கலாபன் கதை 5


இருள் அசைந்து உள்ளே நகர்ந்தது


கலாபன் தன் விடுப்பு முடிந்து மறுபடி கப்பலுக்கு வந்தாகிவிட்டது. அது அவன் முன்பு வேலைசெய்த அதே கப்பல் அல்லவெனினும், எழுபதுகளில் ஜேர்மனியில் கட்டப்பெற்ற ஓரளவு நல்ல நிலையிலிருந்த கப்பல். அவன் ஏற்கனவே கப்பல் அனுபவம் வாய்த்திருப்பதறிந்த இரண்டாம் நிலைக் கப்பல் என்ஜினியர் காலை நான்கு-எட்டு மணிவரையான வேலைநேரத்துக்கு அவனை எடுத்துக்கொண்டான். என்ஜின் அறையிலுள்ள எந்திரங்களின் செயற்பாடுபற்றிய தொழில்நுட்ப அறிவினை ஓரளவு பெற்றிருந்த கலாபனுக்கு, புதிய கப்பலில் வேலைசெய்வது அப்படியொன்றும் கடினமானதாகத் தெரியவில்லை.

அவன் கப்பலில் சேர்ந்த மூன்றாவது நாள் கப்பல் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு பாகிஸ்தானில் கராச்சி துறைமுகத்தைநோக்கி தன் பயணத்தைத் தொடக்கியது.

எல்லோரும் நட்பாளர்களாக, பழக்கத்துக்கு இனியவர்களாக இருந்தாலும் கப்பலில் அவரவரும் பெரும்பாலும் தனித்தனி உலகம்தான். ஒரு மகிழ்ச்சி, ஒரு துக்கம் என்று எதுவிதமான குடும்பம் சார்ந்த காரியமும் உடனுக்குடன் அறிய வாய்ப்பில்லாத தொழில் அது. வெளிநாட்டு மண்ணில் வேலை செய்கிற ஒருவன், தன் தாய் அல்லது தந்தை அல்லது மனைவியரின் மரணத்துக்கு ஒருவேளை ஊர்வந்து கொள்ளி வைக்கமுடியாவிட்டாலும், ‘காடாத்’திலாவது சமுகமாகிப் போகமுடியும். ஆனால் கப்பலில் வேலை செய்கிறவர்களுக்கு, அதுமாதிரிக்கூட வாய்ப்பில்லை.

வீட்டிலிருந்து அனுப்பும் கடிதம் கொம்பனி முகவரிக்குச்சென்று, அந்தப் பெயருள்ளவர் வேலைபார்க்கும் கப்பல் அடுத்துச் செல்லவிருக்கும் துறைமுகம் அறிந்து அங்கேயுள்ள ஏஜன்ஸிக்கு அனுப்பப்படுகிறது. ஒன்று ஒன்றரை மாதத்துக்குள் ஒருவருக்கு ஒரு கடிதம் கிடைத்தால் அது அவரின் அதிர்~;டம். அதனால் குடும்பம், உறவுகளின் துக்க நிலைமைகள்

மாறியிருக்கக்கூடுமாயினும், ஒருவர் மனம் அதையே எண்ணி அவத்தைப்பட்டுக்கொண்டிருப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. கலாபனது உலகமும் கப்பலில் தனியானதுதான், அங்கேயுள்ள எவரினதும்போல.

வீட்டைவிட்டுப் புறப்பட்டபோதிருந்த இறுக்கமான மனநிலை கலாபனுக்கு கப்பலில் சேர்ந்த பின்னரும் மாறவேயில்லை.

இரண்டு நாட்கள் புதிய சூழலிலும் மிதமான குடியிலும் மனஅவசம் ஓரளவு அடங்கியிருந்ததாயினும், கப்பல் பயணத்தைத் தொடக்கிய பின் அதிகரிக்கவே செய்திருந்தது அவனிடத்தில். அதனால் முந்திய கப்பல்களில்போல் மிக உற்சாகமாக வேலைசெய்யும் மனநிலை அற்றுப்போயிருந்தான் கலாபன்.

ஏறக்குறைய இரண்டரை மாதங்கள் ஊரிலே தங்கியிருந்தான் அவன். காலம் றப்பர்போல இழுபட்டபடி நகர்ந்துகொண்டிருந்தது. அவன் எதிர்பார்த்திருந்ததுபோல அவனது கப்பல் கொம்பனி ஒரு மாதத்தில் அவனது பயணத்துக்கான விமானச் சீட்டை அனுப்பாதது மட்டுமல்ல, இரண்டு மாதங்களாகியும் அவனது இரண்டு தொலைதூர தந்திகளுக்குக்கூட பதிலனுப்பாமல் இருந்துவிட்டது. கொம்பனி தன்னை வேலைக்கு மறுபடி கூப்பிடுமா என்ற சந்தேகமே தலையெடுக்க ஆரம்பித்து, அது வீட்டின் முறுகல் நிலையாக முதிர்கிறவேளையில், ஒரு மாலைநேரத்தில் அவனது பயணத்துக்கான விமானச் சீட்டை கொம்பனியின் மக்லறென்ஸ் ஏஜன்ஸியில் பெறுமாறும், கப்பல் அடுத்த மூன்று நான்கு நாட்களில் சிங்கப்பூர் வருவதாகவும் தெரிவித்த தந்தி வந்தது.
இதோ ரிக்கற் வந்துவிட்டது என்றும், பின் எப்படியும் வந்துவிடும் என்றும் எதிர்பார்த்திருந்தானானாலும், பயணத்தை உறுதிசெய்த தந்தி வந்தபோது, கலாபன் அவகாசம் அற்றவன்போல் தடுமாறவே நேர்ந்திருந்தான்.

மனோவுக்குச் சொல்லமுடியாத மகிழ்ச்சி. வீட்டுக்கு நிலையம் எடுத்து, நல்ல நாள் பார்த்து மூலைக்கல் வைத்து, விறுவிறுவென மாளிகைக் கணக்கான ஒரு வீட்டுக்கு அத்திபாரம்மட்டும் போட்டுள்ள நிலையில், கலாபன் கப்பலுக்குப் போகாது இருப்பானானால், வீட்டுவேலையை எப்படி முடிப்பது என்ற பெருங்கவலையில் இருந்தவள் அவள். ‘இந்தமாதிரி வளவு முழுக்க அத்திவாரம் வாற அளவுக்கு வீட்டுப் பிளானைப் போட்டு வைச்சிருக்கிறியே, எப்பிடி முடிக்கப் போறாய்?’ என்று அவள் சந்திக்கிற உறவினர்கள் கேட்காத வேளையில்லை. அதனால் கப்பல்வேலை மீண்டும் கலாபனுக்குச் சாத்தியமான மகிழ்ச்சியிலேயே அவன் தேடும் உடுப்புகளை எடுத்துக்கொடுத்து மனோ மிகஉற்சாகமான மனநிலையில் இருந்தாள்.

தன்னை அனுப்புவதில் அவள்பட்ட அந்தப் பரபரப்பு கொஞ்சம் அசூயையாகவே இருந்தது கலாபனுக்கு. ‘என்னைக் கப்பலுக்கு அனுப்புகிறதில் உனக்குள்ள ஆர்வத்தைப் பார்க்கிறபோது எனக்கு எதையெதையோ எண்ணவேண்டும்போல் இருக்கிறதடி.’

ஆனாலும் எதையும் சொல்லாமல் மனத்துள் அடக்கிக்கொண்டான்.

சூட்கேஸ் அதிகாலையில் எழுந்து எடுத்துச் செல்லத் தயாரானதும் கலாபன் கிணற்றடி போய்வந்தான். போத்தலில் மீதமாயிருந்த சாராயத்தை கிளாஸில் ஊற்றி மெதுமெதுவாகக் குடித்துக்கொண்டிருந்தான். நாளைக்குக் குடிக்க அங்கே யாரிருக்கப் போகிறார்கள்? போத்தல் முடிந்துகொண்டிருந்தது.

மனோ ஏதோ பொரித்தது போலிருந்தது. முட்டையாக இருக்கும். நேரமாக ஆக அவளிலான அவனது எதிர்பார்ப்பு ஏறுமுகத்தை அடைந்தது.

அவள் சாப்பாட்டினை எடுத்துவைத்து குசினியை ஒழுங்குபண்ணும் முயற்சியில் இருந்தாள்.
இலங்கை வானொலி அடங்கி இரவு பத்தரை மணியென்பதை அறிவித்தது. ஏற்கனவே குழந்தை தூக்கம். இந்தத் தனிமைதானே அவர்களது இறுதி! இறுதி என்று சொல்லமுடியாவிட்டாலும் ஓர் இறுதி அதற்குண்டு. அந்த இரவை மனோ குசினிச் சாமான்களை ஒதுங்கவைப்பதில் செலவழித்துக்கொண்டிருப்பது கண்ட கலாபன் மனத்தில் மெல்லிய எரிவு.

சிறிதுநேரத்தில் மனோவின் குரல் எழுந்தது. ‘சாப்பிட வாறியளா?’

சாப்பாடா? என்ன சாப்பாடு இதுக்குள்ளை? அவன் தன் கோபம் தணித்து, ‘பிறகு சாப்பிடுறன். நீ முதல்ல கிணத்தடிக்குப் போட்டுவாவன்’ என்றான்.

அவளிடமிருந்து பதிலில்லை. அவனது வார்த்தைகளின் பூடகத்தை உணர்வதற்கான கணங்களாயிருந்திருக்கலாம் அவை. ஓர் ஏணாப்பான கிணுகிணுப்பைச் செய்தாள். பின் சொன்னாள்: ‘அதெல்லாம் இண்டைக்கு வேண்டாம். காலமை நாலு மணிக்கு எழும்பவேணுமெல்லே, பேசாமல் வந்து சாப்பிட்டுட்டுப் போய்ப் படுங்கோ.’

அதெல்லாம் வேண்டாமா? அது இறுதி இரவு என்பதற்கு எந்தப் பெறுமானமும் இல்லையா அவளிடத்தில்?

அவன் எரிந்தான். சாராயமும் சேர்த்து எரித்தது.

ஒவ்வொரு நினைப்பிலும் அவன் எரிந்தான். தன் தேவையொன்று உதாசீனப்படுத்தப்பட்டது என்பதல்ல அங்கே இருந்தது. அவளிடத்தில் இருந்த அவன்மீதான காதலின் அளவு தெரியவந்திருந்ததுதான் முக்கியம். அவள் தன்போல என்றுமே, என்றுமேதான், தன்னைக் காதலித்திருக்கவில்லை.

இந்த நினைப்பு எந்தவொரு கடலோடிக்கும்தான் இனிய நிலைமைகளை அனுபவிக்க வைத்துவிடாது. கப்பல் இன்னும் நான்கு நாட்களில் கராச்சியை அடையப்போகிறது என்பதோ, முதல்நாள் நள்ளிரவில்தான் கப்பல் தென்னிலங்கையின் காலி வெளிச்சவீட்டைத் தாண்டியது என்ற தகவலோ அவனுள் ஓரசைவையும் ஏற்படுத்தவில்லை. நீலச் சேலை விரித்துவிட்டதுபோல் அசைவற்றுக் கிடந்த கடலின் அழகோ அல்லது இரவின் மெல்லிய உப்புக் காற்றின் இனிய உலவுகையோ அல்லது வானத்தில் கொட்டிக் கிடந்த நட்சத்திர அழகோ அல்லது கூடவரத் தயாராகப்போல் மிகச் சமீபமாக இரவில் விகசித்த பெருநிலவோ காணாதவனாகிப்போனான் கலாபன்.
அவன் தன் துக்கத்தின் பிம்பமாக ஒரு சோகமாய் ஆகிக்கொண்டிருக்கவில்லை. குரோதமாய் ஆகிக்கொண்டிருந்தான்.

ஒரு மாலைப் போதில் கராச்சி சேர்ந்தது கப்பல்.

அழகாக இருந்தது துறைமுகம். கூட இருந்த வெளி இன்னும் மன உவகை செய்தது.

மறுநாள் ஏஜன்ற் வந்தபோது கடிதமெதுவும் வந்திருக்கவில்லை கலாபனுக்கு. வெளியே செல்லும் மனநிலையும் இருக்கவில்லை. மனைவியை வெறுக்கலாம். குழந்தையை…? அதனால் மனோவுக்குக் கடிதமொன்று எழுதினான். காதல், அன்பு, பிரியம் என்ற வார்த்தைகளை நிர்த்தாட்சண்யமாகத் தவிர்த்த கடிதமாயிருந்தது அது.

கப்பல் மறுபடி புறப்பட்டது. அதன் அடுத்த இலக்கு ஐரோப்பா என்பது தெரிந்திருந்ததாயினும், அச் சில நாடுகளுள்ளும் முதல் இலக்கு சுவீடன் என்று தெரியவந்தது. சுவீடன் துறைமுகத்துக்கு முன்னரே சென்றிருந்த கபாலி சொன்னான், ‘அதிர்~;டமிருந்தால் அங்கே உச்ச இன்பம்’ என்று. கோபாலரத்தினம் கோபாலியாகி, கப்பலில் கபாலியாகியிருந்த செய்தியை கலாபன் அறிந்தது அன்றுதான்.

உச்ச இன்பங்களின் கனவுகளோடு கலாபனின் ஓய்வுப் பொழுதுகள் கழிந்துகொண்டிருந்தன. தன்னை இழத்தலில் ஒரு வஞ்சத்தை அவள்மீது நிறைவேற்றுவதாக அவன் தன்னுள்ளேயே ஒரு மெல்லிய திருப்தியை அடைந்துகொண்டிருந்தான். ஐக்கிய அமெரிக்கா சென்றிருந்தபோது கண்டும் அடையாது விட்டுவிட்ட இன்பங்களின் ஞாபகங்கள் அவனில் நாள்தோறும் கிளர்ந்துகொண்டிருந்தன.
மறுபடியும் கப்பல் தென்னாபிரிக்காவைச் சுற்றியே அத்திலாந்திக் சமுத்;திரத்தை அடையப்போகிறது என்ற தகவல் காலதாமதமாகும் மனவுளைச்சலை ஏற்படுத்தியிருந்தாலும் சுவீடனை கப்பல் அடைவது நிச்சயம்தானே என வேலையும், அதிகமான மெஸ் உரையாடலும் என நாட்களைக் கழித்துக்கொண்டிருந்தான் கலாபன்.

ஒருநாள் தூங்கச் செல்ல வெகுநேரமாகியிருந்ததால், எழும்பத் தாமதமாகி நாலு மணி பத்து நிமிடமளவில் அவசர அவசரமாக என்ஜின் அறைக்குள் நுழைந்தவன், வழக்கம்போல செல்லும்பொழுதிலேயே எந்திரங்களின் பாகங்களது வெப்பம், எண்ணெயின் அமுக்கம், நீராவிக் கொதிகலனின் நிலைகளைப் பார்க்கத் தவறியிருந்ததால், கீழே சென்ற சிறிதுநேரத்தில் என்ஜின் அறையில் கப்பலை உந்திச் செலுத்தும் பிரதான எந்திரத்தினைச் சுற்றியுள்ள நான்கு தளங்களிலும் மெதுவாக நடந்தபடி எல்லாவற்றையும் கவனித்துவரத் தொடங்கினான். என்ஜின் அறையின் கட்டுப்பாட்டு மேடையின் முன்னால் அமர்ந்து கோப்பி அருந்திக்கொண்டிருந்தான் இரண்டாவது என்ஜினியர். கப்பல் பயணம் வெகு சீராக இருக்கும் சமயங்களில் அதுதான் நிலைமை. இன்னும் சிறிதுநேரத்தில் அவன் தூங்கக்கூடச் செய்யலாம். கலாபனுக்கு அது ஏதுமில்லை.
கலாபன் மெதுமெதுவாக என்ஜின் அறையின் மூன்றாம் தளத்துக்கு வந்தான். அது அநேகமாக மெயின் என்ஜினின் சிலிண்டர் ஹெட் எனப்படும் பகுதிகளுக்குச் சமாந்;திரமான தளமாகும். அங்கிருந்துதான் கப்பல் எந்திரத்துக்குத் தேவையான காற்றை உள்ளே அனுப்புவதற்கான காற்று எந்திரமும், எண்ணெயைச் சக்தியாக எரித்து எச்சமாகும் காரிய வெப்ப வாயுவை வெளியேற்றும் எந்திரமும் இருக்கின்றன. அவற்றிலிருந்தான குழாய்கள் சென்று முடிவடையவும், தொடங்கவுமான ஸ்தானம் அதன் உச்சியில் இருக்கிறது. அதற்குள் ஏறிச்செல்வதற்கான கம்பி ஏணி இருக்கிறது. அதன் ஓரமாக மசகு எண்ணெயைச் சூடாக்கவும், கடலோடிகளுக்கு அன்றாடத் தேவைகளுக்கான தண்ணீரைச் சூடாக்கவும், குளிர்வலய நாடுகளின் பிரவேசத்தின்போது கபின்களுக்குத் தேவையான வெப்பமளிப்பதற்கான காற்றலைகளுக்கு சூடேற்றவும் அக் கப்பலில் நீராவியே பயன்படுத்தப்படுகிறது. அதற்கான கொதிகலன் இருக்கிற இடமும் அதுதான்.

பொதுவாகவும் அடிக்கடியும் கொதிகலனின் சமாந்திரத்துக்கு ஏறி யாரும் அதன் சூட்டுநிலை, அமுக்க நிலைகளைக் கண்டறிவதில்லை. நின்ற இடத்திலிருந்து மின்கல விளக்கின் சுடரின்மூலமே அவற்றினைக் கண்டுகொள்ள முடியும். அன்றைக்கு ஏனோ கலாபன் அதன் படிகளில் ஏறி கொதிகலனின் கிட்ட வந்தான். நீராவியின் அமுக்கம் சரியாக இருந்தது. அதனுள்ளிருக்கும் தீயுலையை மூட்டவேண்டிய தேவையிருக்கவில்லை. நீரின் அளவும் சரியாக இருந்தது. அவற்றையெல்லாம் குறிப்பேட்டில் குறித்துக்கொண்டு கீழே இறங்கத் தயாரான கலாபன் கொதியுலையின் பின்புறம் எதேச்சையாகப் பார்வையை ஓட்டினான்.

எவ்வளவு மின்குமிழ்களைப் பொருத்தி வெளிச்சம் ஏற்றினாலும் எந்திர அறையில் எப்போதும் பிரகாசம் குறைவாக இருப்பதுபோல்படும். குறிப்பாக அந்த கொதியுலையின் பின்னால் இருள் உறைந்ததுபோல் அடைந்திருக்கும். கலாபன் பார்வையை வீசிய தருணத்திலும் அந்த வழமையான இருள் அங்கே இருக்கவே செய்தது. என்ஜின் அறையில் நடுப்பகுதியிலும், மின்சார சக்தியை உருவாக்கும் எந்திரங்களின் பகுதியிலும்தான் சத்தம் அதிகமாக இருக்கும். மேலே மிகக்குறைந்த அளவு சத்தத்தைப் பிறப்பிக்கும் எந்திரங்களே இருக்கின்றன. ஆனால் ஓர் ஊமை இரைச்சல் அந்த இடத்தில் கிளர்ந்துகொண்டிருக்கும். அந்த இருளையும், மிதமான ம்ம் என்ற இரைச்சலையும்விட இன்னொரு அம்சமும் அந்த இடத்திலுண்டு.

நாய்க்கு எங்கே அடித்தாலும் காலிலேதான் முடம் என்பார்கள். அதுபோல கப்பலிலே எந்திரத்தின் அசைவு அல்லது கப்பலின் அசைவுதானும் மாறுபடுகிற நேரத்தில் அதிர்வெழுகிற இடமும் அதுதான். ஊசவைiஉயட ளிநநன என்று ஒரு வேகநிலையைக் குறித்திருப்பார்கள் கப்பலில். மேலே, கீழே எந்த வேகத்திலும் செல்லலாம், ஆனால் இந்த குறிப்பிட்டளவு வேகத்தில் சென்றால் கப்பல் நடுங்கும். பழைய கட்டுமானக் கப்பலானால் குலுங்கும். கப்பலே நொருங்கிப்போகுமோவென மனம் துண்ணுறும்.
இருளை சும்மா ஊடறுத்துப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த கலாபன் திரும்ப முனைந்த வேளையில் அந்த இருளிலிருந்து ஓர் அசைவு தெரிந்தது. தெரிந்ததல்ல, தெரிந்தது போலிருந்தது. இருளாவது அசைவதாவது! ஆனாலும் ஏனோ அந்த அசைவுபோன்ற மயக்கம் அதுவரை ஏற்படாதினால் கலாபனும் உடனடியாகத் திரும்பாமல் ஒரு மெல்லிய குழப்பமான நிலையில் அந்த இடத்திலேயே நின்றிருந்தான். அவன் பார்த்துக்கொண்டிருக்கவே ஓர் இருள் உள்நகர்வது தெரிந்தது. கலாபன் அப்படியே உறைந்துபோனான். திறந்த வாயிலிருந்து சத்தம்தான் வரவில்லையே தவிர, பெரும்பாலும் அவன் கத்திவிட்டான் என்றே சொல்லவேண்டும்.

கையில் மின்கல விளக்கிருந்தது. ஒளியைப் பாய்ச்சிப் பார்க்கலாமே என்ற எண்ணம்கூடத் தோன்றவில்லை. அப்படியானாலும் இருளில் எதைப் பார்ப்பது? இருளில் ஒரு பொருளிருக்குமானால் விளக்கின் ஒளிகொண்டு அதைப் பார்க்கலாம்தான். ஆனால் இருளையே பார்க்கமுடியுமா?
சிறிதுநேரத்தில் அந்த இருட்டு பரிச்சயமாகியதில் உள்ளே ஒரு இருள் தெரிந்தது. அந்த இருளுருவத்தின் முகமாகக்கூடிய இடத்தில் இரண்டு வெண்மைகள் தெரிந்தன.

இப்போது நிலைமை நன்கு விளங்கிவிட்டது கலாபனுக்கு. யாரோ ஓர் ஆபிரிக்கன் பாகிஸ்தானில் கப்பல் நின்றிருந்த வேளையில் கப்பலில் களவாகச் சென்று வேறு ஒரு நாட்டில் களவாக இறங்குவதற்காக ஏறிக்கொண்டிருக்கிறான்.

அது கப்பல் போக்குவரத்தினதும், அந்தந்த நாடுகளினதும் சட்டவிதிகளுக்குப் புறம்பானது. அதை ஒரு கடலோடி உடனடியாக கப்ரினுக்கு அறிவிக்கவேண்டும். கப்ரின் அவனைக் கைதுசெய்து கரையொதுங்கும் நாட்டில் காவலதிகாரிகளிடம்; ஒப்படைக்கவேண்டும்.
கலாபன் கீழே இறங்கத் தயாரானான்.

இருளின் ஏதோ அவயவங்கள் அசைந்தனபோல் தெரிந்தன. கைகளாயிருக்கும். நெஞ்சில் கூம்பிக் கிடந்தன.

கீழே வந்த கலாபன் இரண்டாவது என்ஜினியரிடம் சொல்ல பலமுறையும்தான் முயன்றான். வாய் வரவில்லை. இருளின் கூம்பிய கரங்களா, அதன் வெண்ணிறக் கோளங்களில் கிடந்த பரிதாபமா எது அதைச் செய்தது?

மறுநாள் கொதிகலனின் பின்னால் அவன் கூர்ந்து பார்க்க முயலவேயில்லை. மூன்றாம் நாள் அவன் என்ன சாப்பிடுவான், எதையாவது கொண்டுவந்திருந்து வைத்துச் சாப்பிடுவானா, தண்ணீராவது குடித்திருப்பானோ, அந்தக் கொதிகலனின் பின்னால் குளிர்காலத்திலும் நா வரண்டுபோகுமே என நினைத்து இரண்டு பாண் துண்டுகளும், ஒரு விஸ்கி போத்தலில் நீரும் கொண்டுபோய் மறைப்பாக வைத்துவிட்டு கொதிகலனைப் பார்க்கச் சென்றவேளையில் எடுத்துக்கொண்டு சென்றான்.
இருள் அசைவு தெரியவில்லை. மேலே ஏறி பின்புறம் எட்டி நோக்கினான். இருள் உள்ளே சரிந்து கிடந்துகொண்டிருந்தது. கொண்டுசென்றிருந்த தண்ணீர்ப் போத்தலைக் கீழே வைத்துவிட்டு பாண் துண்டுகளைத் திரும்ப கொண்டுவந்துவிட்டான். பாண்துண்டுகள் ளுவழற-யறயல செய்யக்கூடிய ஒரு மனிதனைக் காட்டிக்கொடுத்துவிடக் கூடியவை.

மறுநாள் பலபலவென்று வெய்யில் எறித்துக்கொண்டிருந்த இரவு பதினொரு மணியளவில் சுவீடனின் துறைமுகத்தை நெருங்கியது கலாபன் வேலை செய்துகொண்டிருந்த எம்.வி.கிற்சாயி கப்பல். உடனடியாக துறைமுக மேடையிலும் கொண்டுசென்று கட்டப்பட்டது.

மறுநாள் காலைவேலை முடிந்து எட்டு மணிபோல் மேலே சென்ற கலாபன் நேரே பிரதம என்ஜினியர் அறைசென்று கொதிகலனின் பின்னால் மலவாடை வீசுவதாகப் புகார் செய்தான்.
கலாபனின் கடிதத்தை வாசித்த வேளையில் எனக்கும் சிரிப்பாகத்தான் இருந்தது. ஆனால் அது குறுணியளவான விதையிலிருந்து முளைத்த ஆலமரமாக என்னுள் படர்ந்து வளரத் தொடங்கியது. திருமலைத் துறைமுகத்துக்கும் இல்மனைட் மண் ஏற்றுவதற்காக ஜேர்மானியக் கப்பல்கள் வந்துபோகின்றன. நான் கனவு காணத் தொடங்கினேன்.

000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்