தமிழ்த் தேசியம்பற்றிய ஒரு கண்ணோட்டம்

மார்க்ஸியர், இடதுசாரிகள், தேசியவாதம்:
தமிழ்த் தேசியம்பற்றிய ஒரு கண்ணோட்டம்



எப்போதும் கேட்பதற்குப் புதிது புதிதாக கேள்விகள் பிறந்துகொண்டே இருக்கின்றன. இது சுவாரஸ்யமானதும், அதேவேளை முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். புதிய கண்டுபிடிப்புக்களும், புதிய சிந்தனைகளின் தோற்றமும் இந்தக் கேள்விகளின் அவசியத்தை மனிதர்கள் மீது சுமத்திக்கொண்டிருக்கின்றன என்பதாக இதற்கான விடையை நாம் கண்டடைய முடியும். தேசியவாதம் அல்லது தமிழ்த் தேசியவாதம் குறித்து இன்றெழுந்திருக்கும் கேள்விகளும் புதிய சூழ்நிலைமைகளின் தாக்கத்தினால் விளைந்தவையே என்பது தெளிவு.

தேசியவாதம் என்ற கருத்தாக்கம் ஓரளவு முதலாளித்துவ அமைப்பின் ஆதிக்கம் அரசியலில் வலுப்பெறத் தொடங்கிய காலகட்டத்தில் உருவானதென்றாலும், அது குறித்த சிந்தனை பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு மேலேயே அரசியற் புலத்தில் காலூன்றிவிட்டது. சரியாகச் சொன்னால் பதினெட்டாம் நூற்றாண்டின் எழுபதுகளில். இந்தச் சொல்லை ஒரு கருத்துருவத்தின் வெளிப்பாட்டுக்காக செதுக்கியெடுத்தவர் ஜோஹன் கொட்பிறைட் ஹெடர் என்பவர். எவ்வாறு  போஸ்ட் மாடனிஸம் என்ற சொல், வரலாற்றாசிரியர் ஆர்னால்ட் ரொயின்பீ என்பவர் அக்கால அரசியற் சூழமைவைக் குறிக்கப் பயன்படுத்திய Post Mordern era என்ற சொல்லிலிருந்து பிறப்பெடுத்ததோ, அதுபோல இது நடந்தது. இதுபோன்ற கருதுகோள் முன்னெடுப்புக்கள் காலங்காலமாக வரலாற்றில் நிகழ்ந்தே வந்துள்ளன என்பதை நாம் நினைவிற்கொள்ளல் வேண்டும்.

எல்லைகளும், இறைமைகளும் யுத்தம் காரணமாகவோ, மணவினைகள் காரணமாகவோ மாறிமாறி அமைந்துகொண்டிருந்த சூழ்நிலையில், பதினெட்டாம் நூற்றாண்டு வரை தேசியவாதம் என்ற கருத்தாடல் வலுப்பெற்றிராத நிலைமையே அய்ரோப்பாவில் இருந்துவந்தது. ஸ்பெயின், பிரான்ஸ், பிரித்தானியா, ரஷ்யா ஆகிய இந்த நான்கு நாடுகளுக்குமிடையில் இருந்த மணவினைத் தொடர்பாடலின் கதைகளாகவே மறுமலர்ச்சிக் காலத்துக்குப் பின்னான மூன்று நான்கு நூற்றாண்டுகளின் வரலாறுகளும் விளங்கின.

இந்த நிலைமையில் பிரான்சிய, மற்றும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த அமெரிக்கப் புரட்சிகள் நாடுகள்பற்றிய கருத்துமானங்களை வெகுவாக மாற்றிவைக்கின்றன. ஒரு தேசம் என்பது புவியியற் கட்டமைப்புக்கொண்டதான, இனத்துவம் சார்ந்ததான, இறைமை கொண்டதான விதிகள் வலுப்பெறத் தொடங்குகின்றன. புறவிதிகளாக ஒரு நாடு சிதைந்து பலவாதலும், பல நாடுகள் இணைந்து ஒன்றாதலுமான நிகழ்வுகளும் நடக்கவே செய்கின்றன. வரைபடத்தில் புதிய எல்லைகளோடு தோன்றிய ஜேர்மனியும், இத்தாலியும் இதற்கொரு தக்க சான்று.

இக் கருத்தாடல் நிலைபெறத் தொடங்கி ஒரு நூற்றாண்டுக்குள்ளாகவே இதன் கொடூர முகத்தை உலகம் ஜேர்மனியில் கண்டது. அதன் பெயர் நாஜிசம்.

நாஜிசம் என்பது Natioinal Socialisn ஆகவே கருதப்பட்டது. நாடு தழுவிய வரையறையை வகுக்க இந்த தேசியவாதம் உதவியபோதும், நாடுகள் சார்ந்தளவில் இது தேசப்பற்று என்ற உணர்வோட்டமுள்ள கருதுகோளாக முதலாம் உலக மகா யுத்த காலத்தில் இருந்தது. தேசியவாதத்தை அதன் தன்மைகள் சார்ந்து ஏழு என்றும், இன்னும் அதிகமாகவும்கூட சில அரசியலாய்வாளர் வகைப்படுத்தியுள்ளனர்.

முதலாம் இரண்டாம் மகாயுத்தங்களுக்குப் பிறகு தேசியவாதத்தின் தன்மை பெரிதும் மாற்றமடைந்துள்ளது. இதற்கு உலகமயமாதல் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இன்னும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் இனக்குழுமங்களுக்கு மேலான அடக்குமுறைகளின் எதிர் எழுச்சியாகவும் இந்தத் தேசியவாதம் முன்னெழுந்தது. அந்த வகையில்  இனம்சார் தேசியவாதங்கள் இன்று முக்கியமானவையாகப் பேசப்படுகின்றன. வெறுக்கப்படும் தேசிய வாதங்களாக இந்துத்துவ தேசியவாதம், புத்தத்துவ தேசியவாதங்களைக் கொள்ளலாம். பல்கலாச்சார நாடொன்றில் இருக்கக்கூடிய அல்லது இருக்கவேண்டிய தேசியவாதத்ததை  உiஎiஉ யெவழையெடளைஅ Civic Nationalism என்று கூற முடியும். அதற்கு உதாரணமாக கனடாவைக் காட்டலாம்.

தமிழ்த் தேசியவாதம் இந்தவகைப்பாடுகளில் ஒரு கூறு. அது பெருந்தேசியவாதத்துக்கு எதிராக சிறுதேசியவாதம் எடுத்த இருத்தலுக்கான எடுகோள் மட்டுமே.

இவ்வளவையும் ஓர் அறிகைக்காக இங்கே கூறிக்கொண்டு, ‘வியூகம்’ சஞ்சிகையின் முதலாவது கட்டுரையான ‘தேசியவாதம் குறித்த சில கருத்துக்கள்’ என்ற கட்டுரைக்கு வரலாம். அது நீண்ட ஒரு கட்டுரை. முப்பத்து மூன்று பக்கங்கள். தேசபக்தன் எழுதியது. அந்தக் கட்டுரையை மய்யமாக வைத்துக்கொண்டே எனது கட்டுரை விரியும்.

இலங்கையில் நடைபெற்ற விடுதலை யுத்தமும், அதன் தோல்வியும், தமிழரின் இன்றைய நிலையும் குறித்த பிரச்னைகளைப் பின்புலமாகக்கொண்டு ‘இனியொரு’ இணைய தளத்தில் சபா நாவலன் எழுதிய ‘ஈழத் தமிழ் பேசும் மக்கள் ஒரு தனித் தேசிய இனம்?’ என்ற கட்டுரையின் எதிர்வினையாக தேசபக்தனால் எழுதப்பட்டுள்ள கட்டுரை இது.
தேசியம், சுயநிர்ணய உரிமை, உலகமயமாதல், தமிழ்த் தேசியம் என்ற தளங்களில் இது வியாபித்து நாவலனது கட்டுரைக்கான தன் எதிர்வினையை முன்வைக்கிறது. நாவலனது கட்டுரையைப் பெரும்பாலும் அங்கீகரித்து அதன் சில கூறுகளுக்கே கட்டுரை தன் மறுப்பினை, மறுவியாக்கியானங்களைக் கூறுவதாகக் கொள்ளவேண்டும். அதிர்ஷ்டவசமாக நான் சபா நாவலனது கட்டுரையை வாசிக்க நேரவில்லை. தேசபக்தனின் கட்டுரையைக்கொண்டே சபா நாவலன் தன் கட்டுரையில் என்ன கூறியிருக்க முடியுமெனத்தான் அனுமானிக்க முடிகிறது. என்றாலும் அது இங்கே எனக்கு முக்கியமில்லை. ‘பல்தேசிய நிறுவனங்கள் உருவாக தேசிய அரசுகள் அழிந்துவிடும், அதாவது தேசியவாதங்கள் மறைந்துவிடுமென்று சபா நாவலன் கூறுவதனை, ‘பல்தேசிய நிறுவன அரசுகள் தோன்றும்போது தேசியம் அழிந்துவிடுமெனில், ஏன் கடவுச் சீட்டுமுறை இன்னும்  இருக்கிறது?’ என தேசபக்தன் கேட்டு மறுப்பது சிறுபிள்ளைத்தனமானது.

அய்ரோப்பிய ஒன்றியம் ஆரம்பமான பொழுதில் அதில் சில விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளே இருந்தன. இன்னும் இஸ்பெயினைச் சேர்த்துக்கொள்வதற்கும் தயக்கங்கள் இருந்தன. பிரிட்டன் பின்னால் இணைவதற்கு வெகுதயக்கம் காட்டியதென்பதும் இரகசியமானதல்ல. ஆனால் இன்று இருபத்தேழு நாடுகள் அதில் அங்கம் வகிக்கின்றன. இந்த இருபத்தேழு நாடுகளுக்கும் ஒன்றியத்திலிருக்கும் ஒரு பிரஜை விசா இன்றிப் பயணித்துவிட முடியும். இந்த இடத்தில் கடவுச்சீட்டு என்பது ஒரு அடையாளம் மட்டும்தான். இனிவரும் காலங்களில் கடவுச் சீட்டு முறைகூட இல்லாது போய்விடலாம்.

பல்நிறுவன அரசுகளிடையே இது சாத்தியப்படும் வாய்ப்புக்கள் இருக்கவே செய்கின்றன. உலகமயமாதல் மூலமோ அல்லது வேறு காரணிகள் மூலமோ அரசுகள் அற்றுவிடா என்பதுதான் அறியக்கிடப்பது. அதிலும் முதலாளித்துவ முறைமை ஒரு வளையத்தை இட்டுக்கொண்டே செல்லும். அது கட்டமைப்புக்குள் அடங்கும்வரையே அதனை அனுமதிக்கும் என்பதுதான் முக்கியமான விஷயம். அய்ரோப்பிய ஒன்றியத்தில் துருக்கியை இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் இன்னும் இழுபறியிலேயே இருப்பதை இதற்கு ஆதாரமாகச் சொல்லமுடியும்.

ஆனால் தேசபக்தன் செய்கிற வாதமே பிழையென்றில்லை. அரசுகள் இருக்கவும், அரசுகளின் தேசியங்கள் இருக்கவும்தான் இந்த வகையான அரசியலில் இடமிருக்கிறது என்பது மூலதனத்தின் வலுவைப் பார்த்தால் புரிந்துவிடும் சங்கதி.

தேசபக்கதனை மறுக்கிற இன்னொரு இடம் இருக்கிறது. இது கட்டுரையின் கடைசிப் பகுதியில் வருவதெனினும், பொருள் குறித்து அதை இங்கே சொல்லிவிடுதல் சிறப்பு.

‘மார்க்சியம் பற்றிய எமது புரிதல்களையும் நாம் கேள்விக்குள்ளாக்கும் நேரத்தை அடைகிறோம். மார்க்சியம் என்பது ஒரு விஞ்ஞானம் என்கிறோம். சமூகம் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது என்றும் கூறுகிறோம். அப்படியானால் அரசியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம், மற்றும் அறிவுத்துறையின் ஏனைய கிளைகளில் ஏற்படும் கோட்பாட்டு வளர்ச்சிகளுக்கு இணையாக நாமும் எமது கோட்பாட்டுச் சாதனங்களை தொடர்ந்தும் புதிதாக உருவாக்கிக்கொள்ளவும், வரலாறு புத்தம் புதிதாக முன்வைக்கும் வளமான பிரச்னைகளில் அவற்றை பரீட்சித்துப் பார்க்கவும், எமக்குப் போதியளவு திறமையும் துணிவும் இருக்கவேண்டும்’ என்கிறார் தேசபக்தன். மார்க்சியம் தேங்கிவிட்டது என்பதற்கு ஒப்பானது இது. மார்க்சியம் ஏன் வளரவேண்டும்? அதை நிறுவனமயமானதாக ஆக்குவதன் நோக்கம் என்ன? அதையே அதிகாரத்தின் மையமாக ஆக்கிவிடுவதில் மேலதிகமாக சுதந்திரத்தை இழப்பதற்கான வாய்ப்புத்தானே அதிகமாகிறது? அதை அரசியலைப் புரிந்துகொள்ளும், சமூக நிலைமைகளை வரையறைப்படுத்திக்கொள்ளும் ஒரு சித்தாந்தமாகப் பார்க்கவேண்டுமே தவிர, நிறுவனங்களை உருவாக்குவதற்கான கொள்கைச் சித்தாந்தமாக அல்ல. இந்தத் தளத்தில் மார்க்ஸியம் எவருக்கும்தான் ஒரு சிந்தனைத் தளத்ததை அளித்துநிற்கிறது.

குமாரி ஜெயவர்தன Feminism and Nationalism in the Third World  நூலில் கூறுவார், ‘மேற்குலக பெண்ணிய தேசியவாத முறைமைகளுக்கும் மூன்றாமுலக நாடுகளிலுள்ள பெண்ணிய தேசியங்களுக்குமிடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன’ என. அதுபோல் மேற்குலகத்தின் தேசிய வரையறைப்புகளுக்கும், மூன்றாம் உலக நாடுகளான இலங்கை போன்றனவற்றின் தேசியம் பற்றிய கருதுகோள்களுக்குமிடையே வித்தியாசங்கள் உண்டு. அந்த வகையில் இலங்கையில் தமிழ்த் தேசியம் தன் தோற்றத்துக்கான மூலகாரணிகளை விசேடமாகக் கொண்டிருக்கிறது.

தமிழ்த் தேசியத்தின் தோற்றத்தை பேரினவாதத்தின் அடக்குமுறைக்கெதிரான விழிப்புணர்வாகக் கொள்ளப்பட முடியமா? முடியுமென்றுதான் தெரிகிறது.

இலங்கைத் தேசியம் உருவாவதன் முன்னம், இலங்கை இன்னும் பிரித்தானியாவின் கீழ் இருந்துகொண்டிருந்த போதிலேயே, சிங்கள இனத்துவத் தேசியம் விழிப்புணர்வு பெற்றுவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் காலனித்துவ ஆட்சிக்கெதிரான கலக மனநிலை இலங்கையில் முகிழ்த்ததாகக் கொண்டால் அதில் முக்கியமாக இருக்கக்கூடியவர் அநகாரிக தர்மபால. அவர் 1920களில் கூறினார் பிரிட்டிஷாரின் கல்விமுறைபற்றி, ‘யு டியளவயசன நனரஉயவழைn றiவாழரவ ய ளழடனை கழரனெயவழைnA Bastard Education without Solid Foundation’ என. அவர் குறிப்பிட்டது சிங்கள இனத்து இளைஞர்களைக் கருத்திற்கொண்டதே என்பதை அவரது மற்றைய கட்டுரைகளை நோக்குகையில் தெரியவரும். பிரிட்டிஷ் கல்விமுறையானது A genetation of bastard டையும்  Interlectial paraiahs ஐயும் உருவாக்குமென ஆனந்த குமாரசாமி 1946 இல் கூறுவதற்கு  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே அநகாரிக தர்மபால இவ்வாறு கூறியிருந்தார். அன்றிலிருந்து தொடர்ந்தேர்ச்சியாக வளர்ச்சி பெற்றதே சிங்களத் தேசியம் அல்லது சிங்கள இனத்துவ வாதம்.

ஆயினும் இந்த இனத்துவத் தேசியம் சமூக உயர் வகுப்பாரிடையே தமிழ்-சிங்கள இன பேதமின்றி ஒன்றிணைவதை ஆரம்பத்தில் தடுக்கவில்லையென்பதையும், சிங்களர் மத்தியிலிருந்த கரவா, கொவி சாதி முறைமை பற்றியும், அதில் அதிகாரத்துக்கான யுத்தம் நடந்ததுபற்றியும் தேசபக்தன் கட்டுரையில் சரியாகவே சொல்லிச் செல்கிறார். தமிழ்த் தேசியம் உருவான வரலாறும் சரியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. சபா நாவலன் இந்தத் தமிழ்த் தேசிய விழிப்பை ஒப்புக்கொள்ளக் காட்டிய சுணக்கம் தேசபக்தனை இவ்வளவு விரிவாக இந்த விஷயத்தை அணுகவைத்ததா தெரியவில்லை.

ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு பிரச்னை இருக்கவே செய்கிறது. அதுவே இனிவரும் காலத்தில் முக்கியமானதும் முதன்மையானதும் ஆன பிரச்னையாக இருக்கப்போகிறது. அதுதான், ஒருவர் இடதுசாரியாகவும் அதேவேளை தமிழ்த் தேசியவாதியாகவும் இருப்பது எப்படி என்ற கேள்வி. இந்தியாவில் இந்துத்துவ அரசியல். இலங்கையில் புத்தத்துவ அரசியல். இந்துத்துவ அரசியலை வேதங்கள், ஆகமங்கள், வழிவழியான நியமங்கள் வரையறுக்கின்றன. புத்தத்துவ அரசியலை பௌத்த மடங்கள் வரையறுக்கின்றன. இதில் முளைப்பது சிங்களத் தேசியம். அதை எதிர்க்கிறது தமிழ்த் தேசியம். ஓர் இடதுசாரி இங்கே எந்த இடத்தில் வருகிறான்? ஒடுக்கப்பட்ட இனத்தின் சார்பாகவா, இல்லையா?

நிறுவனமயப்பட்ட கட்சி சார்பான இடதுசாரிகளிடமிருந்து இதற்கான பதில் இலேசுவில் கிடைத்துவிடாது. ஆனால் சிந்தனை முறைமையால் ஒரு மார்க்ஸியவாதியாக இருப்பவன் தனது பதிலைத் தயங்காது சொல்லமுடியும். அது தமிழ்த் தேசியம் குறித்து சார்பான நிலைப்பாட்டையே கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது.

0000

(கடந்த டிசம்பர் 13, 2010 ஞாயிற்றுக் கிழமை ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் நடைபெற்ற ‘வியூகம்’ இதழ் வெளியீட்டு விழாவில் நிகழ்த்திய உரையின் கட்டுரை வடிவம்)
000




Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்