இரண்டாம் உலக இந்து மாநாடு குறித்து.......




இம் மாதம் இரண்டாம் தேதி தொடங்கி ஆறாம் தேதி வரை ஐந்து நாட்கள்  கொழும்பிலும், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன உலக இந்து மகாநாட்டின் நிகழ்வுகள்.

முதல் நாள் ஆரம்ப நிகழ்வுகளில் ஜனாதிபதியும் , பிரதமரும் பங்கேற்றிருந்தனர். இரண்டாம் நாள் பகலில் ஆய்வு அமர்வுகள் நடைபெற பல இடங்களிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. மாலையில் கலை கலாச்சார நிகழ்வுகள். ஞாயிறு மாலை ஆறு மணியிலிருந்து நள்ளிரவு வரை கலை கலாச்சார நிகழ்வுகளுக்கான மேடை காலிமுகத் திடலில் அமைக்கப்பட்டிருந்தது. கடல் போல் நிறைந்திருந்தது கூட்டம். சமுத்திர ஓங்கார ஓசையை அடக்கி எழுந்துகொண்டிருந்தன, சுவர் போல் அமைக்கப்பட்டிருந்த மேடையின் இருபுறத்து ஒலிபெருக்கிகளின் ஊடாக நிகழ்ச்சிகளின் ஒலிப்பு. இரு திரைகளில் தூர இருப்போருக்கான வீடியோ படப்பிடிப்பு நகர்ந்துகொண்டிருந்தது. திங்கள் மாலை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபம் சென்றேன். வெள்ளவத்தை , பம்பலப்பிட்டி எங்குமே 'ஓம் நமசிவாய' என்ற  ஐந்தெழுத்து மந்திரம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. மனதை ஏதோ செய்து பரவசமாக்கிற்று.

மகாநாட்டின் பூரண வெற்றியை அறிவித்துக்கொண்டு சகல நிகழ்வுகளும் நேற்று ஓய்ந்தன. இப்போது மாநாட்டு நோக்கத்தினது வெற்றி தோல்விகளை , உப விளைவுகளை பார்க்கத்தான் வேண்டும். அவசியம்கூட.

இந்தியாவில் இத்தகையதொரு மாநாடு பலத்த சர்ச்சைகளைக் கிளர்த்தியிருக்கும். மத்தியில் ஆட்சிசெய்யும் கட்சியானது இந்துத்துவ முன்னெடுப்பு, மதம்சாரா மற்றைய கட்சிகளை ஓரணியில் திரளவைத்திருக்கின்றது. இந்தியாவில் தற்போதைய பிரச்னை பொருளாதாரம், கல்வி, பெருகிவரும் தேய்வுநோய் கூட அல்ல; இந்துத்துவம்தான். பாகிஸ்தானுடனான பிரச்சனைகளின் தொடர்ச்சியும் இதே பின்னணியிலேயே பார்க்கப்படவேண்டும். காஷ்மீர் பிரச்னை அணுகப்படவேண்டிய வழியும்கூட இதுதான்.  இத்தகைய நிலையில் ஓர் உலக இந்து மாநாடு அங்கு பல நாச காரியங்களை மிக்க சலனமின்றி ஆற்றியிருக்கமுடியும்.

இலங்கையில் இத்தகைய விளைவுகளுக்கு அதன் சமூக அமமைப்பு இணக்கமாக இல்லை. இங்கே இந்து மதம்- குறிப்பாக சைவ மதம்- உண்டே தவிர இந்துத்துவம் இல்லை. எனினும் திக்கம், அகண்ட இந்து ராஜ்யக் கனவுகள் இல்லாவிடினும், அர்த்தமளாவி அது அனர்த்தங்கள் சிலவற்றையேனும் இங்கு விளைக்காமல் விட்டுவிடவில்லை. இலங்கைத் தமிழ்ச் சமூகத்துக்கிடையேயுள்ள சாதிப்பாகுபாடு மதம் சார்ந்து விளைந்து வளர்ந்ததுதான்.

இப்போது நாம் ஒரு கேள்வி கேட்கலாம்."இலங்கையில் நடைபெற்ற 2ம் உலக இந்து மாநாட்டின் மூலம் உண்மையில் ஏதாவது நன்மை அடையப்பட்டிருக்கிறதா?"

ஓம், இலங்கைத் தலைநகரில் தமிழர்களால் இப்படி ஒரு விழாவினை நடத்த முடிந்திருக்கிறதென்பதே நன்மையான விஷயம்தானே என்று யாரேனும் பதில்சொல்லக் கூடும்.

உண்மையில் மிகவும் ஆழமாக நிலைமைகளை ஆய்ந்து பார்த்துக் கூறுவதானால், ஓரளவு மட்டுமே இது நன்மை கண்டிருப்பதாக என்னால் கூறமுடிகிறது.

இந்து சமயம் இலங்கைத் தமிளர்களது மதம் மட்டுமில்லை, அது இந்தியாவில் ....பூட்டானில்...நேப்பாளத்தில்....மோரிஷியஸ்ஸில் எல்லாம்கூட இருக்கிறது. அப்படியான நிலையில் ஓர் இந்து மாநாட்டை இங்கே கூட்டுவதில் என்ன கஷ்ரம், யாருக்கு எற்பட்டுவிடப்போகிறது? அதுவும் அரசாங்கம் எடுத்த விழாவுக்கு? தனிநபர்கள் சிலர் பெரும் பங்காற்றினார்கள் என்பது மெய்யே. ஆக, இன நல்லிணக்கத்தைக் காண வேண்டின் தமிழ் விழா, குறைந்த பட்சம் தமிழாராய்ச்சி மாநாடு, இலங்கைத் தலைநகரில் நடக்க வேண்டும். சிங்கள உறுமய கட்சியும் , ஜே.வி.பி.யும் அதற்கு இசைந்து கொடுத்துவிடும் என்கிறீர்கள்? எதார்த்தத்தில் வாழப் பழகுவோம். அப்படியெல்லாம் நடப்பது சிரமமே. ஆனால் ஒன்று: அவற்றுக்கான ஓர் அடித்தளத்தை - ஆரம்பத்தை - இருபத்தோராண்டுகளின் பின் நடைபெற்ற இந்த இரண்டாம் உலக இந்து மாநாடு போட்டுவைத்திருக்கிறது. அவ்வளவுதான்.

'இந்து தர்மத்தின் மூலம் சமாதானம்' என்பது மாதிரியான வெற்று வரிவடிவங்களெல்லாம் எழுப்பப்பட்டிருந்தன. அதெல்லாம் சுத்த ஹம்பக்! ஆனாலும் அதன் மூலம் சமாதானமெனின் வந்துவிட்டுப் போகட்டும். 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' என்பதே தமிழனின் ஒற்றுமை மந்திரம்.

அதை முன்னெடுக்கும் உரம் இப்போதைக்கு யாருக்குமில்லைத்தான்.

000

(பதிவுகள்.கொம் இணையதளத்தில் வெளியான தேவகாந்தன் பக்கம்
என்ற பகுதியில் 2000-2004 இல் நான் சென்னையிலும், கொழும்பிலும் இருந்த காலங்களில் எழுதப்பட்ட கட்டுரை இது.)


Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்