமஸ்கிருதச் சொல். மலையாளத்தில் மிகு புழக்கத்திலுண்டு. அதை 'முதல் ஸ்பரிசம்' என்று குறிப்பதன் மூலம் 'முதல் உறவு' குறிக்கப்படுகிறது இங்கே. முதல் உறவென்பதில் வரும் கொச்சைத்தனம் , முதல் ஸ்பரிசத்தில் இருக்கவே இருக்காது.
மோகன் லாலை விக்ரமாவாய் , சிம்ரனை யமுனாவாய் அழிய வைத்திருப்பதின்மூலம் நாசரின் வெற்றி அடையப்பட்டிருக்கிறது. மகளாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவரின் நடிப்பும் தம் மூத்த கலைஞர்களுக்கு குறைந்ததில்லை.நாசரின் வெற்றியது சூட்சுமத்தின் ஒரு கதவு, பாத்திரங்களுக்குப் பொருத்தமான கலைஞர் தேர்வு. சுமார் இரண்டு மணிநேரப் படம். ஒரு இலக்கியப் பிரதியை வாசித்த மனப் பதிவையும் பாதிப்பையும் இது ஏற்படுத்தியது எனக்குள். முதல் வரும் பத்து நிமிடங்கள் , படத்தின் வலு குறைந்த பகுதி. விக்ரமாவின் தங்கை பாத்திரம் பலஹீனம். அதன் உரையாடலும் நடவடிக்கைகளும் தமிழ்ச் சினிமாவின் மரபார்ந்த உறைவுகள்.
இன்னுமொன்று சொல்ல மறந்தது. யுவன்சங்கர் ராஜாவின் இசை. வார்த்தைகளாலின்றி , இசையாலுமின்றி , உணர்வு அடையும் பரவசத்தால் மட்டும் நெஞ்சி¢ல் இருக்க வைத்த இசை அது. கடைசிக் கட்டத்தில் கலைஞர்களோடு சேர்ந்து இசையும் நடிக்கிறது. சினிமாவின் தரத்தைஉயர்த்தியதில் அதற்கும் பெரும் பங்கு. முதல் பத்து நிமிஷங்களில் அதுவும்தான் தோல்வி. தொழில் நுட்பக் குறைபாடுகளும் அந்த பத்து நிமிடங்களில் கவனத்தை இடிக்கின்றன. மீதி நிமிடங்களின் அனுபவம் நெஞ்சை நிறைக்கிறது.

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்