மாய வருத்தத்தின் மந்திர முடிச்சு (சிறுகதை)

 


தூரத்தில், விரிவானின் எல்லையில் விழுந்த புள்ளியில் ஒரு கருமை திகைந்தெழுந்து திணிவது கண்டு, மாளிகையின் மேல்மாடத்தில் நின்றிருந்த அல்மினாவின் உள்ளத்தில் குதூகலத்தின் அரும்புகள் சட்டெனத் தெறித்தன. ‘கமால் அப்துல்லாவா?’

இல்லை, அவனில்லை; அவனாகயிருக்காது; அவன் வரமாட்டான்; இத்தனையாண்டுகள் வராதிருப்பவன் இனியும் வரப்போவதில்லை; வருவது எதிர்வுகூறப்பட்ட மணற்புயலாய்த்தான் இருக்கும்; ஆயினும் அவனாகயிருந்தால் நல்லதுதான்; கண்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தமாதிரி ஆகுமென அவள் எண்ணினாள்.

சுற்றிலும் பாலை விரிந்த அம் மணல் வெளியில் லிபியா, சூடான், எகிப்து ஆகிய நாடுகளை அண்டியதாய், ஆயினும் சுலபமான அடைதல் சாத்தியமின்றியும், எல்லை நிர்ணயமின்றியும், பசுமைகொண்ட சில நிலத் தீவுகள் இருந்துகொண்டுதான் இன்னும் இருக்கச்செய்தன.

இத்தாலியரும், இஸ்பானியரும், பிரெஞ்சுக்காரரும், ஆங்கிலேயரும் ஆபிரிக்க கண்டத்தைக் குறிவைத்தபோது, சில நல்லதுகள் நடந்தன. சூயஸ் கால்வாய் அவற்றிலொன்று. நடுவில் கிடந்த நிலத்தை தோண்டி கடலாக்கி மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைத்து அய்ரோப்பாவிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்குமான சுருக்க வழி அண்மையில்தான் காணப்பட்டது. அதனால் எகிப்துக்கு லாபம்தான் கிட்டியது. எகிப்திய நிலப்பரப்பை அண்டிய அம்மாதிரி நிலத் தீவுகளுக்கு என்ன ஆதாயம்? அவை அந்தந்தப்படியேதான் அமைந்து கிடந்தன.

சில பல ஊர்கள் ஒரு தொட்டமாய், சில பல ஊர்களும் சில சிறுநகர்களும் இன்னொரு திசையிலாய், சில பல ஊர்களும் சில சிறுநகர்களும் ஒரு பெருநகரமும் வேறொரு திசையிலாயென அவற்றின் இருப்பு. அரசுகள் கண்டதுமாதிரியும், காணாததுமாதிரியும் அவற்றின் நிலைப்பு.

அவளறிவாள் மாபெரும் நீர் வளம்கொண்ட பெருநிலப் பரப்புகள் அவளூரின் கிழக்கிலிருப்பது. அங்கே ஓடும் வளநதி நைல் எனப் பெயர்பெற்றிருப்பதையும் அவள் கேள்வியில் அறிந்துள்ளாள். அவளையீர்க்கும் காந்தம் அங்கேயிருக்கிறது. அந்த இடம் கெய்ரோ ; ஈர்ப்பின் பெயர் கமால் அப்துல்லா.

அது குறித்து அவளொரு பெருங்கதை சூழ்ந்திருக்கிறாள்.

*

அந் நிலத் தீவுப் பிரதேசங்களில் பிளாஸ்ரிக் காப்புகளும், கண்ணாடி வளையல்களும், மணிக்கல் மாலைகளும், தங்க மற்றும் தந்த சங்கிலிகளும், கறுப்பு வெள்ளை சிவப்பு ஆதியாம் வர்ணங்களில் சிறந்த சல்லடைத் துணிகளும், பெண்கள் சிறுமியர்க்கேற்ற ஆடைகளும், சிறப்பாக பெண்களுக்கான வாசனைத் திரவியங்களும், ஆண்களுக்கும் சிறுவர்களுக்குமேற்ற உடைகளும், சிறப்பாக ஆண்களுக்கு பாலியல் ஊக்கியான ஜென்சிங் போன்ற மூலிகைகளும் அலெக்ஸாந்திரியா, போர்ட் செயித்போன்ற துறைமுக நகரங்களில் தென்னமெரிக்காவிலிருந்தும், சீனாவிலிருந்தும் கப்பல்களின் ரகசியப் பொதியாய் வரும் விசேஷ சாமான்களில் அல்மினாவின் தந்தை நஸீம் யாவாரம் செய்துவந்தார்.

சென்ற இடங்களிலெல்லாம் தன்னையவர் நஸீம் பாஷாவெனச் சொல்லிக்கொண்டார். அந்த மந்திரச் சொல் ஜனங்களிடையே நன்கு வேலைசெய்தது. நஸீம் பாஷாவைக் காத்து மாதக் கணக்கில் அவர் வாடிக்கையாளர் காத்திருந்தார்கள். அதனால் நஸீமுக்கு நல்ல யாவாரம் நடந்தது. நிஜ பாஷாவினதேபோன்ற மாளிகை கட்டி தன் மூன்று மனைவியரையும் குடியிருந்தினார். குடும்பங்கள் மூன்றும் வளமான வாழ்வை அனுபவித்துக்கொண்டிருந்தன.

வீட்டுப்புறம் இவ்வாறிருந்ததெனில், அவரோ ஒரேயொரு உதவியாளை மட்டும் வைத்துக்கொண்டு தானுமே ஒரு தொழிலாளியாக மாய்ந்து மாய்ந்து உழைத்துக்கொண்டு இருந்தார்.

மனையிலிருந்து உதவியாள் சகிதம் ஒட்டகத்தில் தன் யாவாரத்துக்குப் பறப்படுபவர் திரும்ப, இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிடும். மூன்று நான்கு வாரங்களில் மறுபடி முன்திட்டமிராத வேறொரு திக்கில் தன் வியாபாரப் பயணத்தை நஸீம் பாஷா ஆரம்பித்துவிடுவார். அவரது செல்வச் செழிப்பின் சூட்சுமம் அங்கேயிருக்கிறது. கூட, அவரது பாதுகாப்பும். பாலைவனக் கொள்ளைகள் குறைவாயெனினும் அக் காலத்தில் இருக்கவே செய்தன. அதனால் அந்த ஒழுங்கில் மாற்றமேதும் விழ அவர் அனுமதித்ததில்லை.

அவரது இயங்குதல் இவ்வாறிருந்த ஒருநாளில் சித்திரை மாத பூரணைப் பாலைவன விழாவுக்கு குடும்பங்களுடன் சென்றிருந்த நஸீம், தன் நீண்ட கால எகிப்திய நண்பரின் மகனான கமால் அப்துல்லாவை திட்டமேதுமின்றி சந்திக்க நேர்கிறார்.

அவனை அழைத்துச் சென்று தனியான ஓரிடத்தில் நின்று உரையாடினார்.

அன்றே முதன்முறையாய்ச் சந்தித்திருந்தும் குடும்பத்தார் நீண்டகாலம் அறிமுகமானவனாய் கமாலுடன் சகஜத்தில் உரையாடியதில் நஸீம் வெகு சந்தோஷப்பட்டார்.

அதெப்படியென ஆச்சரியம்கொண்ட கமால் மெதுவாய் வினவியபோது, அவனையும் அவன் தந்தையையும்பற்றி தன் குடும்பத்தாருடன் தான் பறையாத இரவுகள் குறைவென்றான் அவன்.

அவை எவைபற்றியன?’ என கமால் வினவியபோது, தம் பால்ய காலம்பற்றி, தன் நண்பர் மகனுக்கும் தன் மூத்த மகள் அல்மினாவுக்குமிடையிலான நிக்காஹ் குறித்தென்றான் நஸீம். மேலுமவன், ‘உன் இங்கிலாந்துப் படிப்பு முடியும்வரை காத்திருக்கச் சொல்லியிருக்கிறான் உன் தந்தை’ என்றான்.

‘உங்கள் மகள்களில் யார் அல்மினா?’

‘அதோ, எல்லோருக்கும் பின்னால் இன்னும் நாணியபடி நிற்கிறாளே, அந்த நெடுமிதான் அல்மினா.’ கமாலின் பக்கமாய்ச் சரிந்து கிசுகிசுத்தான் நஸீம்.

அவர்களது உரையாடலை முன்னின்று செவிமடுத்தவளாய் நாணிப்போன அல்மினா, தன்னை அச் சுழலிலிருந்து மீட்டுக்கொண்டு கமால் நின்ற திசையின் ஈர்ப்பில்போல் நிமிர்ந்தபோது, அவளைக் காணத் திரும்பிய கமாலின் கண்களை நேர்நேர் எதிர்கொண்டாள்.

தலை தாழ முயன்றது; கண்கள் பதிய முனைந்தன; ஆனால் அவன் கண்களின் சேதி அனைத்தையும் உடைத்தது.

அவள் மனத்துக்குள் ஓரிரவின் ஒரு சிறு பொழுதுக்குள் அவன்பற்றிய கனவின் விதைகள் விதைபட்டுப் போயின.

என் படிப்பு நிறைவெய்தி நானும் எகிப்து வந்துவிட்டேன். எனக்கான வியாபார மய்யமொன்றை கெய்ரோவில் உருவாக்குவதில் ஆர்வமாயுள்ளேன். அது பூரணமானதும், நானே  பெண்கேட்க உங்கள் இடம் வருவே’னென சொன்னான் கமால்.

அது அல்மினாவின் செவியிலும் தெளிவுற விழுந்தது.

ஏற்கனவே கனவின் விதைகள் மனத்துள் முளைகளாகிவிட்டவள், தன் அழகிய கண்களில் ஊறிக்கொண்டிருந்த நாணத்தை ஒதுக்கிக்கொண்டு, அது இன்னமுமே கன்னத்தில் செம்மைபூத்து திகைந்துகொண்டிருக்கையிலும், விழிக் கேள்வி அனுப்பினாள் எப்போது என.

அவனும் கண்களிலேயே பதிலிறுத்தான் விரைவிலென்பதாக.

நஸீமின் தொடர்பிலிருந்த கமாலின் தந்தை அப்துல்லாவின்   மரணத்தின் பின்னதாக, அவன் கமாலிடமிருந்து செய்தியேதும் அற்றவனானான்.

ஆயினும் மூன்று வருஷங்களைக் காத்திருக்க அவனால் முடிந்தது. மேலே அல்மினாவுக்கு பாஷாவாக இல்லாவிட்டாலும் வியாபாரியாக உள்ளவராவது பெண்கேட்டு வருவதை விரும்பியிருந்தான்.

ஆனால் அல்மினாவுக்கு, கமால் விதைத்துப் போன காதலின்  விதை மரமாகியிருந்ததில், தந்தையின் விருப்பத்தின் சார்பிலெண்ண இயலாது போய்விட்டது. கமாலை மறப்பது தன்னை மறப்பதற்கு நிகராயிற்று அவளுக்கு.

அவள் அதற்கொரு உபாயம் கண்டுபிடித்தாள்.

பிசாசு பிடித்தவர்களை, வல்வினையால் தாழ்வுற்றவரை, தீரா நோய் கொண்டோரை, மனநோய் உற்றோரை ஓதுதலில் குணமாக்கும் காரியங்கள் மசூதியில் நடைபெறுவதைக் கண்டிருந்த அனுபவத்தில், அந்த உபாயம் அவளால் வடிவமைக்கப்பட்டது.

அவள் பகலில் அண்ணாந்து பார்த்து நின்று தனக்கு நட்சத்திரங்களைக் காண முடிகிறதென்றாள். மாதம் முழு நாளும் தனக்கு நிலா தெரிகிறதென்றாள். எந்நேரமும் வான்பார்த்து நின்றிருந்தாள். அது கண்ட அவளன்னையர் அது மனநோயின் கூறுவென தெளிவாய்த் தெரிந்தார்கள்.

வீடு திரும்பிய நஸீம் மனைவியர் அறிவிக்கை கேட்டு அவை இபிலிசின் அடையாளங்களோவென ஐயமுற்றான். அதனால் இபிலிஸ் வெக்கறைப்பட்டு அகலும்படியான மணிகளை, மாந்திரீக சுருவங்களை அல்மினா கழுத்தில் அணிவிக்கச் செய்தான்.

இரண்டு யாவாரப் பயணங்களை முடித்துத் திரும்பியும், அல்மினாவிடத்தில் மாந்திரீகத்தால் பலனேதும் காணாதுபோக, அவனுமே மனநோயென அதைத் தெளிந்து, மசூதியில் அல்லாவின் கருணையை வேண்டியதோடு, மார்க்கத்தின்படியான சாங்கியங்களையும் நிறைவேற்ற வைத்தான். நோய் குணமாகும்வரை மகளின் நிக்காஹ் கனவை ஒதுக்கிவைத்து தன்னுள் புழுங்கினான்.

அதனால் கடந்துபோன மூன்று வருஷங்களில் வந்த ஆறு வரன்களை அவன் அது காரணமாய் நிராகரித்தான்.

யாவாரத்திலிருந்து நஸீம் பாஷா வீடு திரும்பியிருந்த ஒருவேளையில், தூரவிடத்திலிருந்து ஒரு வரன் அல்மினாவை பெண்கேட்டு வரவிருந்தது.

அல்மினா நொந்துபோனாள். தொடர்ந்தும் தன்னாலே அப் பாசாங்கை நடத்த இயலாதவளானாள். எகிப்தின் எழிலரசியாய் யுவதிகளிடை  புகழ் கொண்டிருக்கும் தான், நிகரற்ற ஆணழகனும் ஆண்மையாளனுமான கமாலுடன் வாழப்போகும் இன்பங்களின் எதிர்பார்ப்பின் சுமையேறிப்போனவள், மீண்டுமொருமுறை கண்டால் போதுமென்ற அளவுக்கு விரகநோய் முற்றிப்போனாள்.

அவ்வாறு தணிவதையும் ஒருவகை ‘அக’மென வகுத்திருக்கிறது பாலை நிலத்து இலக்கியம்.

உண்மையாகவே அல்மினா மனநோயாளி ஆகிவிட்டாளோவென அவளது இல்லுறையும் தோழியும் வேலைக்காரியுமான நபிஷா ஏங்கிப்போனாள். அல்மினா அவளுக்கு தன் அகம் விளக்கினாள். ‘அவனோடு வாழ்வதே இலக்கு. இல்லையேல் இந்த ஜீவதத்தில் அவனை இன்னொருமுறை கண்டாலும்கூட கடைத்தேற்றம் பெறுவேன்.’

‘கமாலை உன்னால் காண்பது சாத்தியமாகுமா, தோழி?’

‘காண்பதென்ன, அவனூரில் வாழ்ந்தால்கூட எனக்குப் போதுமாயே இருக்கும், நபிஷா.’

வாழத்தான் கொடுத்துவைக்கவில்லை, அவள் அவரைக் காணவாவது வேளை அமையவேண்டும், இல்லையேல் அவனூரில் வாழவாவது பயனுண்டாகவேண்டுமென எல்லாம் வல்லவரும் கருணையுள்ளவருமான அல்லாஹ்வை வேளைகள் தவறாது பிரார்த்தனையில் வேண்டுதல் செய்தாள் தோழியும்.

தலைநகர்வரை எட்டியிருந்த அல்மினாவின் எழில்நலம் கேட்ட மனிதனொருவன், எவ்வளவு பணம் கொடுத்தும் அவளை தன் வீட்டில் ஏனைய இரு மனைவியருடன் வாழவைப்பேனென சபதமிட்டான். அவன் வரவிருக்கும் சேதி அன்று வந்திருந்தது.  

அது அறிந்துதான் தந்தை என்ன பதில் சொல்வாரோவெனத் தெரிய அல்மினாவும் மேல்மாடம் வந்திருந்தாள்.

வந்தவள் வானம் பார்த்தாள்; நட்சத்திரங்கள் தெரிவதாய்ச் சிரித்தாள். அப்போதுதான் தன் பாசாங்கில் திளைத்திருந்த அவள் கண்டாள், அடிவான விளிம்பில் படிந்துகொண்டிருக்கும் கருமையின் திணிவு.

*

அது அவளை கமாலுடன் தன்னைப் பெண்கேட்டு வரும் உறவுக் கூட்டத்தின் ஒட்டகங்கள் கிளர்த்தும் புழுதியென ஒரு கணம் எண்ணவைத்தாலும், அந்த நீண்ட காத்திருப்பில் அவளது விரக்தி அவன் வரமாட்டானெனவே எண்ணவைத்தது.

ஆம், அது அவ்வண்ணம்தான் ஆயிற்று.

அவளது விகசிப்பின் அரும்புகள் அவிந்தன.

வந்தது கமால் அல்ல, மணற்புயல்.

அதன் நகர்ச்சி, சிறிதாகத்தான் தென்பட்டது. உண்மையில் அதனது வேகம் தோன்றியதைவிட பத்து மடங்காவது அதிகமிருந்திருக்கும். சிறிதுநேரத்தில் அப் பசுமைத் திட்டு கண்ணில் மறைந்து மணற்படலம் காட்சியாயிற்று. அல்மினா கீழே தன் இடம் ஓடினாள்.

மூன்று நாட்களாயிற்று மணல் புயல் ஓய. மேலும் சில தினங்களாயின சேதாரங்கள் செப்பனிடப்பட. மணற்புயலின் பாதிப்பும் சேதங்களும் அவர்களுக்குத் தெரிந்தேயிருந்தன. முன்னரே எதிர்பார்க்கப்பட்டிருந்ததில் அழிவுகள் சுலபத்தில் தாங்கப்பட்டன; திருத்தப்படக் கூடியன பெரும் அனுபவ சுளுவுடன் திருத்தப்பட்டன.

ஒருநாள், எதிர்பார்த்திருந்த வரன் மணப்பெண்ணைக் கண்டு நிச்சயம்பண்ண நஸீம் வீடு வந்தார்.

அல்மினா மேல் தளமோடி கூடத்தின் உரையாடல் தெளிவுறக் கேட்கக்கூடிய வசதியில் போய் நின்றுகொண்டாள்.

உரையாடலில் அவள் கிரகித்தவை: ஒன்று, அவருக்கு இரண்டாவது மனைவியாக அவள் நிக்காஹ் செய்யப்படவிருக்கிறாள்; இரண்டு, அவர் அரசாங்கத்தில் ஓர் உயர்தர அதிகாரியாகயிருக்கிறார்; மூன்று, அவள் அழகைக் கேள்விப்பட்டு வந்திருக்கும் அவரூர் கெய்ரோ மாநகருக்கு மிகச் சமீபத்திலிருக்கிறது; நான்கு, அவர் கமாலின் தந்தையை சொந்த ஊரவராய் நேரில் அறிமுகம் கொண்டிருந்தவர்.

அல்மினா வியப்பெய்தினாள்.

கமாலின் நாட்டிலிருந்து, அதுவும் அவன் குடியிருக்கும் ஊரிலிருந்து அவர் வந்திருக்கிறார். அவள் சம்மதம் சொல்ல அதுபோதும்.

கமாலைக் காண, ஒரு தரமேனும் காண, குறைந்தவளவிலான ஒரு வாய்ப்பேனும் அவளுக்கு அந்த நிக்காஹ்வால் கிடைக்கக்கூடும். இல்லாவிட்டாலென்ன, அது அவன் ஊராகயிருக்கிறது!

விரும்பியவரைக் காண்டலின்மூலமும், அவர் ஊரில் வாழ்வதன்மூலமும் காதலைத் தணித்தலென்பது எவ்வகை அகமாக இருக்கக்கூடும்?

பாசாங்கு மனநோயை நிஜமென எண்ணியிருக்கும் தந்தை தன் திருந்திய மனநிலையறியாது என்ன பதிலை மணம்கேட்டு வருபவருக்குச் சொல்லப்போகிறாரோ?

அப்போதும் ஒரு தந்திரத்தைச் செய்ய அவள் தவறவில்லை.

மேலிருந்தபடியே, ‘ஐயம் தெளிந்தேன், தந்தையே’ என்றாள்.

நஸீம் முதலில் திகைத்தாலும் ஒரு சாமர்த்தியத்தின் கூறு அதிலிருப்பது உணர்ந்து, ‘நிச்சயமாகவா?’ என்றான்.

‘நிச்சயமாகத்தான். இப்போதெல்லாம் பகலில் தெரிந்த நட்சத்திரங்கள் தெரிவனவாயில்லை. மாதம் முப்பது நாளும் தென்பட்ட நிலாவும் காணக்கிடக்கவில்லை’ என்றாள்.

‘நல்லது, மகளே. நீ கீழே இறங்கி வா. நான் உன் அன்னையரிடம் செய்யவேண்டியன சொல்லியனுப்புவேன்.’

ஏதேனும் பிரச்னையாவென பெண்பார்க்க வந்தவர் வினவினார்.

‘அவள் தான் படித்த கவிதையொன்றுபற்றி சொல்லிக்கொண்டிருக்கிறாள்’ என்றார் நஸீம்.

‘அவ்வளவு கல்வியறிவுண்டோ? அபாரம், அற்புதம்!’ என்றார் அவர்.

***

தாய்வீடு, ஜன. 2024

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்