அதை அதுவாக 2 (தேர்ந்த குறள்கள்)

அதை அதுவாக



(3)


அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
(பாயிரம், அறன்வலியுறுத்தல் 7) குறள் 37


சிவிகையைத் தாங்கியும், அதில் ஏறிச்செல்லும் நிலைமைகளிலும் உள்ளவர்களிடம் அறத்தின் பயன் இதுவெனக் கூறவேண்டாம்.

00


டாக்டர் மு.வரதராசனும் தன் ‘திருக்குறள் தெளிவுரை’யில் மேற்கண்டவாறே பொருள் சொல்லியிருக்கிறார்.
அறம் செய்வதனாலாகும் பயனை அதில் ஊர்பவனைக்கொண்டும், அறம் செய்யாததனாலாகும் தீங்கை அதைச் சுமந்து செல்பவனைக்கொண்டும் அறியலாம் என்பார் நாமக்கல் கவிஞர்.
இவற்றைக்கொண்டு அளவிட்டுவிடக்கூடாது என்பார் தமிழண்ணல்.

பசியோடு இருக்கும் ஒருவனிடத்தில் உபதேசம் செய்யாதே என்றார் சுவாமி விவேகானந்தர்.
பசித்தவனுக்குத் தேவை உணவு.
அதனால் சிவிகை சுமக்கும் அந்த வறியவனுக்குப் போதனை செய்யாதே என்று வள்ளுவன் சொன்னதாகக் கொள்ளலாம்.

சிவிகையிலூர்பவனும் உபதேசத்தைக் கேட்கமாட்டான். ஏனெனில் அவன் மமதையிலிருப்பான்.

பல்லக்கூர்தல் எவராலும் செய்யப்பட்டுவிடக் கூடியதல்ல.
அரசர், அரச சுற்றம், மந்திரி, பிரதானிகள், வணிகர், அறிவோர் என்று சமூக அந்தஸ்துள்ளவர்கள் மட்டுமே பல்லக்குப் பாவிக்கும் தத்துவம் பெற்றிருந்தார்கள் அக்காலத்தில்.
சிவிகையூர்வோர் எல்லோருக்குமேகூட ஆலவட்டம் பிடித்தும், முரசொலித்தும் செல்லும் அதிகாரம் வாய்த்திருக்கவில்லை.
பதவி, அறிவு, பொருள் தகுதிகளின் அடிப்படையில் அவை பாவனையாகின.
இதைச் சிலப்பதிகாரம் சிறப்பாக எடுத்துரைக்கும்.

மிக்க உச்சாணியில் இருப்பவர்களிடமும், மிக்க அடிநிலையிலுள்ளவர்களிடமும் எந்த நியாயத்தைச் சொல்லியும் அறனை வலியுறுத்த முடியாது.

அவர்களுக்குத் தள நியாயங்களுண்டு.
அதை மீறி அவர்கள் சிந்திப்பதில்லை.

அதனால் இருவகையார்க்கும் உபதேசம் செய்யவேண்டாம்.
ஆழமான சிந்திப்புக்குரியது இக் குறள்.


000


(4)

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சோற்காத்துச் சோர்விலாள் பெண்
(அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம் 6) குறள் 56


0


தன்னையும், தன் கணவனையும், தன் மனத்தையும் காத்துக்கொள்வதில் பெண் தளர்வில்லாதவளாக இருக்கவேண்டும்.

00

நியாயங்கள் புதைக்கப்பட்ட சமூகமாக இருக்கிறது இது.
வரலாற்றுக் காலம் முதலாகத்தான்.
பால், இனம், மொழி, மதம், நிறம், சாதிகளை மூலங்களாய்க் கொண்டு நடந்த கொடுமைகள் கணக்கிட முடியாதன.
பெண்ணின் குணவிN~சங்களைத் திருக்குறள் நிறையவே பேசுகிறது.
அவற்றுள் சில ஒப்புக்கொள்ளப்படக் கூடியவையாயும், சில ஒப்புக்கொள்ளப்பட முடியாதவையாயும்.
‘கற்பெனப்படுவது சொல் திறம்பாமை’ என அவ்வை சொன்னதில் எத்தனை நியாயங்கள் இருக்கின்றன!
அவளே ‘தையல் சொல் கேளேல்’ என்றிருப்பாளா.
‘பெண் புத்தி பின்புத்தி’ என்று தனக்கென்றொரு கருத்துருவாக்கத்தை உருவாக்கி வைத்திருக்கக் கூடிய ஒரு சமுதாயமே ‘தையல் சொல் கேளீர்’ என்ற வாசகத்தை அவ்வாறு சிதைத்திருப்பதாகக் கொள்ள முடியும்.
கற்பு என்பது மனவொழுக்கம்.
உடலொழுக்கம் பற்றிய பேச்சே இங்கு இல்லை.
கற்பு என்பதனையே இன்றைய பெண்ணியம் மனித வாழ்வுக்குகக்காததாய்
தூக்கியெறிந்துவிட்டிருக்கிறது.
ஆக, ‘சொற் காத்தல்’ என்பது இவ் 56ஆம் திருக்குறளில் மனவொழுக்கத்தைக் குறித்த பின்னர், தற்காத்தல் என்பதும் அது சம்பந்தமாய் வந்திருக்க முடியுமா.
அக் காலத்தில் பெண்ணுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்ட மிகச் சின்ன வயதை நோக்குகிறபோது, கணவன் வீடு செல்லும் அல்லது உடன்போக்கில் தனிக்குடித்தனம் போகும் அவள், விழுந்துவிடக் கூடிய இருளை வள்ளுவன் யோசித்திருத்தல் சாத்தியமெனவே படுகிறது.
தற்காத்தல் என்பது தன்னைத் தகவமைத்துக்கொள்ளல்.
தகவமைத்தலாவது தனக்கான கலா ஞானங்களும், கல்வி கேள்விகளும் பெறுதல்.
அன்றைய சமுதாயத்தில் இது வள்ளுவனின் கலகக் குரலேயாகும்.

000



(5)

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

(அறம், இல்லறம், மக்கட்பேறு 7) குறள் 67


தம்மைவிட தம் மக்கள் அறிவுடையவராய் இருப்பதென்பது எல்லா மனிதருக்குமே இனிமையான விஷயம்.

00

மேலெழுந்தவாரியில் இக் குறள் சின்ன விஷயத்தைக் கொண்டிருப்பதாகத் தோன்றும்.
ஆழ நோக்குகிறபோதுதான் மனோவியல் சார்ந்த கூறுகளின் கீறுகளை இதில் புரியமுடியும்.
மக்களேயானாலும் தம்மைவிட அறிவுடையவராயிருப்பது பெற்றவர்களுக்கு, குறிப்பாக தந்தைக்கு, விருப்பமானதாகப் பெரும்பாலும் இருப்பதில்லையென்பது உளவியல் சம்பந்தமானது.
ஒரு தந்தைக்கு தன் மகனைச் சான்றோனாக்குவதும், கற்றறிந்தார் அவையினிலே முந்தியிருப்பச் செய்வதுவும் கடமைகள்.
‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ என்ற சங்கப் பாடலடி இதை உறுதிப்படுத்தும்.
அவ்வாறான தன் கடமையை, மனத்திலெழக்கூடிய தாழ்வு மனப்பான்மை மூலமான காழ்ப்பில் புறந்தள்ளிவிடக்கூடாதென்பதை வற்புறுத்தும் குறளாக இதைக் கொள்ளவேண்டும்.
மகனை அவையிலே முதன்மையிடம் பெற்றிருக்கச் செய்வதனைத் தந்தையின் நன்றியென்றும் (குறள் 67), இப் பிள்ளையைப் பெற இவன் என்ன தவம் செய்தானோ என்னும்படியான புகழைத் தந்தை எடுக்க வைத்தலை பிள்ளையின் உதவியென்றும் (குறள் 70) வள்ளுவன் குறிப்பிட்டுள்ளமை இங்கே யோசிக்கத் தக்கது.
உதவிக்குத்தான் நன்றி அல்லது கைம்மாறு நம் காலத்தில்.
வள்ளுவன் மாற்றிப் போட்டிருப்பது அச் சொற்கள் அக்காலத்தில் பெற்றிருந்த அர்த்த பரிமாணத்தின் வெளிப்பாடு.
அக் காலத்தில் நன்றியென்பது இக்காலத்தில் உதவி,
உதவியென்பது அதுபோல் நன்றி.

000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்