அதை அதுவாக 10-1

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 10-1

‘குறளை ஒரு எண் கணக்கில் வள்ளுவன்
பாடிவைத்திருப்பது சாத்தியமா?’

- தேவகாந்தன் -


4



செல்வத்தைச் சேர் என்று அறத்துப் பாலில் ஒருபோது வற்புறுத்திய வள்ளுவன் இங்கே செல்வத்தைச் சேர்ப்பதனை எள்ளிநகையாடுகிறான். இது ஒருவகை எள்ளல்தான். தீயனவெல்லாம் செய்தே செல்வம் சேர்க்கப்படுகிறதென்பது மகா ரசமான எள்ளலும்.

பணத்தைச் சேர்ப்பதையும், அதைச் சேர்த்தவன் உடைமையாளனாய் ஆவதையும் முதலாளியம்தான் ஊக்குவிக்கும். வள்ளுவன் செய்துவிட முடியாது. அதனால் செல்வச் சேர்ப்பு அவனுக்கு உபகாரம்பற்றியது, அறக் கொடைகள் பற்றியதுமட்டுமே. அப்படியே செல்வந்தனாய் வர முடியாதுபோனாலும் கவலையில்லை என்றிரு என்பதே வள்ளுவ உபதேசம். ஆனாலும் ஒருவன் எவ்வளவுதான் பிரயத்தனம் பண்ணினாலும் செல்வந்தனாகிவிட முடியாது என்கிறான் அவன். ‘வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’ (குறள் 377) என்பதில் இந்த நிச்சயத்தை விழுத்துகிறான் அவன்.

அதுபோல தனக்கென ஆக வேண்டிய செல்வத்தை வேண்டாமென்றிருந்தாலும் அது போகாது என்பதும் அவன்தான். அந்தக் குறள் இது: ‘பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம’ (குறள் 376). வருகிற காலத்தில் வந்து, போகிற காலத்தில் செல்வம் போகத்தான் செய்யும் என்பது இதன் விளக்கம். ஆகூழ் காலத்தில் ஆகி, போகூழ் காலத்தில் போகும் என்று சுருக்கமாக இக் கருத்ததைப் பதிந்து வைத்துக்கொள்ளலாம்.

ஆகூழ் காலத்தில் எல்லாம் நல்லனவாக அமைந்து அனுபவித்துப் போகிறவர்கள், தீயூழ் காலத்தில் செல்வம் போகிறபோதுமட்டும் புலம்புவதேன்? இவ்வாறு ஒரு குறள் கேட்கிறது. ‘நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்?’ (குறள் 379).


இவ்வாறெல்லாம் சொல்வதின்மூலம் தீயூழை முகங்கொள்ளும் திண்மையை வள்ளுவன் வற்புறுத்துகிறானென்றே கொள்ளவேண்டும்.

இந்தப் பகுதியிலே நான் சற்று விரித்துரைத்த கருத்துக்கள் யாவும் குறளின் மவுனம் விரிந்த இடங்களிலிருந்து பெறப்பட்டவை. என் பார்வையில் விழுந்தபடிதான்.




5


இவ்வளவு தெளிவு ஏற்பட்ட பிறகும் ஒருசில காலத்தின் முன் சில அய்ய அலைகள் என் மனத்திலே அடித்துக்கொண்டிருக்கச் செய்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அப்போது வேறுவேறு தருணங்களில் வாசித்தவோ வாதித்தவோவான கருத்துக்கள் மனத்தில் எழுந்து நர்த்தனம் புரிந்துகொண்டிருந்தன.

திருக்குறளிலுள்ள 1330 குறள்களும் வள்ளுவனால் பாடப்பட்டவைதானா? திருக்குறளின் அதிகார வைப்பு வள்ளுவனால் செய்யப்பட்டதா? திருக்குறளில் இடைச்செருகல்கள் இல்லையா? தம் தம் கருத்துப்படி உரைகாரரால் மாற்றங்கள் புகுத்தப்படவில்லையா? திருக்குறளை ஒரு எண் கணக்கில் வள்ளுவன் பாடிவைத்திருப்பது சாத்தியமா?

இதைப் பாருங்கள். குறளில் வரும் சீர்கள் ஏழு. அறத்துப் பாலில் 34 அதிகாரங்கள். அந்த எண்களைக் கூட்ட வருவதும் ஏழு. பொருட்பாலில் எழுபது அத்தியாயங்கள். அதில் வருவதும் ஏழு. இன்பத்துப் பால் இருபத்தைந்து அதிகாரங்களைக் கொண்டது. அதுவும் கூட்ட ஏழாக வரும். பாயிரம் நான்கு அதிகாரங்களைச் சேர்க்க மொத்தம் 133 அதிகாரங்கள் ஆகும். 133ஐக் கூட்டினாலும் ஏழு. இப்படி ஏழு என்ற எண்ணை வைத்துக்கொண்டு வள்ளுவன் குறளை யாக்கத் துவங்கியிருப்பானா?

எல்லாவற்றையும் ஊழ் வெல்லும் வல்லபம் வாய்ந்தது என்றவன் இன்னோர் இடத்திலே எதையும் முயற்சியினால் அடைந்துவிட முடியும், முயற்சியினளவுக்காவது அடைய முடியும் என்றிருப்பானா? அப்போது அவன் சொன்ன இந்த ஊழின் மொய்ம்பு என்ன ஆகும்?

இக் கேள்விகளில் நிறைந்த நியாயங்களுண்டு.

ஊழ் என்பதனை கெட்டது என்ற அர்த்தத்தில் மட்டும் நாம் பார்த்துக்கொண்டிருந்ததனால் ஏற்பட்ட கோளாறிது என்று இப்போது எனக்குச் சமாதானம் பிறக்கிறது. வள்ளுவனே இச் சந்தேகத்தை மிகத் தெளிவாகவும் சந்தேகத்துக்கிடமின்றியும் தீர்த்துவிட்டிருக்கிறான். அதுதான் ஆகூழ், போகூழ் என்ற வகைப்பாடு. இதுவும் ஒருவகைச் சமாளிப்புத்தான் என மனம் முழுத் தெளிவடைய மறுத்திருந்தாலும், அமைதி காண முடிகிறது. எண்வழியான படைப்பு முயற்சிக்குமட்டும் பதிலுமில்லை, சமாளிப்புமில்லை.

அதை அதுவாகவே பார்த்தல் என்பதுதான் அதை அதுவாக அடைதலுக்கான மூலதளம். அந்தத் தளத்தை நாம் இழந்துவிட்டதாகவே எனக்கு எண்ணத் தோன்றுகிறது. இடைச் செருகல்கள், திரிபுபடுத்தல்கள் யாவும்கூட நடந்திருப்பதாகவேதான் நான் கருதுகிறேன். ஆனாலும் திருத்த முடியாத மாற்றங்களாகிவிட்டன அவை.




6


‘ஊழிற் பெருவலி யாவுள’ என்ற குறள் இவ்வதிகாரத்தின் கடைசிக் குறள். ஊழ் அதிகாரம் ஊழியலின் ஒரேயொரு அதிகாரம். இவ்வதிகாரம் அறத்துப்பாலின் இறுதியில் வருகிறது.

அடுத்த பகுதி பொருட்பால். அதன் தேர்வுகளே மேலே வரப்போவன.

000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்