வெ.சா. நினைவாஞ்சலி:


கலை, இலக்கியத்தின் உக்கிரமான விமர்சனக் குரல் ஓய்ந்தது


சென்ற அக்டோபர் 3ஆம் திகதி, நான் லண்டனில் நின்றிருந்தபோது, என்னை இன்னும் கனடாவிலிருப்பதாக நினைத்த வெங்கட் சாமிநாதனிடமிருந்து, அப்போது திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருமாவளவனின் உடல்  நிலையை விசாரித்து ஒரு முகநூல் செய்தி வந்தது. திருமாவளவன் தனது சுகவீனம் காரணமாக அடிக்கடி வைத்தியசாலை சென்று வந்துகொண்டிருந்த நிலையில் வி~யம் எனக்கு சாதாரணமானதாக இருக்க, வெங்கட் சாமிநாதனின் எழுத்தில் ஒருவித பதற்றமிருந்ததை நான் கண்டேன். அதனால் நண்பர்களிடம் விசாரித்து தகவல் தெரிவிப்பதாக அறிவித்துவிட்டு நான் அந்த முயற்சியில் இருந்தபோது, 5ஆம் திகதி வெ.சா.வே எழுதினார், ‘இனி விசாரிக்கத் தேவையில்லை, தேவகாந்தன். திருமாவளவன் போய்விட்டார்’ என்று.

அவரது பதற்றத்தின் உறைப்பு இன்னும் கனதியாக என்னுள் இருந்துகொண்டிருந்த பொழுதில் அக்டோபர் 21ஆம் திகதி ஓர் அதிகாலையில் வெ.சா. காலமாகிவிட்டதான முகநூல் பதிவு என்னை அதிரவே வைத்தது.
1931இல் கும்பகோணத்தில் பிறந்து, 21.10.2015 இல் பெங்களூருவில் காலமான வெ.சா.வுக்கும் எனக்குமிடையே ஒரு கால் நூற்றாண்டுத் தொடர்பிருந்தது. ‘எழுத்து’ பத்திரிகையில் அவரது எழுத்தையும், அவரது ‘பாலையும் வாழையும்’ நூலையும் வாசித்து அவரை ஒரு வியப்போடு தெரிந்திருந்த நான், 1990இல் சென்னையின் மடிப்பாக்கம் பகுதிக்கு குடிவந்த பின்னர்தான், அப்போது மடிப்பாக்கம் பகுதியில் குடியிருந்த வெ.சா.வை நேரில் அறிமுகமானேன். தொலைபேசித் தொடர்புகள் அதிகமில்லாத அக்காலத்தில் அலைந்து அலைந்துதான் அவருடனான தொடர்பைப் பேணினேன். இலக்கியக் கூட்டங்களுக்கு சேர்ந்து செல்வதற்கும் திரும்புவதற்குமான பொழுதுகள் பல்வேறு இலக்கிய வி~யங்களையும், நூல்களையும் பற்றிப் பேசுவதற்கு காலத்தை ஒதுக்கித் தந்திருந்தன. இலக்கியக் கூட்டங்களில்லாத சனி, ஞாயிறுகளில் அவரது வீட்டில் சென்று உரையாடினேன். மார்க்சியத்தில் பெரிய ஈடுபாடு கொண்டிருந்த எனக்கு, அந்த மார்க்சிய, கம்யூனிஸ்டு கட்சிகளின் தீராத எதிர்ப்பாளிமேல் ஏற்பட்டிருந்த ஈர்ப்பு ஒரு விந்தையாகவே இருக்கமுடியும்.

இருவேறு திசைகளில் சிந்தனைப் போக்கைப் படரவிட்டிருந்த நம் இருவருக்கிடையிலுமான இந்தத் தொடர்பில் எவ்விதமான மனவுறுத்தல்களும் இல்லாதிருந்தமை இன்னொரு அதிசயம். நான் ‘இலக்கு’ சிறுபத்திரிகை நடத்திய காலத்தில் கைலாசபதி நினைவுமலர் வெளியிட்டிருந்தமையை வெ.சா. அறிந்திருந்தார். ஆனாலும் அந்த என் ஈடுபாட்டை மீறியும் அவருக்கு என்மீது அன்பிருந்தது.

எனது ஆரம்ப கால நாவல்களை வாசித்துவிட்டு ஒருநாள், ‘நீங்களொன்றும் உங்களுக்கு ஈடுபாடான சித்தாந்தத்தை வலியுறுத்தி எழுதுபவராகத் தெரியவில்லையே’ என்று சொன்னார். பின்னர் சிறிதுநேரம் மௌனமாக இருந்துவிட்டு, ‘மனத்திலுள்ள சிந்தனைப் போக்கை எழுத்தில் பதிவாகாமல் எழுதிவிட முடியுமா? அது ஒருவகைப் போலியாக இருக்க சாத்தியமில்லையா?’ என்று என்னைக் கேட்டார். ‘அது எடுத்துக்கொண்ட கதையின் கருவைப் பொறுத்து முடியுமென்றுதான் தோன்றுகிறது’ என்றேன் நான். மேலே, ‘எஸ்.பொ., மு.த. போன்றோரை உதாசீனப்படுத்தி கைலாசபதியும், சிவத்தம்பியும் இலங்கைத் தமிழ் இலக்கிய உலகத்தை ஆட்சி செய்வதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்றார். ‘இலங்கையில் தேசிய தமிழ் இலக்கியமென்ற கருதுகோளை முன்வைத்து இயங்கிய நிலையில் அவர்களுக்கு அது வேண்டிய ஒன்றாக இருந்திருக்கும்’ என்ற என் பதிலில் அவர் என்னை சிறிதுநேரம் தீர்க்கமாக உற்றுப் பார்த்தார். ‘நீங்கள் எப்போதுமே இப்படித்தானா? உங்களால் ஒரு வி~யத்தில் கறாரான முடிவுக்கு வரவேமுடியாதா? உங்களுக்கு கைலாசபதியும் வேண்டும், தீவிர இலக்கியமும் வேண்டுமென்றால் எப்படி?’ என்று சலித்தார். பின் ஒரு சத்தமான சிரிப்போடு ‘அதை விடுங்கள்’ என்றுவிட்டு வேறு வி~யத்துக்குத் தாவி என்னை அந்த ஸ்தம்பிதத்திலிருந்து மீட்டெடுத்தார். அவ்வாறு கலகலப்பை மீட்டெடுக்கும் ஒரு தந்திரம் வெ.சா.வுக்குள் இருந்திருக்கிறது.

2003இல் நான் இலங்கையில் தங்கியிருந்த காலத்திலும், பின்னால் 2004இல் கனடா சென்ற பின் சில காலமாகவும் அவருடனான தொடர்பு எனக்கு அருகியிருந்தது. தொடர்பு குறைந்திருந்த வேளையிலும் அவரைப்பற்றி அடிக்கடி நான் நினைத்திருக்கிறேன். ஒரு படைப்பு குறித்து, அவரது பாதையினூடாகவன்றி எனது வேறான பாதையினூடாகவும் ஒரே முடிவையே நாம் வந்தடைந்த வியப்பு நீண்டகாலமாக என்னுள் தங்கியிருந்தது. எனது மார்க்சிய ஈடுபாடு பின்-மார்க்சியமாக விரிவடைந்தும், பின்நவீனத்துவ ஈர்ப்பு கொள்ள ஆரம்பித்ததிலிருந்தும் அந்த முரண்நிலையை, கலை வேறு வி~யமென்பதை, நான் புரிந்துகொண்டேன். இவ்வாறாக என்னுள் நிகழ்ந்த வளர்சிதை மாற்றத்தில் வெ.சா.வுக்கு பெரும்பங்கு இருக்கிறது.

வெ.சா. இறக்கும்போது அவருக்கு எண்பத்து நான்கு வயது நடந்துகொண்டிருந்தது. பதினாறு வயதில் தொழில் வேட்டையில் இறங்கி வடமாநிலமொன்றில் முதலிலும், பின்னால் தொழில் வசதிபெற்று தில்லியிலும், ஜம்முவிலும் கடமையாற்றியவர். ஜம்முவிலிருந்து தில்லி மாறிய பின்னால் அங்கிருந்து வேறொரு மாநிலத்துக்கு உத்தியோக உயர்வுடன் வந்த மாற்றலையும் தில்லியின் கலை இலக்கியச் சூழல் காரணமாய் நீங்க மறுத்து உதறியெறிந்தவர். தமிழ்நாட்டிலிருந்து வெளியேறியமையும், தில்லி வாசமும் தன்னைச் செழுமைப்படுத்தின என பல்வேறு தருணங்களில் அவர் சொல்லியிருக்கிறார்.

தன் மனத்தில் பட்ட கருத்துக்களை  அவர் மறைப்பேதுமின்றி முன்வைக்க ஆரம்பித்தது 1959இலிருந்து. அன்றிலிருந்து ‘கிட்டத்தட்ட 55 வருடங்களாக நிறைய அடி பட்டிருக்கிறேன்’ என்று சமீபத்திய ஒரு பதிவில் குறிப்பிடுகிறார் அவர். அவரது கலை இலக்கியத் தீவிரம் எவர் வசப்படுத்தலுக்கும் அகப்படாது அந்த 55 ஆண்டுகளாக நிமிர்ந்து நின்றிருக்கிறது என்பது அதன் அர்த்தம். அவரது நண்பர் க.நா.சு.வும் தன் கருத்துத் தீவிரம் காரணமாய் நிறைய எதிர்ப்புகளைச் சந்தித்தவர்தான். என்றாலும் அவரது கருத்துக்களின் பிரயோகக் காட்டத்தின் குறைச்சல் எதிர்ப்பையும் தீவிரமாக்கவில்லை. ஆனால் வெ.சா. எந்தக் கருத்தையும் காட்டமாகவே முன்வைத்தவர். அந்த எதிர்ப்பின் தீவிரம் 55 ஆண்டுகளாகத் தொடர்ந்திருந்தும் அந்த வலியை அவர் அநாயாசமாகக் கடந்திருந்தார்.

சென்ற ஆண்டு பெங்களூருவில் கெம்பாபுர பகுதி சென்று அவரை நான் நேரில் சந்தித்தேன். சுமார் மூன்று நான்கு மணி நேரமாகப் பேசிக்கொண்டிருந்தோம். சிலகாலம் முன்பு வெளிவந்திருந்த ‘கடல் கடந்தும்’என்ற அவரது நூலை கையெழுத்திட்டுக் கொடுத்தார். அது 2003ம் ஆண்டு கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது கிடைத்து கனடா சென்ற சமயத்திலிருந்து புலம்பெயரந்தோர் நூல்கள்பற்றியும், அவர்களது வாழ்நிலைபற்றியும் அவர் எழுதியவற்றினதும் பேசியவற்றினதும், முன்பு எழுதிய சில கட்டுரைகளினதும் தொகுப்பு.

அது புலம்பெயர்ந்தோர் இலக்கியம்பற்றிய மிக முக்கியமான ஒரு தொகுப்பென்று எனக்குத் தோன்றுகிறது. மார்க்சிய எழுத்துக்களை மறுத்து விமர்சித்து வந்த வெ.சா. அந்த நூலில்தான் கே.டானியலை தமிழில் தலித்திலக்கிய முன்னோடியாகவும், அவரது எழுத்துக்கள்  கொள்கைகளுக்குக்கூட சமரசமாகாதவை என்றும் விதந்து பாராட்டியிருந்த கட்டுரை வெளிவந்திருந்தது. அது தில்லியில் வெளிவந்துகொண்டிருந்த ஆங்கிலப் பத்திரிகையான Pயவசழைவ சஞ்சிகையில் (1988ல்) எழுதியிருந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பு.

நீண்டகாலத்துக்குப் பிறகு எமக்குள் நிகழ்ந்த சந்திப்பு அது. நான் கனடா சென்று சிறிது காலத்தின் பின் தொடர்பு கொண்டபோது அவர் மடிப்பாக்கத்தில் இருக்கவில்லை. பின்னர்தான் அறிந்தேன் அவரது மனைவி காலமான செய்தியும், அவர் மகனோடு பெங்களூரு போய்விட்டமையும். மின்னஞ்சல் முகவரியையும் அவர் மாற்றிவிட்டிருந்தார். பின்னர் ஒருவாறு தொடர்பு கொண்டபோது அவர் தம் மனைவியின் இழப்பில் மிகவும் தளர்ந்திருந்தமை குரலிலேயே தெரிந்தது.

அந்த அம்மாவை நான் நேரில் அறிவேன். அவருக்கு குடைநிழலாகவும் இருக்கும் குளிர்ந்த இதயம் இருந்தது. த்தகையவரின் இழப்பு நீண்டகாலம் வெ.சா. தொடருமென்று நான் எதிர்பார்த்ததுதான். அவர் அதிலிருந்து சிறிதுசிறிதாய் தெளிந்தார். சென்ற ஆண்டு சந்தித்தபோது வலி தெரியவில்லை. ஆனாலும் ஒருவகையான இழப்பிலேயே அவர் இருந்திருந்தார் எனத் தோன்றியது. அந்தளவாவது போதுமென்றே அப்போது எண்ணினேன். அடுத்தமுறை இந்தியா வரும்பொழுது வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டு புறப்பட்டேன்.

அடுத்த ஆண்டு வந்தது. நான் பயணத்தின் பாதியில். ஆனால் அவர்தான் இல்லாமல் போயிருக்;கிறார்.

காலமும் தன் கதியிலும், கணிப்பிலும் கறாராகவே இருக்கிறதுதான். ஆனாலும் அவரின் நினைவுகளைச் சொல்லிக்கொண்டு ‘அக்ரஹாரத்தில் கழுதை’ சினிமாவும், ‘பாலையும் வாழையும்’, ‘கடல் கடந்தும்’ போன்ற நூல்களும், ‘தமஸ்’ போன்ற மொழிபெயர்ப்பு நூல்களும் நின்றுகொண்டிருக்குமென்று நிச்சயமாக நம்ப முடியும்.

0

காலச்சுவடு, நவ. 2015

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்