கலாபன் கதை: 12


கூட்டிலிருந்து விடுதலையாக்குதல்


எனக்குத் திருமணமான பின்னர் தன் சரீர இச்சைகள் புரியப்பட்ட பெண்கள்பற்றி கலாபன் எனக்கு மிதமாகவேதான் எழுதினான் என்று சொல்லவேண்டும். தான் கொண்டிருந்த உணர்வுகள் என்னையும் ஈர்த்துவிடக்கூடாது என்பதில் அவன் கவனம்கொண்டிருந்தான் என்பதை அந்தத் தவிர்த்தலிலிருந்து நான் புரிந்துகொண்டேன். அவனது கடிதங்களால் எழுச்சியடைந்து கப்பலேற சிறிதுகாலம் முயன்றுகொண்டிருந்தவன்தானே நானும்! அதிகமாகவும் அவன் எழுதியவை உடல் மன இச்சைகளுக்கு இயைந்துவிடும்படியான சூழ்நிலைகளை விளக்குவனவாக மட்டுமே இருந்தன.

தாய்லாந்திலிருந்து அவன் எழுதிய கடிதம், அவன் எழுதிய கடிதங்களுள் முக்கியமானது. சரீரார்த்தமான ஆசைகளும், மனோவுணர்வு சார்ந்த காதல் கருணை போன்றனவும் வௌ;வேறு திசைகளில் பயணம் செய்யும்பொழுது வாழ்க்கை தளும்பிவிடுகிறது என அதில் அவன் எழுதியிருந்தான். அவற்றின் ஒரே திசைப் பயணமே ஒருவனை ஏகபத்தினி விரதனாகவும், ஒருத்தியை ஏகபுரு~ விரதையாகவும் ஆக்குவதாக அவன் சொல்லியிருந்தான்.
‘ஒரு குடும்பஸ்தனுடைய மன உடல் உணர்வுகளினது வௌ;வேறு திசைகளினூடான வழிப்பயணங்கள் என்னைப்போன்ற ஊதாரிகளினைத்தான் உருவாக்குகின்றது.

நீண்டகாலத்துக்குப் பிறகு இந்த ஊதாரித்தனத்தை இறுக்கமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவனோ ஒருத்தியோ இந்த உடலார்த்தமான இச்சைகளைத் தீர்க்க ஓடுமட்டும் ஓடிச் சென்றாலும், ஒரு புள்ளிக்குமேல் செல்லாமல், மனஉணர்வுகளை மீட்டுக்கொண்டு வாழ பலபேர் வந்துவிடுகிறார்கள். பிற ஆணொருவனோடு பாலியல் தொடர்பு வைத்திருந்த பெண்ணொருத்தி தன்னோடு குழந்தையைக் கூட்டிக்கொண்டு வந்துவிடும்படியான அவனது பல ஆசைவார்த்தைகளையும் உதறித் தள்ளிக்கொண்டு தன் புரு~ன், தன் குழந்தையென்று திரும்பிவந்திருக்கிற பல சம்பவங்களை நான் அறிந்திருக்கிறேன். அவ்வாறு போய்ப் போய்த் திரும்பிவந்துகொண்டிருக்கிற பெண்களும் அதிகம்தான். தனிமனிதர்களின் ஒழுக்கவீனமாக இதைப் பார்க்காமல் சமூகம் விட்டிருக்கும் இடைவெளியானது இதற்கான விதையை இட்டு, உரமிட்டு வளர்த்துவிடுகிறது என்பதே எனது கருத்து. கிராமங்களில் இந்த பாலியல் மீறல்கள் உண்டெனினும், அவை நகரங்களில்போல் இல்லை. நகரங்கள் சாபங்களின் கொள்கலன்களாகவே எப்போதும் இருக்கின்றன.’

மெய்யெனவே தோன்றியது. கலாபன் கப்பலேறிச் சென்றிருக்காவிட்டால் ஒருவேளை அவனும் நல்ல ஒரு கணவனாக, நல்ல ஒரு தந்தையாக வாழ்க்கையின் அழைப்புகளில் மிக இயல்பாகச் சென்று வாழ்ந்துகொண்டிருக்கக் கூடும்தான்.

கலாபன் திருந்தவில்லைத்தான், ஆனாலும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறான், இப்போதைக்கு அது போதும் என நான் நினைத்துக்கொண்டேன். அவன் மனைவியும் இப்போது வாழ்க்கையைச் சுமப்பதுபோல எப்போதும் ஒரு நெருக்கத்தில் முக இறுக்கத்தோடு இல்லாமல், கொஞ்சம் கலகலப்பாகவும் செழுமையோடும் இருப்பதை ஊர் சென்றிருந்தபோது கண்டிருந்தேன். அவனது யோசனை குடும்பம் சார்ந்த அக்கறைகளுக்கான செயலூக்கம்கொள்ள ஆரம்பித்திருந்ததின் பிரதிபலிப்பாக அதை நான் கருதினேன்.
கடிதத்தில் இருந்த இன்னொரு நிகழ்ச்சிபற்றிய குறிப்பும் நெடுநாளாக என் மனத்தில் இருந்துகொண்டிருந்தது. தாய்லாந்தில் இருந்தபோது ஒருமுறை கலாபன் கடிதங்கள் அனுப்ப தபால்நிலையம் சென்றிருக்கிறான். தபால்தலைகளை வாங்கி ஒட்ட ஆரம்பிக்கையில் அருகே நின்றிருந்த ஒரு பெண் சொன்னாளாம், ‘உனது கடிதங்கள் ஒழுங்காக விலாசதாரரைப் போய்ச் சேரா’தென்று. கலாபன் திகைத்து ஏனென்று கேட்க அந்தப் பெண் சொன்னாளாம்: ‘தபால் தலையில் இருக்கும் படம் இந்த நாட்டு அரசனதும், அரசியினதுமாகும். நீ அவற்றைத் தலைகீழாகவும், பக்கப்பாடாகவும் ஒட்டியிருக்கிறாய். பக்கப்பாடாக தபால்தலை ஒட்டப்பட்டவை சென்றுசேர வாய்ப்பிருக்கிறது, ஆனால் தலைகீழாக ஒட்டப்பட்டவை செல்லவே செல்லாது.’

அதை ஒரு முடியரசு நாட்டின் மக்களது மனநிலை சார்ந்த முக்கியமான நிகழ்வாகக் கூறி, மிகுந்த சிரமத்தின் பேரில் முத்திரைகளை உரித்தெடுத்து மறுபடி பசை தடவி நேராக ஒட்டி அனுப்பினானாம் கலாபன்.

அந்தக் கடிதத்துக்கான பதிலை அந்த நிகழ்வினை வைத்தே நான் ஆரம்பித்திருந்தேன். ‘செல்லிடம் சேராது எனத் தெரிந்ததும், ஒட்டிய முத்திரைகளை உரித்து நேராக ஒட்டி அனுப்பியிருக்கிறாய். உனக்கே தெரிகிறது உன் செயற்பாடுகள் என்னமாதிரி ஊதாரியாக உன்னை ஆக்குகின்றனவென. உன்னை அந்த வழியிலிருந்து மாற்றி எப்போது திசைதிருப்பப் போகிறாய்?’

000

திருகோணமலையிலிருந்து நண்பன் எழுதிய கடிதம் கலாபனைச் சென்று சேர்ந்தபோது அவனது கப்பல் பம்பாய் துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்தது. பம்பாய்த் துறைமுகத்தை அடைவதற்கு கப்பலுக்கு நீண்டநேரம் எடுத்ததாகக் கலாபன் கருதினான். உண்மையும் அதுதான். மஹாரா~;டிரா தீவுகள் நிறைந்த மாநிலம். பம்பாயே பிரதான பூமியோடு பாலத்தால் இணைக்கப்பட்ட தீவுதான். அத் தீவுகளைத் தாண்டி துறைமுகத்தை அடையவேண்டி இருந்ததாலேயே நிறைய நேரம் பிடித்திருந்தது.

தேவையெனக் கேட்டிருந்ததில் பாதிக்கும் குறைவாகத்தான் துறைமுகம் சேர்ந்ததும் எல்லேருக்கும் பணம் கிடைத்தது. கப்பல்காரர் முணுமுணுப்போடு என்றாலும் பணத்தைப் பெற்றுக்கொண்டார்கள். ஒரு காலை பத்து மணியளவில் பணம் கிடைத்ததென்றால், மாலை ஆறு மணிக்கு மேல் வேலையில் இருக்கவேண்டியவர்கள் தவிர மீதிப்பேர் கப்பலில் இல்லை.
மதியச் சாப்பாட்டுக்கு மேல் எந்திர அறை சென்ற கலாபன் ஐந்து மணிவரை அங்கே வேலைசெய்தான். மேலே வந்து குளித்து வெளிக்கிட்டுத் தயாரானபோதும் இறங்க உற்சாகமின்றி அங்குமிங்குமாய் அலைந்தபடி கப்பலிலேயே இருந்துகொண்டிருந்தான். பிறகு தனது அறைக்கு வந்து பியர் அருந்திக்கொண்டிருந்தான். எட்டு மணிக்கு மேலேதான், முதல் தடவையாக வந்துள்ளபடியால் பம்பாயைப் பார்த்துவிட்டு வரலாம் என வெளியே சென்றான். கூடவர ஒருவன் ஓடிவந்தான். தான் ‘அங்’கெல்லாம் செல்லப்போவதில்லையெனக் கூறிவிட்டு பாதை மாறினான் கலாபன்.

பம்பாயில் அழகான பகுதிகள் இருக்கலாம். ஆனால் பம்பாய்த் துறைமுகப் பகுதி அசிங்கமானது. ஒரு பெரும் அளவுக்கு விரிந்துகிடந்த துறைமுகத்துக்கு பல வழிகள் இருந்தன. ஒவ்வொரு வழியிலும் லொறிகள் அடைத்துக்கொண்டு உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக இருந்தன. துறைமுகத் தொழிலாளரின் போக்கும் வரத்தும் வேறு. உள்ளே நிலைமை இப்படியென்றால், வெளியே நிலைமை படுமோசமாக இருந்தது.
பசிய இலைகளையுடைய அரசு, வேம்பு, வாகை போன்ற மரங்கள் தூசியினால் மூடப்பட்டு கருமையடைந்து கிடந்தன. அவை உதிர்த்த இலைச் சருகுகள் தெருவின் இரண்டு கான்களிலும் நிறைந்து கிடந்தன. மரங்களின் அடிகள் வெற்றிலைத் துப்பல்களால் செம்மை பரவியிருந்தன. அங்கே ஒருவர் இயங்குவதற்கு செலூக்கத்துக்கான ஒரு போதை தேவைப்பட்டதுபோலும். அதை பான் பராக் என்ற பாக்குத் தூள் கொடுத்தது. பான் பராக் வியாபாரம் அபரிமிதமாக இருந்தது பம்பாயில். தொழிலாளர், அலுவலக ஊழியர் மட்டுமல்லாது, அதிகாரிகள்கூட அதன் சிற்றடிமைகளாக இருந்தமை இது காரணத்தால்தான்.

ஆவணி மாதமாக இருந்தது அக் காலம். பம்பாயில் அதிக மழை பெய்யும் காலமும் அதுதான். அன்று மழை பெய்ததா தெரியவில்லை, ஆனால் ஒரு மழைக் காலத்தின் அத்தனை அழுக்குகளும் துறைமுகத்தின் வெளித் தெருக்களில் ஒதுங்கியிருந்தன. பாதை ஒரு சீர்கேடு எனில், பாதையின் இரு பக்கங்களிலும் நிறைந்திருந்த சாக்கு, தார்ப்போலின், பொலித்தீன் தாள் குடிசைகள் இன்னொரு சீர்கேடு. வறுமை விலக்கப்பட வேண்டியதே தவிர, வெறுக்கப்பட வேண்டியதில்லையெனத் தெளிவிருந்தது கலாபனுக்கு. அதுவும் அக் குடிசைகளின் வாசல்களில் கேட்ட தமிழ்ப் பேச்சுக்களும், உள்ளே ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருந்த தமிழ்ப் பாடல்களும் அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டிலிருந்து பிழைப்புத் தேடி பம்பாய் வந்து வதங்கும் தமிழ்க் குடும்பங்கள் எனத் தெரிந்தபோது அவனால் அனுதாபப்படாமல் இருக்க முடியவில்லை.

பம்பாய் பகலில்தான் நெரிசலும், இரைச்சலும். இரவில் பகலில்போல் அது இல்லை. ஆனாலும் இரைந்துகொண்டும் பறந்துகொண்டுமே இருந்தது. அந்த இரைச்சல் உழைத்துப் பிழைப்பதற்கான நெரிசலும் இரைச்சலுமாக நிச்சயமாக இல்லையென்பதை கலாபனுக்கு அதன் இயங்கு முறை சொல்லிக்கொண்டிருந்தது.

கலாபன் நடைபாதைக் குடியிருப்புத் தெருக்களைத் தாண்டி பம்பாய் விக்டோரியா டெர்மினல் புகையிரத நிலையத்தடிக்கு வந்தான். அதுதான் பிரபலமான வி.ரி.ஸ்ரே~ன்.
பயணச் சுறுசுறுப்புகள் பகலில்போலவே இரவிலும் அங்கே பறந்துகொண்டிருந்தன. கலாபன் அதையும் கடந்து ஒரு தெருவில் நடந்தான். அழகிய கடைத்தெருவாக இருந்தது அது. அழகழகான ஆண்களும் பெண்களும் அதிகமாகவும் ஆங்கில உரையாடல்களுடன் நடந்துதிரிந்தனர்.

பம்பாய் மஹாரா~;டிர மாநிலத்தின் தலைநகர். இந்தித் திரைப்பட உலகத்தின் தலைமையகமும் அதுதான். அதனால்போலும் துறைமுகம் சார்ந்த பகுதியைத் தவிர அது ஒரு தேடலோடு அலைந்துகொண்டிருந்ததாய்ப் பட்டது அவனுக்கு.

பாலியல் தொழிலுக்கு கொடி கட்டியிருந்த இடமும்தான் பம்பாய். வயதுவாரியாக மட்டுமில்லை, மாநிலவாரியாகவும் அங்கே விலைமாதர் கிடைத்தனராம். கலாபன் அறிந்திருந்தான். ஆனாலும் அதைச் சென்று சேர்கிற வழி தெரியாதிருந்ததோடு, அதற்கான மனநிலையும் அவன் அற்றிருந்தான் அந்தப் பொழுதில். மனநிலை அற்றிருந்ததற்கு இரண்டு காரணங்கள் அவனளவில் இருக்க முடியும். ஒன்று, அங்கே எல்லா மாநிலங்களிலும்போல டாக்ஸி ட்ரைவர்கள் நம்பப்பட முடியாதவர்களாயிருந்தனர். மற்றது, றெட் லைட் எனப்படும் அங்கீகாரமுள்ள விலைமாதர் பகுதியானது மிக மலிவான பாலியல் தொழில் பெண்களின் இடமாக பால்வினை நோய்களின் மய்யமாக இருந்தது.

தற்செயலாக சிவப்பு, பச்சை, மஞ்சள் விளக்குகளில் மின்னிக்கொண்டிருந்த றெஸ்ற்றோறன்ற் ஒன்று கலாபனது கண்களில் பட்டது. கொஞ்சம் குடிக்கவும், கப்பலிலேயே எப்போதும் சாப்பிடுவதால் கொஞ்சம் மாற்றான ஓர் இரவுச் சாப்பாட்டுக்காகவும் அதற்குள் நுழைந்தான்.
நவீன ரகமாக இருந்தது அது. ஒருபால் நேர் இன்னிசை வழங்குநர்கள். மறுபால் அதனை ரசிக்க குடிவகையுடன் முன்னிருந்துகொண்டிருந்தோர். தனிமையை விரும்பியோர் ஒரு பகுதியாக. இப்படி விசாலமான றெஸ்ரோறன்ற் அது. பில் அதிகமாகவே வரக்கூடும் என்று கலாபன் நினைத்தான். ஆனாலும் ஒரு கப்பல்காரனை முழுங்குகிற அளவாக அது இருக்காதென்று நினைத்து, முதலிலேயே இரண்டு றாம் விஸ்கிக்கு தனக்கு பரிசாரகியாக வந்த ஒரு மெலிந்த பஞ்சாபிப் பெண்ணிடம் சொன்னான்.

ஒரு நடிகையைப்போன்ற எழிலோடு இருந்தாள் அந்தப் பரிசாரகி. மெலிந்து உயர்ந்து கண்களில் ஒரு குறும்பின் துடிப்புடன் துடியோடு இருந்தாள். இடையும் துடிதான். ஆனாலும் மேலேயிருந்த வலுத்த தனங்களைத் தாங்கும் சக்தியோடுதான் அது இருந்தது.
நேரம் பன்னிரண்டுக்கு மேலானது. கலாபன் ஆங்கில, இந்தி பாடல்களின் அந்த சத்தக் களேபரத்திலிருந்து வெளியே வந்தான்.

மெல்லிய மழை தூறிக்கொண்டிருந்தது. போதையில் அந்த இரவும், மழைத் தூறலும், அதன் காரணமாய் விரவிநின்ற குளிரும் மேனியில் தகிப்புண்டாக்கத் தொடங்கியிருந்தன. அவன் வந்தபோது வீதியிலிருந்த மக்கள் நடமாட்டத்தில் பாதிக்குப் பாதி அப்போது இல்லை. அந்தச் சூழ்நிலை அவனுக்குப் பிடித்திருந்தது. உடனடியாக கப்பலுக்குத் திரும்புவதென்ற எண்ணத்தோடுதான் வெளியே வந்திருந்தான். அந்த விருப்பத்தை சூழ்நிலை மாற்றிக்கொண்டிருந்தது. அவனிடத்தில் இப்போது இருந்தது வேறு விருப்பம்.
அவன் சிகரெட் எடுத்துப் பற்றவைத்தான்.

அப்போது திடீரென பாதையோரத்தில் ஓர் இருட்டான இடத்திலிருந்த ஒரு மனிதன் வந்து, கடையெல்லாம் பூட்டிவிட்டது, ஒரு சிகரெட் தர முடியுமாவெனக் கேட்டான். தமிழிலேதான். கலாபன் ஒரு சிகரெட்டை எடுத்துக் கொடுத்தான். அவனுக்காக லைட்டரைத் தட்டி சிகரெட்டைப் பற்றவைத்த பொழுதில்தான் அந்த எண்ணம் கலாபனுக்குத் தோன்றியது. இவன் தமிழனாகவும் இருக்கிறான், இவனிடம் பேச்சுக்கொடுத்து பம்பாயின் இரவு உல்லாச இடங்கள்பற்றி விசாரித்தாலென்ன?

பேச்சுக்கிடையில் தனது பெயர் ராஜு எனச் சொன்ன அந்த மனிதன், தான் ஓவியராக மாதுங்காவிலிருக்கும் லட்சுமியென்ற தமிழ்ப் பட தியேட்டரில் வேலைசெய்வதாகவும், இரண்டு நாட்களாக அங்கேயே இருந்து மறுநாள் வெளிவரப்போகும் புதிய தமிழ்ப் படம் ஒன்றுக்கான பெரிய தட்டிச் சித்திரங்களை வரைந்துவிட்டு மாலையிலேதான் வந்ததாகவும், சிறிய ஒரு தாக சாந்தி அதுபோல குறைந்த ஊதியக் கலைஞர்களுக்கும் இருந்துவிடுகிறதே என்ற தன் சலிப்பை ஒரு நகைச்சுவையோடும் கூறினான் ராஜு.

பேச்சுச் சுவாரஸ்யத்தில் அவர்கள் வி.ரி.ஸ்ரே~னடிக்கு வந்திருந்தனர். அப்போது அவர்களை உரசுமாப்போல இரு பெண்கள் கடந்துசென்றனர். கலாபன் நின்றான். சரக்குகள்போல இருக்கே? என்றான். ‘இதென்ன சார், சரக்கு? உங்களுக்கு வேணும்னா வாங்க, சூப்பர் சரக்கே எடுத்துத் தர்றேன்’ என்றான் ராஜு. ‘இந்த நேரத்திலா?’ ‘இதற்கு விடியும்வரை நேரம்தான், சார்.’

அவ்வாறு அவர்கள் வந்துசேர்ந்த இடம்தான் கோழிவாடா என்ற பகுதி.

தெருவின் இரண்டு பக்கங்களிலும் முந்நூறு நானூறு என குடிசைகள். குடிசைகளின் பின்னால் சிறுசிறு மலைகள் தெரிந்தன. துறைமுகத்தைக் கப்பலில் அடைந்தபோது கலாபன் சில குறுமலைகளைக் கண்டிருந்தான். அந்த மலைகளாகக்கூட அவை இருக்கலாம். தெருவெங்கும் உடைத்த மலைக்கற்கள் சிதறிக் கிடந்தன. கல் குவாரியோ? என அதிசயித்தான் கலாபன். அங்கே வேலைசெய்யும் தொழிலாளரின் தற்காலிகக் குடியிருப்புக்களா அவை?

அந்தக் குடிசைகளுள் ஒன்றின் வாசலில் நின்று யாரையோ அழைத்தான் ராஜு. கதவு திறந்தது. உள்ளே சென்றனர் இருவரும். போதுமான வெளிச்சம் செய்யாத சிறிய மின்குமிழ் விளக்கொன்று எரிந்துகொண்டிருந்தது. புதிய ஆண்கள் வந்திருப்பதறிந்து அங்கேயிருந்த இரண்டு மூன்று பெண்கள் உதட்டின் சிவப்புச் சாயம் பளீரிட முன்னால் வந்து நின்றனர். தனக்கு அவர்கள் யாரையும் பிடிக்கவில்லை என்றுவிட்டான் கலாபன். அப்போது, அம்மா என்ற அந்த திருநங்கை, ‘புதுப்பொண்ணு என்ன செய்யிறா? அவளை வரச்சொல்லுடீ’ என்று இரைந்தாள்.

புதுப்பெண் என்றபடியாலே சற்றுச் சார்பாகச் சிந்திக்கவே இருந்த போதை கலாபனைச் செய்துகொண்டிருந்தது.

கலாபன் சம்மதித்தான்.

ஒரு இரவுக்கு இருபத்தைந்து ரூபா. இரண்டு பேருக்கு ஐம்பது. ராஜுவையும் வலிந்து தங்கவைத்தான் கலாபன்.

அவனுக்கு மேலே இருவர் படுப்பதற்கான அளவுமட்டுமுடைய ஓர் அறை. கீழே ராஜுவுக்கு.
ஒரு கட்டத்தில் அதனுள் எரிந்துகொண்டிருந்த லைட்டை அணைத்தாள் அந்தப் பெண். உடைகளைக்கூட கழற்றாமல் படுத்தாள். கலாபன் அதிசயித்தான். புதுபெண் என்றால் அப்படித்தானோ? அவன் வற்புறுத்தியே பாவாடை சட்டையைக் கழற்றவைக்க வேண்டியிருந்தது.

அவள் வெறுமேலானதும் அவளது மார்பில் கைவைத்தான் கலாபன்.
அவள் சரீரம் ஒருமுறை பதறியது.

சட்டெனக் கையை எடுத்துக்கொண்டான் அவன்.

அந்தப் பதற்றம்பற்றி அவன் அறிந்திருக்கிறான். பிறபுரு~னொருவனது தொடுகையில் ஒழுக்கமான பெண்களிடத்தில்மட்டும் தோன்றுகிற எதிர்ப்புணர்வு அது. அதை ‘பயிர்ப்பு’ என்கிறது இலக்கணம். பெண்களுக்கு இருக்கவேண்டியவையென வகுக்கப்பட்ட நான்கு குணங்களான அச்சம், மடம், நாணம் என்ற குண வரிசையில் நான்காவது அந்தப் பயிர்ப்பு.
அது ஒரு பெண்ணுக்கு இருக்கவேண்டுமா என்ற விசாரணை அவனிடமும் உண்டு. ‘அச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டுமாம்’ என்று பாரதிகூடப் பாடிவைத்திருக்கிறான். ஆனால் அதுவல்ல அப்போது அவனது பிரச்சினை. அந்தப் பயிர்ப்பு அவளிடம் இருக்கிறது. அவள் சறுக்கி விழுந்த இடமாகக்கூட அந்த விபசாரக் கூடம் இருக்கலாம். ஒரு பலாத்காரத்தில் அவள் அங்கே கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்கவும் கூடும்.
கலாபன் அவளுக்கு அது விருப்பமில்லையா என்று கேட்டான்.

அவள் சிறிதுநேரம் குலுங்கினாள். அழுகைச் சத்தம் வெளியே கேட்டுவிடக்கூடாது என்ற பயத்தில்போல் அடக்கிய அழுகையின் அதிர்வு அது. பிறகு தெளிந்துகொண்டு தன் கதையைச் சொன்னாள்.

அவளது சொந்த இடம் தமிழ்நாட்;டில் மதுராந்தகம். வீரசாமி செட்டியாரின் பேர்த்தி.
அவள் தன் கதையைச் சிறிது விஸ்தாரமாகத்தான் சொன்னாள். மீதி இரவை முடித்துவிடுகின்ற எண்ணத்தோடு இல்லை, அவனே தன் கதையைக் கேட்கும் இதயத்தோடு அவளிடம் வந்திருக்கிற முதல் ஆள்.

பம்பாய் சென்று குடித்தனம் நடத்த விமானப் படையில் வேலைசெய்த தன் காதலனோடு வீட்டைவிட்டு ஓடிவந்த பெண்ணாகத்தான் போன மாதத்தில் அவள் இருந்தாள். ஐந்து நாட்களில் தான் அனுபவிக்க வேண்டியதையெல்லாம் அனுபவித்துவிட்டு அவளைத் தங்கியிருந்த லொட்ஜிலேயே தன்னந்தனியனாக விட்டுவிட்டு காதலன் ஓடிவிட, கையில் காசுமில்லாது லொட்ஜ் மனேஜருக்கு உடலை சாப்பாட்டுக்காகவும் அறை வாடைகைக்காவும் கொடுத்துக்கொண்டு ஒரு கிழமையைக் கடத்தியிருக்கிறாள் மங்கையர்க்கரசி என்ற இயற்பெயருடைய அந்தப் பெண். கடைசியில் ஒரு தரகனுக்கு விலைபேசப்பட்டு அந்த இடத்தை மூன்று நாட்களுக்கு முன்னர்தான் வந்தடைந்திருந்தாள் அவள். வந்தபோது மிகவும் சுகவீனமாக இருந்தாள். மருந்தெடுத்துக் கொடுத்தாளாம் அந்தக் கூட்டின் பாதுகாவலி. அன்றுதான் தன்னால் நடமாட முடிந்திருந்ததாம். கூட இருந்த மற்றைய பெண்களின் கதையும் ஏறக்குறைய அதேதானாம். ஆனால் விதி எழுதியாகிவிட்டது, இனி அங்கிருந்து மீட்சியில்லை, அங்கேயுள்ள அரவாணிகளின் காவலிலிருந்து அதுவரை யாரும் தப்பியதில்லையென சொல்லி முடித்தாள் அங்கே லட்சுமி என நாமம் சூட்டப்பட்டிருந்த அந்தப் பெண்.

‘வீட்டுக்குப் போகிறாயா, நான் அனுப்பிவைக்கிறேன்?’

‘நான் என்ன பிழை செய்திருந்தாலும் தாத்தா ஏற்றுக்கொள்வார். என்னில் கொள்ளை பிரியம் அவருக்கு. ஆனால் இங்கிருந்து தப்பிப்போக முடியாது.’

‘அதை நான் பார்க்கிறேன்.’

இரவு முழுக்க யோசித்துக்கொண்டே கிடந்தான் கலாபன்.

மறுநாள் ராஜுவிடம் வி~யத்தைச் சொல்லி, அவளை அங்கிருந்து தப்புவிக்க உபாயம் கேட்டான். ராஜு முடியவே முடியாது என்றுவிட்டான். அது உயிருக்காபத்தானது என்றான்.
கடைசியில் கலாபன் வற்புறுத்தியதின் பேரில் ஒரு யோசனை சொன்னான் ராஜு. அதற்கு பணம் நிறையத் தேவைப்படும் என்றான். கலாபன் திட்டத்தைமட்டும் சொல்லச் சொன்னான்.
அடுத்த நாளும் கலாபன் அங்கே சென்றான். அதே பெண்ணுடனே அறையில் தங்கினான். இரண்டாம் நாள் நள்ளிரவுக்கு மேல் பொலிஸ் வான் ஒன்று அந்தப் பகுதியை அடைந்தது. சில குடிசைகள் சோதனையிடப்பட்டன. கலாபன் இருந்த மாடிஅறைக் குடிசையும்தான். குடிசைப் பாதுகாவலியான அம்மாவின் எத்தனை கெஞ்சுதலும், இருநூறு…முந்நூறு…தருகிறேன் என்ற எந்தப் பேரம் பேசுகையும் அதிசயமாக அன்றைக்கு பொலிஸிடம் எடுபடவில்லை. அங்கிருந்த பெண்களும் ஆண்களும் வானில் ஏற்றப்பட்டனர்.

வெகுதூரம் சென்றதும் வான் நின்றது. கலாபனும், மங்கையர்க்கரசியும் இறக்கிவிடப்பட்டதும் வான் மறுபடி புறப்பட்டது. முன்னிருக்கையில் இருந்த சப்இன்ஸ்பெக்டர் சலுட் அடித்து விடைபெற்றார். கலாபனும் கையசைத்தான்.

பத்து நிமிட நடையில் இருவரும் வி.ரி.ஸ்ரே~னை அடைந்தனர். பம்பாய்-மெட்ராஸ் புகைவண்டி மேடைக்கு வரும் நேரமாகவிருந்தது அது. கலாபன் இரட்டிப்பு விலைக்கு மேடையிலேயே அந்தப் பெண்ணுக்காக ஒரு ரிக்கற் வாங்கினான். ரிக்கற்றையும் சிறிது பணத்தையும் அவளிடம் கொடுத்துபோது அதை வாங்கிக்கொண்ட அந்தப் பெண்ணின் கண்களில் நன்றி ததும்ப கண்ணீர் துளிர்த்திருந்தது.

ஸ்ரே~னைவிட்டு கலாபன் வெளியே வந்தான். காற்று குளிர்ந்து வீசிக்கொண்டிருந்தது. புகை, தூசியற்ற தெளிந்த காற்று. மனம் லேசாகவிருந்தது. வி~க் கூடொன்றிலிருந்து ஒரு பெண்ணை விடுதலையாக்கியதில் அந்த லேசு. அது அவளிடம் அடைந்திருக்கக்கூடிய காம சுகத்தைவிட மேலானதாக அக் கணத்தில் தோன்றியது கலாபனுக்கு.

000

தாய்வீடு, ஆனி 2010

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்