கலாபன் கதை 1

குருவிக்கு ஒரு கூடு வேண்டும் :


அது ஒரு 1974இன் ஆடி மாதத்து இரவு. செறிந்து விழுந்து கிடந்தது இருள். ஆனாலும் தலைநகரின் மின்வெளிச்சம் வானத்தை ஓர் ஒளிப்பரவலில் கிடத்தியிருந்தது.

படுக்கையில் படுத்திருந்த கலாபன் உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தான். பின் உறக்கம் வராதென்று உறுதியாக, எதையாவது அமைதியாகக் கிடந்து யோசிப்போம் என்ற முடிவோடு நிமிர்ந்து கிடந்தபடி தலையுயரத்தில் இருந்த வட்ட இரு கண்ணாடி ஜன்னல்களினூடு பார்வையை வெளியே எறிந்தான். வானம் தெரிந்தது. நிலா இல்லாத, நட்சத்திரங்களும் இல்லாத வானம். அவ்வப்போது ஒன்றிரண்டு நரைத்த முகில்கள் மிதந்தோடின அதில். பிறகு ஒரே வெளிர் நீலம். அதைப் பார்ப்பதுகூட அவனுக்கு வெகுநேரமாக அலுக்கவில்லை. பார்வை பரவெளியில் பதிந்திருந்தாலும் சிந்தனை அவ்வெளியினூடு சிறகடித்து வீடுநோக்கிப் பறந்துகொண்டிருந்தது.

அவன் தனது இளமனைவியையும், குழந்தையையும் ஊரில் தனியே விட்டு வந்திருக்கின்றான். கொழும்பு வந்து பதினான்கு நாட்கள். உடலில் விளைந்திருந்த தாபம் அவனது மனைவியின் அருகை இச்சித்தது. அது ஒரு தகன மண்டபத் தகிப்பை அனுபவிக்கச் செய்துகொண்டிருந்தது. ஆனாலும் உள்ளம் உணர்ந்த காதலின் பிரிவுத் துயரும் அதற்குச் சற்றும் குறைவில்லாததாய்.

இனி அவன் அவளைக் காண மிகக் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு மேலேயாவது ஆகும். அவள், காணும்போதெல்லாம் மனக்கிளர்ச்சி தரும் அழகியாகத்தான் இருந்துகொண்டிருந்தாள் அவனுக்கு. குழந்தையும் அவளே போல. அவளை இனிச் சேர எத்தனை காலமாகுமோ? அவன் இரண்டு கிழமைக்கு முன்னர் கொழும்பு புறப்பட்ட நாளின் முந்திய இரவில், வாத்சாயனக் கதைகள் சொல்லும் எத்தனை தரிசனங்களை அடைந்திருந்தது அவர்களது தும்புமெத்தைக் கட்டில். சிங்களத் தொழிலாளி வன்னியில் செய்து, தோளில் சுமந்துவந்து விற்ற கனதியற்ற கட்டிலே நிலமதிரக் கிளர்ந்த கலைநிகழ்வுகளால் களைத்ததே.
மனோ ஒரு பிரிவை ஆழமாக உணர்ந்துதான் அந்த இரவை அர்த்தமுள்ளதாக்கியிருந்தாள் அவனுக்கு. இன்னும் ஒரு வரு~த்துக்கு உடல் தவனம் தணிக்க வழியே இல்லையென்ற ஆவலாதியில் அடைந்த, அடையவைத்த இன்பங்கள் அவை.

மறுநாள் காலை தூக்கமற்றதால் சிவந்த விழிகளுடனும் அவள் குளித்துவந்து சந்தோ~மாகத்தான் வீட்டுக் காரியங்களைக் கவனித்தாள், பிறகு சமைத்தாள். ஆனால் மாலையாக ஆக அவள் முகம் இருளத் தொடங்கிவிட்டது. வானம் இருள முன்னம் இருண்ட அவளது முகம் கண்டு அவனுக்கும் கவலையின் அதிகரிப்பு. அவன் கொழும்புக்கு புகையிரதமேறச் செல்வதற்கான கார் வீட்டு வாசலில் வந்துநின்ற சத்தம் கேட்ட கணத்திலிருந்து அவள் அவளாக இல்லையென்பதை அவன் கண்டான். உற்றார் உறவினர் ஊராட்கள் சிலர் கூடியிருந்த நிலையில், எல்லாப் பிரிவாற்றுகையும் நேற்றைய இரவில் முடிந்ததுதானே என்று அவன் பார்வையால் விடைபெற்று வர, அவள் தாங்காமல் அழுததாய் ஓர விழிகளில் பட்டது அவனுக்கு.

அத்தனை காலத்துக்கு ஒரு பிரிவை விரும்பித்தான் ஏற்று அங்கே அவன் வந்திருக்கிறான். அந்தப் பிரிவை அவளைவிட தாங்க தான் தயார் என்பதுபோலவே வீட்டிலே அந்த முன்னாளிரவில் அவன் நடந்திருந்தான். ஆனால் இங்கேதான் தெரிந்தது, அவளாவது குழந்தையின் அருகிருப்பால் உடலையும் மனத்தையும் ஆற்றிக்கொள்வாளென்றும், தானே அவர்களிருவரில் ஒருவர்கூட அருகிருக்காத காரணத்தால் அவதியுறப்போவதென்றும்.
அந்த அழகின் தரிசனம், அந்த உடலின் சுகம் யாவற்றையும் ஓராண்டுக்கு மேலாகத் துறந்துவிடும் மனவலிமையை எது அவனுக்குத் தந்தது? அவனது வாழ்க்கையா? அந்த வாழ்க்கையையே சுழல் காற்றில் சருகாகப் பறக்கவிடும் விதியா? அவனுக்கு மட்டுமா அவ்வாறான விதி? விதியே அலைத்தும் உலைத்தும் வீழ்த்தியும் எழுப்பியும் வளமளித்தும் ஒருவன் வாழ்க்கையை நிர்ணயிக்கிறதெனில், அந்தப் பிரிவும் துயரும் அவனுக்குமட்டுமானதாக ஆனதெங்ஙனம்? அவன் எல்லாவற்றையும் யோசிக்க முனைந்தான்.
ஒவ்வொருக்கும் குடியிருக்க ஒரு துண்டு நிலம் வேண்டும். அதில் பத்துப் பன்னிரண்டு தென்னைமரங்கள் இல்லாமல்கூட இருக்கலாம். ஏதாவது ஒரு நிலம் வேண்டும். அதிலே ஒரு வீடு வேண்டும். அது மாளிகைக் கணக்காய் கலைவேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களுடன் இல்லாவிட்டாலும் பனிக்கும், மழைக்கும், வெய்யிலுக்கும், காற்றுக்கும் அடைக்கலமாவதற்கும், காதலிருவரின் கூடலுக்குமாய் ஒரு குடிசையாவது வேண்டும். கைப்பொருள் இல்லாவிட்டாலும் உழைத்துப் பிழைத்துவிடலாம். ஆனால் ‘காணக் கண் கூசுதே, கையெடுக்க நாணுதே, மாணிக்க வாய் திறக்க மாட்டாதே’ என்று கடன்காரனைக் கண்டு தவிக்கும்படியான நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது. கலாபனுக்கு முன்னவை இரண்டும் இல்லாதிருந்தன. பின்னது இருந்தது. அதனால்தான் மிகுந்த பிரயாசையில் நீண்ட பிரிவைச் செய்யும் அந்த வேலைக்காக அவன் வீட்டைவிட்டுப் புறப்பட்டான்.

கூடு இல்லாவிட்டால் வாழ்ந்துவிடலாம். கூடலில்லாமல் வாழ்வது எப்படி? அவன் நினைக்கத்தான் செய்தான். குருவிக்குக் கூடு ஒன்று வேண்டும் என்ற ஓர் உண்மை இருக்கிறதுதான். அதேவேளை வளர்ந்த குருவியொன்று கூட்டைவிட்டு தானே பறந்துபோய்விடுகிறது என்ற நிஜமும் இருக்கிறதல்லவா? பறத்தலின் சுதந்திரத்தை வீட்டினுள் பயில்வுசெய்தல் எப்படி? இவ்வாறு அவன் சொன்னபோது, மனோ, அவனது மனைவி சொன்ன பதில், ‘பறந்து சென்ற குருவிக்கும் உடனடியாக இல்லாவிட்;டாலும் பின்னராவது ஒரு வீடு வேண்டியிருக்கும்’ என்பதுதான். அந்தக் கோணத்தில் அவன் விழுந்தான். ஆம், வாழ்வதற்கு ஒரு கூடு தேவைதான்.

திடீரென ஓர் உலுப்பல். கலாபனின் சிந்தனை கலைந்தது. அப்போதைக்கு மட்டுமாகத்தான். அதுவொன்றும் மேலெழுந்தவாரியானதல்ல. உயிரில் வலியெழுப்பக்கூடியதாய் மனத்தின் ஆழத்தில் பதிந்திருப்பது. பிறகு, நாளை, அடுத்த கிழமை, அடுத்த மாதம், அடுத்த வரு~ம் என்று அவளையும் குழந்தையையும் மீண்டும் காணும்வரை தொடரப்போகின்ற சிந்தனையே அது.

கடந்த ஒரு கிழமையாக கபாலன் அங்கேதான் வேலைசெய்கிறான், கொடுக்கப்பட்டிருந்த அறையிலே, அதைக் கபின் என்கிறார்கள், படுக்கிறான். ஆனால் அப்படி உலுப்பி அதிர்வெழும்படியாய் என்றும் இருந்ததில்லை. அன்றைக்குமட்டும் ஏன் அப்படி?
பின்னர் அவனுக்குப் புரிந்தது. முதல் நாள் வரை கப்பல் திருத்த வேலைகளுக்காக ட்றை டொக்கில் நின்றிருந்தது. அதன் திருத்த வேலைகளெல்லாம் முடிந்து அன்றுதான் துறைமுகக் கரையில் கொண்டுவந்து கட்டியிருந்தார்கள். கப்பல் மறுநாள் காலை அங்கிருந்து புறப்படவிருந்தது.

அந்தப் புறப்படுகை சுகமான நினைவுகளையும் கிளர்த்தாமலில்லை கலாபனிடத்தில். ஆயிரமாயிரமான உழைப்பு. அவர்களுக்கான ஒரு காணி, ஒரு வீடு. அவனது மனைவி குழந்தைக்கு அழகழகான உடுப்புக்கள். அவன் மனைவி குழந்தைக்கு நகைநட்டுக்களும், ஊரில் வசதியானவர்கள் குடும்பத்து பெண்கள் குழந்தைகளுக்குப்போல. எல்லாம் சுகமான நினைவுகளையே செய்துகொண்டிருந்தன அன்றுவரை. ஆனால் திடீரென அப்படி ஒரு விசாரம் அவன் மனத்தில். ஒருவேளை கப்பல் மறுநாள் புறப்படப்போகின்றது என்ற காரணத்தால் ஏற்பட்டதாய் இருக்கலாம் அது. ஆனாலும் அந்தச் சிந்தனை இடையறுகிறது, கப்பலின் உலுப்பலில்.

துறைமுகத்தில் கட்டப்படும் கப்பல் கரைச் சுவரோடு வந்து மோதிவிடாது சங்கிலியில் பிணைத்த பெரும்பெரும் ரயர்களைத் தொங்கவிட்டிருப்பார்கள். கடலின் பாரிய அலைகள் வந்து மோதும்போது கப்பல் சிமெந்துக் கட்டினோடு மோதிச் சேதமாகாமல் இந்த ஏற்பாடு. அதேவேளை அலைகள் உள்ளே வேகவேகமாய் நுழையாதபடியும் பிறேக் வாட்டர் எனப்படும் கடலணைகள் எழுப்பப்பட்டிருக்கும். இவ்வளவற்றையும் மீறி ஒரு கப்பலையே உலுப்பிவிடுமளவுக்கு அலை பாய்ந்து வருகிறதெனில், அதன் வேகம் எப்படியானதாய் இருக்கும் என நினைக்க ஒரு மலைப்பு வந்தது கலாபன் மனத்தில். ஆனாலும் அதுபற்றிய எண்ணம் அவனது மனத்தில் நீண்டநேரம் நிலைக்கவில்லை. உழைத்துக் களைத்திருந்த உடலானதால், வெகுநேரம் சென்றேனும் உறக்கம் வந்தது.

பெரும்பாலும் கவிழ்ந்த ஸ்திதியில் படுத்திருந்த கபிலனுக்கு, அலைகளின் உலுப்பலில் கப்பலின் அசைவு புணர்ச்சிச் சுகத்தைக் கொடுத்தது. றெஜிபோம் மெத்தை அவன் மனைவி மனோவாக உருவெடுத்தது. அவன் சிறிதுநேரத்தில் ஸ்கலிதமானான்.
மறுநாள் அதிகாலையிலேயே கப்பலின் அசைவைக் கூடுதலாக உணர்ந்ததில்தான் கலாபனுக்கு தூக்கம் கலைந்தது. கப்பல்; புறப்படுகிறது என்பதை அனுமானிக்க வெகுநேரம் ஆகவில்லை அவனுக்கு. அவசர அவசரமாக முகம் கழுவி, உடுப்பை மாற்றிக்கொண்டு அவன் மேற்தளத்துக்கு வந்தபோது எம்.வி.ஜோய்18 என்ற பெயருடைய அந்தக் கப்பல் துறைமுகத்தைவிட்டு நகர்ந்து வெகுதூரம் வந்திருந்தது. கல்லணைக்கு வெளியில் கப்பல் சென்றுகொண்டிருக்க அதன் சமாந்தரத்தில் ஓர் இழுவைப் படகு வந்துகொண்டிருந்தது. கப்பலை வெளியே செல்லவைத்துக்கொண்டிருக்கும் பைலட், இறங்கிச் செல்வதற்கான படகு அது.

கலாபன் கரைப் பக்கமாய் பார்வையை எறிந்தான். துறைமுகம் விலகிக்கொண்டிருந்தது. வினாடி வினாடியான நேர நகர்வில், அந்த இடைத்தூரம் அதிகரித்துக்கொண்டிருந்தது. மண்ணைவிட்டு விலகிய தூரமும் அதுதான். உறவுகளைவிட்டு விலகிய தூரம்கூட.


கப்பல் பயணம் அவனுக்குப் புதிது. அந்தப் புதிது மனத்தில் சொல்லொணா கிளர்ச்சிகளை ஏற்படுத்தியது. ஆனாலும் அந்தக் கிளர்ச்சிகளுக்கூடாகவும் ஓர் இடைஞ்சல். தலை லேசாகக் கிறுகிறுத்தது. மேல்ல மெல்லவாய் அதிகரித்தது அந்த சுகமின்மை. சிறிதுநேரத்தில் கலாபன் ஓக்…கென்று வாந்தியெடுத்தான்.

பதின்நான்கு நாட்கள் வாந்தி. சாப்பாடில்லாமல், வேலையில்லாமல், தூக்கமில்லாமல் ஒரே வாந்தி. எப்போதும் படுத்தே கிடந்தான் போறபோற இடங்களில். படுத்திருக்காதே…படுத்திருக்காதே…ஏதாவது வேலைசெய்துகொண்டிரு என்று கப்பல் தளவேலைக்குப் பொறுப்பான போசன் மாஹ்மத் அடிக்கடி வந்து சொல்லியும் அவன் எழும்ப மறுத்துக்கிடந்தான். ‘கப்பல் ஈரானில் பந்தர்அபாஸ் என்ற துறைமுகத்துக்குப் போகிறது, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அங்கே நாங்கள் போய்ச் சேர்ந்துவிடுவோம், கப்பலில் அனுபவமில்லாவிட்டால் எல்லோருக்கும் இப்படித்தான், அதற்காக இப்படியே படுத்துக்கிடந்தாயானால் பந்தர்அபாஸ் போனதும் உன்னை திரும்ப இலங்கைக்கு அனுப்பிவிடுவார்கள், கவனம்’ என்று பார்வையில் அறிமுகமாகியிருந்த ஒரு சிங்கள கப்பல்கார இளைஞன் வந்து சொல்லிப்போனான். கலாபன் அப்போதும் எழும்பவோ, வேலைசெய்யவோ முயலவில்லை. முடியாது கிடந்திருந்தான்.

அவனுக்குள் ஒரு கூடும், வீடும் என்ற கனவு தகர்ந்துகொண்டிருந்தது. இருபது நாட்களுக்கு மேலே கப்பலில் இருந்திருக்கிறான். குறைந்தபட்சம் அரை மாதச் சம்பளமாவது கிடைக்கும். அப்போதைய ஓர் அமெரிக்க டொலரின் இலங்கை ரூபா மதிப்பு ஏழு ரூபா இருபத்தைந்து சதம். எப்படியும் கொழும்பில் குழந்தைக்கு ஒன்றிரண்டு சட்டையும், மனைவிக்கு ‘றேசிங்கவு’ணும் வாங்கிக்கொண்டு வீடு செல்லவும், அந்தப் பிரிவின் வதையோடு உழைத்த உழைப்பென்று இரண்டாயிரம் ரூபாவையாவது மனோவின் கையில் கொடுக்கவும் போதுமானதாயிருக்கும் என தன்னைச் சாந்தி செய்துகொண்டிருந்தான் அவன்.
மூவாயிரம் தொன் நிறையுள்ள பாரமேற்றக்கூடிய கப்பல் அது. கொழும்பிலிருந்து வெறுமையாகச் சென்றுகொண்டிருந்தது. தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காலமாதலால் காற்று உக்கிரம்கொண்டு வீசியது. தரையிலேயே அதன் தாக்கம் பயங்கரமாய் இருக்கும். மரங்களை முறித்து, தோட்டங்களை நாசமாக்கி அந்த ஆடி, ஆவணி மாத காலங்களில் அது செய்யும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமில்லை. தடுப்புகளற்ற கடல்வெளியிலோ பெரும் அட்டகாசம் போட்டது. கப்பல் முன்னே பத்தடி நகர்ந்தால், ஒரு வலிய அலை வந்து அதை ஐந்து அடி பின்னகர்த்தி வைத்துவிடும். முன்னேறுவதும், பின்னேறுவதும். கப்பல் கடலின் அலைகளுடன் போராடிக்கொண்டிருந்தது. கடலும் மலையென உயர்ந்து, பாதாளமெனத் தாழ்ந்து கப்பலை ஒரு பந்துபோல் விளையாடியது. எந்த விநாடியிலும் அந்தப் பந்தை கடல் தன் வயிற்றினுள் வாயைக் கிழித்துக்கொண்டு விழுங்கிவிடும்போல தோன்றிக்கொண்டிருந்தது கலாபனுக்கு.

ஒருபோது தன் ஒரேயொரு கப்பல் சிநேகிதனான அந்தச் சிங்கள வாலிபன் கிட்ட வந்தபோது, ‘நாங்கள் கரை போய்ச் சேருவோமா?’ என்றுகூடக் கேட்டுவிட்டான். அதற்கு அந்த வாலிபன் சொன்னான்: ‘பயப்படாதே. கப்பல் இரும்பினாலெனினும் மிதப்பதற்காகவே கட்டப்பட்டது. அது தாழுவது அபூர்வம். ஒரு பக்கத்துக்குச் சாய்ந்தால், மற்றப் பக்கம் தானாகவே நிமிரும்படியான அமைப்பு இதற்கு உண்டு. முன்னே சாய்ந்தால், அது பின்னே சாய்ந்து மறுபடி சமநிலையெடுக்கும்.’ பிள்ளையாரே கப்பலை எப்படியாவது காப்பாற்றிக் கரைசேர்த்துவிடு என்று கலாபனின் உள்ளம் மானசீகக் குரலெடுத்தது. அந்த உயிர்ப் பயத்தில் கப்பலேறி வந்து பாதி மாதத்தில் திரும்பப்போகிறோமே என்ற வெட்கம், இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோனது.

பிறகொருமுறை அந்த இளைஞன் வந்து, ‘சரி, மிகவும் முடியாதென்றால் கடல் தண்ணீர் அள்ளிக் குடித்துப் பார், அது மருந்தாக இல்லாவிட்டாலும் நாணமாகச் செயல்பட்டு கடல்நோய் எனப்படும் உன் தலைச்சுற்று நிற்கக்கூடும்’ என்று கூறிப்போனான். சரி, செய்துதான் பார்க்கலாமே என்று கடல் தண்ணீரை கயிற்றில் பேணிகட்டி இறக்கி அள்ளியெடுத்துக் குடித்தான். மீண்டுமொரு முறை வாந்திதான் வந்தது. வெறுவயிற்றை விறாண்டிக்கொண்டு குடலோடு வந்ததுபோலிருந்தது. சிங்கள இளைஞனை மனத்துக்குள்ளாய் ‘பேய்ப்பூனாமோன்…’ என்று வைதுவிட்டு கலாபன் படுத்துவிட்டான்.
அன்று காலை கண்விழித்தவன் கண்டது ஒரு புதிய உலகத்தை. தலைச் சுற்று போன இடம் தெரியாமலிருந்தது. பக்கக் கம்பிகளில் பிடிக்காமல் நடக்க முடியாதிருந்தவன் கம்பிகளைப் பிடிக்காமல் கப்பலின் நடைபாதையில் மிக இலகுவாக நடந்தான். அவன் அன்று மெஸ்ஸில் மிக நிதானமாக இருந்து காலைச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வேலைக்குத் தயாராக மேற்றளத்துக்கு வந்தபோது யாருமே அங்கில்லாதிருந்தது ஆச்சரியமாக இருந்தது. மெல்ல அது திகைப்பாக மாறியது. உள்ளே சென்று விசாரிக்கத்தான் தெரிந்தது, அன்று ஞாயிற்றுக்கிழமையென்பது. ஞாயிறுகளில் அத்தியாவசிய வேலைகள்தவிர எதுவுமே கப்பலில் நடைபெறுவதில்லை.

அன்று சுகமான நாளாகக் கழிந்தது கலாபனுக்கு. இப்போது வேலைசெய்ய முடிந்திருந்தாலும், அத்தனை நாட்கள் வேலைசெய்யாது இருந்ததற்காக வேலையைவிட்டு நிறுத்தி நாட்டுக்குத் திருப்பி அனுப்பிவிடுவார்களோ என்ற பயமும் உள்ளே இருந்துகொண்டிருந்தது. அது கரைநெருங்குகிறது என்ற அறிகையால் இன்னுமின்னும் வளர்வதாயிருந்தது.

மறுநாள் கப்பல் ஈரானை அடைகிறது என்று அறிந்தான் அவன். இப்போது கடல் கொஞ்சம் மூர்க்கம் அடங்கியிருந்தது. கண்ணில் பந்தர்அபாஸ் துறைமுகத்துக்கோ வேறு அண்மையில் இருக்கக் கூடிய துறைமுகத்துக்கோ செல்லக்கூடிய கப்பல்களின் தூரத்திலான தோற்றங்கள்வேறு சற்று மனத்தைத் தேறப் பண்ணின.

அன்று இருளத் துவங்க தூரத்திலாய் ஒளிப்புள்ளிகள் சில தெரிந்தன. பத்து மணிவரையில் ஒளிப்புள்ளிக் கோடு ஒன்று தூரத்தே உருவாகியிருந்தது. மேலும் ஓரிரு மணத்தியாலங்களில் நிலைத்த புள்ளிகளிடையே ஓடும் புள்ளிகள் தோன்றி வாகன அசைவுகளைத் தெரிவித்தன. ஆடும் கடலில் ஆடாத நிலத்தின் காட்சி அற்புதமாக இருந்தது அவனுக்கு. அந்த அழகையெல்லாம் அனுபவிக்கக் கூடிய நிலையை ஏற்படுத்திய கடல்தண்ணீரையும், உபாயம் சொன்ன அத்தவையும் நன்றியோடு நினைத்தான். ஏனோ, அப்போது பிள்ளையாரின் நினைவு அவனுக்கு வரவில்லை.

விடிந்த சிறிதுநேரத்தில் பைலட் வந்ததும் அதுவரை நங்கூரம் பாய்ச்சி துறைமுகத்துக்கு வெளியில் நின்றிருந்த கப்பல் உள்ளே சென்றது. கப்பல்காரர் எல்லோரும் ஏஜன்ற் வந்துவிட்டதை அறியக் காட்டிய ஆவலாதி கலாபனுக்கு ஆச்சரியமாகப் பட்டது. கப்பல் கரையை அடைந்ததும் அவர்கள் எதிர்பார்க்கிற முதல்வேலை அதுதான் என்பதை அவனது சிங்கள நண்பன் சொன்னான். மெய்தான். ஒரு உயிர்ப் பயமிக்க பயணத்தின் பின் அவர்கள் முதலில் அடைய நினைப்பது ஊரிலுள்ள சொந்தங்களின் சேமநலம்கூறும் கடிதங்களை. அடுத்து அவர்களின் உடல் தவனத்தைத் தீர்ப்பதற்கான பணத்தைத்தானாம்.
பத்து மணியளவில் தேநீரின் பின் வெளியே வந்து சிகரெட் புகைத்துக்கொண்டு விரக்தியாய் கப்பலில் சாமான்கள் ஏற்ற படும் ஆயத்தங்களைப் பார்த்தபடி வெளி மேல்தளத்தின் கப்பல் கட்டும் இரும்புக் குற்றியில் அமர்ந்திருந்தான் கலாபன்.

அந்தக் கப்பல் பனாமாவில் பதிவுசெய்யப்பெற்றது. நீல, வெள்ளை, சிவப்பு நிற பனாமாக் கொடி கப்பலின் பின் அணியத்தில் கட்டப்பட்டிருக்கும். அவன் முதல்முறை கப்பல் புறப்பட்டபோது பார்த்தவேளையில் அது புத்தம் புதிதாக படபடத்துக்கொண்டிருந்தது அங்கே. அப்போது பார்த்தபோது தும்புபட்டுக் கிடந்தது. தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று கப்பலைச் சின்னாபின்னப் படுத்த முடியாத காரணத்தால் கொடியை நார் நாராகக் கிழித்துப் போட்டிருந்தது. தன் மனம்போல அதுவும் சிதைவுபட்டிருப்பதாய் எண்ணினான் கலாபன்.
மதியமளவில் ஏஜன்ற் வந்து எல்லோரும் சென்று கடிதமும் பணமும் பெற்றார்கள். நண்பன் அத்த, அவனுக்கு கடிதம் வந்திருக்காவிட்டால் என்ன, பணம் எடுக்கலாம்தானே என வற்புறுத்தி அழைக்க, வீடுபோவதானாலும் ஏதாவது ஒன்றிரண்டு பொருட்களையேனும் ஒரு ஞாபத்துக்காக அங்கே வாங்கிச் செல்லலாமேயெனச் சென்றான்.

சீஃப் ஒஃபீசர் அறையில் போசன் மாஹ்மத் நின்றிருந்தான். முப்பது டொலர் பணமெடுத்தான் அவன். மாஹ்மத் சிரித்தபடி இப்போது எல்லாம் சரிதானே என்றான். ஊருக்குத் திருப்பி அனுப்பப்படப்போகிற பிரச்சினை இனி இல்லை. ஓர் அழுத்தத்துள்ளிலிருந்து விடுபட்டதாய் உணர்ந்தான் கலாபன். அந்த விடுதலைதான் அவனை சாக்கோவுக்கு அத்தவுடன் செல்லவைத்தது.

சாக்கோ, ஈரான் விலைமாதரின் குடியிருப்பு. நகருக்கு சுமார் இருபத்தைந்து மைல் தூரத்தில் தனிக் கிராமம்போல் அமைக்கப்பெற்றிருந்தது. ஈரானிய, பாகிஸ்தானிய, சில ஈரானிய அமெரிக்க கலப்பின விலைமாதர்கள் வெள்ளை வெள்ளையாக. இன்னும் கறுப்பான ஆபிரிக்க முஸ்லீம் பெண்கள். தவிட்டு நிற இந்தியப் பெண்களும். இலங்கைப் பெண்களும்கூட அங்கே இருந்திருக்கலாம். அந்தப் பல வர்ணப் பெண்களுக்கிடையே பல வர்ண ஆண்கள். கப்பலில் வந்த உயர்பதவி வெள்ளைக்காரர் முதல், கடின வேலை செய்யும் ஆசிய, ஆபிரிக்க ஆண்கள்வரை. இடம் ஒரு களியாட்ட விழாத் திடலாகத் தென்பட்டது. வெள்ளைக் கூடாரங்களுள் போகம். விரிந்த வெள்ளை மணல்வெளியில் பேரம். அந்த மண்வெளியில் பறந்துகொண்டிருந்த கிளினெக்ஸ் துண்டுகள் அங்கு நிகழ்ந்த உடலுறவுகளின் எண்ணிக்கைக்காதாரமாக விளங்கின. ஓர் அருவருப்பை அது விளைத்திருந்தாலும், அலைந்துகொண்டிருந்த வெண்தோல் மாதர் கலாபனில் கிளர்ச்சியைக் கிளர்த்தினர். அவன் ஒரு வெண்தோலும், கனத்த முலைகளுமுடைய ஓர் எகிப்துக்காரியை நாடினான்.
~h மன்னர் காலத்து புரட்சிக்கு முற்பட்ட ஈரான் அது. அச்சொட்டாக அமெரிக்க நிர்வாகமும், நடைமுறைகளும். நகரத்திலிருந்து அந்த இடத்துக்குச் செல்ல தனியாக ராக்ஸிகள் இருந்தன. அவை நகருக்குள்ளோ, பிற இடங்களுக்கோ செல்லா. பிற ராக்ஸிகள் அந்த இடத்துக்குச் செல்லா. நான்கு பேர் ஒரே முறையில் செல்ல முடியும். செல்லவேண்டிய இடம் எதுவும் சொல்லத் தேவையில்லை, ராக்ஸிக்குள் ஏறியிருக்க வேண்டியதுதான், நான்காவது நபர் ஏறியதும் ராக்ஸி நேரே சாக்கோவில் போய் நிற்கும். அத்தவோடு சென்றிருந்ததனால் இடங்கள் குறித்துக் க~;டப்படவேண்டியிருக்கவில்லை கலாபனுக்கு.

மாலையில் கப்பலுக்கு வந்தபோது கலாபனின் மனத்தில் ஒரேயொரு கேள்விதான் விடைத்துநின்றது. கூடு என்பதென்ன, இணை என்பது என்ன, குடும்பம் என்பது என்ன என்ற அத்தனை கேள்விகளுக்கும் அடிப்படையான ஒற்றைக் கேள்வி அது.
வாழ்க்கையின் மய்யம் எது?

காமம் என்ற மய்யத்தைச் சுற்றி எழும் நீரோட்டமே வாழ்வு என்றுதான் கலாபனுக்குப் பட்டது. வாழ்வின், உலகத்தின் இயக்கம் காமத்தில் கட்டிப்போடப்பட்டிருக்கிறது. அதை இழுத்துக்கொண்டில்லாமல் பிரபஞ்ச இயக்கம் இல்லை.

இது நடந்து எவ்வளவோ காலமாகிவிட்டது. ஜோசப் கொன்ராட் போன்றவர்களைப்போல் தன் கடல் அனுபவங்களையெல்லாம் எழுத கலாபன் ஆசைப்பட்டிருந்தான். அவனால் முடியாது போய்விட்டது. அவனும் இல்லையாகிப் போனான். அவன் இல்லையென்று ஆகிப்போனான் என்பதைவிட, என்னுள் சமாதியாகிப்போனான் என்பதே பொருத்தமாகத் தோன்றுகிறது. கச்சாய் மணல்வெளிகளில் நிலவும், மதுவும் உடனிருக்க அவன் சொன்ன கதைகள் எவ்வளவோ. இன்றுவரை எனக்குள்ளிருந்து தம் விடுதலைக்காய் என்னை நச்சரித்துக்கொண்டிருக்கும் அந்தக் கதைகளை, அவனின் ஆன்ம சாந்தி வேண்டியேனும் வெளிப்படுத்த என்னுள் இருக்கிறது ஓர் உத்தேசம். அதன் முதல் கட்டமாக இந்தப் பகுதியை எழுதியிருக்கிறேன்.

000

(ThaiVeedu, June 2009 )

Comments

Anonymous said…
கதாகாலம் பற்றி சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன். படிக்க வேண்டும் என்று ஆவல் ஏற்படுகிறது. இது பற்றி நானும் என் தளத்தில் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன், முடிந்தால் பாருங்கள்.

http://koottanchoru.wordpress.com/2009/07/15/தேவகாந்தனின்-கதாகாலம்/

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்