'மேகலை கதா'பற்றிய ஓர் அறிவிப்பு

‘மேகலை கதா’


புனைவின் வழியில் நான் உணர்ந்ததைப் படைப்பாக்கிய ‘கதா காலம்’ (2004), ‘லங்காபுரம்’ (2008) ஆகிய நாவல்களுக்குப் பிறகு காலம் நீளக் கடந்துபோய் இருக்கிறது. இப்போது அதே வழியில் சாத்தனாரின் மணிமேகலை காப்பியத்தை நாவலாக்கும் முயற்சியிலிருக்கின்றேன்.
புத்த ஜாதகக் கதைகள் என் சிறுவயதுப் பழக்கம். அதுவே கௌதம புத்தர் வரலாற்றினுள்ளும், புத்த மத வரலாற்றினுள்ளும் புகும் வேட்கையை எனக்குத் தந்தது. இலங்கையிலுள்ள எண்ணிறந்த விகாரைகளும், தாதுகோபுரங்களும், சிகிரியாபோன்ற கலை மற்றும் வரலாற்றுச் சின்னங்களும் இவ்வார்வங்களுக்கும் முயற்சிகளுக்கும் உத்வேகம் தந்திருக்க முடியும். எல்லாவற்றையும் உள்வாங்கியிருந்தபோது மணிமேகலை காப்பியப் பிரவேசம் பெரும் புனைவு வெளியை என்னுள் உண்டாக்கிற்று. நினைவின் பரப்பெங்கும் அது முதல் ஒரு புத்த பெண் துறவியின் இடையறாச் சஞ்சாரம் இருந்துகொண்டு இருந்துவிட்டது. ஒரு வாய்ப்பான சமயத்துக்காக நான் காத்திருந்தேன். ஆனால் என் காத்திருப்பால் மணிமேகலையின் சஞ்சாரம் மனத்துள் வார்த்தைகளை ஒரு தருணத்தில் பிதுக்கத் துவங்கிவிட்டது. இதை நான் தவறவிடக்கூடாத ஒரு சமயமென எண்ணினேன். அதனால் எழுதத் தொடங்க தீர்மானித்தேன்.
அது அத்தனை சுலபத்தில் முடிந்துவிடக் கூடியதாய் இருக்கவில்லை. அதற்காக என்னை நான் நிறையத் தயார்படுத்தவேண்டி இருந்தது. அதனால் மறுபடியும் ‘மணிமேகலை’க்குள் புகுந்தேன். இந்திரவிழாவும், கண்ணகி- கோவலன் வரலாறும் காண சிலப்பதிகாரத்தின் புனர் வாசிப்பும் அவசியமாயிற்று. பௌத்த தத்தவங்களை மீள படிக்கவும் நேர்ந்தது. அத்தனை வாசிப்பு, ஆய்வு முயற்சிகளுக்குப் பிறகும் இடைஞ்சல் இருந்தது.
பௌத்த தத்துவத்தை ஆழப் புரிந்துகொள்ளல் அத்தனை சுலபத்தில் கைகூடவில்லை. அது ஒரு நூலிழை தவறினாலும் பிற மத தத்துவங்களோடு, குறிப்பாக சமண மதத்தோடும், இந்து மதத்தோடும் ஊடாட்டம் கொள்வதாய் இருந்தது. புத்தர் வாழ்ந்த காலத்தின் சமய நிலை, அவரது போதனைகளை பிற்காலத்தில் எழுதியோரது மனநிலையென இந்த உராய்தலுக்கான காரணங்களை விளங்க முயன்றேன். ஆயினும் நண்பர்களுடன் உரையாடினேன். ஆய்வு நூல்களை மேலும் விளக்கம் பெறும்வரை கற்றேன். ஒரு தெளிவு பிறந்ததான நம்பிக்கை வந்தது.
அப்போதும் அறவாழித் துறவியான மணிமேகலையிலிருந்தல்ல, மணிபல்லவத் தீவகத்து மணிமேகலா தெய்வத்திலிருந்தே கதையைத் துவக்கினேன். அந்த முறை பல நுட்பங்களுக்கு இடங்கொடுக்கக் கூடியதாய்த் தோன்றியது. பெரும் பெரும் அறக் காரியங்கள் செய்த மணிமேகலையைவிட, அவளை அந்த நெறியில் சாதுர்யமாகப் புகுத்திய அவளது குலதெய்வமான மணிமேகலா தெய்வம் கூடிய முக்கியத்துவம் வாய்ந்ததாயும் எனக்குப் பட்டது. மேலும் முற்பிறப்புரைக்க, வருபொருள் கூறவென காப்பியத்தில் எங்கெங்கும் அம்மாதிரித் தெய்வங்கள் நிறையத் தோன்றிக்கொண்டே இருக்கும். இவற்றுள் எனக்கு மணிகேலா முதன்மையானதாய்த் தென்பட்டது. அதனால் நாவலும் ‘மேகலை கதா’ ஆனது.
 எவ்வளவு தூரத்திற்கு நாவலை விரிப்பது, எத்தனை பக்கங்கள் எழுதுவதென்ற முன்தீர்மானமேதும் எப்போதும்போல் என்னிடமில்லை. எழுதத் துவங்கியிருக்கிறேன். அவ்வளவுதான். அதுவும் வரும் ஜுலையிலிருந்து devakanthanswriting.blogspot.com இல் அத்தியாயம் அத்தியாயமாய்ப் பதிவிடும் எண்ணமும் உண்டு. வாசகர்களை காக்க வைக்காதபடி பதிவேற்றுவேன் என்பது தவிர, எவ்வளவு விரைவு விரைவாக அதைச் செய்வேனென்றும் எனக்குச் சொல்லமுடியவில்லை.
வாசகர்களும் நண்பர்களும் வாசித்து பின்னூட்டமிடவேண்டும். அது என்னை மேலும் ஊக்குவிக்கும். ஐயங்கள், விரிவான கருத்துக்களை bdevakanthan@yahoo.com என்ற முகவரியிலும் பரிமாறிக்கொள்ள முடியும். நன்றி.
அன்புடன்,
தேவகாந்தன்



Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்