கனடாத் தமிழ்ப்பட உலகத்துக்கான வெளியும் அதன் பின்னடைவுகளும்




பரந்தவெளித் தேசமான கனடாவில் தமிழ்ப் பட உலகத்துக்கான வெளி மிக விசாலமானது. ஒரு நிலைமாற்றுக் கால தமிழ்த் தலைமுறையினரின் சமூக, பொருளாதார, உளவியல் நிலைப்பாட்டுத் தளங்களிலிருந்து பல அம்சங்கள் முன்னெடுக்கப்பட முடியும். அதன் புலப்பெயர்வும், மண்ணின் ஞாபகங்களும், மனவடுக்களும், உறவுகளின் தொடர்பாடலும், அவர்களது துன்ப துயரங்களும் பல பெருங்கதையாடல்களுக்கான ஊற்றுக்களைக் கொண்டவை. ஆனால் அது ஒரு வரட்சியில் கிடப்பதே காணக்கூடியதாக உள்ளது. இதன் முக்கிய காரணிகளை மேலெழுந்தவாரியாகவேனும் அலசுவதே இக் கட்டுரையின் நோக்கம்.

அரங்க ஆட்டத்திலிருந்து ஒரு பாய்ச்சலாக சினிமா உருவெடுத்து வந்திருப்பினும், அதன் பல கூறுகளைச் சினிமாக் கலை நிராகரித்துவிட்டே தன் பாதையில் தொடர்ந்திருக்கிறது. 1885இல் பிரான்ஸிலும், ஜேர்மனியிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டிருந்த சினிமாவுக்கான கமெரா, புரொஜெக்டர் ஆகிய உபகரணங்கள் இருபதாம் நூற்றாண்டுக்கான பாய்ச்சலைத் தொடங்க அன்றே வழியைத் திறந்துவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளில் தமிழில் விரிந்தெழுந்ததுதான் திரைப்படத் துறை. அது இந்தியச் சினிமாவாக முழுமைகண்டது.

ஈழத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம் அலாதியானது. ஆயினும் அது இவ்வி~யங்களில் தமிழகத்தின் முகம் பார்த்தே நடந்து வந்திருக்கிறது. ‘கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்றும் ‘கலைகளுக்கெல்லாம் தாய் வீடு’ என்றும் கூறப்பட்டனவெல்லாம் பெரிதாக மிகைப்படுத்தப்பட்டனவல்ல. பரதத்துக்கும், தமிழிசைக்கும், கர்நாடக சங்கீதத்துக்கும் அது மிகுபெயர் பெற்றிருந்ததுதான்.

ஒரு சங்கரதாஸ் சுவாமிகளைத் தொடர்ந்துதான் ஒரு கலையரசு சொர்ணலிங்கம் ஈழப் பரப்பில் தோன்றமுடிந்தது. நடிகை ராஜகுமாரி, பிரமிள், பாலுமகேந்திரா என்று கலை இலக்கியம் சார்ந்து இயங்கியவர்கள் பெரும்பாலும் தமிழகத்தைத் தாய்வீடாகக் கொண்டு;தான் இருந்திருக்கிறார்கள். மாறாக, கல்வியாளர்கள் மட்டுமே தாம் கல்விகற்று, பணியாற்றிய இடமான தமிழ்நாட்டைவிட்டு (உண்மையில் அப்போது அது சென்னை ராஜதானி) மீண்டும் ஈழம்சென்று வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கிறார்கள் எனல் வேண்டும்.

இதற்கான அரசியல் புலம் அப்போது இருந்ததுதான். இந்தியாவும் இலங்கையும் பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்ப நாட்களில் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இருந்ததும், பின்னால் வௌ;வேறு நிர்வாகங்களானாலும் அடிமை நாடுகளாக பிரித்தானியர் ஆட்சியின் கீழேயே இருந்ததும் போக்குவரத்துச் சுலபத்தையும், பணமாற்றுச் சுலபத்தையும் ஏற்படுத்தி கலையார்வ மாணவர்களின் பாரிய படையெடுப்புக்கான நிலமாக்கிவிட்டது தமிழ்நாட்டை. அன்று கல்விக்கும் தமிழ்நாட்டையே பலர் தஞ்சம்கொண்டிருந்தனர். பி.ஏ., எம்.ஏ., பண்டிதர், வித்துவான் போன்ற இந்தியப் பட்டங்கள் பெற்றவர்கள் ஈழத்தில் ஒருகாலம் மிகவதிகம். இதுவொன்றும் மாச்சரியம்பாற் பட்டதல்ல. நிலைமை இவ்வண்ணமே இருந்தது அன்று.

இதற்கான கலைத் தகைமையையும், பாரம்பரியத்தையும் அது கொண்டிருந்தது என்பதில் எனக்கு இரண்டு அபிப்பிராயமில்லை. இன்றும் பரதத்துக்கும், கர்நாடக சங்கீதத்துக்கும் அது பயில்வுகொள்வதற்கான தக்க நிலமாகவேதான் இருந்தும் வருகிறது.

தேவதாசி முறைமை அங்கே நிலவியிருந்ததை இதற்கான ஒரு காரணமாகக் கூறலாமெனினும், அதற்கான அர்ப்பணிப்புகள்தான் அந்நிலத்தைக் கலையில் சிறந்த தமிழ்நாடாக்கி வைத்திருக்கிறது என்றால் தப்பில்லை. எனவே இந்தக் கலைகளுக்கான அணுக்கம் நியாயமானது என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் திரைப்படத்துறை இதற்கு எதிர்மாறான நிலைமையைக் கொண்டிருக்கிறது. அது முற்றுமுழுதாக வணிகமயம் அடைந்துபோயிருக்கிறது. முழு இந்திய அளவிலான பணமுதலாளிகள் கூட்டமொன்று இத் திரைப்படத் துறையில் சர்வ ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது. ஜெமினி, சிவாஜி பிலிம்ஸ், ஏவிஎம் போன்ற உள்@ர் முதலாளிகளின் கூட்டம் இன்றும் தமிழ்நாடு என்று சொல்லிக்கொண்டிருப்பதற்கான அரசியல் புலம் இங்கிருந்துதான் வெடிக்கிறது. இவர்கள் ஓரிரு தடவைகளில் வெற்றியும் பெறுகிறார்கள்தான். ‘சந்திரமுகி’யும், ‘சிவாஜி’யும் இமயமலை பாபாவின் அருளினால் கிடைத்த வெற்றிகளல்ல, மாறாக, ஒரு சங்கிலி வளையத்தின் கணுக்களாக இருந்ததனாலான வெற்றியே.

கேரளம் ஒரு ஆரோக்கியமான சினிமாக் கலாச்சாரத்துக்கான நிலமாக இருந்தது அண்மைக் காலம்வரை. இன்று அதுவும் நீர்த்துப்போய்விட்டது. எனினும் இடைத்தர சினிமாவுக்கான தளமாக அது தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்த் திரைப்படத்தின் சமகால நிலைமை என்ன? முழு வெகுஜன ரசனைக்கான படவுலகமாக நாறிப்போய்க் கிடக்கிறது. சிவாஜி பிலிம்ஸின் ‘சந்திரமுகி’ திரைப்படம் அமோக வெற்றிபெற்ற படம். அது ஒருவகையில் ‘மணிச்சித்திரத்தாளு’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக். இருந்தும் ‘மணிச்சித்திரத்தாளு’வை பணவசூலில் தூக்கி விழுங்கிவிட்டது ‘சந்திரமுகி’. ஆனால் சினிமாவாக ஓரளவு தேறக்கூடியதாய் இருந்தது ‘மணிச்சித்திரத்தாளு’. வெகுஜன ரசனைப்படமாக சீரழிந்திருந்தது ‘சந்திரமுகி’.

இந்த நிகழ்வுகள் தமிழ்ப் படவுலகின் இன்றைய நிலையை எடுத்துக்காட்டப் போதுமானவை. இவ்வாறிருக்கையில் இதன் பிரதிபலிப்பாக தமிழ்படமெடுக்கும் முயற்சி எங்கே கொண்டுபோய்விடும்? தமிழ் நாட்டிலேயே இதற்கெதிரான மாற்றுப்பட முயற்சிகள் மும்முரமாக எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், அதனை மாதிரியில் கொள்கிறபோது விளைவு எப்படியிருக்கும்? கனடாவில் தமிழ்ப் பட முயற்சிகள் அனைத்தும் இதுநாள்வரையில் தமிழ்ப்பட மாதிரியில் அமைந்தவையாயே இருந்திருக்கின்றன. அவற்றின் தோல்வியின் பின்னணி இங்கிருந்துதான் தொடங்குகிறது.

தமிழ்த் திரைப்படம் இன்னும்தான் தன் புராதன கால பழக்கத்திலிருந்து மாறிக்கொள்ளவில்லை. அதன் ஆட்டங்களும் பாடல்களும் யதார்த்தத்துக்கு மாறானவை என்பதைவிட, சினிமா முறைமைக்கே மாறானவை. காதலன் காதலியரின் டூயட்டும், கனவுக் கன்னியரின் ஆரவார அணிவகுப்புமின்றி படங்கள் உருவாக முடியாதனவாக இருக்கின்றன அங்கே. சில திரைப்படங்களின் வெற்றியே இவ்வகைப் பாடல் ஆடல் காட்சிளினாலேயே சாத்தியமாகியிருப்பதையும் கூறவேண்டும். இவையெல்லாம் மொத்தமாக ஒன்றைத் தெளிவுபடுத்துகின்றன. திரைப்படங்கள் மக்களைக் கெடுத்தன. மக்கள் தம் பங்குக்கு திரைப்படங்களைக் கெடுத்தார்கள் என்றே சொல்லக்கிடக்கிறது.

தமிழ்த் திரைப்படங்களில் விதூ~கமும், பாடல்களும், ஆடல் காட்சிகளும், கொலைகளும் அதற்கான பழிவாங்கல்களும் தவிர வேறு வி~யங்கள் இருப்பதாகக் காணப்படவில்லை. இதுவே வெகுஜன ரசனையாக வளர்க்கப்பட்டிருக்கிறது அங்கே. காமம் சொட்டச் சொட்ட பாடல் எழுதக் கூடியவர் கவிப்பேரரசாக அங்கேதான் கொண்டாடப்பட முடியும். இதை மறுக்கிற திரைப்படங்கள் அங்கே உருவாகியிருக்கின்றனதான். முன்னதானால் ‘பாதை தெரியுது பார்’ என்ற ஒரு திரைப்படத்தையும், அண்மையிலானால் ‘பாப்கோர்ண்’ என்ற படத்தையும் மாதிரிகளுக்காகச் சொல்லலாம். ‘பாதை தெரியுது பார்’ சிலநாட்கள் ஓடிற்று. ‘பாப்கோர்ண்’ ஒரேஒருநாள் மட்டும் சென்னைத் திரையரங்குகளில் ஓடியது. இந்த வயிற்றெரிச்சலை எங்கே போய்ச் சொல்ல? இத்தனைக்கு அது அப்போது பிரபல கதாநாயகியாகவிருந்த சிம்ரனும், மலையாளத்தின் சிறந்த நடிகருள் ஒருவரான மோகன்லாலும் நடித்த படம்.

‘கரை தேடும் அலைகள்’, ‘இனியவர்கள்’, ‘மனசு’, ‘தமிழிச்சி’, ‘கனெடியன்’ என்ற எந்த கனடாத் திரைப்படம் இந்த தமிழ்ப்பட அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை? உலகத்தில் இன்று எத்தனையோ நாடுகள் சினிமாவை தங்கள் கலாச்சார அம்சத்தின் வெளிப்பாட்டுச் சாதனமாக வெற்றிகரமாகக் கைக்கொண்டு கொண்டிருக்கின்றன. ஈரான், துருக்கி, மெக்ஸிக்கோ, ர~;யா என பலநாடுகள் சினிமாவில் சாதனைகளே படைத்துவருகின்றன. கொரியா மீந்தெழும் இன்னொரு நாடு இத்துறையில். மாதிரியாகக் கொள்ளக்கூடிய இந்நாட்டுப் படங்களை நமது கனடாத் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் எத்தனைபேர் பார்த்திருப்பார்களோ?

தொழில்நுட்ப உத்திகளின் வீச்சுடன் வெளிவரும் ஹொலிவுட் படங்கள் பார்வைக்கும், கணநேர உணர்வுத் தீனி போடுபவையாய் மட்டும் இருக்க, மாற்றுப் படங்கள் அல்லது கறுப்புப் படங்கள் மனத்துக்குத் தீனி போடுபவையாய் இருக்கின்றன. அண்மையில் வெளிவந்த ‘இத்தாலியன் போய்’, ‘மோட்டார்ச் சைக்கிள் டயரி’ போன்ற படங்களின் பாதிப்பு இன்றும் உணர்வில் கொள்ளப்படக் கூடியதாய் இருக்கின்றது. காரணம் அவை சினிமாத் தனத்துக்காக எடுக்கப்பட்ட படங்கள்.

சினிமாவுக்கும், திரைப்படத்துக்கும் உள்ள நுட்பமான பிரிகோட்டினை நாம் விளங்கிக்கொள்ளாதவரை, இச் சறுக்கலை நம்மால் தவிர்த்துக்கொள்ள முடியாதிருக்கும்தான். குறும்படங்களில்கூட நாம் கணிசமாகவேனும் முன்னேறியிருக்கிறோம் என்று கூறமுடியாதேயுள்ளது. கனடாவிலுள்ள சுயாதீன கலைப்பட இயக்கத்தினரின் சுலோகம் ‘நமக்கான திரைப்பட மொழியை உருவாக்குவோம்’ என்பதாகும். அதன் இவ்வாண்டுக் குறும்படப் போட்டியில் விமர்சக பரிசுபெற்ற ‘வினை’ குறும்படம், அதன் ஒழுங்கமைவு சிதைந்த பட உத்திக்காகவே பரிசுபெற்றதாய்ச் சொல்லப்பட்டது. இந்த முயற்சிகள் அவசியமானவை.

நாம் எதைச் சொல்லவருகிறோம் என்ற தீர்க்கம், எப்படிச் சொல்வது என்கிற உத்தி, அதை வெளிப்படுத்துவதற்கான அர்ப்பணம் இல்லாவிட்டால், இப் பரந்தவெளித் தேசத்தில் தமிழ்த்திரைப்பட வரலாறு மங்கியேதான் இருக்கப்போகிறது.

(தமிழர் தகவல் ஆண்டு மலர் 2007)

00000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்