கலாபன் கதை 6

என்னைக் கடிப்பாயா?



நள்ளிரவிலும் சூரியன் எறித்திருக்கும் நாடு என்று அறியப்பட்டிருந்த சுவீடன்பற்றி பெரிதாக எதையும் அறிந்திருக்கவில்லை கலாபன்.

அது ஒரு வட அய்ரோப்பிய நாடு, குளிர் கூடிய தேசம், மிக்க பரப்பளவில் அதிகுறைந்த ஜனத் தொகையைக் கொண்டிருந்த பூமி என்பதும், அதன் அரசியலானது முடியின் அதிகாரம் கூடியதாகவும், அவ்வப்போது அதிகாரம்பெற்ற நாடாளுமன்றம் சில ஜனநாயக உரிமைகளை மக்களுக்காகப் பெற்றுக்கொடுத்தது என்பதும், இன்றும் வடஅய்ரோப்பாபோல் மானுட ஜனநாயக உரிமைகளை நிகராகப் பெற்றில்லாதது என்பதும், இதுவும் டென்மார்க், நோர்வே போன்ற முக்கியமான வடஅய்ரோப்பிய நாடுகளும் சேர்ந்து ஸ்கந்திநேவியா என அழைக்கப்பட்டன என்பதும் மட்டுமானவை அவன் கல்லூரியிலும் நூலகத்திலும் படித்தும் வாசித்தும் அறிந்திருந்தான். ஸ்கந்திநேவியாவின் பத்தாம் நூற்றாண்டளவிலான வைக்கிங் எனப்பட்ட கடல் மறவக் கொள்ளையர்பற்றி அண்மைய சினிமாக்களில்தான் அறிந்தான்.

இவையெதுவும் அவனது மனத்துக்குள் கிடந்து துடித்துக்கொண்டிருந்த ஆசையின் தவிப்பில், பெரிதாகக் கிளர்ந்தெழாத அம்சங்களாகவே இருந்தன. மேலும் தெரிந்துகொள்வதற்கிருந்த சூழ்நிலைமைகளையும் அந்த ஆசையானது அடித்து அடித்து விலகியோட வைத்துக்கொண்டிருந்தது.

கப்பல் துறைமுக மேடையில் கட்டி ஒரு மணிநேரத்துள் கபாலியுடன் வெளியே புறப்பட்டான் கலாபன்.

அன்று ஒரு வெள்ளிக் கிழமையாகவிருந்தது.

துறைமுக மேடையில் நான்கைந்து வேலையாட்களோ அலுவலர்களோ நடந்து திரிந்துகொண்டிருந்தனர். நாலைந்து கார்கள் வந்து மெதுவாகத் திரும்பிக்கொண்டிருந்தன. அவன் கண்டிருந்த எந்தத் துறைமுகமும் போலன்றி வெறித்துக்கிடந்தது சுவீடனின் அந்தத் துறைமுகம்.

துறைமுகத்திலிருந்து நடந்துசெல்லும் தூரத்திலேயே டவுன் ரவுண் இருந்ததை கப்பலுக்கு வந்த கொம்பனி முகவரிடம் ஏற்கனவே கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தான் கபாலி.

வீதியோர நடைபாதைகள் கல் பாவியதாக இருந்தன. வீதிகள் குண்டு குழிகளற்று விசாலமாயும் நீட்பமாயும் கிடந்தன. இருமருங்கும் அதிக உயரமற்ற கட்டிடத் தொகுதிகள். சில சில தனி வீடுகள். நகரம் நெருங்க நெருங்க வெளிச்சத் தெருக்களாக மாறிக்கொண்டிருந்தது. SEX SHOP என்ற வெளிச்ச எழுத்துக்கள் அதிகமாகவும் தெரிந்தன. ஓரிருவர் அவைகளினுள்ளே போவதும் திரும்புவதுமாயிருந்தனர்.

கலாபன் சோர்வாகிப்போனான். அது நகரமாக அல்ல, ஒரு கிராமமாகக்கூட இருக்கவில்லைப்போல இருந்தது. ஸ்ரொக்கோமுக்கு வடக்கே ஏறக்குறைய மூன்று மணிநேர கப்பல் பயணம். அந்த துறைமுகத்தின் பெயர்கூட வாயில் நுழையவில்லை அவனுக்கு. வடக்கே இன்னும் அய்தான மக்கட் செறிவு இருக்கக்கூடும். அது பகலென நினைத்த ஒரு பதினெட்டு மணிநேரத்துள் வேலைசெய்து அல்லது அலைந்து வம்பளந்துவிட்டு, இரவென நினைத்த ஒரு ஆறு மணத்தியாலத்தில் படுக்கச்சென்றுவிட்டதா? அங்கே இருக்கக்கூடிய ஜனத்தொகை எங்கே போய்த் தொலைந்தது?

அகன்ற வீதிகளும், வெளிச்சங்கள் நிறைந்த பூட்டிய கடைகளும், நான்கைந்து மனித நடமாட்டமுமா ஒரு நகரம்? அந்த இடத்திலா அவன் இச்சையைத் தணிக்கும்வகையான பெண் வந்து வலிய மாட்டப்போகிறாள்? அதுவும் வார இறுதிநாளில், அந்த நேரத்தில் அப்படியான அடக்கத்தில் கிடக்கும் ஒரு நகரிலா?

குளிராகவே இருந்தது. ஆனாலும் அது குயடடள என ஏனைய அய்ரோப்பிய, வடஅமெரிக்க நாடுகளில் அழைக்கப்படும் இலையுதிர் காலம்தான். அங்கே கீழ்த் திசையில் மாரி, கோடையென்ற இரு பெரும் பருவங்களைப்போல பனிகாலம், கோடை காலம் என்ற இரண்டு மட்டுமே பெருவாதிக்கம் பெற்றவை என்பதை கலாபன் அங்கே வந்தவுடனேயே அறிந்துகொண்டிருந்தான். அப்படியானால் அந்த இலையுதிர் காலம் சுவீடனைப் பொறுத்தவரை குளிர்காலத்தின் ஆரம்பம்.

ஒரு நகரமென்பது உண்மையிலென்ன? அவன் எங்கோ, எப்போதோ வாசித்த யாரினதோ ஒரு மொழிபெயர்ப்புக் கதை அப்போது ஞாபகமாயிற்று.

அய்ரோப்பிய நகரசபையொன்று அங்கே விலைமாதர் அதிகமாகிவிட்டார்களென அவர்களை ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் அங்கிருந்து நீங்கிவிட வேண்டுமென்று சட்டமியற்றுகிறது. விலைமாதர்களும் வேறு வழியின்றி அங்கிருந்து நீங்கிச் சென்று தொலைவிலுள்ள ஓரிடத்தில் தங்கள் குடியிருப்புக்களை மிகுந்த சிரமத்தின் பேரில் அமைத்துத் தங்குகிறார்கள். ஒரு சமூகமாக அது மாறுகிறது. அங்கே இரண்டொரு கடைகள் தோன்றுகின்றன. அவர்களைத் தேடி ஆண்கள் வரத் தொடங்குகிறார்கள். போக்குவரத்துக்கள் அதிகரிக்கின்றன. இன்னும் சில கடைகளும், மதுபானச் சாலைகளும், நடனசாலைகளும் தோன்றுகின்றன. ஒரு சிறிய நகராகிறது அது. காலப்போக்கில் வர்த்தக நிலையங்கள், கல்லூரிகள், அரசாங்க அலுவலகங்கள் என்று அந்தச் சிறிய நகரே ஒரு பெருநகராகிறது. சில தலைமுறைகளின் பின் ஜனநெரிசல் அதிகமாகிய ஒரு நாளில், அந்த நகரத்துச் சபை ஒரு சட்டமியற்றுகிறது, அங்குள்ள விலைமாதர்கள் அந்த நகரத்தைவிட்டு ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கிவிடவேண்டுமென.

ஒரு நகரின் மய்யம் எங்கே தங்கியிருக்கிறதென்று இந்தக் கதை கலாபனுக்கு ஒரு மேலோட்டமான அபிப்பிராயத்தைக் கொடுத்திருந்தது. இரவுக் கேளிக்கைகளின்றி உறங்கும் ஒரு நகரம் அவனளவில் செத்த நகரமாகவே இருந்தது. அது உணர்வுகள் செத்த நகர்!

அவனது மனநிலையைத் தெரிந்துகொண்ட கபாலி, தனக்குள் சிரித்துக்கொண்டே, அவன் அந்தமாதிரி நகரத்தை அறியமாட்டானென்றும், ஒரு பியர் அருந்திவிட்டு வீதியில் நடந்துதிரிந்தால் ஆண்களைத் தேடும் எந்த ஒரு பெண்ணாவது அகப்படுவாள் என்றும் அவனைச் சிறிது நம்பிக்கைப்பட வைத்து கூடவரச் செய்தான்.

போகும்போது கபாலியின் கப்பல் அனுபவம் கலாபனுக்கு நம்பிக்கையேற்ற முயற்சித்துக்கொண்டிருந்தது. ‘கணவனைப் பிரிந்திருக்கும் பெண்கள், அல்லது திருமணமே ஆகாத பெண்கள்கூட, அதுபோன்ற நாடுகளில் உடலுறவுக்கு கப்பல்காரரையே விரும்புவார்கள். ஏனெனில் கப்பல்காரர் கடலிலுள்ள காலத்தில் தன் உணர்ச்சியைத் தணிக்க வகையற்றிருப்பவர்கள். அவர்களோடு திருவிழாபோல ஒரு முழு இரவுக்குமே சுகத்தை அனுபவிக்க முடியும். இன்னுமொன்று, கப்பல்காரனின் தொடர்பு கப்பல் அந்நாட்டுத் துறைமுகத்தில் நிற்கிற காலமளவுக்கானது மட்டுமே. அயலவன், அதே ஊர்க்காரனெனில் அவன் விரும்புகிற பொழுதுக்கும் அவனைச் சேரவேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு உண்டாக வாய்ப்பிருக்கிறது. எந்த ஒரு பெண்ணின் இரகசியமான உறவுக்கும் கப்பல்காரன் நல்ல தெரிவாயிருக்கும், இல்லையா?’

ஒரு நான்கைந்து பேர் கொண்ட மதுபானக் கடையில் ஒரு மணிநேரமாக காம பட்சணிகளுக்காகக் காத்திருந்துவிட்டு கபாலியின் யோசனைப்படி வெளியே இறங்கி குறிப்பற்று நடக்கத் தொடங்கினார்கள் இருவரும்.

ஓர் அதிர்~;டம் எதிர்ப்படுவதுபோல எதிரே வந்த கார் ஒன்று அவர்களருகில் மெல்லென ஊர்ந்து கறுத்திருந்த கண்ணாடியூடாக விரிந்த விழிகளைமட்டும் காட்டிவிட்டு அடுத்த கணத்தில் பிய்த்துக்கொண்டு பறந்துபோய் மறைந்துவிட்டது.

‘நேரமாகிறது, வா, கப்பலுக்குப் போகலாம்’ என கலாபன் அழைத்தபோது, ‘The night is still young’ என்றுவிட்டு கபாலி தொடர்ந்து நடந்தான். கபாலிக்கு கொஞ்சம் வெறி.

மறுபடி கலாபனும், கபாலியும் கப்பலுக்குத் திரும்பியபோது விடிகாலை இரண்டு மணி.
ஏமாற்றம், களைப்பு, தான் மடத்தனமாக கபாலியின் கூற்றின்மேல் கொண்ட நம்பிக்கைகள் காரணமாய் கலாபன் கொதிநீர்போல் இருந்தான். கபினுக்குச் சென்றவன் ஜொனிவோக்கர் போத்தலை எடுத்து வைத்தான். விறுவிறுவென கிளாஸ் எடுத்து ஊற்றி ஒரே மிடறில் குடித்தான். சிகரெட் எடுத்துப் பற்ற வைத்தான். ஜன்னலூடு வெளியே பார்த்தபோது அவனை ஒரு பெரும் ஏமாற்றத்திலும், அவமானத்திலும் வீழ்த்திய அந்த நகரின் துறைமுகம் சத்தமின்றி இருளில் தோய்ந்து கிடந்திருந்தது. துறைமுக மேடையின் முன்னால் மேல்தள சாமான்களாக கப்பலில் ஏற்றப்படவிருந்த பலகைகள், தீராந்திகள் கட்டுக்கட்டாக அந்த இருளுள் அடுக்கில் கிடந்தன.

மன, உடல் வேகங்கள் மெல்லத் தணியலாயின. குடியும், புகைத்தலும் தொடர இனி அடுத்த துறைமுகம் எதுவாயிருக்கும், எத்தனை நாள் பயணமாயிருக்கும் என எண்ணமிட்டபடி அமர்ந்திருந்தான் அவன். அவனது உறக்கத்தை நினைவுகள் விழுங்கியிருந்தன. அப்போது அறைக் கதவு தட்டப்பட்டது. உடனடியாகத் திறக்கவும் பட்டது. யாரென ஒருவகை எரிச்சலோடு சட்டெனத் திரும்பினான் கலாபன்.

பாலி சிரித்தபடி உள்ளே வந்துகொண்டிருந்தான். பின்னால் வாசலில் நின்றிருந்தார்கள் இரண்டு வெள்ளைப் பெண்கள்.

அவர்கள் உள்ளே வந்தார்கள். மெதுமெதுவாக அறிமுகங்கள் ஆரம்பமாகின. குடியோடு அவர்கள் உரையாடல் ஆரம்பித்தபோதும், கதை அவர்களது நாடுபற்றியதாகவே திரும்பியது. கபாலிதான் கேள்விகளை அவ்வப்போது கேட்டு விளக்கங்கள் பெற்றுக்கொண்டிருந்தது.
தன்னை அலேன் என்று அறிமுகப்படுத்தியிருந்த பெண்தான் அதிகமாகவும், உற்சாகமாகவும் கதைத்துக்கொண்டிருந்தாள். அவள் இருந்த அணுக்கம் அவள் கபாலியை விரும்புவதாகக் காட்டிற்று. மற்றவள் அவ்வப்போது சிரித்தாள். ஓரொரு பொழுதில் ஒன்றிரண்டு வார்த்தை பேசினாள். மற்றப்பொழுதில் மெல்லவாக ஜொனிவோக்கரை உறிஞ்சிக்கொண்டிருந்தாள்.

கலாபன் தன் நண்பியைக் கவனிப்பதைக் கண்ட அலேன், தன் நண்பிக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியாதென்றும், தான் சிறிதுகாலம் அமெரிக்காவில் தங்கியிருந்ததாலும், இப்போதும் அங்கே அடிக்கடி போய்வருவதாலும் ஆங்கில மொழி மிகுந்த பரிச்சயமாகியிருப்பதாகக் கூறினாள்.
அங்கே எதற்காக அவள் அடிக்கடி போய்வருகிறாள் என கலாபன் கேட்டதற்கு, தன் கண்வனிடம் என்றாள் அலேன்.

‘கல்யாணமாகி விட்டதா உனக்கு?’ என்று திடுக்கிட்டுக் கேட்டான் கலாபன். ‘இது உன் கணவனுக்குச் செய்யும் துரோகமல்லவா?’

‘இது எப்படித் துரோகமாகும்? ஒருவரால் தீர்க்கப்படக்கூடிய தவனத்தை அவர் இல்லாதபோது வேறொருவர்மூலம் தீர்த்துக்கொள்வதில் என்ன பிழை இருக்கிறது?’ என வெடுக்கெனக் கேட்டாள் அலேன். அப்போது தன் நண்பி சுவீடன்மொழியில் சொன்னதையும் மொழிபெயர்த்துக் கேட்டாள்: ‘நீ திருமணம் செய்துவிட்டாயா?”

‘செய்துவிட்டேன்.’

‘அப்படியானால் நீ உன் மனைவிக்குத் துரோகம் செய்கிறாயா?’

‘துரோகம்தான். ஆனாலும் தவிர்க்கமுடியாதது. நான் உயிரைப் பயணம்வைத்த கப்பல் தொழிலில் இருக்கிறேன். அடுத்த நிலம் எனக்கு நிச்சயமானதில்லை. அதனால் எந்த நிலத்தை நான் அடைகிறேனோ அந்த நிலத்தில் என் மனித தவனங்களைத்; தணித்துக்கொள்வது என்னளவில் தர்மமானது.’

‘நீ பேசுவது எந்த விதத்திலும் பொருந்திப்போகவில்லை. ஒன்று நீ ஒரு தொழிலை மரண பயத்தோடு நடத்துவது என்பது எந்தத் தொழிலுக்கும் ஒவ்வாத கருத்துநிலை. மரணத்தை எண்ணிக்கொண்டு சென்றால் தாழ்கின்ற கப்பலிலிருந்து தப்புவதற்கும் உனக்கு உறுதி இருக்காது. கப்பல் தொழிலில் மரணம் சகஜம் என்று நீ மரணத்துக்கு உன்னையே பணயம் கொடுத்துவிடக்கூடியவன். எந்தத் தொழிலில் மரணம் சம்பவிக்க முடியாது? விமானத்தொழிலில்..? கார், பஸ், ரயில், பார வண்டித் தொழிலில்… ? மரணம் எங்கேயும் வரும். அடுத்தது, கற்பு என்ற வியம். அது மேற்கில் மறைந்து அதிக காலம். ஆனாலும் தன் கணவன்தவிர மாற்றானுடன் புணரமுடியாத பெண்கள் இங்கேயும் இருக்கிறார்கள். அது அவரவர் மனநிலை சார்ந்தது. அறம் சார்ந்ததல்ல.’

அந்த வெள்ளைக்காரி தன்னை மடக்கிவிட்டதான உறுத்தல் பிறந்தது கலாபனிடம். ஆனாலும் எதுவும் பேசாமல் கேட்டுக்கொண்டிருக்கவே முடிந்தது.

வெறுங்கிளாஸில் மறுபடி விஸ்கியை ஊற்றிக்கொண்டு அலேன் தொடர்ந்து சொன்னாள்: ‘நான் ஒரு அழகிய தேசத்தின் பிரஜை. அய்ரோப்பாவில் பெரும்பாலும் ஜனத்தொகை பெருத்துவிட்டது. ஆசியாவைப்போல இல்லாவிடினும், பெருத்துவிட்டதுதான். ஆனால் சுவீடனில் அளவுக்கும் குறைவாகவேதான் அது. அது இந்த நாட்டின் அழகை, அதன் வளத்தினை மேலும் மேலும் தக்கவைப்பதற்கான சாத்தியத்தைக் கொண்டிருக்கிறதாகத் தெரிகிறது எனக்கு.

‘ஆயிரம் நதிகள், லட்சம் தீவுகள், வடக்கே நாட்டின் சுமார் பாதிப் பரப்பில் பரந்து கிடக்கும் மலைகளும், வனங்களும். இந்த வனங்களில் பாதிக்குமேல் கன்னித் தன்மையே அழியாதவை. அவற்றின் வசீகரம் அல்லது பயங்கரம் யாராலும்தான் இன்னும் அறியப்படாமல் இருக்கிறது. இந்த நாட்டை ‘கண்ணாடிகளின் நாடு’ என்பார்கள். ‘ Kingdom of crystal’. நான் இங்கே வாழ்கிறேன் என் உடல் மன சுதந்திரங்களுடன். நீ கீழ்த் திசையான். ஆசியாக்காரன். உனக்கு உன் கீழ்த்திசையின் கலாச்சார அழுத்தம் இருக்கிறது. அதனால்தான் நீ காதலையும் காமத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிவிட்டாய்.’

சிறிதுநேரம் வெள்ளைக்காரிகள் இரண்டுபேருக்குமே தமது மொழியில் உரையாடல் நடந்தது. கபாலி இரவு முடியப்போகிறது என ஞாபகமாக்கினான். ‘அதனாலென்ன? என்னால் நாளைக்கும், நாளை மறுநாளுக்கும்கூட உன்னோடு நிற்கமுடியும்’ என்றாள் அலேன்.

‘நாளை மறுநாள் காலை கப்பல் புறப்படுகிறது’ என்றான் கலாபன்.

கபாலி தன் பெண்ணை அழைத்துக்கொண்டு தன் கபின் செல்ல, மற்றப் பெண்ணுடன் விடப்பட்டான் கலாபன்.

இன்னும் ஒரு கையில் சிகரெட் புகைந்துகொண்டிருக்க ஒரு கையால் மேசையிலிருந்த விஸ்கிக் கிளாஸைப் பற்றியபடி அமர்ந்திருந்தாள் அவள்.

கலாபனுக்கு இன்னும்தான் தன் தோல்வியின் வலி நீங்காதிருந்தது. அதனாலேயே அவன் குடித்ததும் அதிகமாயிருந்தது. போதை மெல்லமெல்ல அவனை ஆட்கொண்டுகொண்டிருந்தது. மேலும் மௌனமாயிருக்க முடியாமல், ஏதாவது சாப்பிட விரும்புகிறாளா என்று கேட்டான். அவள் வேண்டாமென, படுப்பதற்குத் தயாராக கட்டிலில் எழுந்து வந்து அமர்ந்தான்.

வெள்ளைக்காரி இன்னும் அந்தப்படியே இருந்தாள். இன்னும் குடிக்கப்போகிறாளோ என நினைத்தான் கலாபன். அவனுக்கு தலை மெல்ல தொங்க ஆரம்பித்திருந்தது. சுதாரித்து அமர்ந்திருந்தான்.

அவள் என்ன செய்யப்போகிறாள்? படுக்க வருவாளா? விடியும்வரை அந்தப்படியே அமர்ந்திருப்பாளா? கலாபன் யோசித்து முடிப்பதற்குள் அவள், ‘என்னை நீ கடிப்பாயா? (லுழர டிவைந அந?)’ என்று நிமிர்ந்து அவனை கண்களுக்குள் ஊடுருவியபடி கேட்டாள்.
கலாபன் திடுக்கிட்டான். ‘என்னை என்ன நரமாமிச பட்சணியென்று நினைத்தாளா? ஏன், ஒரு ஆசியாக்காரன் இவளுக்கு நரமாமிச பட்சணியாகவா தெரிவான்? என் நிறம் இவளை இந்த மாதிரியாகவா எண்ணவைக்கிறது?’ என்று ஒரு சினமெழுந்து சீறப்பார்த்தது. இருந்தும் காரியம் ஆகட்டும் என்று வலிந்து ஒரு சிரிப்பை வரவழைத்தபடி, ‘இல்லையில்லை’யென்று தலையசைத்தான்.

‘கடிக்கவே மாட்டாயா?’ என்றாள் அவள் மீண்டும்.

‘நிச்சயமாகக் கடிக்கமாட்டேன்.’

அவள் கிளாஸிலிருந்த விஸ்கியை மடக்கென்று குடித்து முடித்தாள். சிகரெட்டை ஒரு இழுவை இழுத்து சாம்பல் கிண்ணத்தில் நசுக்கினாள். ‘ஓகே. உன்னுடைய உபசாரத்துக்கு நன்றி. நான் வருகிறேன்’ என்றுவிட்டு எழுந்து கதவைத் திறந்து விறுவிறுவென வெளியேறினாள்.

சிறிதுநேரத்தில் கதவு சத்தமின்றிச் சாத்தியது.

அந்த அதிர்வு தீர கலாபனுக்கு வெகுநேரமாயிற்று.

நிலைகுத்தியிருந்தவன் நான்கு மணியாக வேலைக்கு இறங்கினான். வேலை பளுவில்லை. ஒரேயொரு ஜெனரேட்டர் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. கதிரையில் அமர்ந்து தூங்கினான்.

பின் எழுந்து அதன் அமுக்க, வெப்ப நிலைகளைக் கவனித்துவிட்டு வந்து மறுபடி தூங்கினான். ஒரு தோல்வி அடைந்ததான, ஓர் ஏமாற்றம் அடைந்ததான உணர்வு கொந்தளித்துக்கொண்டிருந்தும் அவனால் போதை காரணமாக யோசனையின்றி, உறங்கத்தான் முடிந்தது.

வேலை முடிந்து அறையினுள் படுக்கையில் கிடந்திருந்தபோதுதான் ஏன் அந்த வெள்ளைக்காரி அவ்வாறு நடந்துகொண்டாள் என அவனால் யோசிக்க இயன்றது. ஆனாலும் எந்தவகையில் யோசித்தும் ஒரு பதில் அவனுக்குக் கிடைக்கவில்லை.

காலையில் கபாலியும், அலேனும் வந்து கதவைத் தட்டியபோதுதான் கலாபனுக்கு தூக்கம் கலைந்தது. மேசை மணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்தான். பன்னிரண்டு.
கபாலி உள்ளே வந்து, ‘எங்கே அந்தப் பெண்?;’ என்று கேட்டான்.

‘போய்விட்டாள்’ என்றான் கலாபன்.

‘எப்போது?’

‘நீங்கள் சென்ற பின்னாடியே.’

கபாலி திரும்பி அலேனிடம் வி~யத்தைச் சொன்னான்.

அலேன் உள்ளே வந்தாள். என்ன நடந்ததென கலாபனிடம் விசாரித்தாள். எதுவும் வித்தியாசமாக இல்லையென்றுவிட்டு நடந்ததைச் சொன்னான்.

அலேனுக்கும் காரணம் புரியாமலே இருந்தது. பின் சிறிதுநேரத்தில் வெடித்துச் சிரிக்க ஆரம்பித்தாள். ‘என்ன, என்ன, ஏன் சிரிக்கிறாய்? சொல்லிவிட்டுச் சிரி’யென இருவரும் வற்புறுத்த சிரிப்புக்கிடையிலேயே பதிலைச் சொன்னாள் அலேன்: ‘உன் கலாச்சாரப் பின்னணிபற்றி அவள் சந்தேகித்ததுதான் இதற்கெல்லாம் காரணம். ஆனால் அதைக் கேட்க அவள் பாவித்த மொழிதான் பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது. Bite என்ற சொல்லுக்குப் பதிலாக kiss என்ற வார்த்தையை அல்லது oral sex என்ற பதத்தை அவள் பாவித்திருந்தால் இந்தக் குழப்பமே வந்திருக்காது.’

அலேனும், அலேனை விட்டுவருவதாக கபாலியும் சொல்லிச் சென்றனர். கலாபனால் சிரிக்க முடியவில்லை. ஆனாலும் மேலே அவனுக்கு எரிச்சலோ கோபமோ வரவில்லை. ‘வாத்ஸாயனன் நூற்றாண்டுகளுக்கு முன்னரே காமக் கலையின் நுட்பங்கள் சார்ந்த சாத்திரத்தை எழுதிவிட்டான். அது ஒரு திசையின் மக்கள் கூட்டத்தினது இன்ப நுகர்ச்சியின் வெளிப்பாடாகவே இருக்க முடியும். அந்தத் திசையையா காமத்தில் அந்த வெள்ளைக்காரி சந்தேகித்தாள்?’

கலாபன் யோசித்துக்கொண்டே இருந்தான்.

வெகுநேரத்தின் பின் எழுந்துசென்று மெஸ்ஸிலே சாப்பிட்டுவிட்டு வந்தான். வேலைக்குச் செல்ல இன்னும் நேரமிருந்தது. நண்பனுக்குக் கடிதமெழுதினால் கப்பல் கொம்பனி முகவர் வரும்போது கட்டில் சேர்க்க கொடுத்தனுப்பலாம். கலாபன் கடிதமெழுதத் தொடங்கினான்.

kiss or oral sex = bite

எழுதுகிறபோதுதான் அவனுக்கும் சிரிப்பு வந்தது.

00000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்