சிதைவும் கட்டமைப்பும்:1 (தமிழகத்து அனுபவங்கள் குறித்தான ஒரு இலக்கிய விசாரணை)

தேவகாந்தன்



(1)

இந்த ஆண்டு சித்திரை மாதத்தில் எனது ‘கதா காலம்’ என்னும் மஹாபாரதத்தின் மறுவாசிப்பு நாவல் வெளிவந்ததிலிருந்து, அதை வாசித்த என் நண்பர்களும் வாசகர்களும், ‘கதா காலம்’ இதுவரை வெளிவந்த, குறிப்பாக கதாகாலத்துக்கு முன் வெளிவந்த ‘யுத்தத்தின் முதலாம் அதிகார’த்தைவிடவும்கூட, தன் நடை போக்குகள் போன்றனவற்றிலிருந்து வெகுவான மாற்றம் கொண்டிருப்பதாகச் சுட்டிக் கூறிவருகின்றனர்.

அது மெய்யெனவே இப்போது நினைக்க எனக்கும் தோன்றுகிறது.

சென்ற ஆண்டு யாழ்ப்பாணம் எழுத்தாளர் ஒன்றிய மண்டபத்தில் காலஞ்சென்ற செம்பியன்செல்வன் தலைமையில் காலஞ்சென்ற நந்தி உட்பட அ.யேசுராசா, சட்டநாதன் போன்றோர் கலந்துகொண்ட எனது ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’ நாவல் விமர்சனக் கூட்டத்தில், அந் நாவல் ஈழத் தமிழ் நாவல் வரலாற்றில் கொண்டிருக்கும் அதிகாரம் பற்றித் தெரிவித்த கருத்துக்களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அதில் ஆளப்பட்டிருந்த சொல்லின் செறிவுபற்றியும், நடையின் வீச்சுப் பற்றியும், அதன் மய்யமழிந்த கதைகூறும்; பண்பு பற்றியும் யாழ். கூட்டத்தில் சட்டநாதன் உட்பட, கொழும்பு ராமகிரு~;ண மண்டபத்தில் அதன் வெளியீட்டாளர்கள் பூபாலசிங்கம் புத்தக நிலையத்தார் ஏற்பாடு செய்திருந்த வெளியீடு கருத்தாடல் நிகழ்வில் பங்குகொண்ட மு.பொ., வீரகேசரி விஜயன் ஆகியோரும் குறிப்பிட்டிருந்ததையும் இன்று ஒருசேர நினைத்துப்பார்க்க முடிகிறது.

இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பது ஒரு சுவையான விசாரிப்பாக இருக்க முடியும். ஒரு நாளில், ஒரு மாதத்தில், ஒரு ஆண்டில் இது நிகழ்ந்திருக்க முடியாதென்பது நிச்சயம். ஏன் தீவிர வாசிப்பும், புதிய ஆக்கங்கள் பற்றிய கருத்தாடலும் விவாதங்களும்கூட இதற்கான முதன்மைச் சாத்தியங்களாக இருக்க முடியாது. அப்படியெனில் இந்த மாற்றத்துக்கான உந்துவிசையாக எது செயற்பட்டிருக்கவேண்டும்? இந்தக் கேள்வியின் இடையறா உளைவினது எழுத்துப் பதிவே இந்த என் உரைக் கட்டு.

ஒரு நீண்ட கால தமிழகத்து இருப்பு, அங்கு நான் இயல்பாகவே பெறமுடிந்திருந்த இலக்கிய வாழ்வனுபவங்கள் இதன் காரண சாத்தியங்களாக முடியுமோ? இவ்வாறு எண்ணுகிறபோது என்னிடத்தில் பதில்கள் பிறந்தன. தமிழகத்தின் பரவலான இயங்கு தளத்தில் சுமார் இரண்டு தசாப்தங்களென்பது பெரிய காலம். அங்கு நான் தெரிந்துகொள்ளாத, உறவாடாத இலக்கியவாதிகள் இல்லையென்றே சொல்லவேண்டும். இது ஒரு பாதிப்பாக என்னுள் சிறுகச் சிறுக இறங்கியிருக்கிறது. இது சாதகமான அம்சமாகத் தொழிற்பட்ட அதேவேளை பாதகமாவும் தொழிற்பட்டிருக்கிறது என்பது சுவாரஸ்யமான அம்சம்.

அந்தப் பெரிய தளத்திலும், கால வெளியிலும் நான் வளர்ந்துகொண்டிருந்தபோதே என்னுள் ஒரு பகுதி தேய்ந்துகொண்டுமிருந்திருக்கிறது. ஓரளவினதேனும் என் இலக்கியார்த்தமான ஈழப் பண்பின் நசிப்பு இவ்வாறுதான் நிகழ்ந்திருக்கிறது. நான் ஈழ இலக்கியத்தைப் பேசிக்கொண்டும், செய்துகொண்டும் இருக்கும்போதே அது ஒருபுறத்தில் அழுகிக்கொண்டுமிருக்க விட்டிருந்திருக்கிறேன். அது இப்போது யோசிக்கச் சுகமான விடயமில்லை. ஆனாலும் உண்மை அதுதான்.

கொண்ட இலக்கிய உறவுகளால் என் பார்வையும், எழுத்தும் மாறிக்கொண்டே இருந்திருக்கின்றன. என் குடும்ப சமூக உறவுகள் ஈழத்தவரோடாகவும், இலக்கிய ஊடாட்டங்கள் தமிழகத்தவரோடாகவும் இருந்ததில் இந்த நசிப்பை உணரவும் எனக்கு முடியாததாக அப்போது இருந்துவிட்டிருக்கிறது. இது சுகமான அறிதலில்லை. ஆனாலும் இந்த உண்மையை மறுப்பதற்கும் இல்லை. இது நிகழ்தல் தவிர்க்கப்பட முடியாதவொன்று. இந்த ஆசுவாசத்தோடு இவ் விசாரிப்பை தமிழகத்து இலக்கிய வாதிகள், இலக்கிய நண்பர்கள், அவர்களோடான என் ஊடாட்டம், அவர்களது தள இயங்குதல் முறை, இலக்கியக் கள உறவுகள், பிரதிகள், பிரதிவெளியீடுகள், சிற்றிதழ்கள் முக்கிய நிகழ்வுகள் என்று ஒரு தொகுப்பும் பகுப்புமாய் இவ் உரைக் கட்டை எனக்கே எனக்காகவே பிரதிபண்ணினும், இது என் இலக்கிய நண்பர்களுக்கானதும்தான்: என் வாசகர்களுக்கானதும்தான். ஏன்னை எப்படி நான் அறிந்துகொள்ள விழைகிறேனோ, அதுபோல் அவர்களும் படைப்பாளியாகிய என்னைப் புரிந்துகொள்ளல் நிகழவேண்டுமென்பது என் விருப்பம். இது அவசியமும்கூட. படைப்பாளி – வாசக உறவில் இது அவசியமேதான். ஒரு முள் குத்திய அனுபவம் ஒரு காடளவுக்குச் சமமாவது இவ்வண்ணமே நிகழ்கிறது. ஈழத்தில் எதார்த்தப் போக்கின் சிறு படைப்பாளியும், ஒரு பத்திரிகையாளனுமாகிய நான் , ஒரு நவீன யதார்த்தப்போக்கின் பங்காளியாக எப்படிப் பரிணமிக்க முடிந்தது என்பதை இந்த விசாரிப்புத் தெரிவுபடுத்தும். நவீன யதார்த்தம் குறித்தும், அதன் தத்துவார்த்த அமைவுகள் குறித்தும்கூட நாம் இங்கே பார்த்துக்கொள்ளவேண்டி நேரலாம். தற்கால ஈழ விமர்சனப் போக்கும் தவிர்க்கமுடியாதபடிக்கு இங்கு விசாரணையாகும்.

எனினும் இது இலக்கிய வம்பளப்புக்கானதல்ல என்பதை முதலிலேயே இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது என் சுயம் குறித்த மீள் பார்வை. என் கருத்தியலின் சிதைவும் புதிய கருத்தியலின் கட்டமைப்பும் பற்றியது.

எங்கேயிருந்து தொடங்கலாம்? 1984ஐ ஒரு புள்ளியாக்க விரும்புகிறேன். ஈழநாடு தேசிய தினசரியில் வேலை செய்த காலம் எனக்கு முக்கியமானது. அது இரண்டு காலகட்டங்களாய் அமைந்தது. இடையீடுகள் உற்றது. அது காரணமாக அங்கு நான் கற்றது மிகப் பெரிது இல்லையெனினும், என் பார்வை அகலிப்பும், அது காரணமாய் என் கனவுகளும் எழ அதுவே நிலைக்களனாய் இருந்திருக்கிறது. ஒரு சில இலக்கியக் கட்டுரைகள் என்றும், ஒரு பதினைந்து இருபது சிறுகதைகளென்றும் அக் காலத்தில்தான் நான் எழுதினேன். செய்தி, சிந்தாமணி, மல்லிகைகளிலும் ஈழநாட்டிலுமாய் அவை. என் மார்க்ஸீய வாசிப்பும் அப்போதுதான் ஆரம்பித்தது. இதனால் ரஷ்ய இலக்கியங்களின் மிகுந்த பரிச்சயக்காரனாக நான் இருந்தேன். புதுமைப்பித்தனையும், ஜெயகாந்தனையும், ஜானகிராமனையும் வாசித்திருப்பினும் ஒரு விமர்சனப் போக்கின்றி வெறும் யதார்த்தவகைப் படைப்பாளியாகவே என்னால் உருவாக முடிந்திருந்தது இதனால் விந்தையான விடயமல்லவென்றே தோன்றுகிறது. ஊரளப்பு என்றும், இலக்கிய வாசிப்பு என்றும், மார்க்ஸீய அரசியல் ஈடுபாடென்றும், வேலையென்றும் காலம் நகர்ந்துகொண்டிருந்த ஒரு பகுதியிலேதான் அந்த 1984 வந்தது.

நாடு விட்டோடியோரில் எவருக்குத்தான் காரணங்கள் இல்லை? உயிரச்சம் மிகப் பெரும்பான்மையானவரின் காரணமாக இருந்திருக்கிறது. தவிர்ந்தோரில் சிறிதாகவோ பெரிதாகவோ அரசியற் காரணங்கொண்டோர் இருக்கிறார்கள். அவர்களிலும் பலர் ஐரோப்பாவுக்கல்ல, பக்கத்து நாடான இந்தியாவுக்கே ஓடினார்கள். சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலின் பின் ஏற்பட்ட ஒரு நிர்ப்பந்தத்தில் நானும் ஓடினேன். அதுவும் இந்தியாவுக்கே.

அந்த ஓட்டம் காலப்போக்கில் எப்படி ஒரு பெயர்ச்சியானதென்பது இப்போது நினைக்கவே மலைப்பாகவும், திகைப்பாகவம் இருக்கிறது.

புலப்பெயர்ச்சியென்பதென்ன? வெறுமனே ஒரு நாட்டில் சென்று வாழ்தல் புலப்பெயர்ச்சியாகிவிடுமா? தற்காலிகமாகச் சென்றவர் நிரந்தரமாக வாழ நேரிடினும் அந் நிலையர் ஆவரா? ஓரிடம் விட்டு ஓரிடம் புற்றரைகளின் தேடல் நிழித்தம் நதிக்கரைகளில் பெயர்ந்து திரிந்த நம் மூதாதையர் புலம்பெயர்ந்தவரா? புhரதி குறிப்பிட்ட கண்ணற்ற தீவுகளுக்குத் தொழில் நிமித்தம் சென்ற இந்தியத் தமிழர்கள் புலம்பெயர்ந்தோரா? தமிழகத்திலிருந்து இலங்கை வந்து வெறும் மலைக் காட்டைத் தேயிலைக் காடாக்கிய இன்றைய மலைநாட்டுத் தமிழர்கள் புலம்பெயர்ந்தவர்களா?

தனிப்பட்ட அரசியல் காரணங்களாலான நாடு நீங்குதல்கள் புராதனமானவை. இவ்வாறான நாடு அகல்தல் பைபிளில் நடந்திருக்கிறது. இனம் மதம் மொழி சார்ந்து சிறுபான்மை பெரும்பான்மை என்ற பகுப்பு, நாடாளுமன்றங்களின் தோற்றத்துடனேயே உலக அரங்கில் சம்பவிக்கிறது. இவ்வாறாகவமைந்த ஒரு சிறுபான்மையினம் பேரினவாதத்தின் நெருக்குதல், அச்சம் காரணமாய் நாடு கடத்தலையே இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் புலப்பெயர்ச்சி என்றது. அரசியல் வன்முறையின் முழுத் தாக்கமும் அதிர்வும் இந்தப் புலப்பெயர்வு என்ற சொல்லில் இருக்கிறது. புலப்பெயர்ச்சியென்பதை வேரோடு பிடுங்கி வேறிடத்தில் எறியப்படுதலென மிக அழகாகச் சொல்வான் எமது ஈழத்துக் கவிஞன் வ.ஐ.ச.ஜெயபாலன். சென்று வாழும் நாட்டின் கலை கலாச்சாரங்களுக்கு முகங்கொடுத்து வாழத் தலைப்படும், தம் கலை கலாச்சாரங்களைப் பேணத் தலைப்படும் அனைவரும் இந்தப் பகுப்புக்குள் வருவர். இது மனநிலை சார்ந்தது எனறு புலம்பெயர்ந்தோருக்கு வரைவிலக்கணம் சொன்னார்கள் சில என் நண்பர்கள். அரசியல் தஞ்சம் என்பது ஒரு அரசியலறமான காலத்திலிருந்தே புலம்பெயர்வு என்ற பதத்தைத் தமிழ் பதிவுசெய்கிறதென்பது முக்கியமான விஷயம். குடவோலை உருட்டுதல் பண்டைத் தமிழகத்தில் இருந்தது. சோழர் காலத்தில் வளர்ந்திருந்தது. ஆனால் வாக்குரிமை முறை இருபதாம் நூற்றாண்டுக்கானது. இரண்டும் ஏறக்குறைய அர்த்தத்தில் ஒன்றேயெனினும் விதிகளால் வேறுபட்டது. அதுபோலவே நாடு கடத்தல்கள் பல்வேறு காலங்களிலும் இருந்தன. ஆனால் புலப்பெயர்வு இருபதாம் நூற்றாண்டிலேயே நிகழ்ந்தது. இருபதாம் நூற்றாண்டின் அதர்மம் புலப்பெயர்வு.

ஆயிற்று. நான் புலம்பெயர்ந்தாயிற்று. இலக்கியத்தில் எனது இரண்டாம் கட்ட வாழ்வு தமிழ்நாட்டில் ஆரம்பமாகிறது.


நன்றி: வைகறை, 2005

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்