கலாபன் கதை:13


கைவிடப்பட்ட கப்பல் வழக்கு


காலம் எதனையும், எவரையும் மாற்றுகின்றது. கலாபனும் மாறியிருந்தான் என்பதை அவன் போனதடவை வந்திருந்தபோது நான் கண்டிருந்தேன். வீட்டு நிலைமை குறித்த அவனது கவனம் அதிகமும் என்னைக் காண திருமலை வந்திருந்த அவனது பேச்சில் இழையோடிக்கொண்டிருந்தது. பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள், தான் கூடவிருந்தால்தான் கல்விச் சிரத்தையும், ஒழுக்க மேம்பாடும் ஏற்படுமென்று அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு அதிசயமாகவிருந்தது. ஆனாலும் ஆச்சரியப்படவில்லை. காலம் எவரையும் மாற்றுகின்றதுதான்.

‘கொழும்பு செல்கிறேன், கப்பல் வேலையெடுப்பதொன்றும் முன்புபோல் சுலபமானதாக இல்லை, கடலிலே மிகப் பெரும் நவீன கப்பல்களின் வருகை, ஓடிக்கொண்டிருந்த ஆயிரக் கணக்கான சிறிய சிறிய பழைய கப்பல்களை இரும்பு விலைக்கு விற்கும்படியாக ஆக்கிவிட்டது, கன காலமில்லை, கொழும்பில் ஒரு மாதம்வரை தங்கி முயற்சித்துப் பார்ப்பேன், முடியாவிட்டால் பம்பாய் போய்விடுவேன், அங்கேயும் என்ஜினியர் வேலைதான் வேண்டுமென்று காத்திருக்க மாட்டேன், என்ஜின் றூம் வேலை எதுவானாலும் சேர்ந்துவிடுவதே எனது எண்ணம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றவன், ஒரு மாதத்திலேயே பம்பாய் சென்றுவிட்டதாக, அவன் எழுதிய கடிதத்தின்மூலம் தெரியவந்தது.

முன்பெல்லாம் தசைச் சுகத்தின் அதீத விழைச்சல்கள்பற்றிய வெறிகொண்ட எழுத்துக்கள் அதிகமும் அவனது கடிதங்களில் காணக்கிடக்கும். இந்தமுறை அவன் மாதுங்காவிலுள்ள அ~;டலட்சுமி கோவில்பற்றியும், புகழ்பெற்ற செம்பூர் முருகன் கோவில்பற்றியும் எழுதியிருந்தான்.

காலம் எதனையும், எவரையும் மாற்றியே விடுகின்றது.

000

கலாபன் பம்பாயில் அதிக நாட்கள் காத்திருந்தானென்று சொல்லமுடியாது. பம்பாயை அடைந்த மூன்றாவது கிழமையிலேயே அவனுக்காகவேபோல் எம்.வி.சென்.கப்ரியேல் என்ற கப்பல் தன் புகைபோக்கியிலிருந்து கரும்புகையினைக் கக்கியபடியே துறைமுகம் வந்துசேர்ந்தது.

திலீப்சிங் என்று அவனுக்கு அண்மையில் அறிமுகமாகியிருந்த ஒரு குஜராத்திக்காரன் துறைமுகத்திலே பைலட்டுகளுக்கான படகோட்டியாய் இருந்தான். ஆறு மணியளவில் கப்பல் துறை சேர்ந்த செய்தியை கலாபனுக்குச் சொன்னது அவன்தான். எட்டு மணிக்கு உள்நுழைய சிரமமிருக்கும் துறைமுக வாசல் வழியே அறிமுகங்களின் துணையோடு உள்ளே சென்ற கலாபன், கப்பலுக்குள் ஏறி நேரே கப்ரினுடைய அறையை அடைந்தபோது, கப்பல் கொம்பனி, சாமான் ஏற்றவிருந்த கொம்பனியின் முகவர்கள் என கப்பலின் உச்சத் தளம் தடல்புடலாகத்தான் இருந்தது. ஆனாலும் ஒரு தாமதத்தை அவன் செய்வதை அவனிடமிருந்த ஏதோவொரு நம்பிக்கை அல்லது ஏதோவொரு விரக்தி தூக்கியெறிந்துகொண்டிருந்தது.

சீருடையில் நின்றிருந்த கப்ரின் அறை வாசலில் நின்றிருந்தான். கிரேக்கனாய் இருக்கவேண்டுமென கலாபன் அனுமானித்துக்கொண்டான். ஆனால் அவன் முன்னால் நின்று கிரேக்கமும் ஆங்கிலமுமாகப் பொழிந்து தள்ளிக்கொண்டிருந்த நெடிதுயர்ந்த அந்த மாவண்ண நிற மனிதன் எங்கத்தையவன் என்பதை அவனால் அனுமானம்செய்ய முடியவில்லை. நிச்சயமாக ஆசியன், குறைந்தபட்சம் இங்கிலாந்தில் குடியுரிமைபெற்று வாழும் ஆசியனாக இருக்கவேண்டுமென எண்ணிக்கொண்டான்.

அவன் சிறிது தாமதிக்க எண்ணிய வேளையில், ‘பொருத்தமான ஆள் அகப்படவில்லையென்றால் அவன் இல்லாமல்கூட அடுத்த துறைமுகம் சேரும்வரை என்ஜினை ஓட்ட என்னால் முடியும். இங்கேயே அவனைத் தூக்கு அல்லது நான் இறங்குகிறேன்’ எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென கப்பல் பிரதம பொறியாளன் என ஆங்கிலத்திலே நிலையில் பொறிக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையிருந்த அறைக்குள் நுழைந்தான் அந்த மனிதன்.

பொருத்தமற்ற வேளையில் வந்துவிட்டதால் திரும்பிப் போய்விட்டு சிறிதுநேரத்தில் வரலாமோ என எண்ணிய கலாபன் அதைச் செயலாக்க முனைகையில், கப்ரினின் முகத்தை ஒருமுறை பார்த்தான். அதில் கோபமே இல்லை. தன் பிரதம பொறியாளனின் கோபத்தைத்தான் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்ற விபரத்தைத் தெரிவித்துக்கொண்டிருந்த ஒருவகையான இளஞ்சிரிப்புத்தான் தவழ்ந்துகொண்டிருந்தது.
கலாபன் சிறிது தயங்கினான். அது அவன் திரும்பி ஓடவேண்டிய வேளையில்லை.

கலாபனைக் கண்ட கப்ரின் என்ன என தலையசைப்பில் வினவினான். விரைந்து கப்பரினை அணுகிய கலாபன், தான் வேலை தேடிக்கொண்டிருக்கும் விபரத்தைக் கூறி தனது கப்பல் அனுபவங்களையும் விறுவிறுவென கிரேக்கத்திலேயே சொல்லி முடித்தான். அவன் காட்டிய கப்பலோட்டியின் அடையாளப் புத்தகம் மற்றும் தகுதிச் சான்றிதழ்களைப் பார்த்துவிட்டு, ‘இவையெல்லாம் மெய்யானவைதானே?’ என பதிலை எதிர்பார்க்காத ஒரு வினாவை உதிர்த்துவிட்டு, ‘நான் அனுப்பியதாக முதன்மைக் கப்பல் பொறியாளரைச் சென்று பார்’ எனக் கூறி அனுப்பினான்.

மிகுந்த நம்பிக்கையோடு முதன்மைப் பொறியாளரின் அறையை அணுகினான் கலாபன். கதவு திறந்திருந்தது. உள்ளே நின்றிருந்த முதன்மைப் பொறியாளர் திரும்பி அவனைப் பார்த்தார். ‘யார்?’ என்றார். கப்ரின் அனுப்பியதாகக் கூறி தனது சான்றிதழ்களைக் கொடுத்தான் அவன். மேசையில் அவற்றை வைத்து ஒரு கையில் மதுக் கிளாஸ் இருந்தவகையில் மறு கையினாலேயே அசிரத்தையாக அவற்றைப் புரட்ட ஆரம்பித்த முதன்மைப் பொறியாளர், பின்னர் மதுக் கிளாஸை மேசையில் வைத்துவிட்டு சிரத்தையுடன் கவனித்தார். ‘மூன்றாம் நிலை என்ஜினியராக ஆறு ஆண்டுகள் வேலை செய்திருக்கிறீரா?’ என்றார். அவரது தமிழ் அவனுக்கு அடுத்த ஆச்சரியமானது. சர்வதேச கடலில் ஓடும் சில கப்பல்களில் சில இலங்கையர் முதன்மைப் பொறியாளர்களாக வேலைசெய்வதை அவன் கேள்விப்பட்டிருந்தான்தான். ஆனாலும் இப்போதுதான் சந்திக்கிறான். ஆச்சரியத்தின் விகாசம் தெரியும்படி புன்னகைத்தவாறே ‘யெஸ், சீஃப்’ என்றான்.

தொடர்ந்து, அது பழைய கப்பலானதால் வேலை அதிகமென்றும், அந்தச் சிறிய கப்பல் கொம்பனியில் மூன்றாம் நிலைப் பொறியாளருக்கு வழங்கப்படும் சம்பளம் குறைவானதுதானென்றும் பல வி~யங்களை முதன்மைப் பொறியாளர் அவனுக்கு எடுத்துரைத்தார். ஆனாலும் அதைத் தீர்மானிப்பது கப்ரினின் கையில்தான் இருக்கிறது என்பதையும் சொல்ல அவர் மறக்கவில்லை. கப்பலில் ஏறிவரும்பொழுதே அவற்றைத் தான் உணர்ந்துகொண்டதாக கலாபன் கூறினான்.

அப்பொழுது உள்ளே வந்த கப்ரின் தனியாக முதன்மைப் பொறியாளருடன் கதைத்துவிட்டு கலாபனிடம் கூறினான்: ‘உனக்கு வேலை தருகிறேன். ஆனாலும் உனக்கான இடத்தை நான் இனிமேல்தான் ஏற்பாடு செய்யவேண்டும். நாளைக்கு மாலையில் வா. நமது முகவருடன் பேசி மற்றவைகளை ஏற்பாடு செய்யலாம்.’

பதினாறு நாட்களின் பின் எம்.வி.கப்ரியேல் பம்பாய்த் துறைமுகத்தைவிட்டுக் கிளம்பியபோது, மூன்றாம் நிலைப் பொறியாளனாக கலாபன் அதில் வேலைசெய்துகொண்டிருந்தான்.

அந்தக் கப்பலில் அவனது முதல் பயணம் சிங்கப்பூருக்கானதாய் இருந்தது.
அந்தப் பதினாறு நாட்களில் கலாபன் செய்த வேலை மற்றைய கப்பல்களில் ஒரு வருடத்தில் செய்யும் பாதி வேலையளவாக இருந்தது. அவன் களைத்துப் போனான். அவன் மட்டுமில்லை, எந்திர அறையில் வேலைசெய்த அனைவருமே ஒரு களைப்போடுதான் பம்பாயைவிட்டு நீங்கியிருந்தனர்.

தரையிலோடும் வாகனங்களுக்குப் போலவே ஆகாயத்திலும், கடலிலும் ஓடும் விமானங்களுக்கும் கப்பல்களுக்கும் விதிகள் உண்டு. இச் சர்வதேச விதிகள் அனுசரிக்கப்பட்டாக வேண்டும். உதாரணமாக கப்பலின் காப்புறுதி, அதன் கடலோடக்கூடிய தகுதிச் சான்றிதழ், அதிகாரிகளின் தகைமை போன்ற வி~யங்கள் முக்கியமானவை. அவைபோல் அது வெளியிடும் புகை சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத அளவுக்கும், டீடைபந எனப்படும் கப்பலின் எந்திரப் பகுதிக் கிடங்குகளிலிருந்து அவ்வப்போது வெளியேற்றப்படவேண்டிய கழிவுநீர், எண்ணெய் மாசற்றதாய் இயற்கை வளங்களை அழித்துவிடாதபடியும் இருக்கவேண்டும் என்பன முக்கியமானவை. பம்பாய்த் துறைமுகத்துள் அந்தளவு புகையை வெளியேற்றியபடி நுழைய முடிந்த கப்பலினால், சிங்கப்பூர்த் துறைமுகத்துள் நுழைந்துவிட முடியாது. அதனால் அவற்றை நிவர்த்திப்பதற்கான வேலைகளைச் செய்துவிட்டே கப்பல் புறப்படவேண்டி இருந்தது. அவற்றையும் சாமான்கள் ஏற்றி முடிப்பதற்கான கால எல்லையில் அவர்களுக்குச் செய்யவேண்டியிருந்தது.
சிங்கப்பூர் கேளிக்கைகளுக்கு ஏற்ற நாடல்ல. ஆனாலும் அங்கேயும் குடி, நடனம், அனுமதிபெற்ற விபச்சார நிலையமென்று இடங்கள் இருக்கவே செய்தன.

இரண்டாண்டுகளுக்கு முன்பு பாங்கொக்கிலிருந்து சொரியல் தானியமாக நெல்லை ஏற்றிவந்தபோது, குரஅபையவழைn என ஆங்கிலத்தில் சொல்லப்படும் தானியப் பூச்சிகளின் நீக்கத்துக்கான மருந்துப் புகை அடிப்பதற்காக கப்பல் சிங்கப்பூரில் ஒரு தனித்த துறைப் பகுதியில் நிறுத்தப்பட்டது. கப்பலில் வேலை செய்த அனைவரும் ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டார்கள். நித்திரை வரும்வரை வெளியே உலவிவிட்டு வரலாம் என வெளியே சென்ற கலாபன் திரும்பி வந்தபோது நள்ளிரவு கடந்திருந்தது. அனுமதியின்றியோ அனுமதியுடனோ இயங்கும் சில விபச்சார வீடுகள் சிங்கப்பூரின் புறநகர்களில் இயங்கின. அங்கெல்லாம் விலைமாது இருந்துவிடமாட்டாள். சென்ற வாடிக்கையாளருக்கு ஒரு புகைப்பட அல்பம் காட்டப்படும். அதிலுள்ள பெண்களின் படங்களைப் பார்த்து ஒருவர் தனது தேர்வைச் செய்துகொள்ளவேண்டும். அந்தப் பெண்ணை அந்த வீட்டு நிர்வாகி தொலைபேசி செய்து அழைப்பார். அன்றைக்கு அந்தச் சுகமும் அனுபவமும் நூற்றைம்பது சிங்கப்பூர் வெள்ளி செலவில் அவனுக்குக் கிடைத்திருந்தது.

சிங்கப்பூரைச் சேரும்வரை அதுமாதிரி எந்தவகையான சபலமும் கலாபன் மனத்தில் எழவில்லை. ஆனாலும் சிங்கப்பூரை ஓரிரவு அடைந்த கப்பலில் இருந்தபடி அதன் கரையின் நிறம்நிறமான மின்விளக்குகளைக் கண்டு ரசித்துக்கொண்டிருந்தவனது மனத்தில் அவை சொல்லமுடியாத தாபத்தைக் கிளர்த்திவிட்டன. அன்று அவன் நூறு அமெரிக்க டொலர்கள் முன்பணம் எடுத்திருந்தான். அது ஏறக்குறைய இருநூறு சிங்கப்பூர் வெள்ளிக்குச் சமானம். அவன் வெளியே சென்று கப்பலுக்கு மீண்டபோது அவனிடம் சில சிங்கப்பூர் வெள்ளிகளே மீதமாக இருந்தன.

மூன்று நாட்கள் சிங்கப்பூரில் தங்கிய கப்பல் ஐக்கிய அரபுக் குடியரசின் ~hர்ஜாவைநோக்கிப் புறப்பட்டது.

ஐக்கிய அரபுக் குடியரசிலுள்ள இன்னொரு அங்கத்துவ நாடான துபாய்போலத்தான் ~hர்ஜாவும். ஆனாலும் துறைமுகம்மட்டும் துபாய்போன்று பெரிதானதில்லை. எம்.வி.கப்ரியேல் ~hர்ஜாவைச் சென்ற சமயம் வளைகுடாவில் மையம் கொண்டிருந்த புயல் கடலைப் புரட்டிக்கொண்டிருந்தது. கடலிருந்து துறைமுகத்தை அரண்செய்த தடுப்பணையில் அலைகள் மோதியதில் நீர் இருபது இருபத்தைந்து அடி உயரத்துக்கு எழுந்து விழுந்துகொண்டிருந்தது. துறைமுகத்திலும் ஏற்றுமதி இறக்குமதி தாமதம். அதனால் வந்த கப்பல்கள் தமது முறைக்காக துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிட்டுக் காத்திருந்தன.

சிறிதுநேரம் முதன்மைப் பொறியாளரின் அறையிலிருந்து உரையாடியும் மதுபானம் அருந்தியும் பொழுதைக் கழித்த கலாபன், தனது அறைக்குத் திரும்பியபோது, பதினொரு மணி. தொலைக்காட்சியில் ஒரு அராபிய மாதுவின் கிறங்கவைக்கும் காதல் சோககீதமொன்றைக் கண்டும்கேட்டும் கொண்டே மேலும் போதையேறிக்கொண்டிருந்தான் கலாபன் தனது அறையில்.

வெளியே ஆக்ரோ~மான அலைகள் கப்பலை மோதிக்கொண்டிருந்தன. அவ்வப்போது அறையின் கண்ணாடி ஜன்னல்வரை வந்து, அறைவெளிச்சத்தில் வெள்ளியலையாகி மீண்டுகொண்டிருந்தன கருநீர்ப் பாளங்கள். கப்பல் சரிவதும் நிமிர்வதுமாயிருந்தது. இருபத்தேழாயிரம் தொன் மொத்த எடையுள்ள கப்பலிலும் வேலைசெய்திருக்கிறான் கலாபன். அந்தக் கப்பலையே அல்லாட வைத்திருக்கிறது சினம்கொள்ளும் கடல். இதன் மொத்த நிறையே மூவாயிரம் தொன். நடுக்கடலானால் அலை தூக்கி எறிந்துவிடும். கரையானதால் சரித்துச் சரித்துவிட்டு திரும்பிப் போய்க்கொண்டிருந்தது.

அப்போது வெளியே முதன்மைப் பொறியாளர் வந்துநின்றார். ‘கலாபன், காலநிலை சரியில்லை. இந்தப் புயற் காற்றில் நங்கூரத்தையும் இழுத்துக்கொண்டு கப்பல் சென்று எந்தக் கப்பலிலாவது அல்லது பாறையிலாவது மோதிவிடக்கூடுமென்று கப்ரின் பயப்படுகிறான். அதனால் புயல் ஓயும்வரை என்ஜினை உடனடியாக இயக்கக்கூடிய விதமாக (ளுவயனெ-டீல) தயார்நிலையில் வைத்திருக்கச் சொல்லியிருக்கிறான். பன்னிரண்டு மணியாகிறதுதானே, உனது கடமை நேரம் தொடங்குகிறது, அதனால் கீழே சென்று எந்திரத்தைத் தயார்நிலையில் வைத்துவிட்டு வா. இது தூக்கமற்ற இரவாகப் போகிறது. தூக்கமில்லாமல் போனால் பரவாயில்லை, கெட்ட இரவாக இல்லாமலிருந்தால் சரிதான்’ என்றுவிட்டுச் சென்றார்.
கீழே இறங்கி என்ஜினைத் தயார்நிலையில் வைத்துவிட்டுத் திரும்பிய கலாபன் உண்டிச்சாலையில் தொலைக்காட்சியை பார்த்தபடி பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தான். நான்கு மணியானது. எதுவித அசம்பாவிதமும் சம்பவிக்கவில்லை. கலாபன் படுக்கை சென்றான்.

ஐந்து மணியளவில் மீண்டும் கதவு தட்டப்பட்டுக் கேட்டது. கலாபன் எழுந்து வந்து கதவைத் திறந்தான். முதன்மைப் பொறியாளர். ‘ஏதேனும் ஆபத்தா?’ என்று அவசரமாய்க் கேட்டான் கலாபன். ‘ஆபத்துத்தான். எங்களுக்கில்லை. எங்களுடைய கொம்பனியின் மற்றக் கப்பலுக்கு. அதுவும் ~hர்ஜா வந்திருக்கிறது நேற்று. ஆனால் எப்படியோ ஒதுங்கிப்போய் கரையில் ஏறிவிட்டது. வெளிக்கிட்டு எனது அறைக்கு வா, எல்லாம் சொல்கிறேன்’ என்றுவிட்டுச் சென்றார்.

முதன்மைப் பொறியாளரின் முகத்திலிருந்த யோசனை, கொம்பனியின் கப்பல்களில் ஒன்று கரையிலேறிவிட்டதால் ஏற்பட்டதாய்த் தோன்றவில்லை கலாபனுக்கு. அவன் விரைந்து வெளிக்கிட்டுக்கொண்டு முதன்மைப் பொறியாளரின் அறைக்குச் சென்றான்.
கப்ரினின் அறை திறந்திருந்தது. கப்ரினைக் காணவில்லை. மேலே சுக்கான் தளத்தில் நின்றிருக்கக்கூடுமென கலாபன் எண்ணினான்.

அவன் முதன்மைப் பொறியாளரின் அறைக்கு வந்தான். ‘இரு’ என்றார். அவன் எதிரே அமர்ந்ததும் சொன்னார்: ‘அரை மைல் தூரத்துக்கு கப்பலை இழுத்துப் போயிருக்கிறது புயல். யாரும் கவனிக்கவில்லை. இப்போது கப்பல் பின்புறமாக கரையிலேறி நிற்கிறதாம்.’

‘என்ன செய்யப்போகிறார்கள்? இழுவைப் படகின்மூலம் இழுத்தெடுக்க முடியாதா?’

‘முடியும். ஆனால் கொம்பனி அதை விரும்பவில்லை. ஏனென்றால் அது மிகவும் சிக்கலான நிலைமையை உருவாக்கக்கூடியது. அதனால் எங்களை இழுத்துவிடக் கேட்டிருக்கிறார்கள்.’

‘முடியுமா? நாங்களே சாமான்களோடு நிற்கிறோம். அந்தக் கப்பலும் சாமானோடுதான் நிற்கும்.’

‘கடினம்தான். ஆனாலும் முடியும். இருந்தாலும் அதை நாங்கள் செய்யப்போவதில்லை. அது எங்களுக்கு ஆபத்தானது. கப்பலை இழுப்பதற்கான முயற்சியில் இந்தக் கப்பல் அதனோடு மோதி ஏதாவதொன்று அல்லது இரண்டுமே சேதமடையும் வாய்ப்பிருக்கிறது. மேலும் இதுவே கரைதட்டிவிடும் அபாயமும் நேரலாம்.’

‘கப்ரின் என்ன சொல்கிறார்?’

‘கப்ரினுக்கும் விருப்பமில்லை. ஆனாலும் செய்யச்சொல்லி மிகுந்த அழுத்தம் கொம்பனியிலிருந்து வந்துகொண்டிருக்கிறதாம். மேலும் துபாயில் கொம்பனியின் அதிகாரமுள்ள போர்ட் கப்ரினாக ஒரு அமெரிக்கன் இருக்கிறான். அவன் வருவதாக இருக்கிறது. அவன் கப்பலுக்கு வந்து கப்பலின் பயண விபரங்கள் பதியப்படும் லொக்புக்கில் கப்பலுக்கு எதுவும் ஆபத்து நேர்கிற சமயத்தில் தனக்கு அதில் எவ்வித பொறுப்புமில்லை, தான் கம்பெனியின் நிர்ப்பந்தத்திலேயே அவ்வாறு கருமமாற்றியதாக எழுதி கையெழுத்திட்டுத் தரவேண்டும் எனக் கேட்கும்படி கப்ரினிடம் சொல்லியிருக்கிறேன்.’

புயல் தணிந்திருந்தது. ஆனாலும் சிறிய ஒரு கப்பலுக்கு அது இடைஞ்சல் செய்யப் போதுமானதுதான். இருந்தும் ஒரு இழுவைப் படகில் போர்ட் கப்ரின் பத்து மணியளவில் வந்துசேர்ந்தான்.

அவனது எந்தக் கோரிக்கையும் கப்ரினிடமோ, முதன்மைப் பொறியாளரிடமோ பலிதமாகவில்லை. கடைசியில் கப்பலை இழுக்கும் அனுமதியையும், அதனால் இடரேதும் ஏற்படின் அதில் கப்ரினுக்கோ பொறுப்பான மற்றவர்களுக்கோ பங்கில்லையென்றும் லொக்புக்கில் எழுதி கையெழுத்திட்டான் ஜோன் பலற்ரோனி என்ற அந்த போர்ட் கப்ரின்.
கப்பல் தன் சகோதரக் கப்பலை கடலில் இழுத்துவிட பதினொரு மணியளவில் புறப்பட்டது. கலாபன் தன் கடமையைப் பொறுப்பெடுத்து ஒரு மணத்தியாலத்துக்கிடையிலேயே எல்லாம் முடிவடைந்துவிட்டன.

எதிர்பார்த்ததுபோல் பெரிய சிரமங்கள் ஏதுமின்றி எம்.வி.ஸ்மூத்வேவ் என்ற கொம்பனியின் மற்றக் கப்பல் கடலுள் இழுத்துவிடப்பட்டுவிட்டது. எம்.வி.கப்ரியேல் அதற்கு அடுத்தநாள் துறைமுகத்துக்குள் புகுந்தது. அதற்கு முன்னதாகவே எம்.வி.ஸ்மூத்வேவ்.

இரண்டு நாட்களாக கப்ரினுக்கும், முதன்மைப் பொறியாளருக்குமிடையே மிகுந்த தணிந்த குரலிலான பேச்சுக்கள் நடந்துகொண்டிருந்தன. கலாபன் சென்ற வேளைகளிலெல்லாம் அறை, ஒன்றில் வெறுமையாக இருந்தது, இல்லையேல் முதன்மைப் பொறியாளரையும் கப்ரினையும் ஒன்றாகக் கொண்டிருந்தது.

~hர்ஜாவைவிட்டுப் புறப்பட்ட கப்பல் பாஹ்ரினை அடைந்தது. கப்பல் துறைமுகத்தை அடைந்த மறுநாள் தனது கடவுச்சீட்டை புதுப்பிக்கவேண்டியிருப்பதாகக் கூறிக்கொண்டு முதன்மைப் பொறியாளர் ஒருமுறை வெளியே சென்றுவந்தார்.
எல்லாம் சுமுகமான நிலையில் காலம் ஓடிக்கொண்டிருந்தது.

முதலில் முதன்மைப் பொறியாளர் தனது ஒப்பந்த காலம் முடிந்து விலகிச்சென்றார். கொழும்பு வோட் பிளேஸில் உள்ள தனது வீட்டு முகவரி கொடுத்து அடுத்த மாதமளவில் ஒப்பந்தம் முடியவிருந்த அவனை இலங்கை வந்ததும் சந்திக்கக் கேட்டிருந்தார்.
நிறைய பங்களாதே~pகள், பாகிஸ்தானியர், இந்தோனி~pயராக மாலுமிகள் இருந்த அந்தக் கப்பலில் ஏதோவொரு காரணத்தைச் சுட்டி எப்போதும் சண்டைகள் நடந்துகொண்டிருந்தன. கலாபனுக்கு முன்னர் மூன்றாவது பொறியாளனாக இருந்த பாகிஸ்தான்காரனின் முதன்மைப் பொறியாளருடனான வாக்குவாதமும் சரீரத் தாக்குதல் அளவுக்கான முனைப்புமே அவனை பம்பாயில் இறக்கிவிட வைத்தது. இவ்வாறு ஒரு சுமுகமான நிலை அற்றதாகவே கப்பல் தொடர்ந்து இருந்துவந்தது. கலாபனே முந்திய மூன்றாம் பொறியாளனான தனது நண்பன் வேலையிழக்கக் காரணம் என்பதுபோல் இன்னொரு பாகிஸ்தானி கொஞ்சக் காலம் அவனோடு முறுகல் காட்டிக்கொண்டு திரிந்தான். இவை காரணங்களாய் நீண்டகாலம் அந்தக் கப்பலில் வேலைசெய்ய கலாபனும் பிரியமிழந்திருந்தான். ஒரு சித்திரைப் புத்தாண்டில் வீடு செல்லக்கூடியமாதிரி தனது விடுப்பைக் கோரி ஒரு மாதத்தின் முன்பாக கொம்பனிக்கு அறிவிப்புச் செய்தான் கலாபன்.

எண்பத்தொன்பதாம் ஆண்டு சித்திரையில் அவன் தன் வீட்டிலிருந்தான்.
பின்னர்தான் தனது பழைய முதன்மைப் பொறியாளரைச் சந்திக்க அவன் கொழும்பு பயணமானது.

பழைய கப்பல் முதன்மைப் பொறியாளர் சொன்ன தகவல்கள் அவனை தூக்கியெறிந்துவிட்டன. ஒரு கப்பலை இன்னொரு கப்பலோ இழுவைப்படகோ இழுத்துக் கரைசேர்க்கிற பட்சத்தில், அந்த ஆபத்துக்குள்ளான கப்பலின் பெறுமதியினதும் அதிலுள்ள சாமான்களின் பெறுமதியினதும் பாதியை கோரிக்கொள்ள உதவிசெய்த கப்பலுக்கு உரிமையுண்டு என்பது அவன் இதுவரை கேள்விப்படாதது. தனது கடவுச்சீட்டைப் புதுப்பிக்க வேண்டியிருப்பதாகச் சொல்லிக்கொண்டு பாஹ்ரினை கப்பல் அடைந்ததும் தான் வெளியே சென்றது கப்பல் லொக்புக்கை பிரிட்டி~; தூதுவராலயத்தில் சமர்ப்பித்து அதை அவர்களிடம் உறுதிசெய்து பெற்றுக்கொள்வதற்காகவே என்றும் அவர் சொன்னார்.

எல்லாம் ஒரு குழப்ப நிலையில் கலாபனைத் தள்ளிவிட்டன. அவன் பதில் சொல்லவே முடியாது திண்டாடிக்கொண்டிருந்தான். கப்பல் கரைதட்டிய கப்பலைக் கடலில் இழுத்துவிட்ட சமயத்தில் இருந்த அத்தனை பேருக்குமே அந்தத் தொகையில் பங்கு உண்டென்றும், அவனது பதவியைப் பொறுத்து அவனுக்கும் இருபத்தைந்து லட்சங்கள்வரை கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டென்றும் அவர் சொன்னபோது அவன் திகைத்துப்போனான்.

எத்தனை நாட்கள் அவன் கொழும்பில் நிற்பான் என அவர் கேட்டதற்கு அவன், ‘இரண்டு மூன்று நாட்களில் திரும்புவதாக எண்ணிக்கொண்டுதான் வந்திருந்தேன். தேவையானால் சில நாட்கள் கூடுதலாக நிற்கலாம்’ என்றான்.

‘அது போதும். முந்திய கப்ரினிடமிருந்து எந்தவிதமான தகவலும் இல்லை. இந்த ஈட்டுக் கோரலை அவர்தான் முன்னெடுக்கவேண்டும். எவ்வளவோ ஆர்வமாக இருந்த அவரிடமிருந்து ஒரு சேதியும் இல்லாத நிலையில், நானே இந்த முயற்சியைத் தொடரவிருக்கிறேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. லொக்புக்கின் ஒரு பிரதியெடுத்து அதிலும் பிரிட்டி~; தூதுவராலயத்தில் கொடுத்து உறுதிசெய்து வைத்திருக்கிறேன். சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்ததில் இது போதுமென்றே கூறினார்கள். விரைவில் வழக்கைத் தொடுக்கவுள்ளேன். நீ ஒரு சாட்சியாக எனக்குத் தேவை. அதனால் வழக்கு விபரம் தெரியும்வரை நீ எந்த கப்பலேறும் முயற்சியையும் மேற்கொள்ளாமலிருக்க வேண்டும். சுமார் கால் கோடி ரூபா வரவிருக்கிற நிலையில் சில ஆயிரங்களுக்காக நீ அவசரப்படத் தேவையில்லையல்லவா?’ என்றார் அவர்.

அவன் சம்மதித்தான்.

வழக்கு தொடுத்துவிட்டதாக அவன் யாழ்ப்பாணம் திரும்பிய ஒரு வாரத்தில் கடிதம் வந்தது அவரிடமிருந்து. பின்னர் ஒரு மாதத்தில் கொழும்பு போன கலாபன் அவரையும் சென்று சந்தித்தான். வெகுநம்பிக்;கையோடு அவனுடன் பேசி அனுப்பினார்.

முந்தியமுறை கொழும்பிலிருந்து யாழ் திரும்பியபோது சிறிது அவநம்பிக்கையும், சிறிது கலக்கமும் அவனிடத்தில் இருந்திருந்தன. அந்த முறை அவன் அவரை முழுதாகவும் நம்பிவிட்டிருந்தான். ஒருவகையில் ஒரு லட்சாதிபதி ஆகிவிட்ட மனநிலையே அவனிடம் ஏற்பட்டுவிட்டது.

வீட்டில் சிறிது உல்லாசமாகவே இருந்தான் கலாபன். உல்லாசம் அவனது சிறிய சேமிப்பையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துக்கொண்டிருந்தது. பிள்ளைகளுடன் இருப்பதான மனநிறைவைத் தவிர வேறை அவன் அந்த நாட்களில் அறிந்ததில்லை. ஆறு மாதங்களாயின. ஒன்பது மாதங்களாயின. பழைய முதன்மைப் பொறியாளர் வீட்டில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஒரு முறை கொழும்பு சென்றான்.

அவரது பதில் அவனது கனவுகளைச் சுக்குநூறாக நொருக்கியது.

ஒரு கப்பல் கொம்பனியென்பது அதன் சொந்த தேசத்தில் அத்திபாரம் கொண்டதுதான், ஆனாலும் அதன் வியாபார வலைப் பின்னல் உலகமளாவியது, தனக்கெதிரான எந்த எதிர்ப்பையும் அது அந்த வலைப் பின்னல் மூலமாகவே நிர்மூலமாக்கிவிடுகிறது எனவுரைத்தவர், ‘இது எனது நாடு, இருந்தும் என்னையும் என் குடும்பத்தையும் இங்கேயே அழித்தொழித்துவிடுவதாக இங்குள்ள ரௌடிகள் மூலமாகவே எச்சரிக்கைவிடுக்க அதனால் முடிகிறது. என் இரண்டு பெண்பிள்ளைகளையும் விபச்சாரிகளாக்கி தெருவில் அலைய வைத்துவிடுவதாகச் சொன்ன எச்சரிக்கையோடு நான் கலங்கிப்போனேன், கலாபன். வழக்கைத் திரும்பப் பெறுவதைத் தவிர எனக்கு வேறுவழியே இருக்கவில்லை’ எனத் தொடர்ந்து கூறி அந்த உரையாடலுக்கு முற்றுப் புள்ளியிட்டார்.

கலாபன் மெல்லிய சிரிப்பையாவது காட்டி தனது ஏமாற்றத்தை மறைக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தான்.

வழக்கு தொடரப்பட்டதோ, பின்னர் அது கைவிடப்பட்டதோ பத்திரிகையுலகத்துக்குத் தெரியவேயில்லை. அத்தனைக்கு சர்வதேச ரௌடிசம் வலுவானதாயே இருந்தது.

இந்தக் கைவிடப்பட்ட கப்பல் வழக்கில் வழக்காளியோ குற்றஞ்சாட்டப்பட்டவரோ யாருமே பாதிக்கப்படவில்லை. சாட்சியே பாதிக்கப்பட்டிருந்தான்.

கலாபனது மனத்தில் அந்த ஏமாற்றம் நீண்டகாலமாக இருந்தது.

அதையும் காலம் மாற்றுமா?

000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்