இரண்டாம் புலப் பெயர்ச்சி
மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கிக்கொண்டு அகதியாய் ஓடியவர்கள்தாம் நாம். ஆனாலும் அந்த மண் இந்த வேர்களுக்கும் ஒத்துப் போக அங்கு பெரிய பிரச்சனைகளற்ற ஒரு வாழ்வு எங்களுக்குச் சித்தித்தது.
யுத்தமும் மேற்குலகும் சம ஈர்ப்புச் செய்த வேளையில் ஒரு போராட்டமே நடத்தி எங்குமில்லாமல் இந்திய மண்ணிலேயே தங்க முடிந்தது. அதில் நிறைய காயங்கள் பட்டிருந்தேன். தழும்புகளை விழுப்புண்களாய் நிச்சயமாக நான் மட்டுமாவது மதிக்கவே செய்வேன். கவலைப்பட்டு சில காரியங்களை நான் மட்டுமாவது செய்யாமலிருக்கவேண்டும்தான்.
இரண்டு தசாப்தங்கள் எப்படிக் கடந்தன? ஒரு தீவிர வாசகனாகவும் , ஒரு தீவிர படைப்பாளியாகவும் நான் இந்திய மண்ணில் எப்படிப் பரிணமித்தேன்? என் படைப்பின் உந்து விசைகள் என்னை அங்கு அடையாளப்படுத்தின. அந்த படைப்பாற்றல் இன்னும் க்ஷீணமடையவில்லை. என் சாதனைகள் குறித்து எப்போதும் எனக்கு கரிசனமுண்டு. காலம் நாளை அதைச் செய்யும்போது புறவுலகம் அறியட்டும்.
எவ்வளவு இலக்கிய நண்பர்கள்! எவ்வளவு இலக்கிய ஆர்வலர்கள்! எவ்வளவு வாசகர்கள்! தாயகத்திலிருந்து ஓடியபோதுகூட பெரிய வலி தெரியவில்லை என்பது சத்தியமான வார்த்தை.
பின்னர் மெல்ல வலி செய்த கணங்கள் ஏற்பட்டன.
ஆனாலும் சாதனைகளின் வீறுகளில் அவற்றை அடக்கி வைக்க முடிந்திருந்தது.
அங்கிருந்து தாயகம் திரும்ப தயாரானபோது......? ஒரு பக்கம் தாயகம் திரும்புகையின் மகிழ்ச்சி ரேகைகள் எறிபட்டுக்கொண்டிருந்தாலும் அந்த மண்ணை நீங்க மனம் ஏன் அத்தனை அவலம் பட்டது?
அது என்னளவில் ஓர் இரண்டாம் புலப்பெயர்ச்சி.
முந்திய புலப்பெயர்வினைவிட வலிகூடிய பெயர்வாயிற்று.
மீண்டும் என் மண் மிதிதேன் கண் கலங்க ..... மெய் விதிர்க்க.
மீண்டும் என் மண் மிதித்தேன்....வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதையாய் உருவாகி நின்றேன்.
000
(பதிவுகள்.கொம் இணையதளத்தில் வெளியான தேவகாந்தன் பக்கம்
என்ற பகுதியில் 2000-2004 இல் நான் சென்னையிலும், கொழும்பிலும் இருந்த காலங்களில் எழுதப்பட்ட கட்டுரை இது.)
Comments