கலித்தொகைக் காட்சி: 6


‘அறம் அல்லவற்றைச் செய்தால் இயற்கையேபொய்த்துவிடும்’

-தேவகாந்தன்


அகனைந்திணையின்படி குறிஞ்சித் திணைக்குரிய ஒழுக்கம் புணர்தல் ஆகும். கலித்தொகையில் இத்திணைக்குரிய இடம் இரண்டாவது. பாலைக்கலியின் பிரிவுத்துயரிலே வாடிய  தமிழ் நெஞ்சங்கள் மலைச் சாரல் அழகையும், அம்மலைகளினடியிலே தவழுகின்ற இளம் குழவியான  தேன் நிலவின் எழிலையும், அதுபற்றிய  புலவனின் கற்பனையையும்,  தலைவியர் கற்பையும், சமுதாய நெறியையும், வாழ்க்கை முறையையும் கண்டு களிப்படையமுடியும்.

‘குறிஞ்சிபாடக் கபிலன்’ என்பது முதுமொழி. குறிஞ்சிக் கலியைப் பாடியிருப்பவரும் கபிலரே என்று சில தமிழாராய்ச்சி வல்லுனர் துணிந்துள்ளனர். இன்னும் சிலர் தொகுக்கப்பட்ட அச் செய்யுட்களைப் பல புலவர் பாடினர் என்பர்.  இது ஆய்வுக்குரிய  விடயம். ஆகவே அவ்வாராய்ச்சியை  விடுத்து இங்கு காட்சிகளைக் கவனிப்போம்.

தமிழிலக்கியங்களை எடுத்துப் பொதுவாக நோக்கினால் ஐந்து ஒழுக்கங்களிலும் ஒருவகைப் பிரிவின் துயரே   காணக்கிடக்கின்றது. தலைவனும் தலைவியும்  ஒருவரை  ஒருவர் சந்திப்பதற்கும் பின்னர் அவர்கள் சந்திக்கும் பகற்குறி இரவுக்குறி  நிகழ்தற்கும் மலைநாட்டிலுள்ள தினப்புனங்கள்  மிக்க  உதவிசெய்யக்  கூடியன. இவ்விடங்களில் ஒருவரை ஒருவர் கண்டு விரும்பியபின் அவர்கள் பிரியவேண்டி  வரும். சிலபோது  தம்முள்ளே  புணர்ந்த  பின்னரும் அப் பிரிவு  ஏற்படலாம். தலைவனே தலைவியைச் சந்திக்க  வராத  நேரங்களும்,  வரமுடியாத கஷ்டங்களும் ஏற்படும். இவ்வளவு  துயரங்களையும் தோழி  நீக்குவதே  குறிஞ்சிக் கலியிலுள்ள  பாடல்களின் முக்கியமான  தன்மையாகும்.

ஆயலோட்டி  நின்ற இளம் யுவதி  தலைவனை  ஒருநாள் தினப் புனத்திலே கண்டாள். தலைவனும் அவளைப் பார்த்தான். கண்ணோடு கண்ணிணை நோக்கினால் வாய்ச் சொற்கள் பயனில்லாதன என்ற குறளின் இலக்கணம், அக்குன்றுதோறும் குமரன் ஆடும் நிலத்திலே இலக்கியமாகி  மிளிர்ந்தது.  களவோடுமட்டும் நிற்பதால் சமுதாயம் இகழக்கூடும் அவர்களது உறவினை. எனவே அதைக் கற்பொழுக்கமாக மாற்றிவிட  தலைவி நினைக்கிறாள். தன் கருத்தைத் தோழிக்குக் கூறுகிறாள். இனிமேல் திருமணத்தை நிறைவேற்ற வேண்டியபொறுப்பு தோழிக்காய் விடுகிறது.

இந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதோழி  ஒரு யுக்தி மூலம் அவர்களது திருமணத்தை நிறைவேற்ற நினைக்கிறாள்.  அதன்படிஅத் திருமணத்தை நிறைவேற்றியும் வைக்கிறாள்.

தோழிதலைவியின் பெற்றோரிடத்திலே கூறியது இது: ‘தலைவி நீராடிக்கொண்டிருந்தாள். அப்போது கால் தளர்ந்து கண் மயங்கி ஓடுகின்ற ஆற்று நீரோடு மெய் உருளப்பட்டாள். அங்கே வந்த தலைவன் திடீரென அவ்வாற்றிலே பாய்ந்து  அவளைக் காப்பாற்றிக் கரைசேர்த்தான்.

‘பூணாகம் உறத் தழீஇப் போதந்தான் அகன்அகலம்
வருமுலை புணர்ந்தன என்பதனால் எம்தோழி
அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே’
ஆனாள்.(அவன் கரைசேர்த்தபோது  அவளுடைய  மெய் அவனுடையமெய்யோடுஅணைந்ததினால் அவனையே திருமணம் செய்யவேன்டுமென்ற  நோக்கம்கொண்டு கற்புநிலை  சிறந்தாள்).’

இவ்வாறு கூறியதோழி, தலைவியின் பெற்றோர் இத்திருமணத்திற்கு மறுத்தால் விளையக்கூடியதையும் எச்சரிக்கிறாள்.
‘வள்ளி கீழ்வீழா, வரைமிசைத் தேன்தொடாஅ, கொல்லைகுரல்வாங்கிஈனா, மலைவாழ்நர் அல்ல செய்தொழுகலான்.’
மலைவாழும் குடியோரே, குறிஞ்சிநில மங்கையர் கற்புநெறியில் நிற்பதால்தான் உலகமே இயங்குகின்றது. மலைநாட்டு இளைஞரின் கைவேல் குறிதவறாமைக்கும் அவர்களுடைய கற்பே காரணம்.  இத்தகைய மகளிரின் கற்புநிலை பிறழ  நீவிர் நடந்தால் வள்ளிக் கொடியில் கிழங்குவிழாது, மலையிலே தேனீ தேன்தொடாது  போய்விடும். எனவே இதற்குச் சம்மதிப்பீர் என்ற அவளது எச்சரிக்கையைக் கேட்ட பெற்றோர் சம்மதித்துவிட்டனர். இம் மகிழ்ச்சியைத் தோழி தலைவிக்குக் கூறி மகிழ்வதாக குறிஞ்சிக் கலியின் இப் பாடல்அமைந்திருக்கிறது.
0000
ஈழநாடுவாரமலர், 16.02.1969

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்