நம்பிக்கைகளும் நம்பிக்கையீனங்களும்


கனடாத் தமிழ் நாடக அரங்கு (2007) குறித்த ஒரு கண்ணோட்டம்
-----------------------------------------------------------------------------------------------------------------
-தேவகாந்தன்-


மனவெளி கலையாற்றுக் குழுவினரின் 14வது அரங்காடல் கடந்த ஜூலை
2007 இல் நடந்து முடிந்திருக்கிறது. இவ்வாண்டு மார்ச் 24இல் நடைபெற்ற உயிர்ப்பு, மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 01 ஆகிய திகதிகளில் நடைபெற்ற கருமையம் ஆகியவற்றின் நிகழ்வுகளையும் ஒரு பார்வையில் அலசுவதின் மூலம் தற்போதைய கனடாத் தமிழ் நாடக அரங்கு குறித்த என் அபிப்பிராயங்களை முன்வைப்பதே இக் கட்டுரையின் நோக்கம். இது கசப்பாக, உவப்பாக எப்படியிருப்பினும், உண்மையின் வீச்சுடன் அபிப்பிராயங்களைச் சொல்லவேண்டிய தருணமிது. அதுவே கனடாத் தமிழ் நாடக அரங்கின் எதிர்கால முன்னெடுப்புக்கள் சீரியதாக அமைய வாய்ப்பாகும் என்பது என் நம்பிக்கை.

(1) தோற்ற மயக்கம், அடையாளம்1, அணங்கு, அடையாளம்2 ஆகிய நான்கு அளிக்கைகளிலும் அணங்கு தவிர்த்து பேசப்படுவதற்கான எதனையும் உயிர்ப்பு நாடக அரங்கப்பட்டறை சமர்ப்பித்துவிடவில்லை. அடையாளம்2 ஒரு கட்டுரையை நடித்தல்போல் அவ்வளவு உணர்ச்சியின்றி இருந்தமை கவனிக்கப்பட வேண்டும். அடையாளம்1, தோற்ற மயக்கம் இரண்டும் சுமாரானவையே என்பதைமட்டும் சுருக்கமாகச் சொலிக்கொண்டு, அணங்குபற்றி சிறிது பார்க்கலாம். அது முக்கியமான அளிக்கை.

அணங்கின் பிரதியாக்கத்துக்கு மணிமேகலை, சிலப்பதிகாரம்போன்ற உசாத்துணை நூல்களின் உதவியின்றியே அர்த்தத்தைக் கண்டடைந்திருக்க முடியும். எனினும் பிரதி சொன்ன கருத்துக்கள் கனடாத் தமிழ் நாடக மேடைக்குப் புதிது. பனுவலாய் மற்றைய மூன்றினைவிடவும் வலுவாயிருந்ததும் ‘அணங்கு’தான். அதன் நெறியாள்கையும் பார்வையாளனின் கவனத்தை ஈர்ப்பதாகவே இருந்தது. அளிக்கையின் இறுதிப் பகுதியில் இடம்பெற்ற நடன எடுப்பு பார்வையாளனை மெய்மறக்க வைத்தது என்பது மிகையான கூற்றில்லை. இதை உடல்மொழி சார்ந்த நடனவகையாகக் கொள்ளமுடியும். இந் நவீன நாடகம்பற்றிய ஒரு விரிவான அலசல் அவசியமெனினும், அது இடம்பெறும் மற்றைய அரங்க நிகழ்வுகளையும் நோக்கியபின் கவனத்தில்கொள்வதே தக்கது.

(2) கருமையத்தின் அளிக்கைகள் அதன் முதல் இரண்டு ஆண்டினதுகளையும்விட முக்கியமானவை. பெண்கள் பட்டறையின் நிகழ்வுகள் பெரிதான மாற்றங்களின்றி, கருத்துக்களின் வெளிப்பாட்டினை படைப்பாற்றலின்றி வெளிப்படுத்தியிருக்கும்வேளையில், மற்றைய மூன்று அளிக்கைகளும் கருமையத்தின் வளர்ச்சியைக் காட்டும்விதத்தில் அமைந்திருந்ததைப் பாராட்டவேண்டும்.

‘மொழிப்பாடு’, ‘பனியில் ஒரு நடை’ இரண்டிலும் வன்மையான கருத்துக்கள் உருவாக்கப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதைக் கவனிக்கக் கூடியதாயிருந்தது. மொழிப்பாடு தன்னைக் கனதியாக நிறுத்த எடுத்த முயற்சி தனித்துவமற்றதாய், உடல்மொழி சார்ந்த கூறு தனிப்பட நின்றிருப்பினும், பிரதியாக்கத்தாலும் நெறியாள்கையாலும் குறிப்பிடக்கூடியவொன்றாக விளங்கியது. பனியில் ஒரு நடை சாதாரண பார்வையாளர்களுக்கான சாதாரண அளிக்கையென ஒட்டுமொத்தமாய்க் கூறமுடியும். ஆனாலும் அது கொண்டிருந்த காலம் பற்றிய கருதுகோள் அண்மைக்கால தமிழ் நாடகப் பிரதிகள் காணாதது.

மெய்யிழந்த போது … உடல்மொழி சார்ந்து எழுந்த அளிக்கை. பார்வையாளனின் புரிதலுக்கும், அனுபவத்திற்கும் ஏற்ற விதத்தில் அதன் மெய்ப்பொருள் விளப்பம் பலதரத்ததாயிருந்தது. உடல்மொழி சார்ந்து முழு அளிக்கையும் அமைந்திருந்தது அதன் விசே~மும் வித்தியாசமுமாகும். இதன் ஆக்கம், நெறியாள்கை இரண்டும் சுதர்ஸன் துரையப்பாவினது. கனடாத் தமிழ் நாடகப் பரப்பில் இவரது காலடி முக்கியமானது. அத்துடன் உடல்மொழி சார்ந்து நாம் கவனப்படவேண்டிய பல கூறுகளுக்கு அவசியமாவது.

(3) மனவெளி கலையாற்றுக் குழுவினரின் 14வது அரங்க அளிக்கை முக்கியமானது. ஏனெனில் அதன் 13 ஆண்டின் வெற்றிகள், தோல்விகள் யாவும் அனுபவமாகிய ஒரு கூட்டிசைவில் இம்முறை அளிக்கைகள் வெளிவந்திருந்தன என்று கொள்ளமுடியும்.

மனவெளியின் 13வது அரங்காடலில் ‘ மீண்டும் தொடங்கும் மிடுக்கு ’ நாடகத்தை மிக்க கட்டிறுக்கமானதாக, நேர்த்தியானதாக, ரசிக, கலா அம்சங்கள் நிறைந்ததாகத் தந்திருந்த துஷி  ஞானப்பிரகாசத்தின் ‘இப்பொழுதும் எப்பொழுதும்’ அளிக்கை பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யவில்லையென்பது பரவலான அபிப்பிராயமாக இருந்தது. நான் அவ்வபிப்பிராயத்தினுடன் மாறுபடக் காரணமில்லை.

படிமமாய்க் காட்சிகளையும் பாத்திரங்களையும் அமைத்து, தனித்துவமான முறையில் அதை நெறிப்படுத்தியிருந்தாலும், அம் மொழிபெயர்ப்பாக்கம் வலுவின்றியிருந்தது. பார்வையாளன் மனத்தில் ஒரு பாதிப்பினை ஓரளவேனும் கூடத் தந்துவிடவில்லை அது. எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு அரசியல் பூடகத்துள் நாடகப் பிரதி இயங்கியிருப்பினும் அது வெளிப்பாட்டு முறைமையில் முழுமையற்றுப்போனமை துர்ப்பாக்கியமே. ஹரோல்ட் பின்ரர் இங்கிலாந்தின் நவீன நாடகத்தின் தந்தையெனப் போற்றப்படுபவர். அவரது நவீன நாடகப் பிரதிகள் உலகமெங்கணும் மெச்சி வாசிக்கப்படுபவை. நடிக்கப்படுபவை. மொழியாக்கத்தில் அல்லது தழுவலில் அவ்வரசியலின் அதிகாரத்தை, அதிகாரத்தின் வன்முறையை அளிக்கையாக்கக்கூடிய சொல்லாடல் பலஹீனமாக இருந்தது.

‘ சாகாத சரித்திரங்கள் ’ சி.சிவசேகரத்தின் கவிதைகள் மூன்றினைக் காட்சியாக்கும் முயற்சியாகவிருந்தது. முதலிரு கவிதைகளின் காட்சியளிக்கைகளும் குறிப்பிடக்கூடியளவு இருந்தவேளையில், மூன்றாம் கவிதையின் காட்சியளிக்கை அருமையாகவிருந்தது. மேடையை நோக்கி நிற்றல் என்கிற மரபார்ந்த நாடக மரபினைத் தூக்கியெறிந்துவிட்டு மிக அற்புதமாகக் காட்சியமைப்பைச் செய்திருந்த நெறியாளுகைக்காக வி.கந்தவனத்தையும், அதை அருமையாக நடிப்பில் வெளிப்படுத்திய கணபதி ரவீந்திரனையும் இந்த இடத்தில் பாராட்டவே வேண்டும். தமிழ் நாடக மேடைகளில் கவிதையினைக் காட்சிப்படுத்தும் முயற்சிகள் குறைவு. மிகமிகக் குறைவு. அதை துணிச்சலாக முயற்சியாக்கம் செய்தமையை மனவெளியின் முக்கிய அம்சமாகக் கருதுகிறேன்.

புராந்தகனின் ‘ அரி ஓம் நம! ’ என்ற யூஜின் அனஸ்கோவின் பிரதியது மொழிமாற்ற நாடகமானது, அபத்த நாடக வகையைச் சேர்ந்தது. அபத்த இலக்கிய, கலை முயற்சிகள் நாடகம் மேற்குலகில் நவீனம் பெறத் துவங்கிய காலத்தைச் சேர்ந்தவை. அந்த அபத்த வகைக்கான தேவை இன்றும் நம் நாடக அரங்க, சமூகத் தேவையாக இருப்பினும், அதை மனப்பிறழ்வின் அங்கமாக வாசகன் அனுபவமாய் அடையும் சாத்தியத்தை ஏற்படுத்தாமற் போனமை ஏன் ? பிரதியின் அதிநீளம் அவ்வாறான நிலையை ஏற்படுத்தியிருக்க முடியுமா? அப்படியென்றுதான் தோன்றுகிறது. ஒரு தனி அரங்க நிகழ்ச்சியாக இதை நன்கு ரசிக்க முடிந்திருக்குமென்பது என் நிலைப்பாடு.

இடம், காலம் போன்றவைகூட பல்நாடக அளிக்கை அரங்கில் முக்கியமானவை என்பது ஞாபகம் கொள்ளப்படவேண்டும்.

‘இரண்டுக்கும் நடுவே’ என்ற இளையபாரதியின் நாடகம் சாதாரண பார்வையாளனுக்கானது. ஆனாலும் அது நடிப்பினாலும், எடுத்துக்கொண்டிருந்த கருப்பொருளினாலும் கனடாத் தமிழ்ச் சமூகத்திடையே நிலவும் குடும்ப உறவுகளுக்கிடையேயான அவலங்களை, அழுத்தங்களை வலுவாகச் சொல்லியிருந்தது. இதில் பெண்ணின் நிலைநின்ற நியாயம் - அவள் தனியே வாழவேண்டி நேர்ந்தமைக்கான காரணத்தையும் அதற்கான உரிமையையும் வெளிப்படுத்தும் அக்கறை காட்டப்படவில்லையெனினும், பெண்ணாக அல்லாமல், பெண்ணை பெற்றாரில் ஒருவராகக் கொண்டு, பிள்ளைகளின் நலன்கள் பேணப்படவேண்டும் என்ற வன்மையான கருத்தைக் கொண்டிருந்தவகையில், பார்வையாளன் சாந்தமாகிப்போக முடிந்திருந்தது.

இறுதியாகச் சொல்ல விரும்புவது ‘ நிறங்களின் நிஜங்கள் ’ பற்றி.

நிறங்களுக்கும் மனித உணர்வுகளுக்கும் பாரிய தொடர்புகள் இருக்கின்றன. கீழ்த் திசை மரபிலேயே மதம், கலை சார்ந்து பல்வேறு விளக்கங்கள் உள்ளன. இந்த விளக்கங்களை மீறிய விஞ்ஞான ரீதியான தொடர்பாடல்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

வறுமையின் நிறம் சிவப்பு என்று ஒரு சினிமாப் படத்தின் தலைப்பு சொல்கிறது. சிகப்பு விளக்குப் பகுதி என்பது மும்பையில் பாலியல் தொழிலாளர் தொழில் நடத்தும் அனுமதிப் பத்திரம்பெற்ற ஸ்தலம்.  இதையே தென்கொரியாவில் மஞ்சள் வீட்டுப் பகுதி என்பர்.  சாலைகளில் வாகன
நிறுத்தத்திற்கான அடையாள விளக்கும் சிகப்புதான். சிவப்பு எதற்காக அவ்வாறு வைக்கப்பட்டதென்பதற்கு, விஞ்ஞான ரீதியான விளக்கமுண்டு. அந்த நிறம்தான் தொலைதூரத்திலும் தெரியக்கூடிய நிறமென்பது
நிறுவப்பட்ட உண்மை. அதுபோல் சிவப்பு, நீலம் என்பன மின்சார நேர்த் திசை, மாறுதிசை மின் வலுக்களின் நிறமாகக் கணிக்கப்பட்டிருக்கின்றன. பச்சை ‘ஏர்த்’ எனப்படும் நிலக்கடத்தல் பகுதியாக நிற்கும். நாடுகளிடையே நிறம் சார்ந்து வித்தியாசமான விளக்கமுண்டு. ஆனாலும் அவை நிறம்பற்றி ஏதோ ஒருவகையில் அர்த்த அமைப்புக்களைக் கொண்டிருக்கின்றன.

தமிழ்ச் சூழலில் மஞ்சள் அதுபோல் மரபார்ந்து மங்களகரத்துக்கானதென்றும், கறுப்பு அமங்கலத்துக்கும், வெள்ளை வெறுமைக்கும் அடையாளங்களென்றும் நாம் சொல்லித்தரப்பட்டிருக்கிறோம். இந்த நிறங்கள் மனித உணர்வுகளுடன் மிகநெருங்கிய தொடர்புடையன. பச்சை நீலம் மஞ்சள் சிவப்பு என்பன அதுபோல் ஒவ்வொரு மனித உணர்வுகளைக் குறிக்க சினிமாக்களில் மட்டுமில்லை, சினிமாக் காலத்துக்கு முன்பிருந்தே கூத்துகளிலும் தெருநாடகங்களிலும் பாவனைக்கெடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வர்ணங்களே. இதை ஆடல் கலையில் உணர்வுகள் பீறிட அரங்காக்கப்பட்ட நிகழ்வுதான் ‘ நிஜங்களின் நிறங்கள்’.

இப்போது உடல்மொழி வகையான இந்த நவீன நடனத்தைப் பற்றி நான் சொல்லலாமென நினைக்கிறேன். தமிழில் சதிர் புராதனமானது. இதை ஒருவகையில் தமிழ் நடனவகையாகக் கொள்ளலாம்தான். பரதம் அதிலிருந்து செழுமைப்படுத்தப்பட்ட நடன வகையென்பது ஆய்வாளர்களால் இப்போது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிற முடிவு. இந்த பரதத்தை தமிழ்ப் பரப்பில் நவீன வடிவமாக்க முயன்று வெற்றிபெற்றவராக மறைந்த சந்திரலேகாவைச் சொல்லவேண்டும். பரதத்துடன் பல்வேறு நடன வகைகளைக் கலந்து இந்த நவீன நடன வகையை தமிழுலகுக்கு அறியத் தந்தவர் அவர்தான் எனவே நினைக்கிறேன். இதில் பரதம் மட்டுமல்லாது, யோகாசன முறைமை, பாலே நடனம் போன்றவற்றின் கூறுகளும் கலந்துள்ளன. மட்டுமில்லை. தப்பாட்டம்போன்ற இசைகளையும், களரிக்காரர்களின் ஆட்டவகைகளையும்கூட இது கொண்டிருக்கும். வெறும் அசைவுகள் மூலம் மனித மன உணர்வுகளைப் பிரதிபலிக்க முடியுமென நிறுவியதோடு மட்டுமல்லாது, அதை நிகழ்விலும் நிகழ்த்திக் காட்டியவர் சந்திரலேகா. அவருக்கு உடலென்பது ஒருவகை மொழி. ஓவ்வொரு அசைவிலும் சொல் பிறக்கிறது. இந்த உடம்பு கொண்டிருக்கும் ரகசியங்கள்போல், அதன் மொழியும் ரகசியமானது. அந்த மொழிமூலம் நவீனம் புனையும் முயற்சியே உடல்மொழி நடனவகையான இதன் முக்கியமான அம்சம்.

இது இந்தியாவில் எண்பதுகளில் வீச்சுப்பெற்று வளர ஆரம்பித்த ஒரு நடனவகை என்றால் தப்பில்லை. ஆனால் சமீப காலமாகத்தான் இந்த நவீன நடன வகை கனடாவில் பயில்வுபெற ஆரம்பித்திருக்கிறது. இது சந்திரலேகாவின் மாணவர்களுள் ஒருவரான சுதர்சன் துரையப்பாவின் கனடா வருகையுடன் ஆரம்பித்ததெனக் கூற முடியாவிட்டாலும், இக்காலகட்டத்துக்கு முன்பின்னாக மிகுந்த கவனம்பெற்றிருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை.

உடல்மொழி வகையான இந் நவீன நடன வகைக்கு அசைவுகளே போதுமானவைதாம். இசை அதற்கும் கூடுதலான ஒரு அம்சம். ‘நிறங்களின் நிஜங்கள்’ அளிக்கையில் இசையின் வலுவைவிட அசைவுகள் காத்திரமானவையாக இருந்தன என்பது என் எண்ணம். நடனத்துக்கு இசையானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததென்பது சிறந்த நடன ஆசிரியை திருமதி வசந்தா டானியலின் கருத்தாகும். உடல்மொழி வகை நடனத்திலும் இசை முக்கியமானதே. ஆனாலும் வேறெந்த நடனவகையைவிடவும் இவ்வகை நடன முறைமைக்கு பாடல் மட்டுமன்றி, இசையும் தீவிரத் தேவையை இழந்தே நிற்கிறதென பல நவீன நடனகாரர் வாயிலாக அறிய முடிகிறது. இதை ஒரு நவீன நடனம் என்பதற்காக மட்டுமின்றி, அதன் அறுதியான உணர்ச்சி வெளிப்பாட்டுத் திறனுக்காகவும் நமது நடனகாரர் இதை முன்னெடுக்க முன்வரவேண்டுமென்பது எனது ஆவல்.

இவ்வாண்டு நாடக அளிக்கைகளில் இன்னுமொன்றை அவதானிக்க முடிந்தது. முந்திய ஆண்டுகளைவிட இம்முறை ஒளியமைப்பில் வெகுவான கவனம் செலுத்தப்பட்டிருந்ததைச் சொல்லவேண்டும். ஓலியமைப்பும் கூடுதலான கவனத்தைப் பெற்றிருந்ததையிட்டு என்போன்றவர்களுக்கு மகிழ்ச்சியே. மிக்க முக்கியத்துவம் வாய்ந்த ஒளி, ஒலி அமைப்புக்கள் அண்மைக்காலம்வரை நமது நாடக மேடைகளில் கவனிப்பற்றிருந்ததைப்பற்றி, அவ்வப்போது நாடக அளிக்கைகள் குறித்த என் கருத்துரைகளின்போது நான் குறிப்பிட்டே வந்திருக்கிறேன்.

இன்னொன்று குறிப்பிடப்படவேண்டியது. அதுதான் பிரதியாக்கம். இந்தத் தடவை அதிகமான மொழிபெயர்ப்பு நாடகங்கள் மேடையேறியிருந்தன. ஓவ்வொரு ஆண்டுகளிலும் இது நிகழ்ந்தே வந்திருக்கிறது என்பது ஞாபகம்கொள்ளப்படவேண்டியது. தமிழில் நாடகப் பிரதியாக்கங்கள் குறைவு. குறிப்பாக கனடாத் தமிழ்ப் புலத்தில் மிகக் குறைவு. இதை ஈடுசெய்ய பிறமொழியாக்கங்களைநோக்கி நகரவேண்டிய துர்ப்பாக்கியம் நமது நாடக நெறியாளுநர்களுக்கு ஏற்பட்டதாயிருக்கலாம். ப.அ.ஜயகரன், புராந்தகன், சகாப்தன், செழியன் போன்றோரின் ஈடுபாட்டினால் கனடா மண்ணில் தமிழ் அரங்கு எதிர்கொண்டிருக்கும் இக்குறைபாட்டை நிவர்த்திக்க முடியும்.

வருங்காலங்களில் தமிழ் நாடக அரங்கில் இன்னும் வலுவான அளிக்கைகள் பார்வையாளனை அடைய முடியுமென்ற நம்பிக்கை எவருக்கும் ஏற்பட இவ்வாண்டு அளிக்கைகள் போதுமானவையே.

0000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்