நீர்மாயம்



- தேவகாந்தன் -




மேலெல்லாம் கொதித்துக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. இரவு பெரும்பொழுதும் தூக்கமற்றதாய்க் கழிந்திருந்ததில் விழித்தவளின் இமைகள் கனத்து, கண்களும் எரிச்சலாகியிருந்தன. இரவு எழுச்சி கண்டிருந்த உணர்ச்சிவேறு உள்கனன்றுகொண்டிருந்தது. அடக்கப்படாத் தாபம் எரிச்சலாய், கோபமாய் அவளில் பொங்கியது. அடைந்த மனவலி முக்கியம். அதை வெளிப்படுத்த முடியாததில் அழுகைதான் வரப்பார்த்தது.

சிந்தியா படுத்திருந்த சோபாவிலிருந்து தலையை நிமிர்த்தினாள்.

ஜன்னலூடாக வெளிச்சமடித்துக்கொண்டிருந்தது.

நேரம் என்னவாகவிருக்கும்? பத்து மணிக்கு மேலேயாய் இருக்கும் என வெளிச்சத்தில் ஊகம் கொண்டாள். தலையை இன்னும் கொஞ்சம் திருப்பி சுவர் மணிக்கூட்டைப் பார்ப்பதற்குமான அலுப்பு.

மேலே மாடியில் நடமாட்டத்தின், உடம்பசைவின் மரத்தள அதிர்வினோசை எழுகிறதா என்று கிரகிக்கப் பார்த்தாள். இல்லை, எந்த அசைவின் அறிகுறியும் இல்லை. கணேஷ்  அந்தநேரமளவுக்குக்கூட எழுந்திருக்கக்கூடிய நிலையில் இரவு வந்திருக்கவில்லைத்தான்.

இரவோ பகலோ, காலையோ மாலையோ வேலைசெய்வதினூடாகத்தான் புதிதாக மோட்கேஜில் வாங்கிய அந்தப் பிரமாண்டமான வீட்டின் தவணைத் தொகையைச் செலுத்திக்கொண்டிருக்க முடிகிறது. மாதம் இரண்டாயிரத்து நானூறு டொலர் சாதாரணமான தொகையில்லை. அது ஒன்றே மட்டுமெனில் அவளுக்கும் கணேஷுக்கும் கொஞ்சப் பொழுதெனினும் ஆறுதலாயிருக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனால், கார் இன்சூரன்ஸ், ஹைட்ரோ பில், ரெலிபோன் செல்போன் பில்கள், கேபிள் ரீவி, இன்ரநெற் கனெக்~ன் பில்கள் என இரண்டுபேர் சம்பளங்கள்கூட பற்றாக்குறையாய் இருக்கின்றன.

அவள் விருப்பத்தில் வாங்கிய வீட்டுக்குத்தான் அப்படி 'அடிக்க'வேண்டியிருந்தது. வாரம் முழுக்க வேலைதான். கணேஷ்  இரண்டு வேலைகள் செய்தான். அதிலொன்றில்தான் அவன்மீது அவளுக்குக் குறைசொல்ல இடமில்லாதிருந்தது. மற்ற விவகாரங்களிலும் அதுவரை குறைசொல்ல முடியாதபடியாகவே இருந்துவந்தான்தான். அவளின் எந்த விருப்பத்துக்கு அவன் அனுசரணையின்றி இருந்தான்? அவளும் எட்டு மணி பத்து மணியென்று வேலைசெய்தாள். அவள் படித்துக் கொண்டிருக்கும்போதுதான் கல்யாணமாகியது. பின்னர் இரண்டு வருடங்களாய்ப் படித்தாள். அவன்தான் பணம் கட்டினான். இப்போது கணினி உதிரிப்பாக நிறுவனமொன்றில் அவள் வேலைபார்க்கிறாள். மணத்தியாலம் பதினெட்டு டொலர்கள். இருந்தும் என்னத்தைப் போதுகிறது?

இப்படி வாரம் முழுக்க கடனுக்காக உழைக்கிற அவர்கள் சனிக்கிழமையை மட்டும்தான் தங்களுக்கானதாக ஒதுக்கிவைத்திருந்தனர்.

மூன்று ஆண்டுகளாகின்றன திருமணமாகி. இன்னும் குழந்தை இல்லை. அவளுக்கு அது நினைப்பு. அவசரமில்லையென்பது அவனுடைய எண்ணம். உண்டானால் வேண்டாமென்று சொல்கிற அளவுக்கு அவன் சிரத்தையற்றவனல்ல. அதுகளிலெல்லாம் அவளால் அவன்மீது குற்றம் சொல்லிவிட முடியாது.

வாரநாட்களில் மனம் சிலவேளை துறுதுறுக்கத்தான் செய்தது. உடம்பு களைத்துப்போயிருக்கும். அதனால் அவர்கள் மனமடங்கியே அந்த இரவுகளைக் கடத்தியிருக்கிறார்கள். வெள்ளி மாலை வந்துவிட்டால் மனமும் உடம்பும் விண்ணென்று பறக்கத் துவங்கிவிடுகின்றன. தூக்க இருப்பையெல்லாம் அன்றைய இரவில் தீர்த்துக்கொண்டு, சனி பகல் நீராடித் தயாராயிருக்க இரவு வந்து எல்லாத் தவனத்தையும் போக்காட்டிக்கொண்டிருந்தது. கட்டிலே சொல்லும் வாத்ஸாயனக் கதை. அதற்காகத்தானே இருவரும் அந்தத் தொகையிலான வேறு விஷயங்களில்போல் பிணங்காது, இரண்டாயிரத்து நானூறு டொலரில் கட்டிலை வாங்கினார்கள்.

ஆனால் கடந்த மூன்று சனிகளிலும்…

உடம்பு கொதித்துக்கொண்டிருந்தது என்றில்லை. எரிந்துகொண்டிருந்தது. குருதி தீப்பிடித்து மேனியெங்கும் சுழன்றோடிக்கொண்டிருந்தது.

அவன் அந்தச் சனிகளில் தன்னை, தன் நண்பர்களை நினைத்தான், மனைவியாய்த் தானொருத்தி இருப்பதுபற்றி நினைக்கவில்லையே என்பதுதான் அவளது சீற்றத்தின் முதல் காரணம். அந்தச் சனியின் மகத்துவத்தை எப்படி மறக்கமுடியும் அவன்?

கடந்துபோன இரண்டாவது சனியிலும் அவன் தடுமாறிக்கொண்டுதான் வீட்டினுள்ளே நுழைந்தான். சாப்பிடக்கூடச் செய்யாமல் படிகளில் தவழ்ந்து படுக்கையறையை அடைந்தான். இருந்தும்கூட அவள் புறுபுறுத்தபடி போய் கட்டிலில் ஏறி அவனருகே படுக்கத்தான் செய்தாள். என்றைக்காவது சனிக்கிழமைகளில் குடித்துவிட்டு வா, உன்னைக் கொன்றுவிடுவேன் றாஸ்கல்! ஏன்று திட்டவேண்டுமென்று நினைத்திருந்தபடி மறுநாள் காலை திட்டவும் செய்தாள். ஓம் ஓமென்று தலையாட்டிக்கொண்டிருந்தான். ஆனால்…மறுபடி நேற்றைய சனிக்கிழமையும்…

அது இலையுதிர் காலத்தின் கடைக்கூறு. வீட்டின் பின்னாலுள்ள குளத்தின் நீர் ஏறக்குறைய மேற்பரப்பு முழுவதும் அலையறுத்து அசலனம் பூண்டிருந்தது. அந்தக் குளமும், பார்வை எப்போதும் மொய்க்கிற  வாகில்தான் ஜன்னல் நேரே    அமைந்திருந்தது.

அன்று மாலை ஏழுமணிக்கே குளித்து, மேலெல்லாம் சரும கிறீம் தடவி, இன்னும் அவசியமான இடங்களில் காட்டப்படவேண்டிய கரிசனங்களும் காட்டி … எத்தனை ஆயத்தங்கள் செய்திருந்தாள்? உற்சவம் நிகழவேயில்லையே!

அய்ந்து மணி மாலையில், இதோ வந்துவிடுகிறேன், இன்று இரவு றெஸ்ரோறன்ரில் சாப்பிடலாம், வெளிக்கிட்டு நில் என்று சொல்லிவிட்டுப் போனவன் எட்டு மணியாகியது, வரவில்லை. பத்து மணியாகியது, வரவில்லை. கடைசியில் பன்னிரண்டு மணிக்கு யாரோ சிலர் வந்து காரையும் அவனையும் வீட்டுக்கு முன்னால் போட்டுவிட்டுப் போனார்கள்.

அப்போதுதான் பாதிப் பேணி பியரை முடிந்திருந்த சிந்திக்கு, கதவைத் திறந்து அவனது நிலைகண்ட மாத்திரத்திலேயே சிரசடித்தது உக்கிரம். அவன் கண்டானா எதையாவது? உள்ளே வந்தான். தடுமாறியபடி நடந்தான். சோபாவில் இடறி விழப்பார்த்தான். அவள் அசையாது பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் முட்டுக் காலில் தவழ்ந்து தவழ்ந்து மேலே ஏறினான்.

அவன் சென்ற சிறிதுநேரத்தில் கட்டில் இடறுப்பட்டது கேட்டது. பின் கிரீச்… ஒலி எழுந்தது. கட்டிலிலே விழுந்துவிட்டான் என்று நினைத்துக்கொண்டு வெளிக் கதவைச் சாத்தி தாழிட்டுவிட்டு வர, அவன் வாந்தியெடுத்த ஓசை கேட்டது. உவாக்… உவாக்…என்று குடலை அறுத்துக் கொட்டுவதுபோல் ஓங்காளிப்பு.

நாற்றம் படியிறங்கி வந்து நாசியேறுவதுபோல் அருவருப்பு பிறந்தது அவளுக்கு.

அவள் லைற்றை அணைத்தாள். மீதி பியரை முடித்தாள். சோபாவில் வந்து சரிந்தாள். எல்லாவற்றையும் வெறுப்பதுபோல் ஜன்னல் பக்கம் முகத்தைத் திருப்பி வெளியைப் பார்த்தபடி கிடந்தாள். சிறிது நேரத்தில் தூக்கம் வந்ததுபோலிருந்தது. நிறைவான தூக்கமில்லை. எழும்பவோ கண்திறக்கவோ முடியாதவளவுக்கு இருந்ததே தவிர, மனம் தன்னுள் இயங்கிக்கொண்டு தானிருந்தது. கனவுபோல இருந்ததாயினும் கனவில்லை அது. கனவும் உருவகிப்புமான கலப்பினக் காட்சிகள்.

தேகம் ஆவியாகி எழுவதுபோல் ஒருபோது உணர்கையாகியது. திடுக்கிட்டு விழிக்க, கண் நிறைய இருள். அது அவள் இடமில்லை. வீரிட்டுக் கத்திவிட்டாள் பயத்தில். பின் அப்பியிருந்த இருளில் நிஜம் பிரக்ஞையாகியது. அப்போதுதான் நற…நறவென கணேஷ் பல்லுக் கடிக்கிற சத்தம் கேட்டாள். பற்களைக் கடித்துத் தின்றுவிடுவதுபோல் நொறுமிக்கொண்டிருந்தான்.

அவளுக்கே தன் பற்களைக்கடிக்கவேண்டும்போல இருந்தது. முரசு உழைந்து, தாடை வலியெடுத்தது.

மறுபடி தூங்க முனையப் பயமாக இருந்தது அவளுக்கு. அந்த உக்கிரத்துடனான பல் நெருமுகையுடன் நித்திரை கொள்ளப்போனால் கனவும் நனவுமாயான ஆவியாய் மறைதல்பற்றிய காட்சிகளே தோன்றக்கூடும். அதைவிட விழித்திருந்துவிடலாம். ஆனாலும் எதிர்பாராத ஒரு தருணத்தில் திரும்பவும் நித்திரை வந்து கவிந்தது. அதுவும் ஒரு அரை நித்திரைதான்.

பின்னால் விடிகிறநேரத்தில் கொஞ்சம் ஆழ்ந்த உறக்கம் கொள்ள முடிந்தது.

எல்லாம் நினைக்க சிந்தியாவுக்கு வெறுப்புவெறுப்பாய் வந்துகொண்டிருந்தது. அன்றைக்கு ஞாயிறு என்ற நினைவு இன்னும் மனத்தை எரிய வைத்தது. நாளை வேலையென்பது நரகமாய்த் தெரிந்தது. ஞாயிறு ஓய்வுநாள், சரி. சனியில் அனுபவித்தால்தானே, ஞாயிறு ஓய்வாகமுடியும். இல்லையேல் கரிநாள். திங்கள் வேலையிடத்தில் அலுப்புநாள். மேலதிகாரிகளிடம் ஒன்றிரண்டு செல்லத் திட்டுகள் வாங்கும் நிலை ஏற்படுவது அத் தருணத்தில் தவிர்க்க முடியாதது.

அவன் இரவெடுத்த வாந்தியில் அறை எப்படி இருக்கிறது, கட்டிலின் நிலபரம் என்னவென்று போய்ப் பார்க்க அவளுக்கு மனம் வரவில்லை. அந்தமாதிரிப் பல் நெருமினானே, என்ன ஆயிற்றென்று பார்க்க்கூட மனத்தில் வாஞ்சை பிறக்கவில்லை.

‘எனக்கு என்ன ஆகிவிட்டது? புணர்ச்சி விழைச்சு அடங்காது போனது மட்டும்தானா இந்த மனம் பிரகடனப்படுத்தும் யுத்தத்தின் காரணம்? இல்லை, அலட்சியப்படுத்தியமை என்ற ஒரு காரணமும் இருக்கிறது?’

அவள் குழம்பி, தேறி, மறுபடி குழம்பிக்கொண்ருந்தாள்.

எல்லாம் அந்த உடல் தவனம் என்கிற ஒரே அம்சத்தில் மய்யம்கொண்டிருந்தது.  அவளே வேடிக்கையாகச் சொல்லியிருக்கிறாள்: ‘எனக்கு உன் தேவை அதிகம், கணேஷ். ஆர்வம் இழந்துகொண்டு போனாயென்றால் வேறெங்காகிலும் போய்த் தீர்த்துக்கொள்வேன்.’

முகம் இருண்டான் கணேஷ்  அக்கணமே. அவள் சமாதானப்படுத்தினாள். ‘என் காதல் இருக்கும்வரை என் காமம் உன்னோடுதான்.’

கனடாவில் பிறந்து வளர்ந்த ஆபிரிக்கி அவ்வளவாவது சொன்னாளேயென்று அவன் தேறினான்.

தன் வேடிக்கையை வினையாக்க அவனே முயல்வதுபோலல்லவா இருக்கிறது என சிந்தி நினைத்தாள்.

வெய்யில் இன்னும் மேலே ஏறியிருந்தது. திடீரென்று தன் மேனித் தகிப்பை பிரதிபலிப்பதுபோல் சூரியனும் உறைப்பாய் எறிப்பதாய் எண்ணினாள் சிந்தி. அவளது பார்வை குளத்துப் பக்கம் பரந்தது. நீரில் பளிங்குப் படர்கை. தகதகவென மின்னிக்கொண்டிருந்தது.

அந்தநேரத்தில், அந்தக் கோணத்தில் ரச்மிகள் விரிந்துவந்து அவளை வாரியெடுப்பதுபோல் உணர்கையாகியது. திடுக்கிட்டு, பயந்து ஓடி விலக நினைத்தும் உடம்பு அங்கிருந்து ஒரு சொட்டு அரங்கச் செய்யவில்லை. பிடித்து நிறுத்தி வைத்ததுபோல் இருந்தது.

திடீரென நீர் பாளமாய் மேலெழும்புவதுபோல் தோற்றமாகியது. வளைந்து அலைபோல் நின்று தளும்பியபடி அது. ஒரு இறுமாப்பின் தோற்ற வாகு அதில் இருந்ததாய்ப் பட்டது அவளுக்கு. அப்போதோ எதனுடனோ அது தர்க்கிப்பதுபோல் அதன் விளக்கம் வரிகளாய்ப் படர்ந்தது. அதன் வளைவுகளின் அசைவிலும், மினுமினுப்பிலும் மனம் பயமழிந்து மெல்லப் போய் மாட்டியது. அப்படியொரு அழகு! படமெடுத்த பாம்பின் அழகுபோல் அது. பயமும், ஈர்ப்புமான இரட்டுறை நிலை.

சிந்தி தலையை உசுப்பி நிதானத்துக்கு வந்தாள். நிஜம் புரிந்தவளவுக்கு கலக்கமழியவில்லை. இன்னும் அந்தக் காட்சியையே மனம் வளைய வந்துகொண்டிருந்தது. மறுபடி திரும்பப் பார்த்தபோது அந்தக் காட்சி அங்கே இல்லை.

ஆனாலும் மனத்தில் இன்னும் பாரம் இருந்தது. நினைத்துப் பார்த்தபோது அது ஏற்கனவே கண்டிருந்த காட்சிபோல் மனத்தில் ஒரு ஞாபக எறிகை. கடந்த இரவோடு அந்தக் காட்சி பிணைந்தது.

ஆம், சிந்தி கனவு கண்டிருக்கிறாள் முதல்நாளிரவு.

நினைப்பைக் கீழ்மேலாய்ப் புரட்டிப் பார்த்தாள்.

நீர், நிலம்… பஞ்சபூதங்களில் இரண்டு சாட்சிகள்.

கணேஷின் பல் நெருமுகையில் அலறியடித்து எழுந்து  மீண்டும் படுத்த பின்னால்தான் அந்தக் கனவு அவளில் வெளிப்பட்டிருக்கவேண்டும்.

அலை எழுந்து நிற்கிறது. அசைகிறது நாகம் படமெடுத்தாடுவதுபோல்.

அப்போது நிலம் சிரிக்கிறது.

நீர் கேட்கிறது, ‘என்ன சிரிக்கிறாய்?’ என்று.

‘நீ என்னில் தங்கியிருக்கிறாய். என்னுள்ளே அடக்கமாகியிருக்கிறாய். இருந்தும் இந்த ஏண்டாப்பு எதற்கு? அதுதான் சிரிப்பு வந்தது.’

‘அப்படியேயிருப்பினும் குடிக்கூலிக்கான தங்குகைபோல்தான் அது. நான் உன்னிலும், உன்னுள்ளும் இல்லையேல் நீ ஒரு தரிசு. மலடு. உன் பச்சையெல்லாம் என் பேரருள்.’ நீர் இப்போது சிரித்தது. ஜலதரங்கம் வாசித்ததுபோலிருந்தது.

சிந்தி அதைக் கேட்டாள். தெளிவாகவே.

சிலிர்ப்பு வந்தது, நினைவு மீட்டுக்கொண்டிருந்தபோதுகூட.

நிலம் சாம்பிப்போனது, தரிசுபட்டதுபோல். அதன் தொடர் மவுனம் அவ்வாறாகவே பட்டது அவளுக்கு.

‘மண்ணே!’ என்று மீண்டும் நீர் தொடர்ந்தது: ‘நான் உன்னில் தங்கியிருக்கிறேன் என்று பெருமை பேசுகிறாயே, நான் நதியாய் உன்னில் ஊர்வேன். அலையாய் உன்னை விழுங்குவேன். மழையாய் உன்னைக் துளைப்பேன். என் உடல் திரவம்தான். அதனாலென்ன? நான் ஆவியாய் உன்னைவிட்டு நீங்கியும் இருப்பேன். இதோ இம்மாதிரிப் பனிப்பாளமாய் திடவுடலெடுத்தும்கூட உன்னை அமுக்குவேன். உணர்கிறாயல்லவா? உணர்கிறாயல்லவா? மூவடிவமெடுக்க முடிந்த என்னைப் பார்த்து என்ன அருகதையில் சிரித்தாய், சொல்?’

சொல் அழிந்து உருவங்கள் கலைகின்றன.

துயில் தொடர்கிறது.

அவள் பார்வையை வெளியே பரத்தினாள். கீழே தெருவில் சிறுவர்கள் நான்கைந்து பேர் வந்துகொண்டிருப்பது தெரிந்தது. அவர்களை அவளுக்குத் தெரியும். அந்தப் பகுதியில் முன்பின்னாய் ஓடியிருக்கிற ஏதோ தெருவில் குடியிருக்கிறவர்கள்தான் அவர்கள். அதில் பிருந்தாவனனோடு அவள் பேசியுமிருக்கிறாள். கலகலவென இல்லாமல், ஒரு நிதானிப்பில் பேசுகிற பிள்ளை அவன். அதனாலேயே அவனை அவளுக்குப் பிடித்திருந்தது. விளையாடப் போகிறார்களாயிருக்கும். உதை பந்தாட்ட விளையாட்டுக் காலம் முடிந்துகொண்டிருந்தாலும், இன்னும் எச்சசொச்சமாய் பயிற்சிகளும் போட்டிகளும்  நடந்துகொண்டிருந்தன.

திரும்பியவளின் பார்வையில் சட்டெனப்பட்டது குளிர்சாதனப் பெட்டியின் மேலேயிருந்த அந்த பழம்பொருள் சிலை. அது ஒரு மிருகத்தின் மாதிரியாகவிருந்தது. கொம்புகள் அடர்ந்து வெருட்சிகொண்ட தோற்றம். மர நிறத்தில் மிகவும் புராதன அடையாளங்களுடன் அது.

அதை எங்கோ பழைய தளபாடக் கடையில் வாங்கியதாய் போன மாதமளவில்தான் கணேஷ்  அதிலே கொண்டுவந்து வைத்தான். அப்போது அவளுக்கும் அது மிகவும் பிடித்துத்தானிருந்தது. அதில் ஒரு கம்பீரம் இருந்ததை அவள் கண்டாள். அந்த வேம்பு மரத்தின் உட்தோல் நிறமும், மிருகத்தின் வெருட்சியும் கொண்ட அச் சொருபம் அவளுக்கு அதன் பழமையுடன் சேர்ந்து இசைந்திருந்ததாய்ப் பட்டிருந்தது. இப்போது உன்னிப்பாய்ப் பார்க்கிறபோதுதான் தெரிகிறது, அது ஒரு மாயத்தின் உட்கசிவைக் கொண்டிருக்கிறதென்று. அது தொல்குடிகளின் வணக்கத்துக்குரியதாய், மந்திரத்தின் உட்பொதிகை கொண்டதாய் இருக்கலாமோ?

அவள் குலைந்தாள்.

கனடாவின் ஆதிகுடிகளான இந்தியர் வாழ்வியலில் அம்மாதிரியான சிலை வணக்க முறைகள் நிறையவிருந்ததை அவள் படித்திருக்கிறாள். மந்திரார்த்தமான வணக்கப்பாடுகளும் அச் சமூகத்தில் இருந்திருக்கின்றனதான். ஜீவன்களும், பிரபஞ்சப்பாடுகளும்பற்றி அவர்கள் நிறைய அக்கறை கொண்டிருந்தவர்கள். அவர்களின் வணக்கத்துக்குரியதாயிருந்த ஒரு சிலையை எக் காரணம்கொண்டும் தன் வீட்டில் வைக்க அவள் அனுமதித்திருக்கக்கூடாதோவென்று அப்போது அவளுக்குத் தோன்றியது.

கணேஷ்  அந்தச் சிலையை அங்கே வாங்கிவந்து வைத்த நாளிலிருந்துதான் குடிபோதையில் திரியத் துவங்கியிருந்தான். சனி இரவுகள் வெறுமையாய்க் கழிந்துபோகவேண்டி நேர்ந்ததும் அதனால்தானாய் இருக்கலாம். கணேஷ்  பேய் பிடித்தவன்போல்  பல் நெருமியதற்கும் காரணம் அதுவே.

அவளுள் தீர்க்கங்கள் விளைந்துகொண்டிருந்தன.

அவை பயங்களாய் மறுவடிவம்பெற்று எழுந்தன.

மேனி குளிரடைவதாய் அவள் உணர்ந்தாள்.

அப்போது குளக்கரையில் சப்தங்கள் எழுந்தன. ‘டோன்ற் கோ. கம் பேக்…கம் பேக்…’

சிந்தி வெளியே எட்டிப் பார்த்தாள்.

அலையாய், ஆவியாய் நீரானது நிமிர்ந்து கனவில் நின்றிருந்ததுபோல் தோற்றம். நீர் நெளிந்து…சுழிந்து அசைந்ததுபோல் அப்போதும். அவள் கண்களைக் கூர்த்தாள். ஒரு தடித்த சிறுவன் திண்ணப்பட்டுக்கிடந்த நீர்ப்பரப்புள் அமிழ்ந்துகொண்டிருந்தான்.

அது நொறுங்கக்கூடிய திடமாயிருப்பதில்லை. போன குளிர்கால முன்னிலும் வளர்ந்த சிலரே அதில் நடந்து விளையாடியது கண்டிருக்கிறாள் சிந்தி. அந்தளவு  வன்மைதான் நொருங்கி தடித்த சிறுவனை மூழ்கடித்துக்கொண்டிருந்தது.

சிந்தி ஜில்லிட்டாள்.

அப்போது ஒரு ஒல்லியான பையன் அவனைக் காப்பாற்றப்போலும் நீர்த்திடத்தில் இறங்கினான். தடித்த சிறுவன்போல் அதில் நடக்க முனைந்தான். தடுமாறிக்கொண்டு முன்னேறினான்.

‘ஏய், பிருந்தாவனா….போகாதே…போகாதே…!சூரியன் கொதிக்கிறான். நீரின் திடம் அழிகிறது. நேற்று இரவு நீர் இட்ட கெலிப்பில், தன்னிலிருந்து வெடித்துப் பிறந்த பூமிப் பந்துக்காய் சூரியன் யுத்தம் தொடங்கிவிட்டான். போகாதே…பிருந்தாவனா…போகாதே!’ மனத்துள் கூவுகிறாள் சிந்தி.

கனவில் எழுந்து நின்றிருந்த அலை அமுங்கி அழிந்ததுபோல, பிருந்தாவனன் நீருள் துடித்துத் துடித்து அமிழ்ந்துகொண்டிருந்தான் மறுகணம். ஓட, இயங்க உடம்பும் மனமும் மரத்துப்போயிருந்தன. அப்போதுதான் யாரோ, எப்போதோ சொன்னது ஞாபகமாகியது அவளுக்கு. ‘நூற்றைம்பது இருநூறு வருஷங்களின் முன்  குளமிருந்த அந்த இடத்திலேதான் பூர்வ குடியினரின் சவக்காலை இருந்தது. இயற்கை மரணம் அடைந்தவர்கள் மட்டுமில்லை, வெள்ளையினத்தாரால் நானூறு ஐந்நூறு என கொன்றழிக்கப் பட்டவர்களும் அந்த இடத்திலேதான் அடக்கம் பெற்றிருக்கிறார்கள்.'

அவளுக்குத் தலையைச் சுற்றுவதுபோல இருந்தது.

கொஞ்சநேரம் நின்றபடியே சுவரில் கையைப் பொறுத்தி தலையைச் சாய்த்தாள். அவ்வாறு நினைவழிந்தவளாய் எவ்வளவு நேரம் அவள் நின்றிருக்கக்கூடுமோ? மீண்டும் அவள் நிமிர்ந்துபார்த்தபோது குளத்தினைநோக்கி ஹெலிகொப்டர் ஒன்று இரைந்தபடி வந்துகொண்டிருந்தது. பிருந்தாவனன் எங்கே? நீர் விழுங்கிவிட்டதா?

திரும்பியவளின் பார்வையில் குளிர்சாதனப் பெட்டியின் மேலிருந்த சிலை. வெகுநேரமாய் அதையே நோக்கிக்கொண்டிருந்தாள். ஒரு அலையாய்க் கிளர்ந்தெழுந்து அது அவளை இழுத்தது. அப்போது காட்சிப் பொறியை மட்டும். இனி எதையெதையோ? பின் அவளையுமேகூட?

சிந்தி திடீரென எழுந்தாள். நேரே குளிர்சாதனப் பெட்டியை அணுகி சிலையை எடுத்தாள். தாளெடுத்துச் சுற்றினாள். கதவைத் திறந்துகொண்டு வீட்டுப் பின்புறம் ஓடினாள்.   ஓடிப்போய் சிலையை ஓங்கி தூரவிருந்த குப்பைத் தொட்டியில் விழ வீசினாள்.

சூழக் கண்ணோடினாள். யாரும் பார்த்ததாய்த் தெரியவில்லை. திரும்பி வீடு வந்தாள்.

ஏககூட்டம் குளக்கரையில். ரோட்டில் வாகன நெரிசல்.
எல்லாம் முடிந்துவிட்டதெனத் தெரிந்தது.

அவள் மறுபடி வீட்டினுள் நுழைந்தபோது கணேஷ்  அப்போதுதான் மாடியிலிருந்து இறங்கிவந்துகொண்டிருந்தான். குளித்திருந்தான். தெளிந்திருந்தான். லேசாகச் சிரித்துக்கொண்டிருந்தான். அதில் மன்னிப்பின் வரிகளைத் துலக்கமாய்க் கண்டாள் சிந்தி.

அப்போது அவளுக்குக் கோபம் வரவில்லை.


(முற்றும்)

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்