நினைவேற்றம் 5

முனை 5

மாரிகாலத்தில் ஒரு அதிகாலை நேரம் முதல்நாளிரவில் வீசிய காற்றுக்கு முற்றம் முழுக்க இறைந்துகிடந்த பூவரசின் பழுத்த மஞ்சள் இலைகளை அம்மா பெருக்கிக்கொண்டிருக்க, விறாந்தையில் தூக்கம் இன்னும் கலைந்துவிடாத சோம்பேறித்தனத்துடன் படுக்கைப் போர்;வையை இன்னும் மேலிலே சுற்றியபடி எந்த விடுப்புமற்ற அந்தச் செயற்பாட்டில் கண் பதித்து அமர்ந்திருந்தேன். பூவரசமிலைகளின் பல்வேறு தர மஞ்சள்கள் தவிர என் கவனத்தைக் கவர அங்கே வேறெந்த அம்சமும் இருந்திருக்கவில்லை.
“மழை வரப்போகுதுபோல கிடக்கு. எழும்பிப் போய் முகத்தைக் கழுவியிட்டு வா” என்று அம்மா எனக்குச் சொல்லுகிறாள். தூக்கம் கலைந்தாலும் சோம்பல் கலைந்துவிடாத நான், “போறனம்மா” என்று சொல்லிக்கொண்டே இன்னும் அந்த இடத்தைவிட்டு அகலாமல்.

வெளியே செல்;ல புறப்பட்டு தெருவில் வந்த ஒருவர் அம்மாவுடன் படலையில் நின்று பேசுகிறார். போகும்போது சொல்கிறார், ‘கெதியாய் கூட்டி முடியுங்கோ. பருத்துறைக்கடல் இரையிறது கேக்குதெல்லே? நல்ல மழைதான் வரப்போகுது’ என்று. அம்மாவின் கூட்டுகைச் சத்தம் நின்றிருந்த அந்தப் பொழுதில் நான் கேட்கிறேன், காற்றின் அசைவு தவிர்ந்து வேறு சத்தமற்றிருந்த அவ்வெளியில் கடலின் உறுமலை.

பருத்தித்துறைக்கும் சாவகச்சேரிக்குமிடையில் பன்னிரண்டு மைல்கள். எங்கள் வீட்டிலிருந்து பத்து மைல்களாவது இருக்கும். அந்தளவு தூரத்திலிருந்து இரையும் கடலின் சத்தம் இவ்வளவு தூரத்துக்கு கடந்துவந்திருக்குமெனில், ஆயிரம் தரைவைக் கடல்களைவிடவுமே அது பிரமாண்டமாய் இருக்கவேண்டும்! சாவகச்சேரியில் தரவைக்கடல் பார்த்திருக்கிறேன். அதுபோல் கைதடியிலும் நாவற்குழியிலும் எழுந்திருந்த பாலங்களுக்குக் கீழால் விரிந்திருந்த தரைவையில் அலையசைந்த நீர்ப் பெரும்பரப்பையும் பார்த்திருக்கிறேன். அவை சப்தமெழுப்பியதே இல்லை. ஆனால் கண்டிராத கடல் பத்துக் கட்டை தூரத்திலிருந்து எழுப்புகிற சப்தம் இங்கே கேட்கிறது! கடலின் பிரமாண்டம் காண அன்றைக்கேதான் என் மனத்துள் ஆசை விழுந்திருக்கவேண்டும்.

அதன் நிறைவேற்றத்துக்கான ஒரு நாளுக்காய் நான் காத்திருந்தேன்.
மதியத்துக்கு மேலான பொழுதுதான் ஊர்சுற்ற வாய்ப்பானது. சனியோ ஞாயிறோ ஒரு மதியத்தின் மேல் நான் கடல் பார்க்க சைக்கிளிலேறிப் புறப்பட்டேன்.

கிழக்குப் பக்கமாய் அல்லது வடக்குப் பக்கமாய் போ என வழிசொல்லப்படுகிறபோது, மதியமாயிருந்தால் வடக்கு கிழக்கு தெரியாத எனக்கு, சூரியன் சாய்ந்து மேற்கைத் தீர்மானிக்கிறவரை அந்த இடத்திலேயே காத்திருக்கவேண்டியிருக்கும். அவ்வளவு திசைஞானம் பெற்ற நான் துணிந்து புறப்பட்டதை இப்போது அரை நூற்றாண்டு கழித்து நினைக்கிறபோதுகூட ஆச்சரியமாகவே இருக்கிறது.

அந்த ஆர்வம் திசைப் பிரச்னையை மட்டுமில்லை, பத்து மைல்களுக்கும் கல்ரோடாகவே இருந்த நீண்டபாதையில் கல் இடித்து சைக்கிள் காற்றுப் போனால் என்ன செய்வது என்ற யோசனைகூடயின்றி என்னைப் புறப்படவைத்திருந்தது. கனகம்புளியடி ஐந்து ரோடுகள் இணைகிற சந்தி. அதில் தென்பட்ட ஒரு தேத்தண்ணிக் கடையில் சைக்கிளை நிறுத்தி தேநீர் குடித்து, வேறொருவருடைய சைக்கிளில் காற்றடிக்கிற பம் வாங்கி இரண்டு சில்லுகளையும் நிறைத்துக்கொண்ட பின்னரும் நான் இன்னும் தயங்கிக்கொண்டு அதிலேயே நின்றிருந்தேன். கடையில் நின்றவர்கள் புறப்பட்ட பின் ஐந்து சதத்துக்கு பீடி கேட்டேன். கடைக்காரர் என்னை ஒருமாதிரிப் பார்த்துக்கொண்டுதான் பீடியைத் தந்தார். பத்து வயதில் பீடி புகைக்கிறவர்கள் இருக்கிற காலத்தில் பதின்மூன்றாம் வயதைத் தொட்டிருந்த நான் பீடி வாங்குவதை யார் கேட்கமுடியும்? பீடியோடு கூடவே ஒரு யானை மார்க் தீப்பெட்டியும் வாங்கிக்கொண்டேன். லங்கா தீப்பெட்டி அப்;போது நான்கு சதம் விற்றுக்கொண்டிருந்தும், லங்கா தீப்பெட்டியை அதிகமாக மழைகாலத்தில் யாரும் வாங்குவதில்லையென்பதை ஞாபகம்கொண்டு நான் ஐந்து சதம் கொடுத்து யானைத் தீப்பெட்டியை வாங்கியிருந்தேன்.
எனது பயணம் தொடர்ந்தது.

கனகன்புளியடி கழிய சரசாலை. சரசாலையூர் கழிய சரசாலையான் காடு வந்தது. சரசாலையான் காடு பெருவனமல்ல, பறுகுப் பத்தைக் காடுதான். வெளி ஏகாந்தித்துக் கிடந்தது. சூழ மனித நடமாட்டமேயற்ற வெளியில் சைக்கிளை உழக்கியபடி நான் பீடி புகைத்தேன். சூழ்ந்திருந்த ஏகாந்தம் என்னுள்ளும் உறைந்தது.

ஊரில் அப்போது காலையிலேனும் சுத்து புகைக்கிறதாயும், பீடி புகைக்கிறவர்களாயும் நிறைய ஆண்கள் இருந்தார்கள். பெண்கள் சுத்து புகைப்பதையே கண்டிருக்கிறேன். இராமநாதன் அண்ணன் மட்டும் சிகரெட் புகைப்பான். அப்போது திறீ றோசஸ் சிகரெட் இருந்தது. நேவிகட் இருந்தது. இவை பில்டர் இல்லாத சிகரெட் வகைகள். பில்டருள்ள ஒரு சிகரெட்டும் இருந்தது. அதற்கு ஆடத் என்று பெயர். இராமநாதன் அண்ணனைவிட ‘சரியான தடிமனாய் இருக்கு, ஒரு நெவிக்கற் அடிச்சாத்தான் சரிவரு’மென்று சிகரெட் புகைத்தவர்களும் உண்டு. இவற்றினைக் கண்டே நான் பீடி புகைக்க ஆரம்பித்தேன் என்று சொல்லிவிட முடியாது.

‘இழுக்க இழுக்க இறுதிவரை இன்பம் தருவது சேலம் சொக்கலால் ராம்சேட் பீடிகளே’ என்றும், ‘மகிழ்ச்சிக்கும் உற்சாகத்துக்கும் இன்றே வாங்கிப் பாவியுங்கள் ராஜா பீடி’ என்றும் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு விளம்பரங்களைக் கேட்டுக்கேட்டும், ஆர்.பி.ஜி. என்ற உள்@ர் பீடி கம்பெனியின் பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்துப் பார்த்தும் பீடியின் மேலான இந்த மையல் என்னில் வந்திருக்கவே சாத்தியமுண்டு. அத்துடன் சிகரெட் அல்லது பீடியின் புகையை மூக்கினால் சிலபேர் விடுகிற அழகும் என்னை வசீகரித்திருக்க முடியும். இதைப் பயின்ற கணமெதுவும் என் நினைவிலில்;லை.

கண்ணால் புகைவிடுவதாகக் கூறி கூர்ந்து கண்களைக் கவனிக்கச் சொல்லிவிட்டு பீடியினால் சூடு வாங்கிய அனுபவமும் எனக்குண்டு.
இவ்வளவிருந்தும் ரேடியோ விளம்பரங்கள்தான் என்னை விடாது தொடர்ந்து இந்தப் பழக்கத்தில் என்னை இழுத்து மாட்டிவிட்டதென்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு சதத்துக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும், மகிழ்ச்சியையும் வாங்க முடியுமானால் அதை ஏன் விட்டுவிட வேண்டும்? அதிலும் சேலம் பீடியை இழுக்க இழுக்க இறுதிவரையிலுமே இன்பம் கிடைக்கிறது! நானும் சேலம் பீடிகளையே வாங்கி இன்பத்தைப் பெருக்கினேன்.

வெகுகாலத்தின் பின் புற்றுநோய்பற்றிய விழிப்புணர்வுபெற்ற வயதில் ஆறு தடவைகள் என் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த நான் முயற்சித்திருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் ஒரு சில மாதங்களுக்கு மேல் நிறுத்த முடியவில்லை. கடைசித் தடவையில் ஐந்து ஆண்டுகள் நிறுத்தியிருந்தேன். பின்னரும் தொடங்கும்படியாகவே ஆனது. ‘இழுக்க இழுக்க இன்பம்’ என்ற மயில்வாகனத்தின் குரல் மனத்துள்ளிருந்து என் வெற்றியை இறுதியில் உடைத்தேவிட்டது. இதற்காக விளம்பரதாரர்களிலா, இலங்கை வானொலியிலா, அறிவிப்பாளர் மயில்வாகனத்தின்மீதா நான் வழக்குத் தொடுப்பது?

ஏகாந்தத்துள் பயணித்து நான் வல்லை வெளியுள் புகுந்தேன். எப்படியோ ஐந்து பீடிகளும் முடிகிறவளவில் நான் பருத்தித்துறைக் கடலைச் சென்றடைந்தேன்.
நான் சென்றிருந்தவேளையில் மாரி முடிந்திருந்தாலும் கடல் அன்றைக்குச் சீற்றமாகவே இருந்தது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் ஒரு சிறிய பாலத்தினது விளிம்பில் குமுறிக்கொண்டிருந்த கடலை பிரமிப்போடு பார்த்தபடி வெகுநேரம் நின்றிருந்தேன்.

கரையில் வள்ளங்கள் சில கரையேற்றி விடப்பட்டிருந்தன. மீனவர் சிலர் வலைகளைப் பின்னுவதிலும், காயப்போட்டு எடுத்துவைப்பதிலும் கருமமாயிருந்தனர். மேலே பறவைகள் இரைந்தவண்ணம் பறந்தடித்தபடி இருந்தன. தூரத்தே கப்பலொன்று நின்று அலைகளில் ஆடிக்கொண்டிருந்தது. அமெரிக்கக் கப்பலாயிருக்கும், கோதுமை மாவு ஏறற்றிவந்திருக்கலாம் என எண்ணிக்கொண்டேன்.

சூரியன் மேற்கே சாயத் துவங்கியது. நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன்.

வழிநெடுக மனம் ரீங்காரித்துக்கொண்டிருந்தது மகிழ்ச்சியில். கடலை நான் கண்டுவிட்டேன்! கடலைக் காண்பது சின்ன விஷயமா என்ன?
மென்மழை, தென்றல், அலையாடும் கடல்கள் மனத்தில் இதத்தை ஏற்படுத்துகின்றன. பெருமழை, புயல், குமுறும் கடல்கள் மனத்தை அசைக்கச் செய்கின்றன. அசைந்த மனத்திலும் கிளர்ந்தெழுவது மகிழ்வாகவே இருக்கிறது. அலை குமுற ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த கடலே என்னைப் பரவசப்படுத்தியது. இன்னும்கூட கண் முழுக்க நீலம் விரிந்திருந்தது.
வளமான காற்றில் எனது சைக்கிள் பயணம் சுகமாகயிருந்தது.

பதின்னான்கு வயதுக்கு மேல்தான் ‘சஸ்பென்டர்’ என்று அப்போது சொல்லப்பட்ட ஆண்களின் உள்ளுடுப்பை நான் அணிய ஆரம்பித்தேன். பலபேர் பதினைந்து வயதிலும் அதை அணியாமல் திரிந்தது எனக்குத் தெரியும். கழிசான் அணிந்திருந்தாலும் சஸ்பென்டர் இல்லாத என் உள்ளுடம்பில்கூட பலமாக வீசிய காற்று தழுவிக்கொண்டிருந்தது. என்னைத் துணைக்கழைத்துப் படுத்த எதிர்வீட்டு அன்ரியை அப்போது அங்கமங்கமாய் நினைத்துக்கொண்டேன்.

சிறிதுநேரத்தில் எதிரே தூசிப்படலமொன்று கிளர்ந்தெழுந்து வந்துகொண்டிருந்தது கண்டேன். ஐந்து மணிக்கு சாவகச்சேரியிலிருந்து பருத்தித்துறைக்குப் புறப்பட்ட கடைசி பஸ் அது என்பதைத் தெரிய எனக்கு வெகுநேரமாகவில்லை.

பஸ் கடக்கும்வரை ஓரமாக சைக்கிளை நிறுத்தி காத்திருந்தேன். பஸ் சென்ற பின்னால் மக்கிப் படலமும் அடங்கத் தொடங்க என் பயணம் மறுபடி வெற்றிகரமாகத் தொடங்கியது.

உடல் முழுக்க வியர்வையும் தூசியும், மனம் முழுக்க நிறைவும் ஒருவகை எழுச்சியுமாய் இருட்டுகிற நேரத்தில் வீடு வந்து சேர்ந்தேன்.

சாமிப்படத்துக்கு முன்னால் தூண்டாமணி விளக்கு எரிந்துகொண்டிருந்தது. நான் குளித்துவிட்டு வர அம்மா லாம்பை கொழுத்திவந்து திண்ணையில் வைத்தாள். நான் அகப்பட்ட புத்தகமொன்றை எடுத்துக்கொண்டு லாம்படிக்கு வந்தேன். அது ஏழாம் வகுப்பு பாலபாடமாக இருந்தது. விரித்த பக்கத்தில் தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர் இருந்துகொண்டிருந்தார்.

படித்துக்கொண்டிருக்கையில் ஏனென்று இல்லாமல் வசந்தாக்காவின் ஞாபகம் வந்தது. வசந்தாக்கா இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள்? நாகரத்தினத்தோடு பேசிக்கொண்டிருப்பாளா? அல்லது அவன் தடவ விட்டுவிட்டு பார்த்துக்கொண்டிருப்பாளா? எனக்கு நெஞ்செல்லாம் எரிய ஆரம்பித்தது. வசந்தாக்காவை யாரும் தொட்டுப் பார்க்;கட்டும், ஆனால் நாகரத்தினம்மட்டும் தொட்டுவிடக்கூடாது என்பதுபோல் மனத்துள் ஒரு ஆவேசம் கிளர்ந்தது. அவன் கரியன். மட்டுமில்லை, தடியனும். வசந்தாக்கா எலும்பிச்சம் பழ நிறத்தவள். அலரிப்பூ நிறத்தில் அவளது சொண்டுகளும். வசந்தாக்காவின் புருஷன் செல்லத்துரை கட்டிப்பிடிக்கவே கண்டிருக்கிறேன். அவன் புருஷன். அதனால் கட்டிப்பிடிக்கலாம். ஆனால் நாகரத்தினம் தொடக்கூடச் செய்யக்கூடாது. விழுந்த பனையில் குருத்தெடுக்கப் போன இடத்தில் இந்திரா பார்த்துக்கொண்டிருக்கவே என்னை பிடரியில் அடித்து வெம்பச் செய்தவன் அவன். வசந்தாக்கா அவனைத் தொட விட்டதில்கூட எனக்குக் கோபமில்லை. ஏனெனில் அவள் அதில் சந்தோஷப்பட்டிருக்கவில்லை. அவளது முகம் அவ்வளவு காய்ந்து வரண்டுபோயிருந்தது அவ்வேளை. ஆனால் அது மாதக் கடைசியில் வரும் வார விடுமுறையாதலால் அவளது புரு~ன் வந்திருப்பான். எங்கோ அரிசி, மாவு பண்டகசாலையில் காவல்காரனாக இருந்தான். மாதச் சம்பளம் வாங்குகிறவன்தான்.

மறுநாள் வசந்தாக்கா வீட்டுக்கு பள்ளிக்கூடம் முடிய வந்து வெளிக்கிட்டுப் போகவேண்டுமென எண்ணிக்கொண்டேன்.
000

பதிவுகள்.காம்   ஜூலை  07, 2015

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்