Posts

நினைவுக் குளியல் 3

  நினைவுக் குளியல்: 3 பஞ்சாங்க ஐயர்   அவரது பெயர் சுப்பிரமணிய ஐயர். ஆனால் அவரை பஞ்சாங்க ஐயரென்றுதான் ஊர் அறிந்திருந்தது. திருக்கணித பஞ்சாங்கத்தை ஆண்டுதோறும் உருவாக்கி, அச்சடித்து, வெளியிட்டவர் அவர். அதற்காக வீட்டிலே ரெடில் எனப்படுகிற கை அச்சு யந்திரமொன்றை வைத்திருந்தார். ஊரில் சகலருமே பஞ்சாங்க ஐயரைத் தெரிந்திருந்தவேளை, ஐயர் வெகுசிலரையே அங்கே தெரிந்திருந்தாரென்பது விசித்திரமானதல்ல. அவரின் போக்கு அப்படி. அவர் வெளிப் பிரக்ஞைகள் இல்லாதவராக, தானும் தன் திருக்கணிதத்துக்கான காலக் கணிப்பும் அதன் அச்சாக்க வேலைகளுமாகயிருந்தார். அவரது மனத்தை, மனிதர்களையும் தினசரிச் சம்பவங்களையும்விட, சூரியன் சந்திரன் ராகு கேது ஆகிய நவக்கிரகங்களே கூடுதலாக ஆக்ரமித்திருக்க முடியும். ஐயருக்கு அப்போது நாற்பது / நாற்பத்தைந்து வயதிருக்கலாம். போந்த பொலிந்த வெள்ளை உடம்பு அவருக்கு. அதில் ஆரோக்கியம் பளீரிட்டது. ஆயினும்   ஐயர் கலகலப்பாக இருந்ததை யாரும் கண்டதில்லை. அவர் மகிழ்வோடு எதிர்கொண்டவர்களாய் யாருமில்லைப்போல், அவரை மகிழ்வோடு எதிர்கொண்டவர்களாயும் அதிகம் பேர் இருக்கவில்லை. ஒருவித வெறுப்போடும், ...

'முதல் மூவர்' மதிப்புரை

      சொர்ணவேலின் ‘முதல் மூவர்’: ரசனையின் உச்சமேறி மொழிப் பிரவாகம்கொள்ளும் பனுவல்   1   பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ராபேர்ட் ப்ரெஸ்ஸோன் (Robert Bresson 1901-1999), இஸ்பெயின் - மெக்ஸிக்கோவைச் சேர்ந்த லூயி புனுவல் (Luis Bunuel 1900-1983), மற்றும் ஜப்பான் நாட்டு யாசுஜிரோ ஓசு (Yasujiro Ozu 1903- 1963) ஆகியோர், பெரும்பாலும் இருபதாம் நூற்றாண்டு முழுவதையும் மூடிய தம் தீவிரமான செயற்பாட்டின் மூலம் எவ்வாறு வருங்கால சினிமாவின் பார்வை, ரசனை, மெய்ஞ்ஞானம் போன்றவற்றின் செல்நெறிகளை   ஒழுங்குபடுத்தினார்கள், ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதை தீர்க்கமாய் முன்வைக்கிறது சொர்ணவேலின் இந்த ‘முதல் மூவர்: ப்ரெஸ்ஸோன், புனுவல், ஓசு’. அதை ஓர் அஞ்சலியாய் செய்துள்ளதாக படைப்பாளியின் ஒப்புமூலம். மீஇயற்பியல், கதையாடல், இழையோடும் உட்புணர்ப்புகளூடாக விவரண சினிமா, குறும்படம், முழு நீள சினிமா ஆகியவற்றில் அத் தாக்கம் எவ்வாறு விதிகளால், உள்ளடைவுகளால் விழுத்தப் பெறுகிறது என்பதை அதற்கான இறுக்கமான, காவிய மொழியில் விளக்குகிற பிரதி இது. தன் ஒவ்வொரு கருத்து வெளிப்பாட்டிலும் வாசகனை நிறுத்திவ...

நினைவுக் குளியல் 2

  நினைவுக் குளியல்   2 வாசிப்பின் நெறிப்படுகை   பெரும்பாலும் பத்து வயதளவில் பள்ளியில் படிப்பவர்களுக்கு பள்ளிப் புத்தகங்களல்லாத வாசிப்புக்கு ஈர்ப்பு ஏற்படுமென்று எண்ணுகிறேன். அந்த வயதளவில்தான் அது எனக்கும் ஏற்பட்டது. வளர்ந்தவர்கள் வாசிப்பில் காட்டும் சிரத்தை, அதன் ஆழ்நிலைத் தியானம்போன்ற சலனமற்ற இருப்பு, அவர்களது வாசிப்பு ஸ்திதியின் கவர்ச்சிகளென எதுவும் அதற்கு விசை கொடுத்திருக்கலாம். அனேகமாக, ஒவ்வொரு நாள் மாலையிலும் எங்கள் பள்ளியில் பெரிய வகுப்பு படிக்கும் ஒரு அண்ணன் வயற்கரையை நோக்கி ஒரு பசுமாட்டைச் சாய்த்துக்கொண்டு, ஆறுதலான நடையில் புத்தகமொன்றை வாசித்தபடி ஒழுங்கையில் நடந்துபோவதை பலமுறையும் நான் கண்டிருக்கிறேன். அவர் வாசித்தபடி நடக்கும் வேகத்திற்கேற்ப பசுமாடு மேய்ந்துகொண்டு போகுமா, அல்லது, மாடு மேய்ந்தபடி செல்லும் வேகத்துக்குத் தக அந்த அண்ணன் நடப்பாராவென அறுதியாய்ச் சொல்ல என்னால் முடியாது. ஆனால் அது எனக்கு பெரும் வியப்பாக அப்போதெல்லாம் இருந்துகொண்டிருந்தது. பக்கத்து வீட்டு மலரக்கா வெய்யில் சாய்ந்த வேளையில் புத்தகமொன்றோடு கிணற்றடியில் சாய்ந்து நின்ற கொய்யா மர...

கதை: சாப மோட்சம்

  சாப மோட்சம்   இமய மலைச் சாரல் விடிந்தது. கௌதமன் கண்கள் விழித்தன. என்றுமில்லாதபடி மனத்தில் தவிப்பு. தன்னந்தனியாகிவிட்ட வாழ்வின் ஸ்திதி பிரக்ஞையாகிற்று. அந்த துர்ப்பாக்கிய நாளின் பின், அந்த சம்பவத்தினதும் அவளதும் நினைப்பை அவன் அடைந்தே வந்திருந்தான்.   ஆனால் அவ்வாறான தீவிரத்திலல்ல. அந்த நாளின் நிகழ்வு கணம் கணமாய் அவனுள் ஊறியது. கோழி கூவுகிறது. கௌதமன் எழுந்து இன்னும் வெளிச்சக் கீறு அடிக்கத் துவங்கியிராத வைகறை இருளில் கால் வைக்கிறான். அந்த இருளும் வழமையான பனிமையற்றுக் கிடக்கிறது. மனத்தில் ஒரு இடையூற்றின் சமிக்ஞை. ஆனாலும் முனிவனாக இருப்பதாலேயே அந்தத் தயக்கத்தை அவன் வென்றாகவேண்டும். தன் தெளிவை நிரூபணமாக்க அவன் மேலே நடக்கிறான். நீராடி, அன்றைக்கு வேண்டிய ஹோமத்துக்கான தர்ப்பையும் சமித்துக்களும் சேகரித்துக்கொண்டு, மேலே சுணங்க மனதற்றவனாய் கொளதமன் ஓர் அவசரத்தில்போல் வருகிறான். இன்னும் விடிந்துவிடாப் பிரபஞ்சம் ஒரு கெடுதியின் தவிர்க்கமுடியாத முன்னறிவிப்பை அவனுக்குச் செய்கிறதா? பன்னசாலை நெருங்குகிறது. அவன் வேகம் அடங்கவில்லை. அந்தப்பொழுதில்தான் உள்ளிருந்தவர்களின் உச்சஸ...

நினைவுக் குளியல் 1

  நினைவுக் குளியல்    நினைவுகளைத் தேடித் தேடி ‘திகம்பர நினைவுக’ளாகவும், ‘கலாபன் கதை’களாகவும், ‘காலக் கனா’ மற்றும் ‘குருடர்க’ளாகவும் எழுதி தொகுப்புகளாக்கிய பின்னரும், மனத்தின் ஆழவும், அதன் பக்கங்களில் ஒட்டிக்கொண்டும் கிடந்து நினைவுகள் இன்னும் வெடித்தெழவே செய்துகொண்டிருக்கின்றன. அவை, திகைக்க வைக்கும்படி முக்கியமான, என்னை உருவாக்கிய மூலாதாரமான சம்பவங்களாகவும் இருக்கின்றன. அவை, எவ்வாறு இதுவரை காலத்தில் எனக்குள் தவறிப்போய்க் கிடந்தனவென நானறியேன். அதனால் மேலும் ஒரு நினைவுக்குளியலை நடத்த நான் தீர்மானித்தேன். அந்த எழுச்சி முகிழ்ந்த கணம் இது.   1.     பொன்னம்மா ரீச்சர் 1 முகங்கள், குறிப்பாக அதிலுள்ள கண்கள், உள்ளங்களின் கண்ணாடி எனப்படுகின்றன. எனக்கு மிக அணுக்கமாயிருந்த பழைய முகங்களென்று தேடினால் இரண்டு முகங்களே உடனடியாகத் தோற்றமாகின்றன. ஒன்று, எனது அம்மாவினுடையது. மற்றது, பொன்னம்மா ரீச்சருடையது. பொன்னம்மா ரீச்சர் என்னை அரிவரியில் படிப்பித்த ஆசிரியர். நான் அரிவரி படிக்கப் போன காலத்தில், எங்கள் வீட்டுக்கு அண்மையிலிருந்த பள்ளிக்கூடம், நி...

‘விஜயநகரம்’ நாவலை முன்வைத்து…

Image
  வரலாற்றுக் களத்தில் யதார்த்த – புனைவுப் பாத்திரங்களின் மோதுகை சல்மான் ருஷ்டியின் ‘விஜயநகரம்’ நாவலை முன்வைத்து…     சல்மான் ருஷ்டியின் Victory City (2023) என்ற ஆங்கில நாவல், ‘விஜயநகரம்’ என்கிற தலைப்பில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக ஜுலை 2024இல் வெளிவந்திருக்கிறது. ஆர்.சிவகுமார் மொழிபெயர்த்திருக்கிறார். என் வாசிப்பின் கவனத்தில் பதியும் எந்தவொரு நூலும் இதழ்களிலோ இணையதளங்களிலோ பெரும்பாலும் பதிவுபெற்றே வந்துள்ளது. ஆனால் வெளிவந்த இரண்டொரு மாதங்களில் கைவசமான இந்த நாவலை இரண்டு தடவைகள் வாசித்திருந்தும், என்னைப் பாதித்துள்ள நோய்க் கூறின் பக்கவிளைவான எழுதமுடியாமை அதுபற்றிய ஒரு பதிவிடுதலை கடந்த ஓராண்டாகவும் தடுத்திருந்துவிட்டது. இப்போது நோயின் வீச்சு குறைந்துவரும் இத் தருணத்தை நான் தவறவிட்டுவிடக் கூடாது. இந் நாவல்பற்றி அறிந்தபோதே, அதன் ஆங்கிலத் தலைப்பானது, வெகுகாலத்தின் முன் வாசித்திருந்த அகிலனின் ‘வெற்றித் திருநகர்’ நாவலை நினைவுபடுத்தியது. அதன் முக்கியமான கதாபாத்திரங்களான கிருஷ்ணதேவராயரும், நாமக நாயக்கரும், விசுவநாதனும்கூட என் மனக் கண்ணில் அசைவியக்கம் காட்டினார்கள்...