(கதை) அவனது தம்பி இன்னும் கீழே இறங்கவில்லை


 

 

அவன் அதை எதிர்பார்க்கவில்லை. அவளது தொண்டைக் குழியிலிருந்து  விடுபட்ட சொற்களில் அவன் சிதறிப்போனான். அவை நுழைந்து சென்ற செவிவழியெங்கும் பொசுங்குண்டதுபோல் இன்னும் எரி செய்துகொண்டிருந்தன. அம்மாவா சொன்னாள்? அத்தகைய வார்த்தைகள் அவளுக்கும் தெரிந்திருந்தனவா? அவனால் நம்பமுடியவில்லை. ஆனால் அது நடந்துதானிருந்தது. அவனுக்கே நடந்திருந்ததில் அவன் அய்மிச்சப்பட அதில் ஏதுமில்லை.

அவனுக்குள் நீண்டகாலமாக ஒரு ஆசை இருந்திருந்தது. நியாயமான ஆசைதான். அதை வெளியிட ஒரு சமயம் வாய்த்தபோது அவன் தயக்கம் காட்டவில்லை; அல்லது வார்த்தைகளே அவனுள்ளிருந்து படீரென வெடித்துக் கிளம்பிவிட்டன.

அது இரவுச் சாட்டின் பின்னான நேரம். அநேகமாக, விஷயங்கள் கரடுமுரடாக வந்து விழுந்தாலும், கனதிகொண்டு உறைந்திருப்பதில்லை அந்த நேரத்தில். தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருக்கும் செய்தி, சினிமா, கார்ட்டூன், சீரியலென எதுவும் அதைத் சடுதியாகவே அய்தாக்கிவிடுகிறது.

நடந்தது இதுதான்.

கூடத்துள் அம்மா, அவனது வளர்ப்புத் தந்தை தோமா, குண்டுத் தம்பி மிஷேல், தாத்தா எல்லோரும் அமர்ந்திருக்கிறார்கள். அவரவர் காரியங்களில் கருத்தூன்றி அனைவரும். ஜுன் கடைசியிலிருந்து பள்ளிகளுக்கு விடுமுறையென ஒரு விளம்பரத்தைக் கண்டு ஞாபகமாகும் கணநாதன், குதூகலத்தில் கிரீச்சிடுகிறான். ‘என்ன, அவ்வளவு சந்தோஷம்!’ என்றபடி அவனைப் பார்த்து சிரிக்கிறார் தோமா. ‘மிஷேலுக்கு இந்தமுறை மொன்றியலுக்குப் போகிற திட்டமிருக்கிறது. உனக்கு ஸ்கார்பரோதான். உன் ஆங்கில வகுப்பு கட்டாயம். அது முடிய நேரமிருக்குமென்றால், பக்கத்தில்தானே இருக்கிறது மிலிகன் பார்க், போய் ஏலுமானவரை சுற்றிக்கொண்டே இரு.’

அவர் வேடிக்கையாகத்தான் அதைச் சொல்லியிருக்க முடியும். ஆனாலும் கணநாதன் மனம் தாங்குப்பட்டுப் போனான். பெறா மகன் – வளர்ப்புத் தந்தை ஆகிய உறவுகளுக்கிடையில் எப்போதாகிலும் ஒரு விரிசலின் கணம் சம்பவிக்கக்கூடுமோ?  

அந்தக் கோடை விடுமுறைக்கு தான் பிரான்ஸ் போகப்போவதாகச் சொல்கிறான் கணநாதன்.

சொல்லி, அவன் வாய் மூடவில்லை, சட்டென அம்மா கத்துகிறாள், ‘அங்க உனக்கு ஆர் இருக்கினம்?’ என.

தனக்கான பதிலை கணநாதன் தோமாவிடம்தான் எதிர்பார்க்கிறான். ஆனால் கார்த்திகா அவ்வாறு கத்தியதும் கணநாதன் தடுமாறிப்போகிறான். அவள் அவ்வாறு கத்திப் பேசுவது குறைவு. அது அவளது உச்சபட்ச சினத்தின் வெளிப்பாடு. ஆனால் அவ்வகை அதட்டல் யார்மூலமாக வெளிப்பட்டாலும் வயதை மீறிய விதத்தில் அதன்மீது வெறுப்பைக் காட்டுவது கணநாதனின் இயல்பாகயிருந்தது. பிரான்ஸில் அவனுக்கு யார் இருக்கிறார்களென்பது அவளுக்குத் தெரியாமலா இருந்தது? அந்தக் கோபம், அவன் தொண்டைக் குழிக்குள் அடக்கிவிடக்கூடிய சொற்களைக் கட்டறுத்து விடுகிறது. அவன், ‘அங்க என்ர அப்பா இருக்கிறார்’ என்கிறான்.

‘நன்றி கெட்ட நாய்’ என்றபடி அவனைநோக்கித் திரும்பினாள். தன் வெள்ளைக்காரக் கணவனின் உடனிருக்கை மறந்து கார்த்திகா கூடத்துள் நின்றபடியே கர்ர்...ரெனக் காறி, தூஊஊ…வென துப்பினாள். பின் தந்தையைப் பார்த்து திரும்பினாள். ‘என்ர பிழைதான்… நான்தான் பிழை விட்டிட்டன்… அங்கயே கிடந்து சாவெண்டு விட்டிருக்கவேணும்… நல்லாய்ச் சிரிச்சுச் சிரிச்சு அம்மா அப்பாவெண்டு பெரிய வாரப்பாடாய்ச் சொல்லிக்கொண்டு இருந்தாலும், அதுகின்ர மனசில என்னமாதிரி நினைப்பெல்லாம் இருந்திருக்கெண்டு பாத்தியளே, அய்யா! இப்பவும் ஒண்டும் கெட்டுப்போகேல்லை. ரிக்கற் போட்டுத் தாறன், திரும்பி சிறீலங்காவுக்கே போயிடட்டும். தப்பிப் பிழைச்சுதெண்டாலும் என்ர முகத்தில இனிமேக்கொண்டு முழிக்கப்படாதெண்டு சொல்லுங்கோ.’

அவள் மேற்கொண்டு ஒரு கணம் அங்கே தாமதிக்கவில்லை. மேலே குடுகுடுவென போய்விட்டாள்.

என்ன நடந்துவிட்டது? ஒரு நியாயத்தின் அடிப்படையிலான தன் விருப்பத்தைத்தானே அவன் சொன்னான். அதை அவனது அம்மா கேட்டிருக்காததுபோல புறமொதுக்கி விட்டிருக்கலாம். இவ்வளவு காலமும் இல்லாத அப்பாவை இனிமேலும் உனக்குத் தேவையில்லையென்பதாய் மெல்லக் கடிந்து விட்டிருக்கலாம். அவளுக்கு அந்த உரிமை இருக்கிறது. சிறீலங்காவில் அந்தக் குடும்பத்தினதும், பெரியதாய் சிறியதாய் வீட்டுக் குடும்பங்களினதும் பெரும் பாரத்தை அவள்தான் சுமந்தாள்.  விடுதலை உணர்வுகொண்ட சாத்வீகப் போராளிகளின் அக் குடும்ப வட்டத்தின் மேல், பொலிஸ் கெடுபிடிகள் வீழ்ந்தபோதெல்லாம், அவள்தான் சட்டரீதியான முறைகளில் அவற்றை எதிர்கொண்டு அவர்களை விடுவித்தாள். அதற்கான பொருளாதாரத் தேவைகளையும் அவளே நிறைவேற்றினாள். விடுதலை உணர்வு ஆயுதப் போராட்டமாக வெடித்தபோது பாதுகாப்புப் படைகளின் கவனம் தன்மீது விழுவதற்கான சகல முன்தேவைகளையும் பிறரை விடுவிப்பதன் மூலமாகவே செய்துவிட்டிருந்ததால், போராட்டத்தின் ஆரம்ப நாட்களிலேயே நாட்டைவிட்டோடுவது அவள் தேவையாகப் போய்விட்டது. அப்போது கைக்குழந்தையாகயிருந்த அவனையும் தன் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, தனக்கு கூட்டணிக் கட்சிகளோடோ போராட்ட இயக்கங்களோடோ தொடர்பில்லாததால் தான் ஓடவேண்டியதில்லையென பின்னின்ற கணவன் ராஜதுரையைக் கைப்பிடியில் கொண்டு, மேற்கு அய்ரோப்பாவிற்கு அரசியல் தஞ்சமெடுக்க முதலில் மன்னாரிலிருந்து தோணியேறி தமிழ்நாட்டிற்கும், பின் அங்கிருந்து கள்ளப் பாஸ்போர்ட்டில் பிரான்ஸிற்கும் சென்று சேர படாதபாடெல்லாம் பட்டவள் அவள்தான். அங்கிருந்து பணமனுப்பி அவசியமானவர்கள் நாடிகந்தோட உதவிசெய்ததும் அவளென்பதை மறுத்துவிட முடியுமா? பின் பிரான்ஸில் தம் அகதிநிலை விண்ணப்பம் அங்கீகரிக்கப்படாது போக, கனடா செல்ல நன்னிமித்தம் பார்த்தவளும் அவளே. அதற்கும் ராஜதுரை ஏதேதோ காரணங்களைச் சாட்டுக் கூற ஒதுங்க, ஒரு நண்பனோடு கனடா சேர்ந்து, ராஜதுரையின் சொந்தங்கள் உட்பட்ட இன்னும் பல உறவினர் வேறு வேறு நாடுகளில் தஞ்சமெடுக்கவும், ஊரிலுள்ள பல உறவுகள் பட்டினியிலிருந்து காப்பாற்றப்படவும் கைநீட்டியவள் அவள்தான். ராஜதுரை செய்ததெல்லாம் தவறாது தன் சொந்தங்களோடு தொலைபேசித் தொடர்புகொண்டு புதினங்கள் விசாரித்துக்கொண்டது மட்டும்தானே.

ஆண்களால் மட்டுமே சாத்தியமாகக்கூடிய இக் காரியங்களை ஒரு பெண்ணாய் அவள் நிறைவேற்றியிருக்க, கருவுக்குக் காரணமாய் மட்டும் இருந்துவிட்டு, கார்த்திகா தனியே கனடா போய்விட்டது குறித்து நண்பர்களிடையேயும் உறவினரிடையேயும் அபவாதங்களையும் இட்டுக்கட்டிய கதைகளையும் சுமார் பத்து வருஷங்களாக விதைத்துக்கொண்டிருந்த  ஒரு ஆளை, தன் பிள்ளை அப்பாவென சொந்தம் கொண்டாடுவதை, தான் இன்னொரு ஆணை விரும்பி அவருக்காய் ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொண்ட பின்னர்கூட, பார்த்துக்கொண்டு இருந்துவிட முடியுமா?

முடியாதுதான்.

அவனுக்கே அது தெரிந்தது. தானொரு சாதாரணமான  பிள்ளையாக வளர்ந்திருக்காதபோதும் அவன் அந்தக் குழப்பங்;களைப் புரிந்திருந்தான்.

ஐந்து ஆறு வயதுவரை அம்மா அப்பா முகம் காணாது வளர்ந்தவன் அவன். பின்னரும் அவன் அவர்களை போட்டோக்களில்தானே கண்டான்! அம்மா கனடா போன பிறகு ஸ்கைப்பில் துல்லியமாக அவள் முகத்தையும் அவளது வாயசைவு கண்ணசைவுகளையும் கண்டு அவன் அம்மாப் பரிச்சயம் கொண்டானென்பதுதானே உண்மை. அம்மா பேசி முடித்து, ‘போனை வைக்கட்டே ராசா? அடுத்த கிழமை இனி பேசுவம்’ என போனை வைத்தபோது அவனொரு பதைப்பு, பிரிவின் ஏக்கம் கொண்டதில்லையே. பாட்டியின் மறைவுகூட அவனை நீண்டநாள் பாதித்தது.

அப்போது உறவுகளுக்கூடாக அதுவரை அமுங்கியிருந்த அம்மாபற்றிய ஒரு கதை, அம்மா ஒரு வெள்ளைக்காரனை கலியாணம் செய்து ஒரு வெள்ளைப் பிள்ளையைப் பெற்றுக்கொண்டதாக, பரம்பி வந்தது. அதுவொன்றும் அவன் மனத்தில் பெரிய மாற்றமெதையும் செய்துவிடவில்லை. ஊரிலே பல பொம்பிளையளுக்கு கள்ளப் புருஷன்மாரும், பல ஆம்பிளையளுக்கு கள்ளப் பொண்டில்மாரும் இருந்ததை அவன் அறிந்திருந்தான். ஜேர்மனியிலே புருஷனிருக்கும் நவமிகூட ஊரிலே ஒரு புருஷன் வைத்திருந்தாள். சண்டையில் புருஷன் இறந்துபோன சந்திரா வேலைத்தலத்தில் ஒன்றும், வீட்டுக்கண்மையில் ஒன்றுமாய் இரண்டு புருஷன்கள் கொண்டிருந்தாள். ஒன்றுக்குமுதவாத புருஷனையுள்ள மாலாக்கா உதவக்கூடிய புருஷனை நிஜப் புருஷனின் சம்மதத்தோடேயே வைத்திருந்தாளே. இவையெல்லாம் அவ்வாறான நடத்தையை பெரிய  இழிவுகொண்டனவாக  அவனை எண்ணவைக்கவில்லை.

அம்மாவோடான தொலைபேசிப் பேச்சுக்கள் பெரிய விருப்பமாக இல்லாது ஆகிவந்தவேளையில், அம்மாவிடத்தில் பிறந்த தம்பி அவனில் கொஞ்சங்கொஞ்சமாக பெரிய மாற்றத்தை உருவாக்கினான். அவனையும் முதல் பார்வையில் கணநாதனுக்குப் பிடிக்காமல்தான் இருந்தது. அந்த வெள்ளை நிறமும், செம்பட்டை மயிரும்கூட அவனது தொக்கை உடம்பிலும், தொப்பை வயிற்றிலும், தொங்கு மூக்கிலும் விருப்பத்தை வரவைத்துவிடவில்லை. அவன் நடக்கும்போது அவனது நான்கு புறங்களிலுமிருந்து தசைகள் குலுங்கின. அவன் எப்போதும், குளிர் காலத்திலும்கூட வியர்த்துக்கொண்டிருந்தான். அம்மா துண்டொன்றினால் அவனை ஒற்றி ஒற்றிக்கொண்டேதான் கணநாதனுடன் பேசவிட்டாள். ஆனால் ஏதோவொன்று அவனில் வெறுப்பு ஊராமல் பார்த்துக்கொண்டது. பின்னர் அவன் பெரு விருப்புக்குரியவனாக ஆகிப்போனான். ‘தம்பியனை எடுக்கி வைச்சிருக்க ஆசையாயிருக்கம்மா’ என்று சொல்கிற அளவு நிலைமை உருவாகிவிட்டது. அவனது சிரிப்பு அதைச் செய்ததாய் கணநாதன் நம்பினான். இவை தோமாவையும் உறவின் நெருக்கமான வட்டத்துள் இணைத்தது.  அப்பாவென அழைக்க அவன் வெட்கப்பட்ட வேளையில், அங்கிள் என அழைக்கும்படி தோமாவே வழி கண்டு சொல்லினார். அங்கிள் என்பதையும், அவன் அப்பாபோலவே அழைத்தான்.

அதெல்லாம் மறந்துவிட்டு அம்மா சொல்கிறாள், நீ சிறீலங்காவுக்கே போயிடு, அங்கேயே கிடந்து சா, தப்பிப் பிழைச்சாலும் என்ர முகத்தில வந்து முழிச்சிடாதயென்று.

அவ்வாறு அவள் அவனைச் சொல்லியிருக்கலாமா?

அம்மா, தோமா வீட்டில் நிற்கையில் அவனோடோ தன் தகப்பன் வல்லிபுரத்தோடோ பேசும்போது, தமிழில் சொல்வதை ஆங்கிலத்திலும் சுருக்கமாய் ஆங்கிலப் பேச்சின் பழக்க தோஷத்தைக் காட்டுவதைப்போல உரைப்பாள். தோமாவும் அப்படித்தான். அவர்களோடு பேசும்பொழுதில் முக்கியமான வார்த்தைகளின் இரண்டொன்றையாவது தமிழில் சொல்ல முயற்சிப்பார். அதனால் அம்மா அவனை ஏசிய விஷயத்தின் சாரம் தோமாவுக்கு புரியாமல் இருந்திராது. இருந்தும் ஒரு வார்த்தை சொல்லாமல் மௌனமாய் இருந்துவிட்டு அவள் மேலே சென்ற சிறிதுநேரத்தில் தானுமெழுந்து மேலே போய்விட்டாரே. தாத்தாவுக்கும் சொல்ல எதுவுமிருக்கவில்லைப்போலும். அவளுக்கெதிராக அவரால் ஒரு வார்த்தை சொல்லிவிட முடியாதென்றாலும், தன் ஆதரவைக் காட்ட கண்களிலாவது ஒரு பரிவைக் காட்டியிருக்கலாம். மௌனமாய்த்தான், வெற்றுப் பார்வையோடுதான் அவரும் எழும்பிப் போனார்.

தம்பி மட்டும்தான் ஒரு கழிவிரக்கம் சேர்ந்த பார்வையை அவன்மேல் படரவிட்டுக்கொண்டு இருந்தான். அவனுக்குத்தான் என்ன புரிந்திருக்கப் போகிறது?

பின்னர் கணநாதனுக்குத் தோன்றியது, அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது என்பதாக.

ஆம், அவன் தன் தாயின் மொழியான தமிழ்மொழிச் சூழலில் எட்டாண்டுகளாக வாழ்ந்துகொண்டிருப்பவன். அம்மாவின் அறிந்தவர் தெரிந்தவர் வீட்டுப் பிறந்தநாள் மற்றும் கல்யாணம், பூப்பு நீராட்டு கொண்டாட்டங்களுக்கு சென்று தமிழ் மொழியினதும் கலாச்சாரத்தினதும் அறிமுகம் கொண்டிருப்பவன். சிறீலங்காவில் இருக்கையில் ஸ்கைப்பில் கதைக்கும்போது, ‘என்ன? சுகமாய் இருக்கிறியா? நல்லாய் இருக்கிறியா?’ என்றால் புரிந்து வெட்கப்பட்டுச் சிரித்துக்கொண்டு தலையாட்டுகிறவன். அப்போதைய அவனது சிரிப்பு பாதி துக்கம் தோய்ந்ததாய்த் தோன்றுவதும்  அண்ணன் அம்மாவிடம் திட்டுவாங்கிவிட்டானே என்பதனாலாய்த்தான் இருக்க முடியும்.

தாத்தா தம்பியைக் கூட்டிக்கொண்டு மேலேற, கணநாதன் தனிமையில் விடப்பட்டான். கீழே சமையலறையும் பெரிய கூடமும் இருக்கும் அந்த வீட்டின் மாடியில்தான் அவர்களுக்கான படுக்கையறைகள் இருந்தன. கார்த்திகாவுக்கும் தோமாவுக்குமானது பெரிய படுக்கையறை. தம்பிக்கும் அவனுக்குமாக ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. பக்கத்துச் சின்ன அறையிலே தாத்தா படுத்தார். பத்து மணிக்கு அவனும் ரீவியை நிறுத்திவிட்டு படுத்துவிடவேண்டுமென்பது அம்மாவின் கண்டிப்பு. மிஷேல் ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும்.

அம்மா மேலே சென்றுவிட்டாலும் தூங்கியிருக்க மாட்டாள். மறுநாள் வேலை நாளாகயிருந்தாலும், எல்லாரும் படுத்த பின் ஒருமுறை கீழே வந்து சமையலறைக் காரியங்களைக் கவனித்தும், பிள்ளைகளுக்கான மதியச் சாப்பாட்டை தயார்செய்து எடுத்து வைத்துவிட்டும்தான் மேலே செல்வாள்.

அதற்கு இன்னும் நேரமிருந்தது.

கனடாவின் நிரந்தர வதிவிட விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதான அறிவித்தல் வந்ததிலிருந்து, விமானமேற கொழும்புக்கு புறப்படுவதற்கு முன்பான மூன்று நான்கு நாட்கள்வரை மனத்தில் விசிறியடித்துக்கொண்டு இருந்த களிபேருவகை திடீரெனக் கலைந்து இனம்புரியாத சோகமொன்று தன்னில் அலைவீசத் துவங்கியிருந்ததை அப்போது கணநாதன் எண்ணினான். நாகர்கோயிலைவிட்டு போகின்றதான எண்ணமே அவனை வதை செய்வதாக ஆகிற்று. அந்த நிலைமை கடைசியில் குருக்களின் மந்திரப் பேச்சில்தான் அவனுக்கு மாறிப் போனது.

அம்மாவின் காட்டமான வார்த்தைகளில் உள்ளோடியிருந்த கடுமையுணர்ந்து வதைபடும் இக் கணத்தில் அவனுக்குத் தோன்றுகிறது, தான் அவ்வாறு அவர் பேச்சில் அன்று மசிந்திருக்கக் கூடாதென்று.

தோமா நல்லவராகத்தான் தென்படுகிறார். எனினும் மனைவிக்கு நல்லவராக இருக்கவேண்டும் என்பதைமட்டுமே பிரதானமாய்க் கொண்டிருக்கிறார். மாறான அபிப்பிராயமானாலும் மனைவி பக்கமாய் நின்று அவர் மௌனம் காத்துவிடுகிறார். ஆரம்ப கால குடியேற்றவாசியாக பிரான்ஸிலிருந்து அங்கே தன் குடும்பம் வந்ததான பெருமிதம் அவரிடத்தில் இருந்தது. அவரே சிலவேளைகளில் அதைச் சொல்லியிருக்கிறார். ஆனாலும் இனவாதியென்று அவரைச் சொல்லியிட முடியாது. அவர் ஒரு குடும்பவாதி. நீண்ட வார விடுமுறைக் காலங்களில் மிஷேலை அழைத்துக்கொண்டு, அருமையாக அம்மாவையும், மொன்றியலிலுள்ள தன் பெற்றார் வீடு போகிற அவர், தாத்தாவையும் தன்னையும் என்றுமே கூட்டிச் சென்றதில்லை என்பது அவ்வப்போது அவனை நெருடச் செய்கிறதுதான். அது கூடிவாழக் கஷ்டமானவராக அவரைச் செய்வதில்லையெனினும், அந்த நிலை இன்னும் சற்று இறுக்கமானால் அங்கே தன் கதி சிரமமாகவும் கூடும்தானேயென கணநாதனின் சிந்தனையில் சுழன்றதுண்டு.  

குருக்களின் அறிவுரைக்கு இணங்குவதன் முன்பாக அதுபற்றி சிறிது ஆழமாய் தான் யோசித்திருக்கலாம் என அப்போது எண்ணினான்.

 

000

 

கட்டுக்குள பிள்ளையார் கோயில் பிரசித்தம் வாய்ந்தது. நாகர்கோயில் கடற்கரையின் உயர்ந்த மணற் திட்டில் கிழக்கு பார்த்து அமைந்திருந்த சிறிய கோயில்.

கோயிற் கருவறையின் திணிந்த கருமையிலிருந்து இழை பிரிந்த இருட்டு வானை அளாவி எழுந்துகொண்டு இருந்தது. உள்ளே காற்றலைக்காத ஒற்றைச் சுடர் இன்னும் கூர்த்த வடிவம் கொண்டது.

குளத்தங்கரை மருத மரத்தில் வந்தமர்ந்த பறவைகள் ஆசுவாசமாய்ச் சிறகடித்து உடல் சிலுப்பின. எழுந்த அதிர்வில் உதிர்ந்த மருதங்காய்களால் கீழே நீர்ப் பரப்பில் பொலபொலவென ஓசையும் அலைகளின் விரிப்பும்.

ரகுநாதக் குருக்கள் கோயில் மண்டபத்தில் நின்றிருந்த தன் ஸ்கூட்டியை எடுத்து வெளியில் நிற்பாட்டினார். தான் வீடு செல்கிற நேரம் ஆகிக்கொண்டிருந்தும் அவர் தாமதிக்கிறதுக்கான காரியங்களையே யோசித்து யோசித்துச் செய்துகொண்டு இருந்தார். யுத்தத்தில் சிதறிய ஊர் இன்னும் முன்னர்போல் அமையவில்லை. பகலில் கொழுத்தும் வெய்யிலுக்கு சுருண்டுகொள்ளும் மக்கள் மாலையில்தான் சிறிது காலாற வெளியில் நடந்தார்கள். அதுவும் இனி அடங்கிவிடும். குருக்கள் இன்னும் யாருக்காகத் தாமதிக்கிறார்? கணநாதனுக்காகவா? இருக்கும். அவன் அந்தக் கோயிலின் பிள்ளைபோல. எங்கே அலைந்துகொண்டு இருந்தாலும் இருள் விழத் துவங்க கோயிலடி வந்துவிடுவான். ஆனால் கடந்த சில தினங்களாய் அந்த வழக்கம் குழம்பியிருந்தது.

குருக்கள் கிளம்பினார்.

தூரத்தில் எல்லாம் கண்டுகொண்டு படலையோரம் உருட்டி விட்டிருந்த பழைய தென்னங் கொட்டில்  உட்கார்ந்திருந்தான் கணநாதன்.

அவன் சோர்ந்துபோயிருந்தான். அவனில் உறைந்திருந்த உற்சாகம், ஏண்டாப்பு, இடக்கர்ப் பேச்சு, குதூகலம், குதிமன் குத்துகள் எல்லாம் அடங்கிப்போயிருந்தன. முகத்தில் துக்கத்தின், குழப்பத்தின் சாயம்.

அவன் அவ்வாறிருக்கிற பிள்ளையில்லை. திடீரென்றுதான் அப்படி ஆகியிருக்கிறது.

காலையில் எழுந்து கிணற்றடி போய் முகம் கழுவிக்கொண்டு கோயிலுக்குப் போவான். சில காரியங்களை குருக்களோடு சேரந்துகொண்டும், அவர் விதிக்கும் சில காரியங்களை தனியாகவும் பார்ப்பான். மதியப் பூஜை முடிய குருக்கள் பிரசாதம் கொடுப்பார். தாராளமாகவே. மறக்காமல், தன்னைக் காத்து வெளியில் நிற்கும் பெட்டை நாய்க்கும் குட்டிகளுக்கும் ஒரு பங்கைக் கொடுத்து சாப்பிடுவான். அடுத்த விநாடி அவன் அங்கிருந்து காணாமலாவான். நாகர்கோயில் கடற்கரை, வயல்வெளியெங்கும் அலைந்து திரிந்துவிட்டு சூரியன் கீழிறங்க கோயிலடி வருவான். பெரும்பாலும் அது மாலைப் பூஜை வேளையாக இருக்கும். குருக்கள் வீடு கிளம்ப தானும் வீடு செல்வான்.  

பொசுக்கும் வெய்யிலில் அலைந்து உடம்புக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதேயென்று தாத்தாவுக்கு அக்கறைதான். ஒன்றும் சொல்லிக்கொள்வதுதான் இல்லை. அந்தப் பகுதியின் வெய்யில் மழை பனி காற்று அறியாமல் வளர்ந்த பிள்ளையல்ல அவன். மேலும் ஒன்று சொன்னால் ஒன்பது சொல்கிற பிள்ளையாய் வளர்ந்திருந்தான். வெளியே அலையாதே என்றால், அவன், நீ வெற்றிலை சப்பாதே என்பான். அவருக்கு அது தேவையா? குனிந்து எந்தநேரமும் வெற்றிலை எச்சியைத் துப்பித் துப்பியே உடம்பு அவருக்கு பெரும்பாலும் முன் வளைந்து போய்விட்டது. எப்படியும் கனடா சென்ற பின்னால் அந்தப் பழக்கத்தை நிறுத்தித்தானாகவேண்டும். இப்போது அவரால் முடியாது.

ஆனால் அவனது நடைமுறைகளில் மாற்றம் விழுந்துள்ள நிலைமையிலும் அவரால் அவ்வாறு எண்ணி ஒதுங்கி இருந்துவிட முடியுமா? அவருக்கு அவன் எதையும் திறப்பதில்லைப்போல், குருக்களுக்கோ எதையும் மூடுவதில்லை. சின்ன வயதிலிருந்தே உறவென்று சொல்லுமளவு அவரோடு அவனுக்கு அந்நியோன்யமுண்டு. அவரைத்தான் சாவகாசமாய்ச் சந்தித்து விஷயம் அறியவேண்டுமெனக் கருதியிருந்தார். வாய்ப்புத்தான் கிடைக்கவில்லை.

பயணத்தில் கொண்டுசெல்வதற்கு தேவையான இரண்டொரு சாமன்கள் வாங்க வெளியே சென்றிருந்தவர் இன்னும் வீடு திரும்பவில்லை.  வருகிற நேரம்தான்.

கணநாதன் எழுந்து உள்ளே போனான். சாப்பிட்டான். பாயைக் கொண்டுவந்து திண்ணையில் போட்டுக்கொண்டு படுத்தான்.

சிறிதுநேரத்தில் வெளிப் படலை அரைந்து கேட்டது. தாத்தாதான். உள்ளே வந்தவர் பேரனைப் பார்த்தபடி சில கணங்கள் நின்றுவிட்டு கிணற்றடி போய் மேல் கழுவி வந்தார். திருநீற்றுக் குட்டானிலிருந்து நீறெடுத்து ‘பிள்ளையாரே!’ என உச்சரித்து நெற்றியில் தீற்றினார்.

குசினியில் சென்று பார்த்துவிட்டு வந்து கணநாதனை எழுப்பினார்: ‘தம்பி… நாதன்… நாதன்… டேய், தம்பி…’

எல்லாம் கேட்டுக்கொண்டு படுத்திருந்தவன் நிதானமாக அசைவு காட்டினான். ‘ம்…’

‘சாப்பிட்டியே?’

‘ம்!’

‘என்ன ம்? சாப்பாடு அப்பிடியே கிடக்கு. காகம் கொத்தினமாதிரி நாலு கொத்து கொத்தியிருப்பாய்போல.’

‘எனக்குப் பசிக்கேல்ல, தாத்தா.’

‘ஏன், என்ன நடந்தது உனக்கு? கொஞ்ச நாளாய் உப்பிடித்தான் இருக்கிறாய். ஏன் உப்பிடி இருக்கிறாய்? சொல்லு, ராசா…’

சற்றுநேரம் அவன் காத்த மௌனத்தை அவன் சொற்கள் உடைத்தன. ‘கொஞ்ச நாளாய் எனக்கு மனம் சரியில்லாமல் கிடக்கு, தாத்தா…’

‘அதுக்கும் எதாவது நடந்திருக்கவேணுமே!’

‘ஒண்டும் நடக்கேல்ல. எனக்கு இஞ்சத்தய விட்டுப்போக மனம்தான் வருகுதில்லை…’

‘இதென்ன புதினாணயமான கதையாயிருக்கு. நாளையிண்டைக்கு காலமை கொழும்புக்கு வான் எடுக்கவேணுமெல்லோ?’

‘எனக்கு என்ன சொல்லுறதெண்டு தெரியேல்ல, தாத்தா.’

‘இக்கணம் கொம்மா அறிஞ்சா துடிச்சுப்போவாளேயடா. தம்பியனைப் பாக்கவேணும்… தம்பியனைப் பாக்கவேணுமெண்டு அவ்வளவு ஆசையோட இருந்தியே, ராசா.’

‘முந்தி இருந்திதுதான். இப்ப யோசிக்க, இல்லைப்போல கிடக்கு. எனக்கு ஒண்டுமாய் விளங்கேல்ல…’

‘இவ்வளவு நாளும் விசா வரேல்லையெண்டு அழுதுகொண்டு திரிஞ்சாய்… இப்ப விசா வந்தாப் பிறகு, போக விருப்பமில்லாமக் கிடக்கெண்டு நிக்கிறாய்…’

கணநாதன் சொல்ல எதுவுமிருக்கவில்லை. போகவும் விருப்பம், போகாதிருக்கவும் விருப்பமென்று எதைச் சொல்லுவான்? அவனுக்கு எது விருப்பமென்று அவனுக்கே விளங்கவில்லையே!

அவனில் விம்மல் வெடித்து வந்தது.

வல்லிபுரம் பதைத்துப்போனார். அவசரமாய் அவனருகில் அமர்ந்தார். அவன் தலையை ஆதரவாய்த் தடவினார். ‘அழாத அப்பன்… என்ன செய்யிறதெண்டு எனக்கும் தெரியேல்ல. நீ விளப்பாமாய்ச் சொன்னாத்தானே என்ன செய்யிறதெண்டு யோசிக்கிறதுக்கும். சரி… சரி, நீ இப்ப படுத்து நித்திரையைக் கொள்ளு, விடிஞ்செழும்பி எல்லாத்தையும் ஆறுதலாய் யோசிப்பம், என்ன!’

மெதுமெதுவாய் கணநாதனின் அழுகை அடங்கிவந்தது.

வல்லிபுரம் எழுந்தார். அவன் போக்கில் தென்பட்ட மாறுதல்களை அவதானித்தபோதே குருக்களோடு தான் அவைபற்றிப் பேசியிருக்காத தன் பிழையை வருத்தத்தோடு உணர்ந்தார்.

காலையில் அவருக்கு வெளியே செல்லவிருந்தது. ஆயினும் குருக்களை சந்திப்பதை முதற் காரியமாக மனத்தில் பதித்துக்கொண்டார்.

காலையில் அவர் குருக்களைச் சந்திக்க கிளம்பியபோது கோயில் மண்டபத்துள் குருக்களும் கணநாதனும் பேசிக்கொண்டு நிற்பதைக் கண்டார்.

அவர் கோயிலைநோக்கி வருவதைக் கண்டுபோலும் கணநாதன் குருக்களுடனான உரையாடலை அவசரமாக முடித்துக்கொண்டு கோயில் புறவீதி சென்றோ, குளக்கரை சென்றோ காணாமலானான்.

ஏறக்குறைய பத்து வருஷங்களுக்கு முன்பும் இதேபோலொரு முக்கியமான தருணம் கார்த்திகாவும் குருக்களும் தானுமென்ற முப்பரிமாணத்தில் சம்பவித்திருந்ததை வல்லிபுரம் ஞாபகமானார். அன்று, வலுவான அரசியல் காரணங்களால் தான் போராட்ட இயக்கச் செயற்பாட்டாளராக படையினரால் அடையாளம் காணப்படும் அபாயத்திலிருந்து தப்ப நாடுவிட்டுக் கிளம்பும் தன் திட்டத்தை கார்த்திகா கண்ணீரோடு குருக்களிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள்.

‘உனக்கு அது ஒண்டுதான் வழியெண்டு நிச்சயமாய் நீ நினைக்கிறதாயிருந்தால், அந்தப்படியே செய். ஆனா கைப்பிள்ளையாயிருக்கிற உன்ர மகனை கொண்டு போகாதை.’

‘குருக்களையா…!’

‘இப்ப நீ எடுக்க இருக்கிற இந்த வழியில ஆமிக்குப் போலதான், போராட்ட இயக்கங்களுக்கும் தெரியாமல் போகவேண்டியிருக்கும். அப்பிடிப்பட்ட சூழ்நிலையில நீ பிள்ளையை இஞ்ச விட்டிட்டுப் போறதுதான் வசதி.’

‘அவனுக்கு இன்னும் சரியாய் ஒரு வயசுகூட ஆகேல்ல.’

‘அதாலதான் இப்பிடிச் சொல்லுறன். ஏன் யோசிக்கிறாய்? அம்மா அப்பாவோடதான விட்டிட்டுப் போப்போறாய்…’

‘நாங்கள் பாத்துக்கொள்ளுவம், குருக்களையா’ என்றார் அருகே நின்றிருந்த வல்லிபுரம்.

‘நீர் நினைக்கிற மாதிரி விஷயமொண்டும் சின்ன விஷயமில்லை, வல்லிபுரம். தாய் தேப்பனில்லாத இடத்தில ஒரு வயசுக்கும் குறைவான ஒரு குழந்தையை வளத்தெடுக்க படாதபாடு படவேண்டியிருக்கும். கார்த்திகா சுணங்கிறது மெத்தச் சரிதான். ஆனா அம்மா அய்யா மட்டுமில்லை, பக்கத்தில நாங்களுமிருக்கிறம் எண்டதை நீ யோசிக்கலாம். ஒரு ஆத்திரம் அந்தரத்துக்கு கைகுடுக்கமாட்டமா, என்ன?’ என்றார் குருக்கள்.

மேலேதான் கார்த்திகாவுக்கு மனம் சம்மதப்பட்டது.

இன்றைக்கு அவளது மகன் நாடு இகக்க, சட்டரீதியிலான முறையிலென்றாலும், தயங்கிக்கொண்டு நிற்கிறான். அவனையும் குருக்கள்தான் அவன் ஏற்குமாறான காரணங்களைச் சொல்லி சம்மதிக்க வைக்கும் காரியத்தைச் செய்யவேண்டி நேர்ந்திருக்கிறதென மெய் சிலிர்த்தபடி எண்ணிக்கொண்டார்.

‘இண்டைக்கு பூசைக்கு ஆக்கள் குறையப்போல... ஆறுதலாய் நிக்கிறியள்…’ என்றபடி மண்டபத்துள் பிரவேசித்தார் வல்லிபுரம்.

‘எங்க…? சனம் இன்னமும் போய்க்கொண்டே இருக்கே தவிர திரும்பி வாற பாடாய்க் காணேல்லயே!’ என்றார் குருக்கள்.

அவருக்கு ஏற்கனவே அனுமானமிருந்தது, வல்லிபுரம் அந்தளவு காலம்புறமாய் ஏன் ஒரு துக்கமான முகமூட்டத்தோடு வந்துகொண்டு இருக்கிறாரென்று.

குருக்கள் அதற்கு வெகு நிதானமாய்ச் சொன்னார்: ‘படலையைத் துறந்துகொண்டு  நீர் வெளிய வாறதுக்கு முன்னமே, நீர் இண்டைக்கோ நாளைக்கோ என்னிட்ட வருவிரெண்டு எதிர்பார்த்தன். அதுக்காண்டித்தான் காலமை நாதன் வந்தோடனயும் நான் அவர் நாலைஞ்சு நாளாய் ஏன் ஒருமாதிரித் திரியிறாரெண்ட விஷயத்தைக் கேட்டன்.’

‘அதுக்கு என்ன சொன்னார்?’ என்ற வல்லிபுரத்தின் கேள்விக்கு ஒரு சின்னச் சிரிப்பை சிந்திவிட்டு, ஒரு மௌனத்தைப் படர விட்டபடி வல்லிபுரத்தின் கேள்விக்கான பதிலைத் தேடினார் குருக்கள்.

வல்லிபுரத்தை அது குழப்பத்தில் ஆழ்த்தியது. 

குருக்கள் ஒரு பதிலை அடைந்திருந்தாரே தவிர, அதன் விளக்கத்தை அடைந்திருக்கவில்லை. கணநாதனே காரணத்தை முற்றும் விளங்கியிருக்கவில்லையே. குடும்பரீதியாக தனிமைப்பட்டிருந்த ஒரு பிள்ளையின் மனநிலையை சமூகரீதியாகப் புரிகிறதைவிடவும், கணநாதனின் பேச்சிலிருந்த விஷயங்களை குருக்களே புரிந்துகொள்ளச் சிரமப்பட்டார். ஒருவகையில் ஆன்மீகம் சார்ந்ததாக அந்த விஷயம் இருந்தது. ஆன்மீகம் சார்ந்ததாக அதைப் புரிகிறவரை இருந்த சிரமத்தைவிட, ஆன்மீகமாய்ப் புரிந்த பின்னால் கூடுதலான சிரமத்தை உணர்ந்தார் குருக்கள். ஒருவேளை, கண்டவர் விண்டதில்லை என்பதுபோல், தன்னால் புரிந்துகொள்ளப்பட்டதை தெளிவாயுரைக்கும் திறன் கணநாதனிடத்தில் இல்லாதிருக்கக்கூடுமோ? அல்லது அந்த விஷயமே அப்படியானதுதானா?

‘என்ன குருக்களையா, பேசாமல் நிக்கிறியள்?’ என அவரது கவனத்தைத் திருப்பவேண்டி ஏற்பட்டது வல்லிபுரத்துக்கு.

தன் நினைவுக்கு திரும்பினார் குருக்கள். மனத்தை நிதானமாகத் திறந்தார். அது தனது கேள்விக்கான பதிலாக இருக்கவில்லையெனினும் வல்லிபுரம் பொறுமையாய் பதிலைச் செவிமடுத்தார்.

‘பள்ளிக்குடத்திலயிருந்து சேர்டிபிகற் எடுக்கவேணுமெண்டு நீர் சொன்ன நேரத்தில, பிறின்ஸிபல் பிரச்சினையில்லாமல் தருவரெண்டு நான் நம்பியிருக்கேல்லை. பதிவிருந்தாத்தான சேர்டிபிகற் எடுக்கிறதுக்கு? நாதன், ரண்டு வரிசத்தில எத்தினை நாள் பள்ளிக்குடம் போயிருப்பர். வருசத்துக்கு பத்து நாள் இருக்குமா?’

‘அதைவிடக் குறைவாத்தான் இருக்கும்.’

‘ஆனா… பள்ளிக்குடம் போன பிள்ளையளைவிட நாதன் படிப்பில சரி, விளையாட்டில சரி கெட்டிக்காறனாய்த்தான் இருந்திருக்கிறார்.’

‘அதில என்னையா சந்தேகம்?’

‘இதெல்லாத்தயும்விட, சமய விஷயங்களில அவருக்கு ஈடுபாடும் அதிகமிருந்திருக்கு. வயதுக்குக் கூடின விஷய ஞானத்தோடயும் இருக்கிறார்.’

‘ஊரில இதைப்பற்றி சனம் கதைக்கேக்க எனக்கு எவ்வளவு பெருமையாயிருந்திது. எங்கட பழங்கால பெருமையளயெல்லாம் மீட்டுத் தருவாரெண்டு சத்தியமாய் நம்பியிருந்தன்.’

‘அதைச் செய்யக்கூடிய கெட்டித்தனம் அவரிட்ட இருந்திதுதான். ஆனா... எங்கயோ ஒரு சின்னப் பிழை… மனத்தில ஒரு சித்தன் போக்கு… இல்லாட்டி ஒரு ஞானப் போக்கு இருந்து ஊர் திரிய வைச்சிட்டுது.’

‘கொஞ்சம் விளக்கமாய்ச் சொல்லுங்கோ, குருக்களையா.’ வல்லிபுரம் கெஞ்சினார்.

‘நான் சொல்லுறது நூறு வீதம் சரியோவெண்டு எனக்கே சந்தேகம்தான். ஆனா… நான் நம்புற அளவில அது இதுதான்.’ குருக்கள் நிறுத்திவிட்டு நிமிர்ந்து வல்லிபுரத்தின் கண்களை தீட்சண்யமாய்ப் பார்த்தார். பின் நாதன் பக்கத்தில் எங்ஙனயாவது சுழன்றுகொண்டு நிற்கிறானா என நோட்டமிட்டார். பின் இன்னும் தணிந்த குரலில் சொன்னார்:

‘பெரிசாய் மனமுடைஞ்சமாதிரி ரண்டு மூண்டு நாளாய் அவர் திரியிறத நானும் கவனிச்சன். நேற்று பின்னேரம் கோயிலடிக்கும் வரேல்ல. காலமை வர, கட்டாயம் கேக்கிறதெண்டு நினைச்சுக்கொண்டுதான் வீட்டயும் போனன். ஆள் வந்தவுடன நான் கேட்டதும் அதைத்தான்.’

‘என்ன சொன்னார்?’

‘மனசில படுகிற விஷயத்தை வடிவாய் வெளியில சொல்லத் தெரியேல்லைப்போல. கனநேரமாய் தடுமாறிக்கொண்டு நிண்டார். பேந்து சொல்லுறனையா எண்டார். பிறகு வேண்டாம், இப்பவே சொல்லுமெண்டு நான் நிண்டுகொண்டான். அப்ப சொன்னார், தனக்கு இஞ்சயிருந்து போக மனமில்லாமக் கிடக்கெண்டு.’

‘ராத்திரி எனக்கும் அப்பிடித்தான் சொன்னார். எனக்கு விளங்கேல்லை, குருக்களையா. இஞ்ச பிடிக்கிறதுக்கெண்டு என்ன கிடக்கு? வெறு வீடு… பிய்ஞ்ச வேலி… சன ஊசாட்டம் குறைஞ்ச ஊர்… வேற என்ன கோதாரி இஞ்ச கிடக்கு விட்டிட்டுப் போறதுக்கு மனமில்லாமலிருக்க?’

‘இவ்வளவத்தையும் நானும் கேட்டன். ஆடு மாடு வீடு எல்லாத்தையும் விட்டிட்டு இன்னமும்தான சனம் இந்தியாவுக்கு ஓடிக்கொண்டிருக்கெண்டன்… அதுக்கு…’

‘அதுக்கு என்னவாம்…?’ வல்லிபுரத்தின் பொறுமையின்மை மெல்ல வெளிப்பட்டது.

குருக்கள் இன்னும் நிதானப்பட்டுச் சொன்னார்: ‘எல்லாரும் ஓடுகினம், சரி… ஆனா நீங்கள் இன்னும் இஞ்சதான இருக்கிறியள் எண்டார்… இஞ்ச எங்கட குளமிருக்கு… எங்கட கோயிலிருக்கு… நாங்கள் கும்பிடுற பிள்ளையார் இஞ்ச இருக்கிறார்… வேற என்ன வேணும், குருக்களையாவெண்டு என்னை நிமிந்து பாத்து கேக்கிறார்.’

‘அதுக்கு நீங்கள் என்ன பதிலைச் சொன்னியள்?’

‘நான் என்ன பதிலைச் சொல்லுவன், வல்லிபுரம்? எனக்கெண்டா அஞ்சுங்கெட்டு அறிவுங்கெட்டு வந்திட்டுது…’

‘இதுகளை விட்டிட்டுப் போகேலாதெண்டு குண்டு விழுகிற நேரத்திலயும் ஷெல் அடிக்கிற நேரத்திலயும் சொல்லுவாராமோ?’

‘நான் என்னத்தைக் கண்டன்? ஆனா அந்தப் பிள்ளை சொன்னதில ஒரு அர்த்தம் இருக்குது, வல்லிபுரம்.’

‘நீங்களும், காணாத அர்த்தத்தை அதில கண்டிட்டியள்போல?’

‘நீர் ஏன் இப்ப ஆத்திரப்படுறிர்?’

‘பின்னயென்ன குருக்களையா? குளத்தை விட்டிட்டுப் போகமாட்டன்… குருக்களை விட்டிட்டுப் போகமாட்டன்… பிள்ளையாரை விட்டிட்டுப் போகமாட்டனெண்டு நிண்டா என்ன சொல்லுறது?’

‘உங்கட பரம்பரைதான் தோட்டம் கொத்துறதோட நிண்டிட்டுது. தென்மராச்சிப் பக்கம்தான நீங்கள்? அது குழைக்காடு. ஆனா உம்மட மனிசி வடமராச்சி. அவவின்ர பரம்பரையில படிச்ச ஆக்கள் கனபேர் இருந்திருக்கினம். அவையெல்லாம் கோயில் புராணம் பாடி வைச்ச ஆக்கள். சமயமும் தமிழும் நல்லாய் அவைக்குத் தெரிஞ்சிருக்கு. வல்லிபுரம், நாதன் உம்மட பரவணியில்லை, உம்மட மனிசியின்ர பரவணி. அவர் அந்தப் பரம்பரையிலயிருந்து வந்த ஒரு கிழட்டு ஆத்மாவாய்த்தான் இருக்குமெண்டு இப்ப யோசிக்கத் தெரியுது. அதாலதான் அவர் அப்பிடிச் சொல்லியிருக்கிறார். கோயிலை விட்டிட்டுப் போகமாட்டன், பிள்ளையாரை விட்டிட்டுப் போகமாட்டன் எண்டதெல்லாம் என்ன சின்ன விஷயமெண்டு நினைச்சிரோ?’

அவரது கண்கள் கலங்கின. உணர்ச்சி மேலீட்டில் உதடுகள் துடித்தன. கண்ட வல்லிபுரத்துக்கு ஆச்சரியமாக இருந்தது. பேரன் சொன்னதைக் கேட்டு அவருக்குச் சிரிப்புத்தான் வந்தது. குருக்களோ மெய்சிலிர்த்து, வாய் குழறி, கண்ணீர் சிந்தி நிற்கிறார். பேரன் உண்மையில் அர்த்தமுள்ள எதையாவதுதான் சொல்லியிருக்கிறானா? தன் உறவுக்காரர் பெண் கேட்டு போனவிடத்திலே மாப்பிளைக்கு தொழில் என்ன, சொந்த நிலம் வீடுபற்றியெல்லாம் பெண் வீட்டார் விசாரிக்காததையும், அவருக்கு எழுதத் தெரியுமா, படிக்கத் தெரியுமா என்று கேட்டிருந்ததையும் அந்த நேரத்திலும் ஒருமுறை ஞாபகமானார் அவர். குருக்கள் சொன்னதுபோல் தன் மனைவியின் பரம்பரையிலிருந்து வந்த ஒரு பழைய சீவனா நாதன்?

இருக்கட்டும், ஆனால் அது அவரது குழப்பத்துக்கு தீர்வாகிவிடாதே. ‘இப்ப என்ன செய்யிறது, குருக்களையா? வாற திங்கக்கிழமை காலமை கொழும்புக்கு வேனெடுக்கவேணுமே!’

‘பதட்டப்டாதயும். ஒரு பிரச்சினையும் வராது. நாதன் உம்மோட திங்கக்கிழமை காலமை கொழும்புக்கு வருவார்…’

‘சுவறோ?’ வல்லிபுரம் அழுதுவிடுவார்போல இருந்தது. குருக்கள் கண்டுகொண்டிருக்கவே கண்ணீர் மணிகள் பொல… பொல…வென உதிர்ந்தன.

‘ஓய்… இதென்ன காணும்? சீ… சீ… சின்னப்பிள்ளைமாதிரி’ என வந்த தன் அழுகையை குருக்கள் சிரிப்பாய் மாற்றினார்.

கண்களைத் துடைத்துக்கொண்டு வல்லிபுரமும் இலேசாய்ச் சிரித்தார்.

‘இக்கணம்… அப்பிடியெதாச்சும் நடந்துதெண்டா… கார்த்திகா கேக்கிற கேள்வியளுக்கு என்னால தலை நிமிந்து நிண்டு பதில் சொல்லேலா…’

‘மெய்தான். எண்டாலும் அப்பிடியொண்டு நாதன் விஷயத்தில நடக்கப்போறதில்லை. நீர் மனந் தளராதயும். அவர் உம்மோட கூடிக்கொண்டு நாளையிண்டைக்கு கொழும்புக்கு வாறார்.’

‘அவரே சொன்னாரோ?’

‘அவரே சொன்னார்.’

‘அந்தளவு எனக்குப்போதும், குருக்களையா. பெரிய உபகாரம். உங்கட உதவியை காலத்துக்கும் மறக்கமாட்டன். அதுசரி… இவ்வளவு இறுக்கமாயிருந்த பிள்ளையை எப்பிடி குருக்களையா இளகப் பண்ணினியள்? அதை எனக்கொருக்கா வடிவாச் சொல்லவேணும்.’

‘சொல்லுறன். ஆளொண்டு வந்து நிக்குது. அனுப்பியிட்டு வந்து சொல்லுறன்.’

தீபாராதனை காட்டி பக்தருக்கு பிரசாதம் கொடுத்து வந்த குருக்கள் புறவீதியையும் குளக்கரையையும் நாதனின் சிலமன் அறிய ஒரு நோட்டமிட்டு வந்தார். வல்லிபுரம் அங்கிருந்து கிளம்பும்வரை அங்ஙன எங்கயாவதுதான் சுழன்றுகொண்டு திரிவான் என எண்ணியபடி வல்லிபுரத்திடம் வந்தார். சகஜபாவத்துடன் மெல்லென்ற தீர்த்த ஒழுக்காக சொல்லத் தொடங்கினார். ‘ஒரு முரட்டுப் பிடிவாதம் வாற வயசு இது. நாடும் யுத்தத்தில சீரழிஞ்சுகொண்டிருக்கு. இந்த வயசில அவர் நான் இயக்கத்துக்குப் போறனெண்டு சொல்லியிட்டுப் போகாமல் இருக்கிறதுக்கே பெரிய புண்ணியம் நீர் செய்திருக்கவேணும், வல்லிபுரம். அது போகட்டும். நாதன்ர முடிவைக் கேட்டு நானும்தான் விறைச்சுப்போய் நிண்டன். அப்பேக்கதான் திடீரெண்டு ஒரு யோசனை வந்திது. அறிவால இல்லை, இந்த மனம் நுட்பமாய் அமைஞ்ச பிள்ளையை ஆத்மீகத்தாலதான் வசக்கி எடுக்கவேணுமெண்டு. அதால, பிள்ளையாருக்கு உம்மில கருணையிருந்தா, அவரே உம்மைத் தேடி வருவார் எண்டு சொன்னன்.’

கண்களை அகல விரித்து வியப்போடு குருக்களின் வாயைப் பார்த்துக்கொண்டிருந்தார் வல்லிபுரம்.

‘நம்பிக்கையில்லாமத்தான் சொன்னன்; ஆனா நான் சொன்னதை நாதன் நம்பியிட்டார். கேட்டோடன கொஞ்சநேரம் யோசிச்சுக்கொண்டு நிண்டார்; பிறகு, நான் போகாட்டி அம்மா எல்லாருக்கும் கரைச்சல்தான், தம்பியனையும் பாக்கேலாமப் போயிடும், நான் போறனெண்டு சம்மதிச்சிட்டார்.’

அச் சம்பவங்கள்பற்றி, அங்கு வந்த அத்தனை காலத்தில் ஒருநாள்பட்டு நினைத்து அவன் வருத்தப்பட்டதில்லை. பனி படரும் ஒலிவ மரங்களின் அந்நாடு, அவனை முற்றுமாக வசக்கி எடுத்திருந்தது. கல்வியும் அரை குறையாய், ஆங்கிலமும் தெரியாமல் வந்து அங்கத்தைய பள்ளிக்கூடமொன்றில் இடைநிலை வகுப்பிலிருந்து படிக்க அனுமதி பெற்ற பின், மொழியையும் பாடத் திட்டத்தையும் உள்வாங்க நேரம் எல்லாவற்றையும் செலவழிக்க நேர்ந்துவிட்டதில் பழைய சம்பவங்கள் நினைவின் கீழிறங்கிவிட்டன அவனுக்கு.

ஆனால் அம்மாவின் ஒரு பேச்சு அவனை எல்லா நிகழ்வுகளையும் உள்வாங்கி, தான் அங்கே வராமல் இருந்திருக்கலாமோவென இப்போது எண்ண வைத்திருக்கிறது.

 

000

 

தனக்கு அங்கே அம்மா இல்லை, அப்பா இல்லை, தாத்தா இல்லை, யாருமே இல்லையென அவனுக்கு உறுதியாகிவிட்டது.

அவன் எழுந்து மெல்ல மேலே நடந்தான்.

ரட்டைத் தட்டு சிறுவர் படுக்கையில் கீழ்த் தட்டில் மிஷேல் படுத்திருந்தான். நித்திரையாகிவிட்டான் போலிருந்தது. அவ்வேளையிலும் அவன் முகத்தில் பாதிப் புன்னகை அழியாது இன்னும் இருந்ததாய்ப் பட்டது. அவன் கணநாதனின் நல்ல தம்பிதான்; சின்னத் தம்பிதான்; செல்ல தம்பிதான். அந்த அவலத்துள்ளும் ஒரு பொட்டு வெளிப்பு கணநாதன் முகத்தில் மின்னியது. எல்லாம் எண்ணி மனத்தை சிதறவிடக்கூடாதென அவன் திண்ணப்பட்டான். ஆனால் அவன் எதையாவது செய்துதான் ஆகவேண்டும். அவசரப்படாமல் நிதானமாக யோசித்துச் செய்யவேண்டும். அவனை இழக்கவும் அம்மா தயாரென்றாளெனில் அவள்மேல் அவன் விளைக்கும் பாதிப்பும் அவள் மனத்தில் ஆழமாய் இறங்குவதாய் இருக்கவேண்டும்.

அவன் மனத்தில், மேலே படுக்க வருவதற்கு முன்னில், எங்காவது வெளிக்கிட்டு ஓடிவிட்டாலென்ன என்றொரு எண்ணம் எழுந்தது. இளவேனில் முடிகிற அக் காலத்தின் குளிரையும் பசியையும் தாகத்தையும் வீட்டைவிட்டு ஓடிச்சென்ற இடத்தில் சுலபமாய்க் கடந்துவிட முடியாதெனப் பட்டதில், தனக்கே அது கூடுதலான இடும்பையை தருமென்பதால் கணநாதன் பின்தள்ளிவிட்டிருந்தான். இன்னும் வேறேதாவது திட்டம்தான் தேவை. அவன் யோசிப்பான். மறுநாள் அவனுக்கு லேற் ஸ்கூல்; எட்டரைக்கு வழக்கமாகத் தொடங்கும் பள்ளி அவ்வாறான அறிவிப்பு விடும் நாளில் ஒன்பதரை மணிக்கு ஆரம்பமாகும். அவன் சிறிது தாமதமாகத் தூங்கினாலும் பரவாயில்லை. ஒரு தீர்மானத்துக்கு வந்துவிடவேண்டும்.

அது சிறீலங்காவில் ஏற்பட்ட பிரச்னையாக இருந்திருந்தால் அவ்வாறான சிரமம் தோன்றியிராதென்றும், தானொரு பொருத்தமான முடிவை அடைந்திருப்பானென்றும் எண்ணிக்கொண்டு ஒரு அலுப்போடு படுக்கையின் மேற்தட்டுக்கான படிகளில் மெதுவாக ஏறி கணநாதன் படுத்துக்கொண்டான். அம்மாவில் பாதிப்பை விழுத்தும் வழிமுறைக்கான தேடலை மேவிக்கொண்டும் அம்மாவின் சந்நதம்கொண்ட அம்மனின் உருவமே அவனுக்கு ஞாபகம் வந்துகொண்டிருந்தது. அதுவுமே தன்னைச் சுடுவதுபோல் உணர்ந்துகொள்கையில் அவனுக்கு எல்லா உணர்வுகளையும் விஞ்சி அழுகைதான் வந்தது. கீழே தூங்குகிற தம்பியை அது எழுப்பிவிடக்கூடாதென்று வெகு பிரயத்தனத்தில் அசைவுகள் விசும்பல்களை அடக்கினான்.

சிறிதுநேரத்தில் தூங்கி அவன் எழுந்தபோது நிறையவே விடிந்திருந்தது. கிழக்கு ஜன்னலினூடு ஒளி வெள்ளம்போல் அறைக்குள் பாய்ந்துகொண்டிருந்தது. மணிக்கூட்டின் அலாரத்தை முதல் நாள் படுக்கச் சென்றபோது இயங்குநிலைப்படுத்தி வைக்க மறந்துபோனது துண்ணென மனத்தில் இடித்தது. தம்பியன் எழும்பிப் போய்விட்டிருந்தான். அவசரமாய் முகம் கழுவிக்கொண்டு பாய்ந்து புத்தகப் பையுடன் கீழே இறங்கினான். தம்பி கீழேயும் இருக்கவில்லை. தம்பி வேறொரு பள்ளியில் படிக்கிறானென்றாலும் இருவரது பள்ளிகளும் ஒரே பஸ் பாதையிலேயே இருக்கின்றன. பிறிட்ஜை திறந்து அம்மா தயார்செய்து வைத்திருக்கக்கூடிய பகலுணவுப் பெட்டியை எடுத்துக்கொண்டு, ஒன்பது மணி பஸ் வர இன்னும் பத்து நிமிஷங்கள் இருந்ததில் அவதி தணிந்தவனாய் கணநாதன் வெளிக்கதவைப் பூட்டிக்கொண்டு  வீதியில் இறங்கினான்.

அம்மா காலை 6.15க்கு வேலைக்குப் புறப்படுவாள். ஒன்ராரியோவில் தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்க்கும் தோமா வெள்ளி அல்லது சனி மாலையில் ஒன்ராரியோ வந்தாலும் திங்கள் அதிகாலையில் மொன்றியல் புறப்பட்டுவிடுவான். அதனால் வீடு, கணநாதன் அங்கிருந்து புறப்பட்டபோது வெறுமையாகவே இருந்தது. இரவுச் சம்பவத்தின் மனச் சள்ளை அந்த வெறுமையிலிருந்து மறுபடி அவன் மனத்தில் பாரமாய் வந்து படிந்தது.

கணநாதன் பள்ளியை அடைந்தான். மாலை மூன்றரை மணிக்கு பள்ளி விடும்வரை ஒருவித அவதியோடேயே பொழுதைக் கழித்தான். என்ன செய்யலாமென்ற கேள்விக்கான ஒரு பதிலை அவன் அடைந்திருக்கவில்லை. அது அவனது மனச் சள்ளைகளைக் குறைந்திருக்கும். மனமும் அத் திட்ட நிறைவேற்றத்தைச் சுற்றி சுழன்றுகொண்டு இருந்திருக்கும்.

அயல் மாணவர்கள் நடையில் வீடு போய்க்கொண்டு இருந்தார்கள். இன்னும் பல மாணவர்களை, அதிகமாகவும் அவர்களது மம்மிகள், வாகனங்களில் வந்து கூட்டிப் போய்க்கொண்டிருந்தார்கள். கணநாதன் அவசரமற்ற நடையில் பஸ் தரிப்பிடம் அடைந்தான். பஸ் தரிப்பிடம் வெறுமையாய்க் கிடந்தது.பள்ளி முடிகிற நேரத்தில் வரும் பஸ் போய்விட்டிருக்கும். அடுத்த பஸ்சுக்கு இன்னும் ஒரு மணி நேரமிருந்தது. பின்புறமிருந்த சுவரோடு சாய்ந்துகொண்டு பராக்கு பார்க்கத் துவங்கினான். வானம், வீதி, எதிரே கிடந்த உறைபனிப் பரப்பு என பார்வை பரந்துகொண்டிருந்தது.

திடீரென்று, பஸ்ஸில் செல்லாமல் வட்டாரிபோல் மடங்கிக் கிடந்த இரண்டு நீள் தெருக்களை இணைத்துக்கொண்டு கிடந்த குளத்தின் பனிப் பரப்பில் நடந்து வீடு போனாலென்னவென ஒரு எண்ணம் அவனில் முளைத்தது. அது ஆபத்தானது என்பது அவனுகுத் தெரியும். குளிர்காலத்தில் பனித் திடமாய் ஆகிவிடும் குளம், கோடையின் பிற்பகுதிவரைகூட அந்தத் திடத் தன்மையை இழப்பதில்லை. ஆனால் அதன் கடினம் குலைந்துவிட்டிருக்கும். நாலு மனிதர்கள் ஏறினாலும் நொறுங்கிவிடாத அப் பரப்பு, அப்போது ஒருவரின் உடற் பொறையைக்கூடத் தாங்காது நொறுங்கிப் போய்விடுகிறது. அதுமட்டுமின்றி, கனடாவின் பழங்குடிச் சமூகத்தினர்க்கும் இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து பொன் வேட்டைக்கு வந்த வெள்ளைக் குடியேறிகளுக்குமிடையே நடந்த பல முக்கியமான யுத்தங்களிலொன்று சமீபத்திலுள்ள நதிக்கரையில் நடந்ததென்றும் அதில் வெள்ளையரின் துப்பாக்கிகளுக்கு அம்பும் வில்லும் கொண்டு யுத்தம் செய்யப் புறப்பட்ட நூற்றுக் கணக்கான பழங்குடி மக்கள் பலியானார்களென்றும், அவர்கள் அந்த குளக்கரையை அண்டிய, அப்போது சதுப்பாக இருக்கும் இடத்திலேதான் புதைக்கப்பட்டார்களென்றும் அவன் அறிந்திருக்கிறான். அவ்வாறு இறந்தவர்களின் ஆவிகள் அந்த இடத்தைச் சுற்றி பகலும் இரவும் முயங்கும் மம்மர் வேளைகளில் ரத்த வேட்கையுடன் அலைந்து திரிவதாகவும் கூட அவன் சொல்லப்பட்டிருந்தான். ஆவியால் அல்லது பனித் திடமுடைவதால் எந்தவகையில் மரணம் வந்தாலும் அவனுக்குச் சரிதான். அவள்… அவனது அம்மா… அவனுக்கு அழவேண்டும். நெருப்பு சொரிய பார்த்து, அவன் செத்தாலும் தனக்கு எதுவுமில்லையெனச் சொன்ன அந்த அழகிய முகம் கொண்ட அம்மாவின் கண்கள் நீர் சொரிந்து நிற்கவேண்டும். 

அவனுக்கு அதுவொரு சரியான முடிவென்பதில் எவ்வித அய்யப்பாடும் தோன்றவில்லை.

தன் முயற்சியை அவன் செயற்படுத்த இன்னும் கொஞ்சநேரம் மினக்கெட வேண்டும்.

குளத்தைச் சுற்றி கம்பிவலை அடித்திருந்தார்கள். அத்து மீறி எல்லையைக் கடப்பது ஆபத்தானதென்றும் சட்ட விரோதமானதென்றுமான இரு மொழி அறிவிப்புப் பலகைகள் ஆங்காங்கே வேலியில் பொருத்தப்பட்டிருந்தன. அவன் அதை மீறப்போகிறான். அதை வௌிச்சத்தில் செய்வதிலுள்ள தயக்கம் வெளிச்சம் குறைந்த நேரத்தில் இருக்காதென அவனுக்குத் தோன்றியது.

எந்த நிலைமையாயினும் அவன் போகத்தான் போகிறான்; சாகத்தான் போகிறான். தன்னை என்றைக்கும், போர் நிலத்தில் தப்பிப் பிழைத்தாலும்கூட, வேண்டாமெனச் சொன்ன அம்மாவை அழவைக்காமல் விடுவதாவது! அவன் ஆவியாயிருந்து அந்த அழுகையைக் கண்டு ஆனந்தம் கொள்வான்.

கணநாதன் கம்பி வேலைியை மெல்ல அணுகினான். வேலியில் கம்பி வலை விடுபட்டிருந்த இடத்தை நெருங்கி தோள்ப் பையை கையில் எடுத்துக்கொண்டு நுழைவதற்குத் தயாராகக் குனிந்தான்.

‘அண்ணா…!’

பின்னால் அழைத்துக் கேட்டது.

யார்…? மிஷேலா…?

கணநாதன் திடுக்கிட்டுத் திரும்பினான்.

இவன் எங்கே வந்தான் இப்போது? இதே பாதையில் இந்தப் பள்ளியைத் தாண்டியே இவன் வீடு போகவேண்டுமென்றாலும் இங்கே இவன் இறங்கவேண்டிய தேவையே இல்லையே! ‘தம்பியா…!’

அண்ணாவென மறுபடியும் சொல்லியபடி மிஷேல் நடைபாதையிலிருந்து சரிவாய் இறங்கிய புற்றரையில் சறுக்குப்படாத அவதானமுடன் அண்ணனை அணுகினான். ‘ஏனண்ணா இங்கே நிற்கிறாய்?’ என கேட்டான். ‘நீ நிற்கிற தோரணையைப் பார்த்தால், கம்பி நீக்கலுக்குள்ளால் நுழைந்து பனிப் பரப்பின் மேலாக நடந்துசெல்லத் தயாரானவன்போலல்லவா தோன்றுகிறாய்! கூடாது, அண்ணா. சுருக்கு வழி என்பதற்காக பனிப் பரப்பின் மேலாக நடந்துசெல்லும் எண்ணத்தை என்றைக்கும் கொண்டுவிடக் கூடாதென அம்மா சொன்னதை… அப்பா சொன்னதை… ஆசிரியர்கள் சொன்னதை… மீறிவிடக்கூடாது, அண்ணா. வா, 5.30 மணி பஸ் வருகிற நேரம்தான்; நாம் பஸ்ஸிலேயே போகலாம்’ என்றபடி யானையொன்று தன் துதிக்கையால் பிடித்து அழுத்தமாய் இழுத்துச் செல்வதுபோல் கணநாதனைப் பிடித்துக்கொண்டு மிஷேல் நடைபாதைக்கு நடந்தான்.

இணங்கிச் செல்வது தவிர கணநாதனுக்கு வேறு மார்க்கம் இருக்கவில்லை.

பஸ்சுக்கு நின்றிருந்தபொழுதில் மெல்ல அண்ணன் பக்கமாகச் சரிந்த மிஷேல், ‘ஏனண்ணா, செத்துப்போவதற்காகத்தான் பனிப்பரப்பில் நடக்க எண்ணினாயோ?’ என கேட்டு சிரித்தான்.

தம்பி அந்த நேரத்தில் அங்கே வந்தது மட்டுமன்றி, மனத்தில் கிடந்த தன் எண்ணத்தையே நெஞ்சைக் கிழித்து வாசித்ததுபோல் சொல்லியதெல்லாம் எண்ண கணநாதனுக்குப் பேராச்சரியமாக இருந்தது.

அவர்கள் வீடு வந்து சேர்ந்தபோது அம்மா இன்னும் வந்திருக்கவில்லை. தாத்தா வெளியில் நின்று முன்பகுதியில் அம்மா வைத்திருந்த தொட்டிப் பூங்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார்.

கணநாதன் கிட்ட வர, ‘பஸ்ஸால இறங்கி தனியா என்ன புலம்பிக்கொண்டு வாறாய்?’ என தாத்தா கேட்டார்.

‘புலம்பிக்கொண்டு வாறனோ? ஆர், நானோ?’

‘நீதான்.’

‘தம்பியனோடயெல்லோ கதைச்சுக்கொண்டு வந்தனான்.’

‘எந்தத் தம்பியன்?’

‘மிஷேலோட.’

‘எந்த மிஷேல்…?’

‘என்ன தாத்தா கேக்கிறியள்?’

‘நீ வழியில ஆரோட கதைச்சுக்கொண்டு வந்தனியெண்டு கேட்டன்.’

‘தம்பியோடதான்.’

தாத்தா தண்ணீர்ப் பைப்பை பொத்தென நிலத்தில் போட்டார். போய் திருகியை முறுக்கி தண்ணீரை நிறுத்தினார். ‘மிஷேல் இண்டைக்குக் காலமையே தேப்பனோட மொன்றியல் போட்டானே!’ என்று அவரது நெஞ்சுக் கூட்டுக்குள்ளிருந்து வெளிவந்த வார்த்தைகள் தொண்டைக்குழியில் சிக்குப்பட்டு நின்றன.

கணநாதன் கூடத்துள் சென்று தொலைக்காட்சியை இயங்கவைத்தான். சனல்களை மாற்றி மாற்றி முதலில் மேலே போன தம்பி குளித்துவிட்டு வரும்வரை நேரத்தைக் கடத்திக்கொண்டு இருந்தான். மறுபடி தம்பி கீழே இறங்கி வருகிறானாவென நிமிர்ந்து மாடிப் படியைப் பார்த்தான்.

அவனுக்கு அலுப்பாக இருந்தது. மிஷேலோடு பேசி வந்த பின்னால் அம்மாவை அழவைப்பதற்காகவே செத்துப்போகும் எண்ணம் அவனில் தீவிரமாக இல்லை. அந்தளவு அழகிய முகம்கொண்ட அம்மாவை அழவைப்பதும் அவனுக்கு அவ்வளவு பிடிப்பாக அப்போது தோன்றவில்லை.

முதலில் அவன் குளிக்கவேண்டும்.

அவன் காத்திருந்தான்.

அவனது தம்பி குளித்துமுடிந்து இன்னும் கீழே வரவில்லை.

000

 பதிவுகள்.கொம், 

ஓக. 2025

Comments

Popular posts from this blog

ஈழத்துக் கவிதை மரபு:

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

தமிழ் நாவல் இலக்கியம்