ஆயிரம் முலைகளோடு வந்த ஆதித் தாய்’

‘ஆயிரம் முலைகளோடு வந்த  ஆதித் தாய்’



தமிழ்நாட்டில் இன்றும் நடைமுறையிலிருக்கும் மறைந்த முதலமைச்சர் திரு. காமராஜர் ஆரம்பித்துவைத்த சத்துணவுத் திட்டத்துக்கு நிகரான உணவுத் திட்டமொன்று, ஐம்பதுக்களில் வட இலங்கைக் கல்வி வட்டாரப் பள்ளிகளில் நடைமுறையிலிருந்தமை எனக்கு இன்றும் ஞாபகமிருக்கிறது. சின்ன இடைவேளை எனப்பட்ட 10.15 மணி இடைவேளையில் காலை ஆகாரமாக பாலும், மதிய உணவு இடைவேளையான 12.45க்கு பணிஸ_ம் கொடுத்தார்கள்.

பிரித்;தானியர் ஆட்சிக் காலத்திலிருந்தே இந்த உணவளிக்கும் முறைமைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கந்தர் மடப் பள்ளியில் நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்வரை சின்ன இடைவேளையில் பால் கிடைத்துக்கொண்டிருந்தது. பின்னால் அது நின்றுபோக மதிய வேளையில் பணிஸ் கொடுப்பது தொடர்ந்துகொண்டிருந்தது. பின்னால் அதுவும் நின்றுபோனது. எப்போதென்று தெரியவில்லை. அதேவேளையிலேயே வட இலங்கைக் கல்வி வட்டார அனைத்துப் பள்ளிகளிலும் நின்றுபோயிருத்தல் கூடும்.

மதிய உணவு இடைவேளை நேரமளவில் கந்தர் மடப் பள்ளிக்கூட வளாகத்தின் நிறைந்த மாமரங்களிலெல்லாம் ஊரிலுள்ள காக்கைகள் முழுவதும் பறந்துவந்து கூடிவிடும். பக்கத்து தோட்ட நிலங்களைக் கடந்து அவை பறந்துவரும் அழகு கண்ணுக்குச் சுகமானது. தம்மினத்தைக் கரைந்தழைக்கும் அவற்றின் குரலெடுப்பு செவிக்கு இனிதானது. ‘காக்கை கரவா கரைந்துண்ணும்’ என்ற குறளை, பின்னால் வெகுகாலத்தின் பின் உயிரோட்டத்தோடு நான் உணர்ந்துகொண்டமை இந்த அனுபவத்திலிருந்தே பிறந்திருக்க முடியும்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கு கா…கா…என்ற கரைதலொலி ஊரையே அலற வைத்துக்கொண்டிருக்கும். அவற்றின் சிறகடிப்பு ஊரை அதிரவைப்பதாயிருக்கும். மாணவர்கள் சாப்பிட்டு மீதியாகவும், உட்புறம் வேகாது ‘பச்சை’யாக இருக்கிறதென்றும் வீசும் பணிஸ_க்காகத்தான் இந்த ஆரவாரம் கிளர்ந்தெழுவது. பள்ளியையேகூட அது இடைஞ்சல் செய்வதாயிருக்கவில்லை என்பதுதான் இதிலுள்ள விசே~ம். ஊரின் மதியத்து இருப்பு அதுவாயே இருந்ததாய் இப்போது உணர முடிகிறது.

மக்கள் பெரும்பாலும் தோட்டக்காரராகவும், கூலி வேலைத் தொழிலாளராகவும் இருந்த அந்த ஊரில் பலபேருக்கு தமிழின் முதல் எழுத்தான அகரத்தை எழுதப் பழக்கியது அந்தப் பள்ளிதான். அந்தவகையில் எனக்கு எழுத்தறிவித்த பள்ளி அது. கடவுட் பள்ளி! அதுபற்றிய எந்தவொரு நினைப்பும், ஒரு சுழற்சியில்போல் பல்வேறு ஞாபகங்களை இழுத்துவந்துவிடுகிறது. ஆயினும், ஒரு கடலைக்காரி போதி மரத்தடி ஞானோபதேசியாகவும், ஒரு சாதாரண பால்காரி அன்பு செலுத்துவதன் மகத்துவத்தைப் போதிக்கும் ஆதித் தாயாகவும் பரிணமிப்பது இன்றைய அனுபவ முதிர்ச்சியில்தான் வந்து கூடமுடியும்.

பல்வேறு வசதிகளையுடைய குடும்பங்கள் ஊரில். அதனால் ஒவ்வொருவருக்கும் வௌ;வேறு நேரங்களிலேயே பள்ளி போக முடிந்திருந்தது. நான்காம் ஐந்தாம் வகுப்புவரை ஐயாவின் சைக்கிளில் பள்ளி சென்றுவந்த நான் பின்னால் நடந்துதான் போய்வந்துகொண்டிருந்தேன்.

எனது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த கந்தசாமி, பள்ளி முடிந்து என்னோடுதான் ஒன்றாக வீடு வந்துகொண்டிருந்தான். என்றைக்காவது கந்தசாமி நேரத்துக்கு பள்ளி வந்ததாக எனக்கு நினைவில்லை. பாலும் பணிஸ_ம் கொடுத்திருக்காவிட்டால், கந்தசாமி பள்ளிக்கே வந்திருக்க மாட்டானென்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது. அரை மணி, முக்கால் மணி தாமதமாகக்கூட அவன் பள்ளிக்கூடத்துக்கு வந்திருக்கிறான். அந்த நாட்களில் அவன் வாசல்புறமாக வகுப்புக்கு வரமாட்டான். ஒரு பகுதி மறைப்பாக அடைக்கப்பட்ட வேலிகளில் நாய்கள் இட்ட பொட்டுக்களில் நுழைந்து அல்லது மறுபுறத்திலிருக்கும் கம்பி வேலிக்கு மேலால் ஏறி வருவான். எது வசதியோ அதன்படி செய்வான்.

எப்போதும் கையில் பிரம்புடன் நடமாடும் தலைமையாசிரியரின் பார்வையில் பட்டுவிடக்கூடாது என்பதுதான் அவனது ஒரே எண்ணம். மற்றப்படி ஆசிரியர்கள்பற்றி அவன் அதிகம் கவலைப்பட்டதில்லை. பல ஆசிரியர்களும் அவனது வீடு தாண்டியே தமது வீடு செல்லவேண்டியவர்களாயிருந்தனர். மற்ற ஆசிரியர்களும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்தான். எவரும் அவனை உதாசீனம் செய்துவிட முடியாது. பட்ட தென்னம் பொந்திலிருந்து எட்டிப் பார்க்கும் கிளியை, மாமரக் கொம்பர்களில் ஓடித் திரியும் அணிலை அவன் பொத்துப்பொத்தென ஒரே கல் வீச்சில் விழுத்துவதை அவர்கள் கண்டிருக்காதவர்களா என்ன! எவ்வளவுதான் நேரமாகி பள்ளி வருபவனானாலும் கந்தசாமி சின்ன இடைவேளை மணி அடிப்பதற்கு முன்னர் வந்துவிடுவான் என்பதில்தான் அவனது திறமை இருந்தது.

காலை 10.15க்கு இடைவேளை மணி அடிப்பதன் முன்னர் ஐந்து நிமிடத்துக்கு முன்னரே வகுப்பில் சுறுசுறுப்பாகிவிடுவான் கந்தசாமி. மணிக்கூடு பார்க்காமலே சரியாக நேரத்தைக் கணித்துவிடும் நேரப் பிரக்ஞை அவனிடமிருந்திருக்கிறது. மணி அடித்ததும் எல்லா மாணவர்களும் விழுந்தடித்துக்கொண்டு பால் வார்க்கும் இடத்துக்குப் பறந்து போவார்கள். சிறிய வகுப்பு மாணவர்கள் முதலில் செல்லக்கூடிய வாய்ப்பாக அவர்களுக்கு பாடம் நடத்தப்படும் இடங்கள் இருந்தன. ஆயினும் எங்கள் வகுப்பிலிருந்து முதலில் செல்லக்கூடியவனாக அவனே இருந்தான்.

பால் காய்ச்சுவதற்கும், அதை இறக்கி சீனி போட்டு கலக்கி மாணவர்களுக்கு அளவாக ஊற்றுவதற்கும், பின்னர் காய்ச்சிய, குடித்த பாத்திரங்களைக் கழுவி வைப்பதற்கும் பள்ளிக்குக் கிட்ட வீடுள்ள ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தியிருந்தது பள்ளி நிர்வாகம்.

அவளுக்கு அன்னபூரணியென்று பெயர். நல்ல சிவந்த மனிதி. வாளிப்பான உடம்பு. கருகருவென்ற கூந்தல் அவளுக்கு. எண்ணெய் வைத்து நன்றாக வாரி முடிந்திருப்பாள். நீலம், சிவப்பு, பச்சைகளில் நூல் சேலை கட்டுவாள். பப்ளின் துணியில் சட்டை அணிவாள். கடலைக்காரி போல அல்ல, பால்காரி ஐயர்ப் பெண்களைப்போல துப்புரவாக இருப்பாள். காலையில் பளிச்சென்று அவளது கோலம் இருக்கும். பெரிய தனங்கள் அவளுக்கு. குறுகிய நேரத்தில் அத்தனை மாணவர்களுக்கும் பாலைக் கொடுத்துவிட பம்பரமாய்ச் சுழல்வாள். மாணவர்கள் குடிக்கும் மூக்குப் பேணிகளை உடனுக்குடன் கழுவி மற்றைய மாணவர்களுக்கு கொடுக்கும் அவசரத்தில் அவள் தன்னையே மறந்திருப்பாளென்று நினைக்கிறேன். அவளது தனங்கள் அதிகமும் தம்மை வெளிக்காட்டும் தருணங்கள் அவைதான். என் அவள்மீதான கவனக் குவிப்புகள் அதனால்தான் இருந்தனவோ?

எங்கள் வகுப்பிலிருந்து முதலில் வந்துவிடும் கந்தசாமி பாலைக் குடித்தவுடனேயே வகுப்புக்கு வந்துவிடமாட்டான். சிலவேளைகளில் முட்டியடித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் மறுபக்கத்தில் நின்று இன்னொரு முறை பால் வாங்கிக் குடிப்பதை சிலவேளைகளில் நான் கண்டிருக்கிறேன்.

‘ரண்;டாந்தரம் ஒருதரும் பால் வாங்கக்குடாது. மற்றப் பிள்ளையளுக்குக் குடுக்க காணாமல் போயிடும்’ என்று அவ்வப்போது பால்காரி சொல்லுவாள்தான். கந்தசாமிக்கு அவை கேட்பதில்லைப் போலும்! அவ்வாறு இரண்டாந்தரம் பால் வாங்கிக் குடித்த பின்னர் நான் கவனித்திருக்கிறேன். அப்போதுதான் அவனது முகம் களை தீர்ந்து பொலிவு கொண்டிருந்திருக்கிறது.

அதிகமும் முண்டியடித்துக்கொண்டு எதையும் வாங்கும் சுபாவமில்லாத நான் இடைவேளை முடிந்த மணி அடிக்கிற வேளையில்தான் பால் வாங்கிக் குடிக்க முடிந்திருக்கிறேன். அது எனக்குச் சிரமமாகவும் இருக்கவில்லை. பார்வை விருந்து எனக்குக் கிடைத்துக்கொண்டே இருந்தது. நான் மட்டுமேதான் அப்படியா? வேறு சிலரும் அப்படி இருந்திருக்க முடியுமா? சொல்ல எனக்குத் தெரியவில்லை. என் அழுகல்கள் தொடங்கியது அந்தப் புள்ளியிலிருந்தாயும் இருக்கலாம்தான்.

பால் தட்டுப்பாடாக இருந்தது ஒரு கிழமையில். வரவேண்டிய பால்மா ரின்கள் பள்ளியை வந்துசேரத் தாமதம். ஒருநாள் வழக்கம்போல் பிரம்பும் கையுமாக மாணவர்கள் பால் குடிக்குமிடத்தில் நின்று ஒழுங்குகளைக் கவனித்துக்கொண்டிருக்கிறார் தலைமையாசிரியர். வரிசைமுறை இல்லாவிட்டாலும் சத்தம் சந்தடிகளற்று மாணவர்கள் பாலை வாங்கிக் குடித்துவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

அவசரமாக ஓடிவந்தும் அன்றைக்கு தலைமையாசிரியர் வந்துநின்று தனது இரண்டாவது பேணிப் பாலைக் கெடுத்துவிட்ட சோகத்தில் நின்று பாலை வாங்கிக் குடிக்கிறான் கந்தசாமி. அவன் குடித்து முடிகிறவரையில் அவனது கையைப் பிடித்திழுத்து மேலும் பேணி நிறைய வார்த்துவிடுகிறாள் பால்காரி. கந்தசாமி குடித்துவிட்டு முகம் மலர திரும்பிச் செல்கிறான்.

நான் பால் வாங்கிக் குடிக்கும் நேரத்தில் சற்று முன்னே வந்து பால்காரியிடம் கேட்கிறார் தலைமையாசிரியர், ‘என்ன பால்காரம்மா, நீங்களே ரண்டாம்தரம் பால் வார்த்து விடுகிறியளே?’ என.

அவள் சொல்கிறாள்: ‘பாவம், அவன் பசியோடு இருப்பான்.’

‘மற்றப் பிள்ளையளுக்குக் காணாமல் போயிடுமெல்லோ?’

‘அதெல்லாம் நான் பாத்துக்கொள்ளுவன், சேர். எந்தப் பிள்ளை எவ்வளவு குடிக்குமெண்டெல்லாம் எனக்குத் தெரியும். குறையக் குடிக்கிற பிள்ளையின்ரை பால் கூடக் குடிக்கிற பிள்ளைக்கு.’

தலைமையாசிரியர் மேற்கொண்டு பேசவில்லை. அப்படியே அப்பால் நகர்ந்து மெல்லப் போய்விடுகிறார். இனிமேல் அந்த இடத்தில் அவரது கண்காணிப்புக்கு அவசியமில்லை.

இப்போது நினைக்கிறபோது உள்ளம் சிலிர்த்துப் போகிறது. ஒரு தாயேபோல் என்ன கரிசனை! கந்தசாமியின் ஊத்தை உடுப்புக்குள் கொதித்துக்கொண்டிருந்த ஒரு வயிற்றை அவனது சொந்தத் தாயேபோல் உணர்ந்திருக்க யாரால் முடிந்திருக்கும்! அவளுக்கு விம்மிய இரண்டு முலைகள் இருந்ததைத்தான் நான் கண்டிருந்தேன். ஆனால் இப்போது தெரிகிறது, அவளுக்கு ஆயிரம் முலைகள் இருந்தனவென்று. ஆயிரம் குழந்தைகளுக்கானவை அந்த ஆயிரம் முலைகளும்.

ஆயிரம் முலைகள்கொண்டு இந்த உலகு புரந்ததாய்ச் சொல்லப்படும் ஆதித் தாயாக உண்மையில் அந்தப் பால்காரி இப்போது எனக்குத் தரிசனமாகத் தொடங்கினாள்.

000

நாளை, 01 ஆனி 2010

Comments

நீங்கள் படித்து நிறைய வருடங்கள் கழித்துத்தான் நான் பாடசாலை சென்றிருப்பேன். ஆனால் அதே நினைவுகள், நிகழ்வுகள். அழகாக மீட்டித் தந்திருக்கிறீர்கள்.

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்